என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.
    • விசைப்படகு துறைமுகத்தில் விசைப்படகு தொழிலாளர் நேரடியாக 1000 பேரும். மறைமுகமாக 5 ஆயிரம் பேரும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீன் பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதிகளில் கேரளாவை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மன்னார் வளை குடா பகுதியில் தங்கி மீன் பிடித்து வருவதை கண்டித்து தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்டிக்க செல்லவில்லை.

    தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள், உரிமையாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுடன் மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

    பல ஆண்டுகளாக கேரளா பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து வருவதை கண்டித்து, குறிப்பாக தூத்துக்குடி, மணப்பாடு, காயல்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதியில் அதிக மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.

    இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது. இதனால் மீன்கள் வரத்து குறைவாக உள்ளது.இதனை கண்டித்து இன்று கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

    இதனால் தூத்துக்குடி விசைப்படகு துறைமுகத்தில் விசைப்படகு தொழிலாளர் நேரடியாக 1000 பேரும். மறைமுகமாக 5 ஆயிரம் பேரும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    இதனால் பண பரிவர்த்தனை சுமார் ரூ.2 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்த மீனவர்கள், விசைப்படகு உரிமையாளர்கள் கேரளாவை சேர்ந்த விசைப் படகு மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருவதை தடைசெய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மீனவர்களின் போராட்டத்தால் தூத்துக்குடி யில் 263 விசைப்படகுகள் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    • பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய இளைஞர்களின் வாக்கு வங்கியை உருவாக்குவதற்கு வாய்ப்பில்லை.
    • தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க.வினர் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவளிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

    இதன்படி சிதம்பரத்தில் 6-வது முறையாக அக்கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்ட தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிதம்பரம், விழுப்புரம் 2 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறோம். இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்று இந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவோம். தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    சிதம்பரம் தொகுதியில் 6-வது முறையாக போட்டியிடுகிறேன். இந்த முறையும் பாராளுமன்றத்திற்கு மக்கள் அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு களம் காண்கிறேன்.

    அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக ராகுல் காந்தி மேற்கொண்ட 2 கட்ட இந்திய ஒற்றுமை பயணம் வெற்றி பெற்றுள்ளது. இந்த நாட்டை பாசிச சக்திகளிடமிருந்து காப்பாற்றுவதற்கான தேர்தலாக இது அமைந்துள்ளது. 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் கண்கூடாக எந்த வளர்ச்சியையும் காணவில்லை.

    மக்களை சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் பிளவுபடுத்தி அதனை நிலைப்படுத்த நினைக்கிறார்கள். அகில இந்திய அளவில் ஒரு அமைதிப் புரட்சி நிகழ இருக்கிறது. இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் இருக்கலாம். ஆனால் அது மக்களுக்கு அது பிரதானமான தேவையாக இல்லை.

    பா.ஜ.க.வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை மக்களின் வேட்கையாக இருக்கிறது. தேர்தல் யுத்தம் நடப்பது காங்கிரசுக்கும், பா.ஜ.க.விற்கும் அல்ல. மக்களுக்கும், சங்பரிவாருக்கும் நடக்கும் யுத்தம் தான் இந்த தேர்தல் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே தேர்தல் முடிவுகள் அமையும்.

    இ.வி.எம். மிஷினை தில்லுமுல்லு செய்து வெற்றி பெறலாம் என பா.ஜ.க. நினைக்கிறது. அதற்கு ஒரே தீர்வு 100 விழுக்காடு மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டில் எப்படியாவது பாரதிய ஜனதா 2-வது பெரிய சக்தியாக வந்துவிட வேண்டும் என்று பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் காலூன்றி இங்கும் வட இந்திய மாநிலங்களில் இருப்பதைப் போன்ற வெறுப்பு அரசியலை விதைத்து மக்களை பிளவுபடுத்துவதற்கு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் தி.மு.க., அ.தி.மு.க. வேறு அணிகளில் தேர்தலை சந்தித்தாலும் சமூக நீதி என்று ஒரு புள்ளியில் அணி திரண்டு இருக்கிறோம்.

    இந்த மாபெரும் கருத்தியல் யுத்தத்தில் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். அகில இந்திய அளவில் நாட்டையும் அரசமைப்பு சட்டத்தையும் காப்பாற்ற வேண்டும்.

    இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அவரவர் சின்னங்களில் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன். 2 தொகுதிகளில் போட்டியிட்டால் 40 தொகுதிகளும் சிறுத்தைகளின் தொகுதிகள் தான் என்ற அடிப்படையில் களப்பணியாற்றுவோம்.

