என் மலர்
சென்னை
- தமிழ்நாட்டை கபளீகரம் செய்ய திட்டமிடும் கூட்டத்தை வேறோடு வீழ்த்துவோம்.
- அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுங்கள். ஒற்றுமை இல்லாமல் எந்த இலக்கையும் அடைய முடியாது.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என தெரிகிறது. இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.
இதற்காக வாக்குச்சாவடி வாரியாக பாக முகவர்கள் தி.மு.க.வில் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரையும் அந்தந்த நகர ஒன்றிய பேரூர் அளவில் ஒருங்கிணைந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதி வாரியாகவும் பாக முகவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மண்டல அளவில் ஆலோசனை கூட்டங்களை நடத்தி முடித்துள்ளனர். இதன் பிறகு என் வாக்குச் சாவடி-வெற்றி வாக்குச்சாவடி பயிற்சி கூட்டத்தை மாமல்ல புரத்தில் கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி நடத்தினார்.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று கட்டளையிட்டு இருந்தார். இப்போது என் வாக்குச் சாவடி-வெற்றி வாக்குச் சாவடி செயல்பாடு எப்படி உள்ளது என்பது பற்றி ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக மாவட்டக் கழக யெலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அவரது அறிவுரைகளை கேட்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநகர ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற, உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர் கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை ஒரே இடத்தில் அமர வைத்து முதலமைச்சரின் பேச்சை கேட்பதற்காக மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்படி காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் உரையாற்றினார். அவர் பேசும்போது, தமிழ்நாட்டை கபளீகரம் செய்ய திட்டமிடும் கூட்டத்தை வேறோடு வீழ்த்துவோம். ஒன்றிய பி.ஜே.பி. அரசு தமிழ்நாட்டுக்கு செய்து கொண்டிருக்கும் துரோகங்களை நிதி ஒதுக்கீடுகளில் செய்து கொண்டிருக்கும் வஞ்சகங்களை எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அவரவர் வாக்குச்சாவடியில் வெற்றி பெறுவது இலக்காக இருக்க வேண்டும். ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு டார்கெட் உருவாக்கி செயல்படுங்கள்.
தேர்தலில் பணியாற்றும் ஒவ்வொருவரும் தி.மு.கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கை உள்ளத்தில் தாங்கி உழைக்க வேண்டும். நீங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கு நன்றாக தெரியும். ஆனாலும் இன்னும் உங்கள் பணியை வேகப்படுத்துங்கள்.
அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுங்கள். ஒற்றுமை இல்லாமல் எந்த இலக்கையும் அடைய முடியாது. நம்முடைய வெற்றியை யாரும் தடுக்க முடியாது.
என்னுடைய வாக்குச்சாவடியில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று ஒவ்வொரு கழக உடன் பிறப்புகளும் உறுதியேற்று களப்பணியாற்றினால், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முன்னிலை பெற்று, 2026-ல் 7-வது முறையாக தி.மு.கழகம் ஆட்சி அமைவது உறுதியாகி விடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- துணை நடிகைகள் பலரும் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- யார் யாரெல்லாம் போதை பொருள் பயன்படுத்தினர் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
போதைப்பொருள் விற்பனை சப்ளையில் ஈடுபட்டதாக திரைப்பட இணை தயாரிப்பாளர் சர்புதீன், முகப்பேரைச் சேர்ந்த சீனிவாசன், வளசரவாக்கத்தைச் சேர்ந்த சரத் ஆகியோரை திருமங்கலம் போலீசார் கடந்த 20-ந்தேதி கைது செய்தனர்.
சர்புதீனின் காரில் இருந்து 27.91 லட்சம் ரூபாயும், சீனிவாசன் வீட்டில் 10 கிராம் ஓ.ஜி. கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து திருமங்கலம் போலீசார் 3 பேரையும் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சர்புதீன், தொழில்அதிபர் சரத் ஆகியோரை திருமங்கலம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
சர்புதீன் நடிகர் சிம்புவிற்கு மேலாளராக பணியாற்றி உள்ளார். பல நடிகர்கள், நடிகைகளுடன் பழக்கமுடையர். இதனால் அதில் யாருக்கெல்லாம் போதைப்பொருள் சப்ளை செய்துள்ளார்? என்பது தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் எந்தெந்த சினிமா விருந்துகளில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது? அதில் கலந்து கொண்ட திரை உலகினர் யார் யார் என்பது தொடர்பாகவும் சர்புதீனிடம் விசாரணை நடத்தி பட்டியலை தயாரித்தனர்.
