என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ரெயிலில் பயணம் செய்த சுஜன்புடியல் கால் தவறி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மத்தூர்:

    கோவை எக்ஸ்பிரஸில் அசாம் மாநிலம் பகுதியை சேர்ந்த சுஜன் புடியல் வயது (35). இவரது தந்தை பகத்புடியல். இவர்கள் இருவரும் அசாமில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு செல்ல கோவை எக்ஸ்பிரஸில் பயணம் செய்துள்ளனர். அப்போது நேற்று மாலை 5 மணியளவில் ரெயில் சாமல்பட்டி அருகே உள்ள கே.எட்டிப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    இந்நிலையில் ரெயிலில் பயணம் செய்த சுஜன்புடியல் கால் தவறி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். அதில் அவர் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுஜன்புடியல் உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இறப்பு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உடன் இருந்த அவரது தந்தை பகத் புடியலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒற்றை யானை ஒன்று உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்துள்ளது.
    • ஜெயஸ்ரீயை தாக்கிய அந்த ஒற்றைக் காட்டு யானை அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு உள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை ஆண் யானை ஒன்று உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்துள்ளது. இந்த யானை காலை நேரங்களில் வனப் பகுதிக்குள் செல்வதும், இரவில் கிராமப்புறங்களில் நுழைந்து விவசாய பயிர்களை அழிப்பதுமாக இருந்து வந்துள்ளது.

    இதனை கடந்த 3 நாட்களாக பாலக்கோடு-காரிமங்கலம் இடையில் உள்ள ஆராதஹள்ளி கூட்ரோடு பகுதியில் உள்ள மலைப் பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனை பாலக்கோடு வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு காரிமங்கலம் பகுதியை நோக்கி யானை சென்றுள்ளது. அப்பொழுது சவுளுக்கொட்டாய் பகுதிகளில் விவசாய நிலங்களில் நுழைந்துள்ளது. இரவு நேரம் என்பதால், வனத்துறையினரால் யானையினை கண்காணித்து வந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் யானை சென்ற திசை தெரியாமல் வனத்துறையினர் அதே பகுதியில் சுற்றி தேடி வந்தனர்.

    இந்நிலையில் அதிகாலை காரிமங்கலம் அருகே உள்ள சவுளுக்கொட்டாய் பகுதியில் பெருமாள் என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ என்பவர், அதிகாலை 5.30 மணிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக வயல் வழி பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென வந்த யானை ஜெயஸ்ரீயை தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்து சுயநினைவின்றி அதே இடத்தில் அவர் விழுந்து கிடந்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து இயற்கை உபாதை கழிக்க சென்ற ஜெயஸ்ரீ நீண்ட நேரமாக வராததால், வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். அப்பொழுது சுய நினைவின்றி படுகாயத்துடன் கிடந்துள்ளார். அதன் அருகில் கரும்பு தோட்டத்தில் ஒற்றை யானை இருந்தது தெரிய வந்தது.

    இதனைக் கண்டு அதிர்ச்சடைந்த ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர், ஜெயஸ்ரீயை உடனடியாக அந்த இடத்தில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர். அப்பொழுது மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது நுரையீரல் பகுதியில் யானை பலமாக தாக்கி இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஜெயஸ்ரீ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் ஜெயஸ்ரீயை தாக்கிய அந்த ஒற்றைக் காட்டு யானை அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு உள்ளது. இதனை பாலக்கோடு வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் பெருமாள் ஜெயஸ்ரீ தம்பதியினருக்கு மூன்று மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் ஒற்றை ஆண் யானை தாக்கியதில், படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், ஜெயஸ்ரீ சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
    • அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கணேஷ் நகரைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் வள்ளுவர் நகரை சேர்ந்த கண்ணன் இருவரும் தோனுகாலில் உள்ள ஒரு எந்திர தீப்பெட்டி ஆலை ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர்.