    பா.ம.க. எப்பொழுதும் சாதிய மதவாத அரசியலில் திளைத்துக் கிடக்கிறார்கள், ஓ.பி.சி. , எம்.பி.சி. மக்களுக்கு எதிரான நிலைப்பாடாகவே பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருப்பதை பார்க்கிறேன்.

    ஓ.பி.சி., எம்.பி.சி. மக்களை பாட்டாளி மக்கள் கட்சி கைவிட்டாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம். நாளையில் இருந்து மனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால் இன்னும் பா.ஜ.க., அ.தி. மு.க. ஒரு கூட்டணியாக இன்னும் உருவாகவில்லை. தி.மு.க. ஏற்கனவே கூட்டணியை கட்டமைத்து தேர்தலுக்கு தயாராக உள்ளது.

    பா.ஜ.க. கூட்டணி தன்னோடு சேர்ந்த கட்சிகளில் ஊடுருவி அவர்களை நீர்த்துப்போக செய்வது அனைவரும் அறிவார்கள். இந்த நிலையில் பா.ஜ.க. வுடன் பா.ம.க. கூட்டணி சேர்ந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    கலைஞர், ஜெயலலிதா போன்ற கவர்ச்சிமிகு தலைவர்கள் இல்லை என்ற நம்பிக்கையில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்று பகிரங்க முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு இடம் கொடுக்க வாய்ப்பில்லை.

    பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய இளைஞர்களின் வாக்கு வங்கியை உருவாக்குவதற்கு வாய்ப்பில்லை. மோடி, அமித்ஷாவுடன் கருத்தியல் ரீதியாக முரண் ஏற்பட்டு கூட்டணியில் இருந்து பிரிந்து அ.தி.மு.க. தேர்தலை சந்திக்கவில்லை, உள்ளூர் தலைவர் அண்ணாமலையுடன் கருத்து முரண் ஏற்பட்டு தான் தேர்தலை தனித்தனியாக சந்திக்கின்றனர்.

    சிறுபான்மையினர் வாக்குகளை ஒட்டு மொத்தமாக தி.மு.க. அணி பெற்றுவிடாமல் தடுப்பதற்கு அ.தி.மு.க. பிரிந்து தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க.வினர் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவளிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதனை உணர்ந்து சிறுபான்மையின மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தலை நியாயமான முறையில் நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.
    • மதுரையை அடுத்த பாண்டி கோவில் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    மதுரை:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. தேர்தலை நியாயமான முறையில் நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. அதன்படி பணப் பட்டுவாடாவை தடுக்கும் முயற்சியாக ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படை, 3 கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ குழு என 3 குழுவினரும் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாவட்டம் முழுவதிலும் 70 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சக்குடி பகுதியில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தபோது காரில் இருந்த காளையார் கோவில் பகுதியை உடையப்பன் என்பவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 500 பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாத நிலையில் பறக்கும்படை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து வருவாய் கோட்டாச்சியர் ஷாலினியிடம் ஒப்படைத்தனர்.


    இதேபோன்று மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கடவூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்றை தடுத்துநிறுத்தி சோதனை யிட்டனர். அதில் பல ஆயிரம் மதிப்பிலான பரிசு பொருட்கள், சட்டைகள், டி-சர்ட்டுகள், பட்டாசுகள் ஆகியவை பெட்டி பெட்டியாக உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கண்டெய்னர் லாரியை மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து பொருட்களை ஒப்படைத்துசென்றனர்.

    இதேபோல் மதுரையை அடுத்த பாண்டி கோவில் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சமயம் சிவகாசியில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற ஆம்னி பேருந்தை மடக்கி அதில் முழுவதுமாக சோதனை நடத்தினர். அப்போது பேருந்தில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றியும், விதிகளை மீறியும் 11 பெட்டிகளில் முழுவதுமாக பட்டாசுகள் இருப்பது தெரியவந்தது.

    லட்சக்கணக்கு மதிப்பிலான பட்டாசு பெட்டிகளை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்ட பின்னர் வருவாய் கோட்டாட்சியர் ஷாலினியின் அனுமதியுடன் மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் பட்டாசு பெட் டிகள் ஒப்படைக்கப்பட்டது.

    முதற்கட்டமாக இந்த பட்டாசு பெட்டிகள் ஆந்திராவில் தேர்தல் காலத்தில் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்த எடுத்துச் செல்லப்பட்டதா? யார் அனுப்பியது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இரவில் கட்டுகட்டாக ரொக்க பணம், கண்டெய்னர் லாரியில் பெட்டி பெட்டியாக பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டுசெல்லப்பட்டதா? என்ற அடிப்படையில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காணலாம்.