இந்த நிலையில் சர்புதீன் கொடுத்த தகவலின் பேரில் திரைப்பட தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து துணை நடிகைகள் பலரும் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் யாரெல்லாம் போதை பொருள் பயன்படுத்தினர் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் பிரபல நடிகைகளுக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- 6 தொகுதிகளுக்கு 3 மண்டல துணை செயலாளர்கள் பொறுப்பு புதிதாக உருவாக்கப்பட்டு நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
- 156 பொறுப்புகளுக்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 39 பாராளுமன்ற தொகுதிகள் அடிப்படையில் மண்டல செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரையில் பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு மண்டல செயலாளர் வீதம் இருந்தனர். அந்த கட்டமைப்பை மாற்றி தற்போது ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு மண்டல செயலாளரும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மண்டல துணை செயலாளரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அந்த வகையில் 6 தொகுதிகளுக்கு 3 மண்டல துணை செயலாளர்கள் பொறுப்பு புதிதாக உருவாக்கப்பட்டு நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கட்சி தலைவர் தொல். திருமாவளவன் புதிய மண்டல செயலாளர்கள், துணை செயலாளர்கள் பட்டியலை அமெரிக்காவில் இருந்து வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் 156 பொறுப்புகளுக்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
திருவள்ளூர் மண்டல செயலாளர் தளபதி சுந்தர், மண்டல துணை செயலாளர்கள் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி-ஏகாம்பரம், மாதவரம், ஆவடி-ராமதாஸ், பூந்தமல்லி, திருவள்ளூர் தொகுதிகள்-செஞ்சி செல்வம்.
வட சென்னை
மண்டல செயலாளர்-அம்பேத் வளவன், துணை செயலாளர்களாக திருவொற்றியூர், ராயபுரம் தொகுதி நீல மேகவண்ணன், ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளுக்கு எஸ்.எம். மணி, திரு.வி.க. நகர், கொளத்தூர் தொகுதிகளுக்கு புரசை அன்பு.
தென் சென்னை மண்டல செயலாளர் ஸ்ரீதர் கார்த்திக், துணை செயலாளர்கள் கதிர் ராவணன், அசோக், வீரமணி. மைய சென்னை மண்டல செயலாளராக இரா.செல்வம், துணை செயலாளர்களாக தலித் நூர் செல்வம், அர்ஜன், ராவண சங்கு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கிருஷ்ணகிரி மண்டல செயலாளர் அசோகன், துணை செலயாளர்கள் ஜிம் மோகன், தங்க தியாகு, மாயவன், தர்மபுரி மண்டல செயலாளர்-தமிழண்பன், துணை செலயாளர்கள் செந்தில்குமார், மின்னல் சக்தி ஜானகிராமன்.
திருவண்ணாமலை மண்டல செயலாளர் அம்பேத் வளவன், துணை செயலாளர்கள்-சின்ன பையன், ஜெயமூர்த்தி, முருகேசன், திண்டுக்கல் மண்டல செயலாளர்-ஜான்சன்கிறிஸ்டோபர், துணை செயலாளர்கள் சந்திரன், ஜனா முகமது, அன்பரசு, கரூர் மண்டல செயலாளர்கள்-வேலுசாமி, துணை செயலாளர்கள் கதிரேசன், ஜெயராமன், செல்வராஜ்.
மண்டல செயலாளர்-தமிழாதன், துணை செயலாளர்கள்-பொன் முருகேசன், பிரபாகரன், திருமறவன், பெரம்பலூர் மண்டல செயலாளர்கள் ஸ்டாலின், துணை செயலாளர்கள் நீலவாணன், பெரியசாமி, லெனின்.
