search icon
என் மலர்tooltip icon

    டெல்லி

    • தமிழக காவல்துறையில் டி.ஜி.பி உள்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
    • காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பீகார் காங்கிரஸ் தலைவர் மோகன் முன்னிலையில் இணைந்தார்.

    பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த கருணா சாகர், 32 ஆண்டுகள் தமிழக காவல்துறையில் டி.ஜி.பி உள்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்ற கருணா சாகர் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணைந்தார். அதன்பின்னர், அக்கட்சியில் இருந்து விலகினார்.

    இந்நிலையில், தமிழக முன்னாள் டிஜிபி கருணா சாகர் அவரது மனைவி அஞ்சுவுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பீகார் காங்கிரஸ் தலைவர் மோகன் முன்னிலையில் கருணா சாகர் காங்கிரசில் இணைந்தார்.

    • கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி மக்களவை தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொண்டார்.
    • குஜராத்தில் இரண்டு இடங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது.

    அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் மக்களவை தேர்தலில் அவரால் பிரசாரம் மேற்கொள்ள முடியவில்லை. அவரது மனைவி சுனிதா, டெல்லி மாநில அமைச்சர்களுக்கு கெஜ்ரிவால் வழங்கும் ஆலோசனைகள் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில்தான் டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் நாளை குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். அம்மாநிலத்தில் பரூச் மற்றும் பவ்னாநகர் ஆகிய இடங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. இந்த இரண்டு வேட்பாளர்களையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்துகிறார்.

    டெல்லியில் உள்ள கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி மாநிலங்களவை தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டெல்லி ராம்லீலா ஜந்தர் மந்தரில் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து மாபெரும் கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சுனிதா கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோத்ரேஜ் குழுமத்தை நிறுவிய நிறுவனரின் குடும்பத்திற்கு மத்தியில் இரண்டு கிளைகள் பிரிக்கப்பட்டு உள்ளது.
    • பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்தப் பிரிவினையை "உரிமைகளின் மறுசீரமைப்பு" என்று கோத்ரேஜ் குடும்பம் குறிப்பிட்டு உள்ளது.

    இந்தியாவில் ஒவ்வொரு வீட்டு பீரோ, அலமாரிகளிலும் பொறிக்கப்பட்டிருக்கும் இந்தப் பெயர் உலகளவிலும் பரவியுள்ளது, அதுதான் கோத்ரேஜ். அன்னி பெசன்ட் அம்மையார், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் ஆதரவைப் பெற்ற நிறுவனம் இது. 1921 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு இங்கிலாந்து ராணி வந்திருந்தபோது கோத்ரேஜ் தயாரிப்பைப் பயன்படுத்தினார். 1897-ம் ஆண்டு கோத்ரேஜ் நிறுவனத்தை ஆர்தேஷிர் கோத்ரேஜ் தொடங்கினார்.


    127 ஆண்டுகளாக சோப்பு, வீட்டு உபகரணங்கள் முதல் ரியல் எஸ்டேட் வரை பல்வேறு துறைகளில் இயங்கி வரும் கோத்ரேஜ் குழுமம் 2ஆக பிரிவதாக அறிவித்துள்ளது.

    கோத்ரேஜ் குழுமத்தை நிறுவிய நிறுவனரின் குடும்பத்திற்கு மத்தியில் இரண்டு கிளைகள் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு புறம் ஆதி கோத்ரேஜ் மற்றும் அவரது சகோதரர் நாதீர் கோத்ரேஜ் உள்ளனர். மறுபுறம் ஜாம்ஷெட் கோத்ரேஜ் மற்றும் ஸ்மிதா கோத்ரேஜ் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர். ஆதி கோத்ரேஜ் மற்றும் நாதீர் கோத்ரேஜ் ஆகியோரின் சித்தப்பா வாரிசுகள் தான் ஜாம்ஷெட் கோத்ரேஜ் மற்றும் ஸ்மிதா கோத்ரேஜ் கிருஷ்ணா.


    இதன் மூலம், ஆதி கோத்ரேஜ் மற்றும் அவரது சகோதரர் நாதீர் கோத்ரேஜ் ஆகியோர் 5 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைக் கொண்ட கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

    மறுபுறம், ஜாம்ஷெட் கோத்ரேஜ் மற்றும் ஸ்மிதா கோத்ரேஜ் கிருஷ்ணா ஆகியோர் பட்டியலிடப்படாத கோத்ரேஜ் அண்ட் பொயிஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் மும்பையில் முக்கியமான பகுதிகளில் உள்ள முதன்மை நிலங்களை மொத்தமாக கைப்பற்றுகின்றனர்.

