என் மலர்
இந்தியா
- பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் கல்லறை கட்டியுள்ளார்.
- தனக்குத்தானே கல்லறை கட்டிக் கொண்டது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது
தெலங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டம், லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் இந்திரய்யா (வயது 80). இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். தனது மரணத்திற்கு பிறகு தனது பிள்ளைகளுக்கு தொந்தரவு ஏற்படக் கூடாது என்பதற்காக தனக்குத்தானே கல்லறை கட்ட முடிவு செய்தார். இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த கொத்தனார் மூலம் தனது மனைவியின் கல்லறை அருகே பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் கல்லறை கட்டியுள்ளார்.
இந்திரய்யா தினமும் தனது கல்லறைக்கு சென்று சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு சிறிது நேரம் அங்கேயே தங்கி இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இது குறித்து இந்திரய்யா கூறுகையில், தனக்குத்தானே கல்லறை கட்டிக் கொண்டது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
5 வீடுகள், ஒரு பள்ளி மற்றும் ஒரு தேவாலயம் கட்டி இருக்கிறேன் என தெரிவித்தார். மேலும் தனது கல்லறையில் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் மரணம் தவிர்க்க முடியாதது. இறுதியாக செல்லும்போது யாரும் செல்வத்தை எடுத்துச் செல்ல முடியாது என எழுதி வைத்துள்ளார்.
- பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் டிரோன் ஒன்று ஊடுருவியது.
- டிரோன் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஆயுதங்கள் அடங்கிய பையை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது.
பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் டிரோன் ஒன்று ஊடுருவியது. இந்திய வான்பரப்பில் சுமார் 5 நிமிடங்கள் வட்டமடித்த அந்த டிரோன், பை ஒன்றை கீழே வீசியது. டிரோன் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.
அந்தப் பையில் தோட்டங்கள், வெடிமருந்துகள், போதைப்பொருட்கள், மஞ்சள் நிற டிப்பன் பாக்ஸ் ஒன்றில் ஐ.இ.டி வெடிகுண்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் ஏதேனும் உள்ளதா என தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தில் நடந்த இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
- சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர்.
- இன்ஸ்டாகிராமில் சாரா டெண்டுல்கருக்கு மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று பல நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவரது மகள் சாரா டெண்டுல்கர். இவர் தற்போது ஒரு மாடல் மற்றும் சமூக வலைதள பிரபலம் (Social Media Influencer) ஆவார். பல முன்னணி ஆடை மற்றும் அழகு சாதன பிராண்டுகளுக்கு விளம்பரத் தூதராகப் பணியாற்றி வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
இந்நிலையில் சாரா டெண்டுல்கர் பீர் பாட்டிலைப் பிடித்திருப்பது போன்ற ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. புத்தாண்டைக் கொண்டாட அவர் தனது நண்பர்களுடன் கோவா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதில் சாரா டெண்டுல்கர் தனது சில நண்பர்களுடன் நடந்து வருகிறார். அப்போது அவரது கையில் ஒரு பீர் பாட்டிலை எடுத்துச் செல்வதைக் காண முடிகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகி விவாத பொருளாக மாறியுள்ளது. சிலர் சாரா டெண்டுல்கரை விமர்சித்தனர். மற்றவர்கள் அவரை ஆதரித்து, அவள் விரும்பியபடி அவள் விடுமுறையை அனுபவிக்கிறார் என என்று கூறினர். மற்றும் சிலர் அது பீர் பாட்டில் தான என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.
இருப்பினும், ஒருவர் அவரை ட்ரோல் செய்து, சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்க்கையில் எந்த மதுபான பிராண்டையும் புகைக்கவோ அல்லது விளம்பரப்படுத்தவோ இல்லை என்றும் ஆனால் அவரது மகள் சாரா கோவாவின் தெருக்களில் பீர் பாட்டிலுடன் சுற்றித் திரிந்துள்ளார் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
- எனது மக்கள் முழுமையாகப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்
- வீணான அல்லது பயன்றற கேள்விகளை கேட்காதீர்கள்
இந்தியாவின் தூய்மையான நகரம் என 8வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தூரில், கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி தற்போதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த உயிரிழப்புகள் தொடர்பாக மத்தியப்பிரதேச அமைச்சரும், அத்தொகுதியின் பாஜக எம்.எல்.ஏவுமான கைலாஷ் விஜயவர்க்கியாவிடம் ஆங்கில ஊடக நிரூபர் ஒருவர் ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார். அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர், Phokat prashn mat puchiye எனக் கூறியுள்ளார். அதாவது வீணான அல்லது பயன்றற கேள்விகளை கேட்காதீர்கள் எனக் கூறியுள்ளார். மேலும் "கண்டா" (ghanta) என்றும் கூறியுள்ளார்.
