என் மலர்
உள்ளூர் செய்திகள்
- என்னால் கட்சிக்கோ, தலைமைக்கோ எந்த களங்கமும் ஏற்படக் கூடாது என நினைக்கிறேன்.
- தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பத்தின்பேரிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன்.
என்னால் கட்சிக்கோ, தலைமைக்கோ எந்த களங்கமும் ஏற்படக் கூடாது என நினைக்கிறேன் என்றும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன் என்றும் மதிமுக எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு துரை வைகோ கூறியதாவது:-
இது உட்கட்சி விவகாரம். நம் இயக்க தலைமை அவர்கள் எடுக்க வேண்டிய முடிவு இது. என்னால் கட்சிக்கோ, தலைமைக்கோ எந்த களங்கமும் ஏற்படக் கூடாது என நினைக்கிறேன். மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன்.
கட்சியில் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். நிர்பந்தத்தாலேயே அரசியலுக்கு வந்தேன். தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பத்தின்பேரிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன்.
பதவியில் இருப்பதால்தான் பிரச்சினை வருகிறது. தொண்டனாக தொடர்வேன். இது உள்கட்சி விவகாரம், வெளியில் விவாதிக்க முடியாது. தேர்தல் அரசியல் எனக்கு வேண்டாம், விருப்பம் இல்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.
- நீட் விவகாரத்தில் திமுக அரைக் கண்டித்து அதிமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளின் புகைப்படங்கள் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி அதிமுக மாணவர் அணி அஞ்சலி செலுத்தினர்.
அதன்படி, சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், நீட் தேர்வு ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் சொல்லி திமுக ஆட்சிக்கு வந்ததாக குறிப்பிட்டு அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீட் விவகாரத்தில் திமுக அரைக் கண்டித்து அதிமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தமிழ்நாட்டின் மற்றுமொரு அறிவியல் பாய்ச்சல்தான் விண்வெளித் தொழில் கொள்கை 2025.
- தமிழ்நாட்டில் எந்த நல்லது நடந்தாலும் வயிறெரியும் அரசியல் காழ்ப்புணர்வு கூட்டம்.
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது:-
தமிழ்நாட்டின் மற்றுமொரு அறிவியல் பாய்ச்சல்தான் விண்வெளித் தொழில் கொள்கை 2025. ஆனால் தமிழ்நாட்டின் நலனில் அக்கறை இல்லாத அற்பமான எதிர்கட்சிகள் நம்பி நாராயணனின் ஆலோசகராக இருக்கும் நிறுவனத்தோடு கோர்த்து பேசுவது அற்பமான செயல்.
தமிழ்நாட்டில் எந்த நல்லது நடந்தாலும் வயிறெரியும் அரசியல் காழ்ப்புணர்வு கூட்டம், இக்கொள்கையை விமர்சிப்பதாக நினைத்து IIT வல்லுநர்கள், இளந்தமிழர்கள் வேலை வாய்ப்பு பெறவுள்ளோரையும் சேர்த்தே கொச்சைப்படுத்துகிறது.
அரசியல் எதிரிகளுக்கு புகையட்டும். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து அ.தி.மு.க. மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் திருமாவளவன்.
- சமூக நீதி அரசியலை நீர்த்துச்செய்ய போக வேண்டும் என்பதில்தான் குறிக்கோளாக இருக்கிறார்கள்.
பாஜகவின் வாக்கு வங்கி ரீதியில் வலுப்படுத்த அதிமுக துணை போவது வரலாற்றுப் பிழை.. இதனை அவர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற சங் பரிவாளர் அமைப்புகள் ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் இங்கே ஒரு அரசியல் கட்சியாக வலிமைப் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அவர்கள் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும என்பதை விட, தமிழகத்தில் நிலைக்கொண்டு இருக்கிற பெரியார் அரசியலை அல்லது சமூக நீதி அரசியலை நீர்த்துச்செய்ய போக வேண்டும் என்பதில்தான் குறிக்கோளாக இருக்கிறார்கள்.
இன்னும குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், திராவிடக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றை பலவீனப்படுத்தி அவர்கள் இங்கே காலூன்றி நிற்க வேண்டும். பின்னால், அடுத்த திராவிடக் கட்சியையும் அழித்தொழிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.