கடலூர் மண்டல செயலாளர்-பரச. முருகையன், துணை செயலாளர்கள் இரா.செம்மல், அதியமான், ஆலப்பாக்கம் ஜெயகுமார், சிதம்பரம் மண்டல செயலாளர்-செல்லப்பன், துணை செலயாளர்களாக தடா கதிரவன், செல்வராஜ், கருப்பசாமி,
மயிலாடுதுறை மண்டல செயலாளர்-அறிவழகன், துணை செயலாளர்கள் காமராஜ், முருகதாஸ், ராஜ்குமார், நாகப்பட்டினம் மண்டல செயலாளர் எம்.டி. இளவரசு துணை செய லாளர்கள் ஜாகீர் சாதிக் விதா செல்வம், சீமா மகேந்திரன், தஞ்சாவூர் மண்டல செயலாளர்-சிவக்குமார். துணை செயலாளர்கள்-மன்னை ரமணி, சொக்கா ரவி, ஆத்மா ஆனந்தகுமார்.
ஆரணி மண்டல செயலாளர்கள்-நன்மாறன், துணை செயலாளர்கள் ஜெய்சங்கர், குப்பன், தனஞ்செழியன், விழுப்புரம் மண்டல செயலாளர்- திலீபன். துணை செயலாளர்கள்-இரணியன், ஆதித் தமிழன், ஓவியர் இளங்கோவன், கள்ளக்குறிச்சி மண்டல செயலாளர்-சீதா துணை செயலாளர்கள்-பொன்னி வளவன், ராமமூர்த்தி, நாராயணன்.
ஸ்ரீபெரும்புதூர் மண்டல செயலாளர்-கதிர்நிலவன், துணை செயலாளர்கள்-ரூபஸ், கண்ணன், தேவ அருண்பிரகாசம், காஞ்சீ புரம் மண்டல செயலாளர்-இரா.தமிழரசன், துணை செலயாளர்கள், மதி. ஆதவன், பொன்னி வளவன், இளைய வளவன்.
அரக்கோணம் மண்டல செயலாளர் தமிழ்மாறன். துணை செயலாளர்கள்-பிரபா இளையநிலா, வெற்றி வளவன், தமிழ். வேலூர் மண்டல செயலாளர்-சந்திரன், துணை செயலாளர் சஜின் குமார், செல்வன், கோவேந்தர்.
சேலம் மண்டல செயலாளர்-நாவரசு, துணை செயலாளர்கள்-ஓமலூர் ஆறுமுகம், ஜெயச்சந்திரன், வேணுநாயகன், நாமக்கல் மண்டல செயலாளர் பழனிமாறன், துணை செயலாளர்கள்-அரசன், காமராஜ் பெருமாவளவன், ஈரோடு மண்டல செயலாளர்-ஜாபர் அலி. துணை செயலாளர்கள்-சவுமியா, செம்மணி, பிரீத் ஜான் நாட், திருப்பூர் மண்டல செயலாளர்-சிறுத்தை வள்ளுவன், துணை செயலாளர்கள்-திருமாவளவன், அம்பேத்கர், துறைவளவன்.
ராமநாதபுரம் மண்டல செயலாளர்-விடுதலைசேகரன், துணை செயலாளர்கள்-ஜெயபாண்டி, பழனிகுமார், பாலகிருஷ்ணன், தூத்துக்குடி மண்டல செயலாளர்கள்-திருள்ளூவன், அர்ஜூன் கதிரேசன்.
தென்காசி மண்டல செயலாளர்-இசக்கி பாண்டியன், துணை செயலாளர்கள்-லிங்கவளவன், சித்திக், தாமஸ், திருநெல்வேலி மண்டல செயலாளர்கள்-களக்காடு சுந்தர், துணை செயலாளர் கள்-கரிசல் சுரேஷ், வெற்றி மாறன், ராஜ்குமார், கன்னியாகுமரி மண்டல செயலாளர்-பகலவன், துணை செயலாளர்கள், திருமாவேந்தன், மாத்தூர் ஜெயன், டேவிட் மேரி.
சிவகங்கை மண்டல செயலாளர்-பெரியசாமி, துணை செயலாளர்கள்-சின்னுபழகு, சங்கு உதய குமார், முத்துராஜ், மதுரை மண்டல செயலாளர்-இன்குலாப், துணை செயலாளர்-மூர்த்தி மோகனா, கதிரவன்.