ஹிந்தியில் "கண்டா" என்ற சொல் பேச்சுவழக்கில் பயன்றறது, குப்பை, ஒன்றுமில்லை என்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. சில வார்த்தைகள் பேசத் தடுமாறிய பிறகு, அந்த பாஜக அமைச்சர் கண்டா என்ற சொல்லை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு உடனே எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரை ஒழுங்காகப் பேசுமாறு பத்திரிக்கையாளர் கூறினார். இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பத்துபேர் செத்ததெலாம் ஒரு விஷயமா? என்ற தொனியில் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த தற்போது மன்னிப்பு கோரியுள்ளார் பாஜக அமைச்சர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"நானும் எனது குழுவினரும் கடந்த இரண்டு நாட்களாக உறக்கமின்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையைச் சீரமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம். அசுத்தமான நீரினால் எனது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலர் நம்மை விட்டு பிரிந்தும் சென்றுவிட்டனர். இந்த ஆழ்ந்த துயரமான நிலையில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது எனது வார்த்தைகள் தவறாக வெளிவந்துவிட்டன. இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், எனது மக்கள் முழுமையாகப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- அவினாஷ் ஒரு ஐடி ஊழியர் என்றும், அசிம், அஜித், அன்சியா ஆகியோர் ஏற்கனவே பல போதைப்பொருள் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
- கனியாபுரம் தோப்பு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து இந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மருத்துவ மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த மருத்துவ மாணவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் டாக்டர் விக்னேஷ் தாதன், பிடிஎஸ் மாணவர் ஹலீனா, அசிம், அவினாஷ், அஜித், அன்சியா மற்றும் ஹரிஷ் என்பது தெரிய வந்துள்ளது.
அவினாஷ் ஒரு ஐடி ஊழியர் என்றும், அசிம், அஜித் மற்றும் அன்சியா ஆகியோர் ஏற்கனவே பல போதைப்பொருள் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சோதனையின்போது, சுமார் 4 கிராம் எம்.டி.எம்.ஏ, 1 கிராம் ஹைப்ரிட் கஞ்சா மற்றும் 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 2 கார்கள், 2 பைக்குகள் மற்றும் 10 போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து கனியாபுரம் தோப்பு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து இந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவலில் எடுக்கப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
- 2026 பிறந்த நிலையில் நாடு முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- குடிமக்களிடையே பரஸ்பர அன்பு, ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கம் வளரட்டும்.
2026 பிறந்த நிலையில் நாடு முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "அனைவருக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வெற்றியையும் கொண்டு வரட்டும்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஜென் z தலைமுறையினருடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
வயநாடு காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "புத்தாண்டு அனைவருக்கும் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கட்டும். குடிமக்களிடையே பரஸ்பர அன்பு, ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கம் வளரட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- வன்முறையில் குறைந்தது 260 பேர் கொல்லப்பட்டனர்
- மணிப்பூர் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறையில் உள்ளது
மே 2023 முதல் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையால் இடம்பெயர்ந்த 10,000 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என மணிப்பூர் தலைமைச் செயலாளர் புனித் குமார் கோயல் தெரிவித்துள்ளார்.
2025-26 மணிப்பூர் பட்ஜெட்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ரூ. 573 கோடி மதிப்பிலான மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ், இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுவரை, 2,200-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 10,000 மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 4000 வீடுகள் மீள்குடியேற்றத்திற்கான பல்வேறு கட்டங்களில் உள்ளன. குடும்பங்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வதற்காக, மாநில அரசு, மாநில காவல்துறை, மத்திய ஆயுதக் காவல் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் ராணுவம் ஆகியவை இணைந்து கிராமங்களில் பாதுகாப்புச் சாவடிகளை (security posts) அமைத்து வருவதாகவும் கோயல் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மணிப்பூரில் குக்கி மற்றும் மைதேயி சமூகங்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல குடும்பங்கள் வீடற்றவர்களாக மாறினர். இந்தாண்டு பிப்ரவரியில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில் வன்முறைகள் கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.
