என் மலர்tooltip icon

    சென்னை

    • 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
    • சென்னையில் இருந்து 14,268 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    தீபாவளி பண்டிகை வருகிற 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்கள் தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்று, மீண்டும் திரும்பி வரும் வகையில், சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர், அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * சென்னையில் இருந்து 14,268 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    * தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர 10,529 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    * தீபாவளிக்கு மொத்தமாக 20,378 பேருந்துகள் இயக்கப்படும்

    * 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

    • இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
    • தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1400 உயர்ந்தது

    சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கம் விலை உயர்ந்த நிலையில் தற்போது மீண்தும் தங்கம் விலை உயர்ந்தது.

    ஆபரணத்தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,400 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.520 உயர்ந்தது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராம் ரூ.11,125க்கு விற்பனையாகிறது.

    இன்று காலை ஒரு சவரன் ரூ.88,480க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 89,00க்கு விற்பனையாகிறது.

    • 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞர்.
    • நீதிபதி பெருந்தன்மையாக கடந்து சென்றாலும் நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.

    இருப்பினும், "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நீதிபதியை தாக்க முயன்றது நமது ஜனநாயகத்தில் உயர்ந்த நீதித்துறை மீதான தாக்குதல்.

    நீதிபதியை தாக்க முயன்றது அடக்குமுறை, ஏற்றத்தாழ்வு இன்னும் நம் சமூகத்தில் நீடிக்கிறது என்பதை காட்டுகிறது.

    தலைமை நீதிபதி கருணை, அமைதி மற்றும் பெருந்தன்மையுடன் பதிலளித்த விதம் நீதித்துறையின் வலிமையை காட்டுகிறது.

    நீதிபதி பெருந்தன்மையாக கடந்து சென்றாலும் நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • மத்திய அரசு நிதி வழங்கியதால் தனியார் பள்ளியில் 25 சதவீத சேர்க்கைக்கு அனுமதி.
    • இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க முடியாது. பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

    இலவச கல்வி உரிமை சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரை இலவசமாக படிக்க வழி வகை செய்யும் மத்திய அரசின் திட்டத்தில் தமிழகத்தில் 1 லட்சம் குழந்தைகள் ஆண்டு தோறும் சேர்க்கப்படுகிறார்கள்.

    தற்போது மத்திய அரசு நிதி வழங்காததால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இதனால் தனியார் பள்ளிகளில் இந்த வருடம் இலவச கல்வி திட்டத்தில் குழந்தைகளை சேர்க்க முடியவில்லை.

    இந்த நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்கியதால் மாணவர் சேர்க்கையை அரசு தொடங்கியுள்ளது. காலதாமதமாக தொடங்குவதால் மாணவர்கள் ஏற்கனவே பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்கள். இதனால் புதிதாக குழந்தைகளை சேர்க்க வாய்ப்பு இல்லை.

    தற்போது தனியார் பள்ளிகளில் படித்து வரும் குழந்தைகளை இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.

    ஏற்கனவே பெறப்பட்ட கல்வி கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்று மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை தொடங்கியது. அனைத்து மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் அவர்களுக்கு குழந்தைகளை இலவச கல்வி திட்டத்தில் சேர்ப்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கக்கூடிய எல்.கே.ஜி., யு.கே.ஜி., 1-ம் வகுப்பு குழந்தைகளை இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும். கல்வி கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    இதற்கு தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பணத்தை திருப்பி கொடுப்பது சிரமம். காலாண்டு தேர்வு முடிந்துவிட்ட நிலையில் கட்டணத்தை திருப்பி கொடுத்தால் தனியார் பள்ளிகளுக்கு நஷ்டம் பெருமளவில் ஏற்படும்.

    காலதாமதத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் எப்படி பொறுப் பேற்க முடியும் என தனியார் பிரைமரி, நர்சரி, மெட்ரிக்கு லேசன் பள்ளிகள் சங்க மாநில தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே தற்போது இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க முடியாது. பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    • வேறுபட்ட கருத்துகளுக்குப் பதில் வன்முறை வழியைத் தேர்ந்தெடுப்பது, முற்றிலும் ஒப்புக்கொள்ள முடியாதது.
    • அரசியலமைப்பு சட்டத்தையும் மதிக்கும் அனைவரும் இப்படிப்பட்ட செயல்களை கடுமையாகக் கண்டிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அவர்கள் சனாதன தர்மத்திற்கு எதிராக இருப்பதாக கூறி அவர்மீது காலணியை வீசிய சமூகவிரோதியின் வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