தேனி மண்டல செயலாளர்-ரபீக் முகமது, துணை செயலாளர்கள்-முருகன், நாகரத்தினம், சுருளி.
விருதுநகர் மண்டல செயலாளர்-முருகன், துணை செயலாளர்கள் கலைச் செல்வன், போத்தி ராஜன், சதுரகிரி, நீலகிரி மண்டல செயலாளர்-ராஜேந்திர பிரபு, துணை செயலாளர்கள் மன்னரசன், சகாதேவன், ஜெகன் மோகன்.
கோவை மண்டல செயலாளர்-கலையரசன், துணை செயலாளர்கள்-தங்கவளவன், துறை செயலாளர்கள்-இளங்கோ, குமணன். பொள்ளாச்சி மண்டல செயலாளர்-கேசவ் முருகன், துணை செயலாளர்கள்-நிலா மணிமாறன், பிரபு, முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அடுத்த கட்டமாக ஓரிரு நாட்களில் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகிறது.
- டெண்டர் மோசடிகள் மூலம் குறைந்தது ரூ.1,020 கோடி லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளது.
- நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை ஒப்பந்தக்காரர்களிடமிருந்து 'கட்சி நிதியாக' லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர்களில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை புகார் அளித்துள்ளது. டெண்டர் மோசடிகள் மூலம் குறைந்தது ரூ.1,020 கோடி லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என். நேரு, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனைகளின்போது பெறப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை மேற்கோள் காட்டி உள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 66(2) இன் கீழ், ஊழல் குறித்து விசாரிக்க காவல்துறை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யக்கோரி, டிசம்பர் 3-ந்தேதி மாநில தலைமைச் செயலாளர், காவல் படைத் தலைவர் (HoPF) மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் (DVAC) ஆகியவற்றிற்கு அமலாக்கத்துறை 258 பக்க ஆவணத்தை அனுப்பியுள்ளது.
தி.மு.க. அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையில் நடந்த ஒரு பெரிய ஊழலைக் குறிப்பிட்டு, தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை எழுதிய இரண்டாவது கடிதம் இதுவாகும்.
முன்னதாக, கடந்த அக்டோபர் 27 அன்று, நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையில் நடந்த வேலைக்கான பண மோசடி குறித்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யக்கோரி டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது.
இத்துறையில் உதவி பொறியாளர்கள், ஜூனியர் பொறியாளர்கள் மற்றும் நகர திட்டமிடல் அதிகாரிகள் போன்ற பதவிகளைப் பெற பல வேட்பாளர்கள் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் கொடுத்ததாக அமலாக்கத்துறை அப்போது குற்றம் சாட்டி இருந்தது.
ஒரு விசாரணை நிறுவனம் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர். இல்லாமல், பணமோசடி விசாரணையை அமலாக்கத்துறையால் தன்னிச்சையாக நடத்த முடியாது. இருப்பினும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 66(2) ஆனது, அமலாக்கத்துறை பிற முகமைகளுடன் ஆதாரங்களைப் பகிரவும், திட்டமிடப்பட்ட குற்றங்களின் கீழ் ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வலியுறுத்தவும் அதிகாரம் வழங்குகிறது, இதன் மூலம் பணமோசடி விசாரணையைத் தொடங்க முடியும்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையின் பணிகளைச் செய்யும் ஒப்பந்ததாரர்கள், அமைச்சர் கே.என். நேருவின் கூட்டாளிகளுக்கு ஒப்பந்த மதிப்பில் 7.5 முதல் 10% வரை செலுத்தியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. முறைகேடாகவோ அல்லது முன்பே தீர்மானிக்கப்பட்டோ ஒதுக்கப்பட்ட டெண்டர்களின் மூலம் இந்த ஒப்பந்தக்காரர்கள் பயனடைந்தார்கள் என்றும், நேருவின் கூட்டாளிகளின் தொலைபேசிகளிலிருந்து மீட்கப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை மேற்கோள் காட்டி அமலாக்கத்துறை கூறியுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை ஒப்பந்தக்காரர்களிடமிருந்து 'கட்சி நிதியாக' லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. கூடுதலாக, துறையில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் கூட ஒப்பந்தக்காரர்களிடமிருந்து லஞ்சம் வசூலித்து அமைச்சர் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு மாற்றுமாறு கேட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அமைச்சர் கூட்டாளிகளின் தொலைபேசிகளிலிருந்து பெறப்பட்ட செய்திகள், உரையாடல்கள் அல்லது கணக்கீட்டுத் தாள்களின் அடிப்படையில், மொத்தம் ரூ.1,020 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான நேரடி ஆதாரம் என்று அமலாக்கத்துறை பல குறிப்பிட்ட நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.