திமுக, அதிமுக என்கிற இரண்டு அரசியல் கட்சிகளை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, இங்கு நிலைக்கொண்டிருக்கிற சமூக நீதி அரசியலை வலுவிழக்கச் செய்ய வேண்டும். அது தான் பாஜகவின் உண்மையான நோக்கம். உள்நோக்கம்.
ஆனால், இவற்றை எல்லாம் அறிந்தும் கூட அதிமுக ஒரு வரலாற்றுப் பிழையை செய்துள்ளது. 2021ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நிலையிலும் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைப்பது என்பது அதிமுகவிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தும் இப்படி முடிவு எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அதிமுகவிற்கு ஏற்படுகிற பின்னடைவுகளை எல்லாம் தாண்டி, பாஜகவை வாக்கு வங்கி ரீதியாக வலிமைப் படுத்துவதற்கு துணைப் போகிறது என்பது வரலாற்றுப் பிழை. அதிமுக மீண்டும் சிந்தித்த மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது வரலாற்று தேவையாக இருக்கிறது என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
மேலும், முதலமைச்சரின் கருத்தை முழுமையாக ஏற்று ஆதரிக்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புவனேஷ் மரணம் தொடர்பாக தூத்துக்குடியில் வசிக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேரூர்:
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி தாளமுத்து நகரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் புவனேஷ் (வயது 18). கட்டிட தொழிலாளி.
இவர் கடந்த 17-ந்தேதி நண்பர்கள் முத்துக்குமார், ஹரிஹரசுதன் ஆகியோருடன் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரிக்கு மலையேறுவதற்காக வந்தார்.
மலை உச்சியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து விட்டு பின்னர் அவர்கள் மீண்டும் கீழே இறங்கி வந்தனர். 7-வது மலை உச்சியில் இருந்து கீழே வந்த போது புவனேசுக்கு எதிர்பாராதவிதமாக கால் இடறியது. நிலை தடுமாறிய புவனேஷ் 10 அடி ஆழமுடைய பள்ளத்தில் விழுந்தார்.
இதில் அவரது இடது காது மற்றும் தலையின் பின்பகுதியில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடினார். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சுமை தூக்கும் பணியாளர்கள் டோலியுடன் அவசர, அவசரமாக மலையேறி சென்றனர். புவனேசை டோலி மூலம் மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்சில் ஏற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஷ் பலியானார்.
புவனேஷ் மரணம் தொடர்பாக தூத்துக்குடியில் வசிக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அவருக்கு மதுரையைச்சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
- அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார்.
மதுரை அலங்காநல்லூரை சேர்ந்தவர் பிரான்சிஸ்(வயது 48). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். அவருக்கு மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார்.
இந்த நிலையில் பிரான்சிஸ் தனது கள்ளக்காதலி மற்றும் கள்ளக்காதலியின் மகள் ஆகியோருடன் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருப்பூர் மாஸ்கோ நகரில் வாடகைக்கு தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
அப்போது கள்ளக்காதலியின் 16 வயது மகளை பிரான்சிஸ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தநிலையில் அந்த சிறுமிக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவரிடம் சென்று பரிசோதித்த போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய் திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரான்சிசை கைது செய்தனர்.
- பள்ளி முடித்துக் கல்லூரி செல்லும் 18 வயதிலேயே 'பரம்பரைத் தொழிலைச் செய்' என்பது விஸ்கர்மா திட்டம்.
- காலாகாலமாகக் குடும்பம் செய்துவந்த தொழிலுக்குத்தான் விஸ்வர்கமா திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
இன்னார்க்கு இதுதான் என்ற பிரதமரின் விஷ்வகர்மா திட்டத்தை புறக்கணித்து எல்லார்க்கும் எல்லாம் என்ற கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்த வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
'இன்னார்க்கு இதுதான்' எனும் பிரதமரின் விஷ்வகர்மா திட்டத்தை நிராகரித்து, 'எல்லார்க்கும் எல்லாம்' எனும் நம் திராவிட மாடல் அரசு கலைஞர் கைவினைத்திட்டம் உருவாக்கியது ஏன்?
* பள்ளி முடித்துக் கல்லூரி செல்லும் 18 வயதிலேயே 'பரம்பரைத் தொழிலைச் செய்' என்பது விஸ்கர்மா திட்டம். முதிர்ச்சி பெற்ற 35 வயதை எட்டியோர்தான் விண்ணப்பிக்க முடியும் என்பது நம் திட்டம்.