    • நாம் தமிழர் கட்சியும் தனியாக தேர்தலை எதிர் கொள்கிறது.
    • எடப்பாடி பழனிசாமி வருகையையடுத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க.வும், காங்கிரசும் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கிறது. இதேபோல் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க.வும், பாரதிய ஜனதாவுடன் பா.ம.க.வும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் போட்டியிடுகிறார்கள்.

    நாம் தமிழர் கட்சியும் தனியாக தேர்தலை எதிர் கொள்கிறது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இதேபோல் அ.தி.மு.க.வும், பாரதிய ஜனதாவும் களமிறங்குகின்றன. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை.

    ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் விஜய் வசந்த் எம்.பி. களம் இறக்கப்படுகிறார். பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணனும், அ.தி.மு.க. சார்பில் மாநில மீனவரணி இணை செயலாளர் பசிலியான் நசரேத்தும் களம் இறங்குகிறார்கள். தேர்தலுக்கான மனுதாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தலைவர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள். ஏற்கனவே கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அவர் குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா அரசு செய்துள்ள நல்ல திட்டங்களை எடுத்துக்கூறி பிரசாரம் செய்தார். இது பாரதிய ஜனதாவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் குமரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்தநிலையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 27-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார். நாகர்கோவில் நாகராஜாதிடலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் விளவங்கோடு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்தும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ளார். எடப்பாடி பழனிசாமி வருகையையடுத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர். இதைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர்களும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக வருகைதர உள்ளனர். மேலும் விளவங்கோடு தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரிக்க உள்ளனர்.

    நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விரைவில் குமரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். தலைவர்கள் பிரசாரம் செய்ய வருகை தருவதையடுத்து கன்னியா குமரி மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது.
    • பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற பிரமாண்ட வாகன பேரணி நடைபெற்றது. இதில் பா.ஜ.கவினர், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இவர்களுடன் பள்ளி சீருடை அணிந்த சில மாணவ-மாணவிகளும் மோடியை காண வரிசையாக நின்றனர். அவர்களுடன் ஆசிரியர்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

    தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அதனையும் மீறி பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்கச் செய்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார் பாடி கூறும்போது, பிரதமர் நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    மாணவர்கள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் மோடியை பார்க்க அங்கு நின்றார்களா அல்லது அவர்களை யாராவது அழைத்து வந்திருந்தார்களா என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.
    • வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

    சென்னை:

    தமிழகம்-புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை) தொடங்குகிறது.

    வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட (ஆர்.டி.சி.) அரசு அலுவலகங்கள், வேட்புமனு தாக்கல் செய்யும் இடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி தென் சென்னைக்கு அடையாறிலும், வடசென்னைக்கு மூலகொத்தலம் மாநகராட்சி அலுவலகத்திலும், மத்திய சென்னைக்கு செனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என்றால் டெபாசிட் தொகை ரூ.12,500 செலுத்த வேண்டும். அத்துடன் அதற்குரிய ஜாதி சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் வேட்பாளர் தரப்பில் தேர்தல் செலவினங்களுக்கு என புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும். அந்த வங்கி கணக்கு, வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

    அதோடு படிவம் 26-ல் பிரமாண வாக்கு மூலத்தில் எல்லா காலங்களும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பிரமாண வாக்குமூலம் 20 ரூபாய் பத்திரத்தில் அளிக்க வேண்டும்.

    வேட்பு மனுவுடன் வேட்பாளர் 3 மாதத்துக்குள் எடுத்த ஸ்டாம்ப் சைஸ் போட்டோ வழங்க வேண்டும். போட்டோவில் கட்சி சின்னங்கள், கொடிகள் உள்ளிட்ட எந்த அடையாளங்களும் இருக்கக்கூடாது.

    இது தவிர அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சி வேட்பாளர்கள் என்றால் ஒரு முகவராலும், இதர வேட்பாளர்கள் 10 முகவராலும் முன்மொழிய பட வேண்டும்.

    முன்மொழிபவர் வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும்.

    வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர் வேறு பாராளுமன்ற தொகுதியின் வாக்காளராக இருந்தால், அந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் தேர்தல் கமிஷனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் கோருவதற்கு, சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமையிடத்தில் இருந்து படிவம் ஏ மற்றும் பி சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

    தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வளாகத்தில் இருந்து 100 மீட்டர் வரையிலும், வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 லட்சம் பெயா்களை நீக்கவும் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளன.
    • சட்டம்-ஒழுங்கைக் கண்காணிக்க 2 தொகுதிகளுக்கு ஒரு பாா்வையாளா் நியமனம் செய்யப்படுவாா்.