கழிப்பறைகள், துப்புரவுத் தொழிலாளர்களை அவுட்சோர்சிங் செய்தல், நபாட் திட்டங்கள், துப்புரவாளர் குடியிருப்புகள், கிராமச் சாலைகள், நீர்/ஏரி வேலைகள் என கிட்டத்தட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்திலிருந்தும் லஞ்சங்கள் வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை மேலும் குற்றம் சாட்டியுள்ளது. பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், பல்வேறு மட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகளால் திட்ட அனுமதி மற்றும் பில்களை நிறைவேற்றும் போது ஒப்பந்த மதிப்பில் 20-25% லஞ்சமாகப் பெறப்பட்டது என்று அமலாக்கத்துறை கூறி உள்ளது.
- யார் அந்த சார்? என்று தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி வந்தார்.
- மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதாக தி.மு.க. அமைச்சர்கள் தெரிவித்தனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரன் சம்பவத்தன்று 'சார்' என்று குறிப்பிட்டு பேசியதாக தகவல் வெளியானது.
இதையடுத்து யார் அந்த சார்?' என்ற கேள்வி தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
யார் அந்த சார்? என்று தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி வந்தார்.
இதற்கு பதில் அளித்த தி.மு.க. அமைச்சர்கள், அப்படி யாரும் இல்லை, மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டின் சட்டசபையின் முதல் கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யார் அந்த சார்? என அச்சிடப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'யார் அந்த சார்?' என்று கேள்வி எழுப்பி, அமைச்சர்கள் யாரையோ காப்பாற்றப் பேசுவதாக குற்றஞ்சாட்டினார்.

'யார் அந்த சார்?' என்ற கேள்வியுடன் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
அ.தி.மு.க. சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார் (SIR)? #SaveOurDaughters என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை.
- காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும்.
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாளை (09.12.2025, செவ்வாய்க்கிழமை) புதுச்சேரி, உப்பளத்தில் காலை 10.30 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களது 'புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட, தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத் தோழர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நம் வெற்றித் தலைவர், தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர். எனவே நம் வெற்றித் தலைவர் இந்தப் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கழகத் தோழர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம்.
1. கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. இவர்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
2. நம் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும்போதும் அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது, போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
3. காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும். அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை. எனவே கழகத் தோழர்கள் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
5. வாகனங்களை நிறுத்துவதற்குக் காவல் துறை அனுமதித்துள்ள பாண்டி மெரினா பார்க்கிங், பழைய துறைமுகம் மற்றும் இந்திராகாந்தி ஸ்டேடியம் பின்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். வேறு இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாகவோ கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.
6. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நம் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும். தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.
7. எளிதில் அடையாளம் காணும் வகையில் கழக நிர்வாகிகள் தலைமைக் கழகத்தால் வழங்கப்படும் பேட்ஜ் அணிந்தும், தன்னார்வலர்கள் சீருடை அணிந்தும் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
8. மாண்பமை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை / இதர சாலைகளின் இரு புறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.
9. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்குக் கம்பங்கள் (EB Lamp Posts), மின் கம்பங்கள் (EB Posts), மின்மாற்றிகள் (EB Transformers) ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி ஏதும் பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
10. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.
11. தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவரும் அமைதியான முறையில், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் கலைந்து செல்ல வேண்டும்.