- சென்னை மற்றும் சூரத் இடையிலான பயண நேரம் சுமார் 45% குறையும்
- 5.6 கோடிக்கும் அதிகமான மனித வேலைநாட்களை உருவாக்கும்
மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 20,668 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மகாராஷ்டிராவின் நாசிக் - சோலாப்பூர் இடையேயான மிகப்பெரிய ஆறு வழிச்சாலை மற்றும் ஒடிசாவில் தேசிய நெடுஞ்சாலை-326 விரிவாக்கம் என இரண்டு திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. 374 கி.மீ நீளம் கொண்ட 6 வழி பசுமைவழி விரைவுச்சாலைக்கு ரூ. 19,142 கோடியும், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு ரூ.1,526 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆறுவழிச்சாலை மும்பை - சென்னை மற்றும் சூரத் - சென்னை பொருளாதார வழித்தடங்களை இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்தப் பாதையில் 27 பெரிய பாலங்கள், 164 சிறிய பாலங்கள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் சூரத் இடையிலான பயண நேரம் சுமார் 45% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் நாசிக், அஹில்யாநகர் , தாராசிவ் மற்றும் சோலாப்பூர் மாவட்டங்கள் வழியாக செல்லும்.
ரூ.1,526 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படும் இரண்டாவது திட்டம், கனிம வளம் நிறைந்த அதேசமயம் உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அலுமினிய உற்பத்தி போன்ற தொழில்களுக்கு ஆதரவளிப்பதுடன், சந்தை வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ள காபி சாகுபடி போன்ற வளர்ந்து வரும் துறைகளுக்கும் உறுதுணையாக அமையும் என கூறப்பட்டுள்ளது.
இதில் ஒடிசாவின் மோகனாவிலிருந்து கோராபுட் வரையிலான 206 கி.மீ தொலைவு கொண்ட நெடுஞ்சாலை பலப்படுத்தப்பட்டு இரு வழிச் சாலையாக விரிவுபடுத்தப்படும். இந்தத் திட்டங்கள் இரண்டு ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 5.6 கோடிக்கும் அதிகமான மனித வேலைநாட்களை உருவாக்கும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
- முரளி கிருஷ்ணாவை குண்டூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
- ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த போது அவரது பெருங்குடலில் பேனா இருப்பது தெரிய வந்தது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் கோத்தபேட்டையை சேர்ந்தவர் சீனிவாச ராவ். இவரது மகன் முரளி கிருஷ்ணா (வயது 16).
இவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 9-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது இவரது நண்பர்கள் பேனாவை விழுங்கினால் ரூ.50 தருவதாக பந்தயம் கட்டினர். அப்போது முரளி கிருஷ்ணா பேனாவை விழுங்கினார்.
அன்று முதல் முரளி கிருஷ்ணாவுக்கு வயிற்று வலி இருந்து வந்தது. இருப்பினும் தனக்கு வயிற்று வலி இருப்பது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி முரளி கிருஷ்ணாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அவரது நண்பர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முரளி கிருஷ்ணா பேனாவை விழுங்கியதாக அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து முரளி கிருஷ்ணாவை குண்டூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த போது அவரது பெருங்குடலில் பேனா இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து டாக்டர்கள் கவுண்டர் குழாய் மூலம் ரெட்ரோகிரேட் எண்டோஸ்கோபி முறையில் பெருங்குடலில் இருந்த பேனாவை அறுவை சிகிச்சையின்றி அகற்றினர். இதனால் மாணவரின் பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.
- 2024-ம் ஆண்டு இந்தியாவில் 2 கோடியே 34 லட்சத்து 13 ஆயிரத்து 498 குழந்தைகள் பிறந்துள்ளன.
- தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பிறப்பு எண்ணிக்கை சுமார் 7 லட்சத்து 80 ஆயிரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. உலக மக்கள் தொகையை கணக்கிட்டால் தற்போதைய நிலவரப்படி, 823 கோடியாக இருக்கிறது. இதில் இந்தியாவில் 146.3 கோடியாக உள்ளது. அதாவது உலக மக்கள் தொகையில் 17.7 சதவீதத்தை இந்தியா கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் 2025-ம் ஆண்டில் மட்டும் எவ்வளவு பிறப்பு எண்ணிக்கை இருந்துள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது. ஐ.நா. 23.1 மில்லியன் அதாவது 2 கோடியே 31 லட்சம் இருக்கலாம் என கணித்திருந்தது.
அதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை பிரிவு வெளியிட்ட அறிக்கையில், 2025-ல் இந்தியாவில் பிறப்பு எண்ணிக்கை 2 கோடியே 30 லட்சத்து 7 ஆயிரம் என்று கூறியுள்ளது. இது உலகிலேயே ஒரு நாட்டில் ஆண்டில் அதிகபட்ச பிறப்பு எண்ணிக்கையாக கணிக்கப்பட்டு இருக்கிறது.