    சென்னை:

    பாராளுமன்ற தோ்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பாராளுமன்ற தோ்தலுக்காக 68 ஆயிரத்து 144 வாக்குச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. வாக்காளா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில், வாக்குச் சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட போது, மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6.18 கோடியாக இருந்தது. இப்போது அதன் எண்ணிக்கை உயா்ந்திருக்கிறது.

    குறிப்பாக, இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட முதல் தலைமுறையைச் சோ்ந்த 90 ஆயிரம் போ் தங்களது பெயா்களை வாக்காளா்களாகப் பதிவு செய்துள்ளனா். இதன்மூலமாக, மாநிலத்தில் வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.


    அதேசமயம், 5 லட்சம் பெயா்களை நீக்கவும் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளன. வாக்காளா் பட்டியலில் புதிதாகப் பெயா் சோ்த்த அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    தோ்தல் நடத்தை விதிகளை மீறும் சம்பவங்கள் தொடா்பாக, சி-விஜில் எனும் செல்போன் செயலியில் புகாா் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி, தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த 24 மணி நேரத்தில் 141 புகாா்கள் வரை பெறப்பட்டன. அவற்றில் பெரும்பாலான புகாா்கள் சுவா் விளம்பரங்கள் அழிக்கப்படவில்லை என்பதாகும்.

    பாராளுமன்ற தோ்தலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட பாா்வையாளா்கள் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இதுவரை 58 நபா்களை பாா்வையாளா்களாக நியமிப்பதற்கான பட்டியலை தோ்தல் ஆணையம் அனுப்பி உள்ளது.

    ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு பொதுப் பாா்வையாளரும், இரண்டு செலவினப் பாா்வையாளா்களாக நியமிக்கப்படுவா். சட்டம்-ஒழுங்கைக் கண்காணிக்க 2 தொகுதிகளுக்கு ஒரு பாா்வையாளா் நியமனம் செய்யப்படுவாா். தேவையின் அடிப்படையில் கூடுதலான பாா்வையாளா்களும் நியமிக்கப்படுவா்.

    தோ்தலில் பணம், பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் தனித்தனியாக குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் ஒரு பறக்கும் படையும், ஒரு நிலைக் குழுவும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மக்களவைத் தோ்தலை நடத்த ஒட்டுமொத்தமாக ரூ.750 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட தொகையானது ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் இருந்து செலவிடப்பட்டுள்ளது. கூடுதலான தொகைகள் அரசால் ஒதுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரசுக்கு இழுத்து, பெங்களூரு வடக்கு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைவர்களும் முடிவு செய்தார்கள்.
    • பா.ஜனதாவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சேரும்படி எனக்கு, அக்கட்சியின் தலைவர்கள் அழைப்பு விடுத்திருப்பது உண்மை தான்.

    பெங்களூரு:

    பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா எம்.பி. சதானந்தகவுடா. முன்னாள் மத்திய மந்திரியும், முன்னாள் முதல்-மந்திரியுமான இவருக்கு 71 வயதாகிறது. வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் சதானந்தகவுடாவிடம் இருந்து மத்திய மந்திரி பதவி பறிக்கப்பட்டு இருந்தது. மேலும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா சார்பில் மீண்டும் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்து இருந்தார்.ஆனால் அவருக்கு பதிலாக பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளராக மத்திய மந்திரி ஷோபா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    இதன் காரணமாக சதானந்தகவுடா பா.ஜனதா தலைமை மீது அதிருப்தியில் உள்ளார். அவரை காங்கிரசுக்கு இழுத்து, பெங்களூரு வடக்கு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைவர்களும் முடிவு செய்தார்கள். இதுபற்றி சதானந்தகவுடாவுடன் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து, பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் சதானந்தகவுடா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சதானந்தகவுடாவுக்கு பிறந்தநாள் ஆகும். இதையடுத்து பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ஷோபா மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் சதானந்தகவுடாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். பின்னர் சதானந்தகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னுடைய அரசியல் எதிர்காலம், நிலைபாடு என்ன? என்பது குறித்து கூற நாளை (அதாவது இன்று) டாலர்ஸ் காலனியில் உள்ள எனது வீட்டில் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளேன். அங்கு எனது அரசியல் நிலைபாடு பற்றி தெரிவிப்பேன். பா.ஜனதாவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சேரும்படி எனக்கு, அக்கட்சியின் தலைவர்கள் அழைப்பு விடுத்திருப்பது உண்மை தான். அதுபற்றி எனது குடும்பத்தினருடன் ஆலோசிக்க வேண்டியது உள்ளது. நான் எப்போதும் தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுப்பதில்லை. அதனால் குடும்பத்தினருடன் கலந்து பேசி, எனது அரசியல் எதிர்காலம் குறித்து தெரிவிப்பேன். எங்கள் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் என்னை சந்தித்து பேசினார்.