நம் வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு வழங்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றியடைய, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் 1.30 கோடி இளைஞர்கள் படித்துவிட்டு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
- லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை கனவுகளை திமுக அரசு தட்டிப் பறித்திருக்கிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறையில் 2538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்க ஒரு பணிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கையூட்டு பெறப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி அமலாக்கத்துறை எழுதிய கடிதம் வெளியானது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த காவல்துறை ஆணையிட்டுள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய ஊழல் அம்பலப்படுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தத் துடிக்கும் திமுக அரசு, அந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த முன்வராதது கண்டிக்கத்தக்கது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2538 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை நியமிப்பதற்கான அரசாணை 14.11.2023-ஆம் நாளும், ஆள்தேர்வு அறிவிக்கை 02.02.2024-ஆம் நாளும் வெளியிடப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்த ஆள்தேர்வில் ஒவ்வொரு பணிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டதையும், அப்பணம் ஹவாலா முறையில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதையும் சோதனைகளின் மூலம் கண்டறிந்த அமலாக்கத்துறை, அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி 232 பக்க ஆவணங்களுடன் அக்டோபர் 27-ஆம் நாள் தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்த ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அக்டோபர் 29-ஆம் நாள் நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தது; சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்விலும், மதுரைக் கிளையிலும் இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆணையிடக் கோரி வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. அந்த வழக்குகளில் ஒன்றின் விசாரணையின்போது, அமலாக்கத்துறையின் அறிக்கை எவ்வாறு வெளியானது? என்று நீதிபதிகள் வினா எழுப்பியிருந்தனர்.
அதையே காரணம் காட்டி, ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல் குறித்த அமலாக்கத்துறை அறிக்கை எவ்வாறு வெளியானது? என்பது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இந்த ஊழல் குறித்த அமலாக்கத்துறையின் அறிக்கை வெளியானது அதிசயம் அல்ல. ஊடகத் தொடர்புகள் கடந்த காலங்களில் இல்லாத அளவில் அதிகரித்திருப்பதுடன், சமூக ஊடகங்கள் பெருகியுள்ள நிலையில், இத்தகைய அறிக்கைகள் வெளிவருவது இயல்பானது தான். கடந்த காலங்களிலும் இதே போன்ற பல அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு இருக்கும் போது இந்த அறிக்கை வெளியானது குறித்து விசாரணை நடத்த ஆணையிட்டிருக்கும் தமிழக அரசு, தமிழகத்தையே உலுக்கிய வேலைவாய்ப்பு ஊழல் குறித்து வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?
தமிழ்நாட்டில் 1.30 கோடி இளைஞர்கள் படித்துவிட்டு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் பட்டப்படிப்பை முடித்து விட்டு, அரசு வேலைக்கு சென்று விட முடியாதா? என போட்டித் தேர்வு பயிற்சி மையங்களிலும், நூலகங்களிலும் தவம் கிடக்கின்றனர். அவர்களைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசுத்துறை வேலைகளை திமுக அரசு விலை வைத்து விற்பனை செய்திருக்கிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை கனவுகளை திமுக அரசு தட்டிப் பறித்திருக்கிறது. இதற்கு மன்னிப்பே கிடையாது.
தமிழ்நாட்டில் நல்லாட்சி நடத்துவதாக நாடகமாடும் திமுகவினர், ஊழல்கள் செய்வதை மட்டுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். திமுக ஆட்சியில் ஊழல்கள் நடக்காதத் துறையே கிடையாது என்பது தான் அனைத்துத் தரப்பினரின் குற்றச்சாட்டாக உள்ளது. வேலைவாய்ப்பு வழங்குவதில் தொடங்கி, ஆற்று மணல் கொள்ளை, கனிமவளங்கள் கொள்ளை, இராம்சார் தளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்குவதில் ஊழல், மின்சாரம் கொள்முதல் செய்வதில் ஊழல், மின்மாற்றிகள் கொள்முதல் செய்வதில் ஊழல், சரக்குந்து போக்குவரத்து ஒப்பந்த ஊழல் என திமுக அரசில் நடந்த ஊழல்களை பட்டியலிட்டால், நீதியரசர் சர்க்காரியா ஆணையத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊழல்களின் பட்டியலை விட மிகவும் அதிகமாக நீண்டு கொண்டே செல்லும். திமுக என்றால் ஊழல் என்று தான் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
ஆனால், எந்த ஊழலும் செய்யவில்லை; உலகின் உத்தமமான நிர்வாகத்தை வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற உலகமகா பொய்யை திமுக தொடர்ந்து கூறி வருகிறது. திமுக ஆட்சியாளர்கள் எந்த ஊழலும் செய்ய வில்லை என்றால், குறிப்பாக நகராட்சி நிர்வாகத்துறைக்கு அதிகாரிகளை நியமித்ததில் எந்த ஊழலும் நடைபெற வில்லை என்றால், அது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த திமுக அரசு அஞ்சுவது ஏன்?