    ஒரு ஜனநாயக நாட்டில் எந்தவித கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றை வாத–பிரதிவாதங்கள், சட்டரீதியான வழிமுறைகள் மற்றும் அமைதியான முறைகளால் எடுத்துரைப்பது தான் நாகரிகமான நடைமுறை. நீதித்துறையின் தலைமைப் பொறுப்பில் உள்ள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியை குறிவைத்து இப்படிப்பட்ட அநாகரீக செயல் நடப்பது என்பது, நீதித்துறையின் சுதந்திரத்தையும், மாண்பையும் கேள்விக்குறியாக்குகிறது; சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான ஆபத்தான முன்னுதாரணமாக அமைகிறது; சமூக ஒற்றுமைக்கும் பொது அமைதிக்கும் விரோதமானதாகும்.

    வேறுபட்ட கருத்துகளுக்குப் பதில் வன்முறை வழியைத் தேர்ந்தெடுப்பது, முற்றிலும் ஒப்புக்கொள்ள முடியாதது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நீதித்துறையின் கண்ணியத்தையும் அரசியலமைப்பு சட்டத்தையும் மதிக்கும் அனைவரும் இப்படிப்பட்ட செயல்களை கடுமையாகக் கண்டிக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.



    • சமூக வலைத்தளங்களில் யாரையும் விட்டுவைக்காமல் விமர்சனம் செய்கின்றனர்.
    • சமூக வலைதள விமர்சனங்களை புறக்கணிக்கவேண்டும்.

    தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி என்.செந்தில்குமார் முன் நடைபெற்றது.

    அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் கிரிசில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி தன்னை ஏமாற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஜாய் கிரிசில்டாவின் பேட்டி காரணமாக தனது 2 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

    இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி செந்தில்குமார், இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால தடை உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது. சமூக வலைத்தளங்களில் யாரையும் விட்டுவைக்காமல் விமர்சனம் செய்கின்றனர். உத்தரவுகளை பிறப்பித்தற்காக நீதிபதிகளும் விமர்சிக்கப்படுகின்றனர். சமூக வலைதள விமர்சனங்களை புறக்கணிக்கவேண்டும் எனக் கூறி, மனுவுக்கு அக்டோபர் 22-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஜாய் கிரிசில்டாவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

    முன்னதாக, கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் த.வெ.க. தலைவர் விஜயை நீதிமன்றம் விமர்சித்தது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. 

    • இருதயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ராமதாசை கண்காணித்து வருகின்றனர்.
    • சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் ராமதாஸ் வீடு திரும்புவார்.

    சென்னை:

    சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு இன்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

    ராமதாசின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருதயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ராமதாசை கண்காணித்து வருகின்றனர்.

    சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் ராமதாஸ் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது. 

    • ராமதாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.
    • ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

    சென்னை:

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது.

    இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த அன்புமணி, ராமதாஸ் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். ராமதாஸ் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் அவரை நேரில் சந்தித்து பேச முடியவில்லை என்று கூறினார்.

    இதனிடையே, ராமதாசை உடன் இருந்து கவனித்து வருவதாகவும், உடல் ஆரோக்கியமுடன் நலமாக உள்ளார் என்றும் ஜி.கே.மணி கூறியுள்ளார். மேலும் ராமதாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.

    இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பா.ம.க.நிறுவனர் ராமதாசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். 

    • வீட்டு வசதி வாரியம், குடிநீர் வாரிய தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.
    • மின்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும்.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படும். அந்த இந்தாண்டுக்கான தீபாவளி போனஸ் வழங்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களின் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும்.

    மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 வரை போனஸ் பெறுவார்கள்.

    தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,69,439 தொழிலாளர்களுக்கு ரூ.376 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ஆணையிட்டுள்ளேன்.

    வீட்டு வசதி வாரியம், குடிநீர் வாரிய தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.

    மின்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும்.

    பல்வேறு கூட்டுறவு அமைப்பு, நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணை தனியே வெளியிடப்படும்.

    நுகர்பொருள் வாணிப கழக தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.3000 கருணை தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    • அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
    • வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா மற்றும் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

    ஆலோசனையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

    • நீட்டை எதிர்த்து போராட வேண்டுமென்றால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து தான் போராட வேண்டும்...
    • இன்றும் ஆணவக் கொலைகளை தடுக்க முடியாத உங்கள் அரசை எதிர்த்துப் போராடுங்கள்...

