என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காதலியை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது
- இருவரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்தனர்.
- ஊருக்கு சென்ற காதலன் விவேக் பெற்றோர் பார்த்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்வது தெரியவந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் விவேக் (வயது 29). இவர் 15 வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபதி நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு 23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் இது காதலாக மாறியது.
இதையடுத்து இருவரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்தனர். இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். இது குறித்து காதலனிடம் அந்த பெண் கூறியுள்ளார்.
உடனே அவர் நாம் திருமணம் செய்து கொள்ளலாம்,அதற்கு முன் நான் ஊருக்கு சென்று பெற்றோரிடம் நமது காதல் விவகாரங்களை கூறி சம்மதம் பெற்று வருகிறேன் என கூறிவிட்டு சொந்த ஊருக்கு சென்றார். காதலன் வந்து திருமணம் செய்து கொள்வார் என்று காத்திருந்த அந்த பெண்ணுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஊருக்கு சென்றவர் திரும்பி வரவே இல்லை.செல்போன் மூலம் தொடர்பு கொண்டாலும் போனையும் எடுப்பதில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்தப்பெண் தனது காதலன் குறித்து விசாரித்த போது பெற்றோரிடம் சம்மதம் வாங்கி வருவதாக ஊருக்கு சென்ற காதலன் விவேக் பெற்றோர் பார்த்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்வது தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விவேக் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் மற்றும் சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.