    அந்த ஆலையில் பணியாளர்கள் நேற்று வழக்கம் போல பணிகளை முடித்துவிட்டு வீடுகளுக்கு சென்று விட்டனர். இரவில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் இருந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவில் ஆலையில் உள்ள எந்திரத்தில் திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது.

    இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேறி தீயணைப்பு படை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ தொடர்ந்து எரிந்ததால் தீயை அணைப்பதற்கு டிராக்டர் மூலமும் தண்ணீர் கொண்டு வந்து தீயணைக்கும் பணி நடைபெற்றது.

    நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. ஆனால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன.

    சம்பவ இடத்தை கோவில்பட்டி தாசில்தார் சரவணபெருமாள், வருவாய் ஆய்வாளர் ராம மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகளவில் வாழை, தென்னை, கம்பு, சோளம் மற்றும் காய்கறிகள் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
    • சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இறப்பின் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    அன்னூர் அருகே குப்பனூர் ஊராட்சிக்குட்பட்ட ஆத்திக்குட்டை, வாக்கானாகொம்பு, புலியூர், ஒட்டகமண்டலம், ஆலாங்கொட்டை, அழகியபாளையம், சொலவம்பாளையம், அக்கறைசெங்கப்பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

    இப்பகுதிகளில் அதிகளவில் வாழை, தென்னை, கம்பு, சோளம் மற்றும் காய்கறிகள் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த பகுதியில் காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிகளவு உள்ளது. காட்டு பன்றிகள் அவ்வப்போது விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில், வாக்கனாங்கொம்பு கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து என்பவர் தனது தோட்டத்தில் வாழைகளை பயிரிட்டிருந்தார்.

    நேற்று இரவு இந்த தோட்டத்திற்குள் காட்டு பன்றிகள் கூட்டமாக நுழைந்தன. பின்னர் அவை, அங்கிருந்த வாழைகளை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது.

    இதேபோல், அங்குள்ள துளசிராஜ் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து, அங்கு பயிரிடப்பட்டிருந்த 200 வாழைகள் என மொத்தமாக 1000த்திற்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு பன்றிகள் சேதப்படுத்திவிட்டு சென்றன.

    இதையடுத்து சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இறப்பின் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய அரசு செய்துள்ளது.
    • இந்தியா தகவல் தொழில் நுட்ப முறையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்து உள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய மந்திரி வி.கே.சிங் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளேன். தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி உள்ளேன்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதாவிற்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் வருவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடத்தை தேர்வு செய்து மாநில அரசுதான் தெரிவிக்க வேண்டும். ஆனால் இது குறித்து மாநில அரசு எந்த முயற்சிகளையும் எடுக்க வில்லை.


    மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தலில் எங்களுடன் அதி.மு.க. அல்லது தி.மு.க. யார் வந்தாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தி தலைமை முடிவு செய்யும்.

    தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய அரசு செய்துள்ளது. ஆனால் அந்தத் திட்டத்திற்கு மாநில அரசு தாங்கள் செய்தது போன்ற ஒரு போலியான சூழலை உருவாக்கியுள்ளது. இந்தியா தகவல் தொழில் நுட்ப முறையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்து உள்ளது. பேரிடர் நிவாரண நிதி தமிழகத்தில் வழங்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதன்படி மத்திய அரசு நிவாரணம் வழங்கும்.

    தேர்தல் பயத்தில் மோடி உள்ளார் என மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. தேர்தல் பயத்தினால் அவர் இது போன்ற கருத்துக்களை பேசி வருகிறார். தமிழகத்தில் தி.மு.க. குடும்ப அரசியல் நடத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., மாநிலச் செயலாளர் மீனாதேவ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கடல் காற்றின் வருகையை பொறுத்து சென்னையில் வெயில் தாக்கம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
    • அதிகாலை நேரங்களில் கடும் புழுக்கம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை கால வெயில் தாக்கம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. கடந்த வாரம் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம் பதிவாகி இருந்தது.

    கடந்த 5 நாட்களாக கொங்கு மண்டலத்தில் 100 முதல் 102 டிகிரி வரை வெயில் தாக்கம் இருந்தது.