* காலாகாலமாகக் குடும்பம் செய்துவந்த தொழிலுக்குத்தான் விஸ்வர்கமா திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். யாரும், விரும்பிய எந்தத் தொழிலையும் செய்யக் கலைஞர் கைவினைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
* 18 திட்டங்களை உள்ளடக்கியது விஸ்வகர்மா, அதனை 25 திட்டங்களாக நாம் விரிவுபடுத்தியிருக்கிறோம்.
* விஸ்வகர்மா திட்டத்தில் கடன் மட்டுமே பெற இயலும், கலைஞர் கைவினைத் திட்டத்தில் மானியத்தோடு 3 லட்சம் ரூபாய் வரை கடனுதவி பெறலாம்.
மொத்தத்தில், குடும்பத் தொழிலை ஊக்குவித்து, நம் மாணவர்களின் உயர்கல்விக்குத் தடை ஏற்படுத்தும் சூழ்ச்சித் திட்டமல்ல நம்முடையது; யாரையும் ஒதுக்காத அனைவருக்குமான சமூகநீதி நோக்கிலான திட்டம்!
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
- ஆஸ்பத்திரியில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் சிறுமி போல் இருந்ததால் அவரது வயதை டாக்டர்கள் விசாரித்தனர்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
அந்த பெண் சிறுமி போல் இருந்ததால் அவரது வயதை டாக்டர்கள் விசாரித்தனர். அப்போது அவருக்கு 16 வயது மட்டுமே ஆவது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துள்ளார். அவரும், அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 22) என்பவரும் காதலித்துள்ளனர்.
கோபாலகிருஷ்ணன் மாணவியை திருமணம் செய்து முடிவு செய்துள்ளார். இதையடுத்து 2 பேரின் பெற்றோர் சம்மதத்துடன் அங்குள்ள கோவிலில் அவர்கள் மாலை மாற்றி திருமணம் செய்துள்ளனர். கோபாலகிருஷ்ணன் வீட்டில் மாணவி வசித்துள்ளார். அதன்பிறகும் அவர் பள்ளிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மாணவி கர்ப்பம் ஆனதால் அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். வயிறு வலி வந்ததைத் தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பிரசவம் நடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கோபால கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- 2026-லும் #DravidianModel ஆட்சிதான்! தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான்!
- ஊழலுக்கு ஒருமுறை, தேச விரோதத்திற்கு ஒருமுறை என இருமுறை கலைக்கப்பட்டது திமுக ஆட்சி.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது அவர், " தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்து இந்த மண்ணைப் பாழாக்கத் துடிக்கும் பா.ஜ.க.வுக்கும், அதற்குத் துணைபோகும் இனமானம் இல்லாத அடிமைகளுக்கும் தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சவால் விடுகிறேன்…
எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வாருங்கள்!
2026-லும் #DravidianModel ஆட்சிதான்! தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான்! என்று கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:-
தமிழக மக்களின் Out of Control-ஆக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார்.
அதிமுக- பாஜக கூட்டணி அமைந்த பிறகு முதலமைச்சராக ஸ்டாலின் பதற்றத்துடன் இருந்து வருகிறார். மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்தபோது அவர்களுக்கு அடிபணிந்துதானே திமுக இருந்தது.
ஊழலுக்கு ஒருமுறை, தேச விரோதத்திற்கு ஒருமுறை என இருமுறை கலைக்கப்பட்டது திமுக ஆட்சி.
இவ்வாறு அவர் கூறினார்.
- இருவரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்தனர்.
- ஊருக்கு சென்ற காதலன் விவேக் பெற்றோர் பார்த்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்வது தெரியவந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் விவேக் (வயது 29). இவர் 15 வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபதி நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு 23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் இது காதலாக மாறியது.
இதையடுத்து இருவரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்தனர். இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். இது குறித்து காதலனிடம் அந்த பெண் கூறியுள்ளார்.
உடனே அவர் நாம் திருமணம் செய்து கொள்ளலாம்,அதற்கு முன் நான் ஊருக்கு சென்று பெற்றோரிடம் நமது காதல் விவகாரங்களை கூறி சம்மதம் பெற்று வருகிறேன் என கூறிவிட்டு சொந்த ஊருக்கு சென்றார். காதலன் வந்து திருமணம் செய்து கொள்வார் என்று காத்திருந்த அந்த பெண்ணுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஊருக்கு சென்றவர் திரும்பி வரவே இல்லை.செல்போன் மூலம் தொடர்பு கொண்டாலும் போனையும் எடுப்பதில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்தப்பெண் தனது காதலன் குறித்து விசாரித்த போது பெற்றோரிடம் சம்மதம் வாங்கி வருவதாக ஊருக்கு சென்ற காதலன் விவேக் பெற்றோர் பார்த்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்வது தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விவேக் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் மற்றும் சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
- நம் சோசியல் மீடியா படை அது தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என்று சொல்கிறார்கள்.
