என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை ஐகோர்ட்"

    • தம்பதியினர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
    • வழக்கில் இறுதி தீர்வுக்காக அவர் மனைவிக்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும்.

    மும்பை:

    குடும்ப நலக்கோர்ட்டில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்ட ஒருவரின் மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

    அவர் தாக்கல் செய்த மனுவில், "நான் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டேன். ஆனால் கருத்து முரண்பாடு காரணமாக 2012-ம் ஆண்டு முதல் நானும், எனது மனைவியும் பிரிந்து வாழ்கிறோம். எனது மனைவி தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி மிரட்டல் விடுத்தார். எனவே மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நலக்கோர்ட்டில் மனு செய்தேன். ஆனால் எனது மனுவை குடும்ப நலக்கோர்ட்டு நிராகரித்து விட்டது.

    இந்து திருமண சட்டத்தின்படி பிரிந்து செல்வது, சந்தேகம், மிரட்டல், தற்கொலைக்கு முயற்சிப்பது போன்ற காரணங்களுக்காக விவாகரத்து பெற முடியும். அதன் அடிப்படையில் எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், நீதிபதி கவுதம் அன்காட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அதில் மனைவியிடம் இருந்து கணவருக்கு அதிரடியாக விவாகரத்து வழங்கியது. நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

    தம்பதியினர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு இடையே ஒரு இணக்கமான தீர்வு அல்லது சமரசம் ஏற்பட எந்த சாத்தியமும் இல்லை.

    மனுதாரர் தனக்கு நேர்ந்த பல கொடுமையான சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார். ஆனால் குடும்நல கோர்ட்டு அவற்றை கருத்தில் கொள்ளவில்லை.

    குடும்ப உறவில் ஒரு துணைவரின் தற்கொலை மிரட்டல் என்பது மற்றொருவரை சித்ரவதை செய்வதற்கு சமமாகும். இதை சுப்ரீம் கோர்ட்டே ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

    வார்த்தைகள், சைகைகள் அல்லது அசைவுகள் மூலம் இதுபோன்ற மிரட்டல் மீண்டும் மீண்டும் விடுக்கப்படும்போது, துணைவரால் அமைதியான சூழலில் திருமண உறவில் தொடர முடியாது. அத்தகைய திருமண உறவை தொடர வலியுறுத்துவது, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கொடுமையை அனுபவிக்க கூறுவதுபோல் ஆகிவிடும். எனவே இந்த வழக்கில் கணவருக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. மேலும் வழக்கில் இறுதி தீர்வுக்காக அவர் மனைவிக்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும். மேலும் 2 வீடுகளின் உரிமையை அந்த பெண்ணுக்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    • வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
    • மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

    சென்னை ஐகோர்ட்டு, சுங்க இலாகா அலுவலகம், மும்பை ஐகோர்ட்டுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை கடற்கரை ரெயில் நிலையம் அருகே செயல்படும் மத்திய சுங்க இலாகா தலைமை அலுவலகம், ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.

    இதேபோல், மும்பை ஐகோர்ட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மும்பை காவல்துறையினர் ஐகோர்ட்டு வளாகத்தை சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரியதாக எதுவும் கிடைக்கவில்லை.

    மும்பை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது இது இரண்டாவது முறை. சமீபத்தில் இதேபோன்ற மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 12 பேரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
    • குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்க போதுமானவை அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மும்பை:

    கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி மும்பை புறநகர் மேற்கு வழித்தடத்தில் பல ரெயில்களில் 7 குண்டுகள் வெடித்ததில் 189 பேர் பலியானார்கள். 800 பேர் காயமடைந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த விசாரணை கோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு 12 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. இதில் 5 பேருக்கு மரண தண்டனை யும் , 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

    இதையடுத்து மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி மகாராஷ்டிர அரசு மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளும் அப்பீல் செய்து இருந்தனர். குண்டு வெடிப்பு வழக்கு தொடர் பான மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை நாள்தோறும் நடைபெற்றது.

    இந்த நிலையில், இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 12 பேரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதிகள் அனில் கிலோர், ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு தீர்ப்பு அளித்தது. 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும், 7 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் உறுதி செய்ய மும்பை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

    அரசு தரப்பு கோர்ட்டில் அளித்து இருக்கும் சாட்சியங்கள் மட்டுமே, குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்க போதுமானவை அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதை நம்புவதே கடினமாக உள்ளது. எனவே அவர்களின் தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்றும் மும்பை ஐகோர்ட்டு உத்தரவில் தெரிவித்து உள்ளது.