    இந்த நிலையில் வெயில் தாக்கம் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகரிக்கும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது. எல்நினோ மாற்றம் காரணமாக இந்தியாவில் வெயில் கடந்த ஆண்டுகளை விட அதிகரிக்கும் என வானிலை இலாகா சுட்டி காட்டி உள்ளது.

    குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் வெயில் தாக்கம் வரலாறு காணாத வகையில் உச்சத்துக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான இடங்களில் 105 டிகிரிக்கு மேல் வெயில் இருக்கலாம் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.

    கடல் காற்றின் வருகையை பொறுத்து சென்னையில் வெயில் தாக்கம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதிகாலை நேரங்களில் கடும் புழுக்கம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெயில் தாக்கம் அதிகமாகும் நாட்களில் வெப்ப அலை காற்றும் வீசும் என்று கூறப்பட்டுள்ளது. சிறுவர்கள், வயதானவர்கள், அதிக நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    • ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அதிகாரங்களை குவித்துக்கொண்டு ஒரு சர்வாதிகாரி போல செயல்பட்டு வருகிறார்.
    • மோடி ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஒளிரப் போகிறது என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தது முதற்கொண்டு மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அதிகாரக்குவியல் படிப்படியாக நடந்து வருகின்றன. ஒற்றை ஆட்சி என்ற குறிக்கோளுடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற இலக்கை அடைவதன் மூலம் முழுமையாக ஒற்றை ஆட்சியை உறுதி செய்து மாநிலங்களை நகராட்சிகளை போல நடத்த முற்படுகிறார். ஒன்றிய அரசின் நிதி பகிர்வில் அப்பட்டமான பாரபட்சம் காட்டப்பட்டு தென் மாநிலங்கள் கடுமையாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் கடந்த ஒன்பதரை ஆண்டு காலமாக மக்களை ஏமாற்றி, திசை திருப்பி அவதூறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி கூறி வருகிறார்.

    ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அதிகாரங்களை குவித்துக்கொண்டு ஒரு சர்வாதிகாரி போல செயல்பட்டு வருகிறார். இது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இதற்கு எதிராக மக்களை அணிதிரட்டவும், கூட்டணி அமைத்து 2024-ல் மோடி ஆட்சியை அகற்ற இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது.

    நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தலைவர் ராகுல்காந்தி அனுப்பிய வாழ்த்து செய்திக்கு நன்றி தெரிவித்து வெளியிடப்பட்ட செய்தியில் 'கூட்டாட்சி கருத்தியலை உயர்த்தி பிடிக்க ஒன்று சேர்ந்து உழைப்போம்" என்று கூறியதன் மூலம் இந்தியா கூட்டணி மேலும் வலிமை பெற்று வருகிறது. இதன்மூலம் மோடி ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஒளிரப் போகிறது என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்திற்கு அதிக திட்டங்களை கொண்டு வந்ததாக பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
    • இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.

    மதுரை:

    புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு பிரதமர் எந்த அளவுக்கு பொய் செல்ல வேண்டுமோ அந்த அளவையும் மீறி பிரதமர் மோடி பொய் சொல்லி வருகிறார். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலங்களை பிரதமர் புறக்கணித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சென்னை மற்றும் தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்து மக்கள் பாதிக்கப்பட்டனர். அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒன்றாக சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.

    ஆனால் பிரதமர் மோடி தலைமையில் உள்ள மத்திய அரசு தமிழக மக்களை புறக்கணித்ததுடன் இதுவரை நிவாரணத்துக்கான எந்த உதவியைுயம் செய்யவில்லை. தமிழகத்திற்கு அதிக திட்டங்களை கொண்டு வந்ததாக பொய் பிரசாரம் செய்து வருகிறார். அவ்வாறு செய்திருந்தால் அதை பட்டியலிட்டு கூற வேண்டும். ராமேசுவரம், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற பிரதமர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களை சந்திக்கவில்லை.