- virtual warriors என்று நான் உங்களை கூப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
த.வெ.க.வின் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசிய வீடியோவை வெளியிட்டனர்.
அந்த வீடியோவில் விஜய் பேசியதாவது:-
ஐடி விங் நிர்வாகிகள் ஆலோனை கூட்டத்தில் ஜூம் மீட் மூலம் அனைவரையும் சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். ஆனால், நெட்வொர்க் பிரச்சனையால் அது முடியாமல் போனது. அதனால், ரெக்கார்டட் மெசேஜ் அனுப்புகிறேன். இதன்மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நம் சோசியல் மீடியா படை அது தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என்று சொல்கிறார்கள். இது நாம் சொல்வதை விட மற்றவர்கள் பார்த்து தெரிந்துக் கொள்கிறார்கள்.
இனிமேல் நீங்கள் சோசியல் மீடியா ரசிகர்கள் மட்டும் இல்லை. என்னை பொறுத்தவரைக்கும் நீங்கள் அனைவருமே கட்சியின் virtual warriors. அப்படிதான் நான் உங்களை கூப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
நம் ஐடி விங் என்றாலே ஒழுக்கமாகவும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு வேலைப் பாருங்கள்.
கூடிய விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்... நன்றி...!
இவ்வாறு அவர் கூறினார்.
- காவல்துறை தி.மு.க. கட்டுப்பாட்டில் உள்ளது.
- தி.மு.க. ஆட்சி பல்வேறு ஊழல்களை செய்துள்ளது.
சேலம்:
பா.ஜ.க. கட்சியின் சேலம் பெருங்கோட்டம் சார்பில் ஓமலூரில் பா.ஜ.க. புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில துணைத்தலைவருமான கே.பி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
பா.ஜ.க. தொண்டர்கள் பேஸ்புக், எக்ஸ், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். தற்போது காவல்துறை தி.மு.க. கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் எப்படி வேண்டுமென்றாலும் வழக்குப்பதிவு செய்வார்கள். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
முன்னாள் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் 'பாத யாத்திரை' நடத்தி கட்சியை வளர்த்தார். அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற முறையில் பாத யாத்திரை நடத்தி கட்சியை வலுப்படுத்தினார்.
தமிழகத்தில் தாமரை மலர்ந்து தீரும். இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும். நாம் அமைத்துள்ள கூட்டணி வெற்றி கூட்டணி. மிகப்பெரிய கூட்டணி. ஒரு சிலர் சந்தர்ப்பவாத கூட்டணி என கூறுகிறார்கள். ஆனால் இதுதான் நியாயமான கூட்டணி. எனவே தேசிய ஜனநாயக ஆட்சி வருவதற்கு பக்கபலமாக இருக்க வேண்டும். பலர் இந்த கட்சிக்காக உயிரை தியாகம் செய்துள்ளனர்.
ஆடிட்டர் ரமேஷ் போன்றவர்கள் தியாகம் செய்ததால் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளோம். இன்றிலிருந்து சபதம் ஏற்க வேண்டும். கூட்டணி வெற்றி பெற எத்தனை சீட் என்பதை நான் முடிவு செய்ய முடியாது. ஏன் என்றால் தேசிய தலைமை முடிவு செய்யும். தேசிய தலைமை ஜெ.பி.நட்டாவும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவு செய்வார்கள்.
தி.மு.க. ஆட்சி பல்வேறு ஊழல்களை செய்துள்ளது. இதை மறைப்பதற்காக நீட் தேர்வு, மாநில சுயாட்சி எனவும், கடந்த 50 ஆண்டுகளாக மேகதாது பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை என வெறும் தீர்மானங்கள் மட்டுமே போட்டு விட்டு சென்று விட்டனர். 18 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்திலிருந்த தி.மு.க. அப்போது இதற்கு தீர்வு கண்டு இருக்க வேண்டும். நிச்சயமாக ஆட்சி மாற்றம் இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.