இதற்கு முன் தமிழ்நாட்டில் ரூ.4730 கோடி அளவுக்கு மணல் கொள்ளை நடந்திருப்பதாகவும், அதன் மூலம் கிடைத்த பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்த அமலாக்கத் துறை, அது குறித்த ஆதாரங்களை தமிழக அரசுக்கு அனுப்பி, அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்யுமாறு கடந்த ஆண்டு ஜூன் 13-ஆம் தேதி தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு கடிதம் எழுதியது. ஆனால், அதன் மீது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் தான் வேலைவாய்ப்பு ஊழல் குறித்த அறிக்கை மீது ஒன்றரை மாதமாக நடவடிக்கை இல்லை.
ஆட்சி அதிகாரத்தை தீமைகளில் இருந்து மக்களைக் காக்கும் கவசமாக பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ஊழல் செய்த தீயசக்திகளை காப்பாற்றுவதற்கான கவசமாக ஆட்சி அதிகாரத்தை திமுகவினர் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. திமுகவினரால் தவறாக பயன்படுத்தப்படும் அந்தக் கவசம் இன்னும் 3 மாதங்களில் காணாமல் போய்விடும். அடுத்து அமையவிருக்கும் அரசில் திமுக ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும். மக்களைச் சுரண்டி ஊழல் செய்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்பதை வாக்குறுதியாக அளிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாரத்தின் இறுதிநாளில் தங்கம் விலை சற்று உயர்ந்தது.
- வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த வாரத்தில் ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வந்தது.
இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.96,560-க்கும், கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.12,070-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்த நிலையில், வாரத்தின் இறுதிநாளில் தங்கம் விலை சற்று உயர்ந்தது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,040-க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,320 ஆயிரத்துக்கும் விற்பனையானது. நேற்றும் இதே விலையில் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.12,040-க்கும், ஒரு சவரன் ரூ.96,320 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.198-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
07-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
06-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
05-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000
04-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,160
03-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,480
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
07-12-2025- ஒரு கிராம் ரூ.199
06-12-2025- ஒரு கிராம் ரூ.199
05-12-2025- ஒரு கிராம் ரூ.196
04-12-2025- ஒரு கிராம் ரூ.200
03-12-2025- ஒரு கிராம் ரூ.201
- உள்நாட்டில் அதிகளவில் விமானங்களை இயக்கும் இண்டிகோ நிறுவனம் சிக்கல்களை சந்தித்து வருகிறது.
- நேற்று மட்டும் சென்னையில் 100க்கும் அதிகமான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
உள்ளாட்டு விமான பயணங்களில் விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கான புதிய பணி நேரக்கட்டுப்பாடு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி விமானிகள் தொடர்ச்சியாக 18 மணி நேரம் வேலை பார்க்கலாம் என்ற விதியை திருத்தி 8 மணி நேரமாக குறைத்தது. விமானிகளின் விடுப்பு நேரம் முன்பு வாரத்திற்கு 36 மணி நேரமாக இருந்தது. அது தற்போது 48 மணி நேரமாக அதிகரித்தது.
மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்த மற்ற விமான நிறுவனங்கள் படிப்படியாக தேவையான ஏற்பாடுகளை செய்தது. ஆனால் இண்டிகோ விமான நிறுவனம் இதில் மெத்தனம் காட்டியதாக விமானிகள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியது.
இதன் காரணமாக உள்நாட்டில் அதிகளவில் விமானங்களை இயக்கும் இண்டிகோ நிறுவனம் சிக்கல்களை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களாக அந்த விமானங்கள் தாமதம் மற்றும் ஏராளமான விமானங்கள் ரத்து காரணமாக பயணிகள் பரிதவித்தனர். இதை பயன்படுத்தி மற்ற விமான நிறுவனங்கள் தங்கள் விமான கட்டணங்களை பன்மடங்கு அதிகரித்தன.