    10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலின்போது கூறிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டு வங்கியில் இருந்து பணத்தை கொண்டு வந்து ஒவ்வொரு கணக்கிலும் 15 ஆயிரம் ரூபாய் செலுத்துவோம் என்று கூறினார். அதை நிறைவேற்றவில்லை. வேலையில்லா திட்டாட்டம், வறுமையால் மக்கள் அவதிப்படுகின்றனர். சிறு-குறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. மின் கட்டணம் உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு என மக்கள் அவதிப்படுகின்றனர்.


    மாநில கட்சிகள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை குறை சொல்வதை மட்டுமே பிரதமர் செய்து வருகிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு எந்த வேலையும் நடக்கவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

    தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. தற்போது புதுச்சேரியில் சாராய ஆறு தான் ஓடிக்கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் செய்த சாதனைகளை பா.ஜனதா அரசு செய்ததாக மோடி கூறி வருகிறார்.

    இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். அப்போது பா.ஜனதா வீட்டுக்கு அனுப்பப்படும். பா.ஜனதாவிடம் கூட்டணி சேர ஒரு கட்சிக்கூட முன்வரவில்லை. இந்தியா கூட்டணியில் 28 கட்சிகள் உள்ளன. அமெரிக்காவில் கூட இன்றும் வாக்குச்சீட்டு முறையே உள்ளது. அதே போல் இந்தியாவிலும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீண்டும் சிறப்பு முகாம் எனும் கொடூரம் அவர்களது வாழ்க்கையில் அரங்கேறும் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
    • இன்றைய நாள்வரை அவர்கள் விரும்பும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு எந்தவித முடிவும் எடுத்ததாகத் தெரியவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக சிறையில் 32 ஆண்டு கால நீண்ட சிறை வாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்கள் ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், முருகன், சாந்தன் ஆகியோர் 11.11.2022 அன்று சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை குடிமக்கள் என்பதால் அயல் நாட்டிற்கு அனுப்பும்வரை நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் உடல்நலக் குறைவால் மரணமடைந்து உள்ளது, தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    32 ஆண்டுகள் சிறையில் வாழ்க்கையை இழந்தவர்கள், விடுதலைக் காற்றை சுவாசிக்கப் போகிறோம் என்று பெருமூச்சு விடும்பொழுது, மீண்டும் சிறப்பு முகாம் எனும் கொடூரம் அவர்களது வாழ்க்கையில் அரங்கேறும் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

    முகாமில் அடைக்கப்படுவதற்கு முன்பே கூட, எந்த நாட்டிற்கு செல்லப்போகிறீர்கள் என்று அவர்களுடைய விருப்பத்தை அரசு அதிகாரிகள் கேட்டபொழுது, அவர்கள் இலங்கை சென்றால் ஆபத்து மற்றும் தங்களுக்கு அங்கு வாழ்வாதாரம் எதுவும் இல்லை என்றும், அதனால் வெளிநாடுகளில் வாழும் தங்களுடைய குடும்பத்தினருடன் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால், இன்றைய நாள்வரை அவர்கள் விரும்பும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு எந்தவித முடிவும் எடுத்ததாகத் தெரியவில்லை.

    இனியாவது, மீதமுள்ள மூன்று பேரின் கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்து, கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு தவறான சிகிச்சையில் ஒரு கண்ணில் பார்வையை இழந்த ஜெயகுமார் மற்றும் உடல்நலக் குறைவால் அவதியுறும் ராபர்ட் பயாஸ் மற்றும் முருகன் ஆகியோரது கடைசி காலத்தில், எஞ்சிய வாழ்நாளை அவர்களுடைய குடும்பத்தினருடன் வசிப்பதற்கு, திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் இருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், தி.மு.க. அரசின் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • புஷ்பராணி அந்த எட்டே கால் சென்ட்க்கு உரிய தொகையை திரும்பக் கேட்டார்.
    • புஷ்பராணி சமயபுரம் போலீசில் புகார் செய்தார்.

    திருச்சி:

    திருச்சி மணச்சநல்லூர் மேட்டு இருங்களூர் யாகூப் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி புஷ்பராணி (வயது 48).

    பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மனைவி சந்திரா. இவர்கள் 2 பேரும் உறவினர்கள்.

    இந்த நிலையில் சந்திரா இருங்கலூரில் தனக்கு சொந்தமாக இருக்கும் 21 சென்ட்நிலத்தை விற்பதாக அவரிடம் கூறியுள்ளார்.

    அதைத் தொடர்ந்து புஷ்பராணி அந்த நிலத்தை வாங்க முடிவு செய்து ரூ. 18 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.

    பின்னர் புஷ்பராணி அந்த நிலத்துக்குரிய வில்லங்க சான்றை பார்த்தபோது 21 சென்ட் நிலத்தில் எட்டே கால் சென்ற நிலம் ஸ்ரீதேவி மங்கலம் பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவரது பெயரில் இருப்பது தெரியவந்தது. ஆனால் போலி ஆவணங்கள் தயாரித்து சந்திரா அவரை ஏமாற்றியது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து புஷ்பராணி அந்த எட்டே கால் சென்ட்க்கு உரிய தொகையை திரும்பக் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து புஷ்பராணி சமயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சந்திரா மற்றும் அவரது உறவினர்கள் தர்மராஜ், மகன் பிரபாகர் மரியராஜ், மனைவி மார்க்சி மற்றும் மார்க்கெட் புஷ்பலதா, டெய்சி ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • ராமநாதபுரம், கோவை, கன்னியாகுமரி ஆகிய 3 இடங்களுக்கு பிரதமர் மோடி சென்று பிரசாரம் செய்வது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
    • பிரதமர் மோடியின் தென்னிந்திய பயணத்துக்கு ஏற்ப தமிழக சுற்றுப்பயணம் மற்றும் பிரசார கூட்டங்கள் இறுதி செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வர தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே அவர் 2 தடவை தமிழகம் வந்து சென்றார்.

    அடுத்து 3-வது முறையாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வர இருக்கிறார். நாளை பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சியிலும், கட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தேர்தல் தேதி அட்டவணை வெளியிட்ட பிறகு ஒரு தடவை பிரதமர் மோடி தமிழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்களுக்கு அவர் வந்து செல்லக்கூடும்.

    வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு அடுத்தடுத்து பிரதமர் மோடி தமிழகம் வருவார் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் மொத்தம் 8 அல்லது 9 கூட்டங்களில் பிரதமர் மோடியை பேச வைப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    ராமநாதபுரம், கோவை, கன்னியாகுமரி ஆகிய 3 இடங்களுக்கு பிரதமர் மோடி சென்று பிரசாரம் செய்வது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 6 நகரங்களை தேர்வு செய்யும் பணியை தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

    பிரதமர் மோடியின் தென்னிந்திய பயணத்துக்கு ஏற்ப தமிழக சுற்றுப்பயணம் மற்றும் பிரசார கூட்டங்கள் இறுதி செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
    • வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (மார்ச் 3) காலை 10 மணி முதல் மாலை 3.30 வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை இயங்கும் புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதனால், அந்த வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    சென்னை பிராட்வே-யில் இருந்து அண்ணாசாலை வழியாக தாம்பரத்திற்கு செல்லும் 18A பேருந்தின் எண்ணிக்கை 60-ஆகவும்,

    சென்னை பிராட்வே-யில் இருந்து தி.நகர், எழும்பூர் வழியாக தாம்பரத்திற்கு செல்லும் 18G பேருந்தின் எண்ணிக்கை 20-ஆகவும்

    கிண்டியில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு செல்லும் 18ACT பேருந்தின் எண்ணிக்கை 10 ஆகவும்,

    கொருக்குப்பேட்டையில் இருந்து தாம்பரத்திற்கு செல்லும் B18 பேருந்தின் எண்ணிக்கை 30 ஆகவும்,

    சென்னை பிராட்வே-யில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் E18 பேருந்தின் எண்ணிக்கை 20 ஆகவும்,

    தியாகராயநகரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் G18 பேருந்தின் எண்ணிக்கை 10 ஆகவும் மொத்தம் 150 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    ×