    • எனக்கும், எனது கணவருக்கும் வாடகை தாய் மூலம் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரட்டை பெண் குழந்தை பிறந்தன.
    • குழந்தைகளை பார்க்க என்னை அனுமதிக்க வேண்டும்.

    மும்பை:

    மும்பை ஐகோர்ட்டில் 42 வயது பெண் ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

    எனக்கும், எனது கணவருக்கும் வாடகை தாய் மூலம் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரட்டை பெண் குழந்தை பிறந்தன. அந்த குழந்தைகள் பிறக்க எனது தங்கை கருமுட்டையை தானமாக வழங்கியிருந்தார். தற்போது எனது கணவரும், தங்கையும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

    மேலும் எனது தங்கை கருமுட்டையை தானமாக வழங்கியதால் எனக்கு குழந்தைகள் மீது உாிமை இல்லை என கூறுகின்றனர்.

    குழந்தைகளை பார்க்க அவர்கள் என்னை விடுவதில்லை. எனவே, குழந்தைகளை பார்க்க என்னை அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    மனுவை நீதிபதி மிலிந்த் ஜாதவ் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விந்தணு அல்லது கருமுட்டையை தானமாக கொடுத்தவர் குழந்தையின் மீது சட்டப்படி உரிமை கோரவோ அல்லது குழந்தையின் பெற்றோர் எனவோ உரிமை கோர முடியாது என்றார். மேலும் நீதிபதி "இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு போடப்பட்ட வாடகைத்தாய் ஒப்பந்தத்தில் மனுதாரரும், அவரது கணவரும் தான் பெற்றோர் என கையெழுத்திட்டு உள்ளனர். எனவே வாடகைத்தாய் மூலம் பிறந்த இரட்டை குழந்தைகளின் தாய் மனுதாரர் என்பது தெளிவாக தெரிகிறது. கருமுட்டையை தானமாக வழங்கிய மனுதாரரின் தங்கைக்கு குழந்தையின் தாய் என உரிமைகோர எந்த சட்ட உரிமையும் இல்லை" எனக்கூறினார்.

    மனுதாக்கல் செய்த பெண்ணை வார இறுதிநாளில் 3 மணிநேரம் இரட்டை குழந்தைகளை பார்க்க அனுமதிக்க வேண்டும் என அவரது கணவருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    • 2018-ம் ஆண்டு பினோய் மீது பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணை நடந்தது.
    • பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியது தொடர்பாக போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக இருந்தவர் கொடியேறி பாலகிருஷ்ணன்.

    உடல் நலக்குறைவு காரணமாக இவர் பதவியை ராஜினாமா செய்தார். இவரது மகன் பினோய் கொடியேறி. இவர் மீது மும்பையை சேர்ந்த இளம்பெண், மும்பை போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

    அதில் நான் துபாயில் பணிபுரிந்த போது அங்குள்ள பாரில் நடனமாடி வந்தேன். அப்போது எனக்கும் பினோயுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நெருக்கமாகி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டோம். இதில் நான் கர்ப்பம் ஆனேன்.

    கடந்த 2010-ம் ஆண்டு எனக்கு குழந்தை பிறந்தது. அதன்பின்பு நான் துபாயில் இருந்து மும்பைக்கு வந்தேன். அங்கு எனக்கு தனி வீடு எடுத்து தந்து பினோய் தங்க வைத்தார்.

    2018-ம் ஆண்டு பினோய் மீது பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணை நடந்தது. அப்போதுதான் அவருக்கு ஏற்கனவே திருமணமாகிய விபரம் தெரியவந்தது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது என்னை மிரட்டினார். என்னை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியது தொடர்பாக போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார். இதுதொடர்பாக மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பான வழக்கு மும்பை கோர்ட்டில் நடந்தது. கடந்த சில ஆண்டுகளாக கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் சமரசமாக செல்ல இருதரப்பினரும் முடிவு செய்தனர்.

    இந்த தகவல் மும்பை கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு பினோய் தரப்பில் ரூ. 80 லட்சம் பணம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து மும்பை கோர்ட்டு இந்த வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தது.

    ×