இதே நிலையில் 2024-ம் ஆண்டு இந்தியாவில் 2 கோடியே 34 லட்சத்து 13 ஆயிரத்து 498 குழந்தைகள் பிறந்துள்ளன. சீனாவை விட 3 மடங்கு அதிகம் பிறப்பு எண்ணிக்கையை கொண்டிருக்கிறது இந்தியா. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பிறப்பு எண்ணிக்கை சுமார் 7 லட்சத்து 80 ஆயிரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் பிறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பது போல் தெரிந்தாலும், பிறப்பு விகிதம் என்பது கடந்த ஆண்டுகளைவிட குறைந்து வருவதாகவே சொல்லப்படுகிறது. 1960-களில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 6 குழந்தைகள் என்று இருந்த நிலை மாறி, இப்போது 1.9 ஆக குறைந்துள்ளது. இது 2.1 என்ற நிலைத்தன்மை விகிதத்தை விட குறைவு ஆகும்.
பிறப்பு விகிதம் குறைந்ததற்கு தாமதமான திருமணங்கள், கருத்தரிப்புகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு காரணமாக குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு, குழந்தை வளர்ப்புக்கான பொருளாதார செலவுகள் அதிகரிப்பு ஆகியவை காரணமாக சொல்லப்படுகிறது.
2025-ம் ஆண்டு பிறப்பு எண்ணிக்கையை பொறுத்தவரையில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக, சீனாவில் 87 லட்சமாகவும், நைஜீரியாவில் 76 லட்சமாகவும், பாகிஸ்தானில் 69 லட்சமாகவும், காங்கோவில் 46 லட்சமாகவும், இந்தோனேசியாவில் 44 லட்சமாகவும், எத்தியோப்பியாவில் 42 லட்சமாகவும், அமெரிக்காவில் 37 லட்சமாகவும், வங்காளதேசத்தில் 34 லட்சமாகவும், பிரேசிலில் 25 லட்சமாகவும் இருந்துள்ளன.
நடப்பு ஆண்டில் (2026) இந்தியாவில் பிறப்பு எண்ணிக்கை 2 கோடியே 29 லட்சமாக இருக்கலாம் என ஐ.நா. கணித்திருக்கிறது. ஐ.நா.வின் கணிப்புகள் ஒருபுறம் இருக்க மத்திய அரசு 2026 ஏப்ரல் 1-ந்தேதி முதல் நாட்டின் அதிகாரப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. இது 2027-ல் நிறைவடையும்போது, இந்தியாவின் உண்மையான பிறப்பு மற்றும் இறப்பு தரவுகள் இன்னும் துல்லியமாகத் தெரியவரும்.
- தொலைத்தொடர்பு துறையை மேம்படுத்துவதற்காக அவர் பாடுபட்டு வருகிறார்.
- ஜோதிராதித்ய சிந்தியாவின் நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்.
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் 55-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
தொலைத்தொடர்பு துறையை மேம்படுத்துவதற்காக அவர் பாடுபட்டு வருகிறார். வடகிழக்கு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகள் அதே அளவு குறிப்பிடத்தக்கவை.
அவரது நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்த மருந்து அதிகமாக காய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
- விற்பனை செய்தல் மற்றும் வினியோகிப்பதை தடை செய்வது பொது நலனுக்காக அவசியம் மற்றும் பொருத்தமானது என்று மத்திய அரசு கருதுகிறது.
மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகளை மத்திய அரசு அவ்வப்போது ஆய்வு செய்து, ஆபத்து அதிகமாக இருப்பது தெரிந்தால் அவற்றுக்கு தடை விதித்து வருகிறது. இந்த வகையில் தற்போது 100 மி. கிராமுக்கு மேலான 'நிம்சுலைடு' மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து அதிகமாக காய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில்,
"100 மி.கி.க்கு மேல் நிம்சுலைடு கொண்ட அனைத்து வாய்வழி மருந்துகளும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும், அந்த மருந்துக்கு பாதுகாப்பான மாற்றுகள் கிடைக்கின்றன என்றும் மத்திய அரசு அறிந்துள்ளது. மனித பயன்பாட்டுக்காக நாட்டில் இந்த மருந்தை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் வினியோகிப்பதை தடை செய்வது பொது நலனுக்காக அவசியம் மற்றும் பொருத்தமானது என்று மத்திய அரசு கருதுகிறது.
எனவே, மருந்து பொருட்கள் சட்டப்பிரிவுகளின்படி 100 மி.கி.க்கு மேல் நிம்சுலைடு கொண்ட அனைத்து வாய்வழி மருந்துகளும் தடை செய்யப்படுகின்றன" என கூறப்பட்டுள்ளது.