இந்நிலையில், இன்று 7வது நாளாக சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிப்படைந்துள்ளது.
சென்னையில் நிர்வாக காரணமாக இன்று 38 புறப்பாடு. 33 வருகை என 71 விமான சேவை ரத்தாகியுள்ளதாக இண்டிகோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதால் தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சீர்கெட்டு உள்ளது.
- சுய விளம்பரத்தில் திளைக்கும் பொம்மை முதல்வர் இதை எப்போது தான் உணரப் போகிறாரோ?
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டில் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றிருப்பதை கடந்த 24 மணி நேரத்தில் வந்த செய்திகளே தெளிவாக உணர்த்துகின்றன.
* கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பள்ளி மாணவர்கள் இடையேயான மோதலில் தாக்கப்பட்ட +2 மாணவர் பரிதாபாமாக உயிரிழப்பு,
* மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் எடை தராசால் அடித்து காய்கறி கடைக்காரர் கொலை,
* தென்காசியில் சொத்து தகராறில் விவசாயி வெட்டிப் படுகொலை,
* சேலம் தோப்பூர் பகுதியில் தலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞரின் தலையை தேடும் போலீசார்,
* நாகர்கோவிலில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து திருட முயற்சி,
என தொடர்ச்சியாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
பள்ளி மாணவர்கள் இடையே படிப்பு தான் வளர வேண்டும். ஆனால், ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை போக்கு தான் அதிகரித்து வருகிறது. கொலை வரை நீண்டுள்ள இந்த மோதல் வெறியை கட்டுப்படுத்தத் தவறியதற்கு பொம்மை முதல்வரின் அரசு வெட்கப்பட வேண்டும்.
விவசாயி, வியாபாரி, பெண், இளைஞர் என யாருக்குமே பகல், இரவென எந்த நேரத்திலும் துளி கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவலத்தின் மொத்த உருவான ஆட்சியைத் தான் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதால் தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சீர்கெட்டு உள்ளது. சுய விளம்பரத்தில் திளைக்கும் பொம்மை முதல்வர் இதை எப்போது தான் உணரப் போகிறாரோ?
ஆட்சியில் இருக்கப் போகும் நான்கு மாதங்களிலாவது சட்டம் ஒழுங்கின் மீது கவனம் செலுத்துமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில
பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
9-ந்தேதி வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- சட்டசபைக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றநிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.
- நாட்டின் தேசிய கீதத்தை மதிப்பது என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படை கடமை.
புத்தாண்டில், தமிழக சட்டசபையின் ஆண்டு முதல் கூட்டத்தில், ஆளுநர் தன் உரையை வாசிப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த ஜனவரி 6-ந்தேதி நடந்த சட்டசபை கூட்டத்தின்போது ஆளுநர் ஆர்.என். ரவி, அவை தொடங்கிய 3 நிமிடத்திலேயே, தமிழக அரசின் உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேசிய கீதத்தை அவமதித்ததாகக் கூறி, தன் உரையை முழுமையாக வாசிக்காமல், பாதியிலேயே ஆளுநர் வெளியேறினார். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில்,
நாட்டின் தேசிய கீதத்தை மதிப்பது என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படை கடமை. அனைத்து மாநில சட்டசபைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கம், முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.
தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் நாட்டின் அரசியலமைப்பு, தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. சட்டசபைக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றநிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.
தேசிய கீதத்தை பாட சபாநாயகர், முதல்வருக்கு ஆளுநர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தும் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.
ஆளுநர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தும் அதனை மறுப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு அவமரியாதை ஏற்பட்டதால் அவையிலிருந்து ஆளுநர் வெளியேறினார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் சில நிமிடங்களில் அந்த பதிவை ஆளுநர் மாளிகை நீக்கியது. அதன்பிறகு, மீண்டும் சில திருத்தங்களுடன் அந்தப் பதிவு மீண்டும் எக்ஸ் தளத்தில் போடப்பட்டுள்ளது. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டை போல, இந்த முறையும் ஆளுநர் சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளானது.