    அவர் என்ன சொன்னார் என்பதை இப்போது பகிரங்கப்படுத்த முடியாது. எனது மனதில் இருக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது தெரிவிக்கிறேன். ஈசுவரப்பா தனது மகனுக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

    சீட் கிடைக்காதவர்கள், அதிருப்தியில் இருப்பவர்கள் பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவதற்கு முடிவு செய்திருந்தோம். அதற்குள் சுயேச்சையாக போட்டியிடுவதாக ஈசுவரப்பா தெரிவித்துள்ளார். இது அவரது தனிப்பட்ட முடிவாகும். சுயேச்சையாக போட்டியிடுவது பற்றி எங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கணேஷ் குமாரும், முத்துக்குமாரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
    • விபத்து குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியங்குடி:

    விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் குமார் (வயது 42). இவர் வியாபார நிமித்தமாக தனக்கு சொந்தமான மினி லோடு வேனில் கேரள மாநிலத்திற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். வேனை தளவாய்புரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(32) என்பவர் ஓட்டி வந்தார்.

    லோடு வேன் இன்று அதிகாலையில் புளியங்குடி எல்.ஐ.சி. அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே சங்கரன்கோவில் பகுதியில் இருந்து கனிமவளம் ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கனிமவள லாரியும், லோடு வேனும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

    இந்த பயங்கர விபத்தில் லோடு வேனின் முன்பக்க கேபின் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் கணேஷ் குமாரும், முத்துக்குமாரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேரையும் மீட்டனர். ஆனால் எனினும் பலத்த காயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். கணேஷ்குமார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    அவரை போலீசார் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளில், அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • தேர்தல் நடத்தை வீதிகளை மீறி தேமுதிக அலுவலகத்தில் பேனர் வைத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளில், அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில், கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை வீதிகளை மீறி தேமுதிக அலுவலகத்தில் பேனர் வைத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளிராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • ரெயில் இயக்கப்படும் வழித்தடத்தில் உள்ள அனைத்து நிறுத்தங்களிலும் வழக்கத்தை விட 10-15 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.
    • மறுமார்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் ரெயில் நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் இடையே மெயில் ரெயில் (எண். 12623/12624) தினமும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ரெயில் ஜூலை 15 முதல் சென்ட்ரலில் இருந்து வழக்கமாக இரவு 7.45 மணிக்கு பதிலாக இரவு 7.30 மணிக்கு (15 நிமிடங்கள் முன்பு) புறப்பட்டு மறுநாள் காலை 11.30 பதிலாக காலை 11.20 மணிக்கு (10 நிமிடங்கள் முன்பு) திருவனந்தபுரம் சென்றடையும்.

    இந்த ரெயில் இயக்கப்படும் வழித்தடத்தில் உள்ள அனைத்து நிறுத்தங்களிலும் வழக்கத்தை விட 10-15 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். மறுமார்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் ரெயில் நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

    அதேபோல், திருவனந்தபுரத்தில் இருந்து செல்லும் கேரளா அதிவிரைவு ரெயில் (எண்.12623) ஜூலை 15 முதல் வழக்கமாக பிற்பகல் 12.30 மணிக்கு பதிலாக (15 நிமிடங்கள் முன்பு) பிற்பகல் 12.15 மணிக்கு புறப்படும்.

    திருச்சூர் வரையுள்ள நிறுத்தங்களில் 15 நிமிடங்கள் முன்னதாக புறப்படும் இந்த ரெயில் அங்கிருந்து டெல்லி வரை வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்படும்.

    சென்னை சென்ட்ரல்-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே இயங்கும் அந்தமான் விரைவு ரெயிலில் (எண்.16031/16032) மார்ச் 21 முதலும், சென்ட்ரல்-லக்னோ விரைவு ரெயில்கள் (எண்.16093/16094) மார்ச் 23 முதலும் தலா ஒரு குளிர் சாதன மூன்றடுக்கு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.30-க்கும் பார் வெள்ளி ரூ.80,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனையானது.

    இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,080-க்கும் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,135-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.30-க்கும் பார் வெள்ளி ரூ.80,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    ×