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் அவர்களே இந்தியை ஏற்றுக் கொண்டால்தான் கல்வி நிதி என்று எக்காலத்திலும் மத்திய அரசு சொல்லவில்லை. புதிய கல்விக் கொள்கை என்பது தாய் மொழியை ஊக்குவிப்பது தானே தவிர இந்தி மொழியை ஊக்குவிப்பது அல்ல... நீங்கள் இந்தி மொழியை எதிர்த்து போராடுகிறேன் என்றால் இந்தி மொழியை தமிழகத்தில் திணித்த காங்கிரசோடு தான் நீங்கள் போராட வேண்டும்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டு மொழி.. ஆனால் தனியார் பள்ளிக்கு மூன்று மொழி என்று உங்களது பாரபட்சமான கல்வித் திட்டத்திற்கு எதிராக போராடுங்கள்.

    நீட்டை எதிர்த்து போராட வேண்டுமென்றால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து தான் போராட வேண்டும்... நீட்டை எதிர்த்து போராடுவேன் கையெழுத்து போடுவேன் என்று பொய் சொன்னது யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.

    இன்று இல்லாத ஒன்றை எதிர்த்து போராடுகிறேன் என்பது உங்களது திராவிட மாடல் என்கின்ற பொய் மாடல்.

    உலகத்திற்கே பொதுவான வள்ளுவர் ஆரம்ப காலத்தில் காவி உடையில் தான் இருந்தார் இறைவணக்கத்தோடு இறை உணர்வோடு இருந்த வள்ளுவரை வெள்ளுடை உடுக்க வைத்த பாவம் செய்பவர்கள் நீங்கள்... ஆக உங்களையே எதிர்த்து போராடப் போகிறீர்களா..?..

    மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் நாடு முழுவதும் மறைந்திருக்கின்ற நேரத்தில் உங்கள் சொந்த தொகுதியிலேயே துப்புரவு தொழிலாளர்கள் மரணித்திருக்கிறார்களே அதை எதிர்த்து போராடுங்கள்.

    வேங்கை வயலில் நலமுடன் தண்ணீர் இல்லாமல் மலமுடன் தண்ணீர் குடித்த மக்களுக்கு இன்றும் நியாயம் கிடைக்காமல் இருப்பதற்கு எதிராக உங்களுக்கு எதிராக நீங்களே போராடுங்கள்.

    கள்ளச்சாராயத்தினால் 67 உயிர்களை பலிவாங்கி.. அங்கு ஆறுதல் கூட செல்ல முடியாத உங்களது மனிதாபிமானமற்ற செயலை எதிர்த்து போராடுங்கள்.

    இன்றும் ஆணவக் கொலைகளை தடுக்க முடியாத உங்கள் அரசை எதிர்த்துப் போராடுங்கள்...

    பல்கலைக்கழகமாக இருக்கட்டும், காவலர்களிடம் இருந்து இருக்கட்டும்... பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத உங்கள் அவல நிலையை எதிர்த்து போராடுங்கள்.. திராவிட மாடல் ஆட்சியில் இன்று பள்ளி குழந்தைகளுக்கிடையே தலைவிரித்தாடும் சாதிய வேற்றுமையை எதிர்த்து போராடுங்கள்.

    ஒரு விமான சாகசத்தில் கூட பாதுகாப்பு கொடுக்க முடியாமல் ஐந்து பேரின் உயிரை காவு வாங்கிய உங்களது காவல்துறைக்கு எதிராக போராடுங்கள். ஒரு அரசியல் கட்சிக்கு சரியான பாதுகாப்பு கொடுக்காமல் 41 உயிர் பலியாக காரணமாக இருந்த உங்களது பாதுகாப்பு நடவடிக்கைக்கு எதிராக போராடுங்கள். இன்று தமிழகத்தில் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் பொழுது... அதை எதிர்த்து நீங்கள் போராடினால் தான் சரியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
    • வாகனங்கள் ஊர்ந்தபடி சென்னைக்குள் நுழைந்தன.

    பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதாலும், ஆயுதபூஜை விடுமுறையையொட்டியும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். விடுமுறை முடிந்து இன்று(திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டது.

    இதனால் சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று முதல் மீண்டும் சென்னைக்கு திரும்பி வரத் தொடங்கினர். கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ்களிலும், இருசக்கர வாகனங்களில் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி பொதுமக்கள் வந்ததால் ஜி.எஸ்.டி. சாலையில் பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்னைக்குள் நுழைந்தன.

    இதே போல நேற்று மாலை பெய்த மழையால் ஜி.எஸ்.டி. சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



    விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் ஒரே நேரத்தில் திரண்டதால், தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. ரெயில் நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளால் மிகுந்த நெரிசல் ஏற்பட்டது. மேலும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

    ×