    இனி ஜாம்ஷெட் கோத்ரேஜ் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக கட்டுப்பாட்டில் இயங்கும். அவரது சகோதரி ஸ்மிதாவின் மகள் நிரிகா ஹோல்கர் இந்நிறுவனத்திற்கு நிர்வாக இயக்குநராக இருப்பார். இதோடு மும்பையில் உள்ள 3,400 ஏக்கர் நிலப்பகுதி உட்பட நில தொகுப்பை இவர்கள் நிர்வகிப்பார்கள்.


    கோத்ரேஜ் குழுமம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஆதியின் மகனான பிரோஜ்ஷா கோத்ரேஜ், கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவராக இருப்பார். மேலும் ஆகஸ்ட் 2026 இல் நாதீர் ஓய்வுபெற்ற பிறகு தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்பார். பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்தப் பிரிவினையை "உரிமைகளின் மறுசீரமைப்பு" என்று கோத்ரேஜ் குடும்பம் குறிப்பிட்டு உள்ளது.

    • டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக பாண்டியா நியமனம்.
    • யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே உள்ளிட்ட வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    ஐ.சி.சி. நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.

    டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூரவமாக நேற்று அறிவித்தது.

    இதில் இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மாவும், பாண்டியா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட 15 பேர் இடம்பெற்றுள்ளனர்.

    மேலும், சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கேப்டனாக இல்லாவிட்டால் அணியில் இருந்து நீக்கப்பட்ட முதல் ஆளாக ரோகித் சர்மா இருந்திருப்பார் என முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

    • பீகார் தொழிலதிபர் அமித் கட்யால் நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
    • இந்த வழக்கு விசாரணையில் டெல்லி நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    பீகார் முன்னாள் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவின் நெருங்கிய கூட்டாளியான தொழிலதிபர் அமித் கட்யால் நில மோசடி தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    நில மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் அமித் கத்யால் இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே அமலாக்கத் துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அமலாக்கத் துறையின் அடவாடித்தனமான செயல்பாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

    அமலக்கத்துறை சட்ட விதிகளுக்கு கட்டுபட்டுதான் நடக்க வேண்டும்.

    பி.எம்.எல்.ஏ சட்டப்பிரிவை பயன்படுத்தி சாமானியர்களை துன்புறுத்துவதை எந்த விதத்திலும் அமலாக்கத் துறை நியாப்படுத்த முடியாது.

    நீதிமன்றத்திற்கும், சட்டத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை அமலாக்கத்துறைக்கு உள்ளது என காட்டமாக தெரிவித்துள்ளார்.

    • உள்நாட்டு வர்த்தகம் அதிகரிப்பே ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.
    • தமிழ்நாட்டில் ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. ரூ.12,210 கோடியாக உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.2.10 லட்சம் கோடி என்ற புதிய உச்சத்தை தொட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட இந்த வருடம் ஜி.எஸ்.டி. வரி வசூல் 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்நாட்டு வர்த்தகம் அதிகரிப்பே ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. ரூ.12,210 கோடியாக உயர்ந்துள்ளது. 2023 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது ஜி.எஸ்.டி. வசூல் 6 சதவீதம் அதிகமாகும்.

    • வருகிற 8, 9, 10-ந்தேதிகளில் ஜாபர் சாதிக்கிடமும், அவருக்கு உதவியாக இருந்த மேலும் 4 பேரிடமும் வாக்குமூலம் பெறப்படுகிறது.
    • திகார் ஜெயிலுக்குள் லேப்டாப் உள்ளிட்ட கருவிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் செல்லலாம்.

    புதுடெல்லி:

    சென்னையில் இருந்து டெல்லி வழியாக வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தியதாக தி.மு.க. நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதைப்பொருள் கடத்தி இருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    கைதான ஜாபர்சாதிக்கிடம் சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பிறகு அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் வாக்குமூலம் பெற அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

    இதற்காக டெல்லி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த டெல்லி சிறப்பு கோர்ட்டு ஜாபர்சாதிக்கிடம் திகார் ஜெயிலில் வாக்குமூலம் பெறலாம் என்று அனுமதி வழங்கி உள்ளது.

    அதன்படி வருகிற 8, 9, 10-ந்தேதிகளில் ஜாபர் சாதிக்கிடமும், அவருக்கு உதவியாக இருந்த மேலும் 4 பேரிடமும் வாக்குமூலம் பெறப்படுகிறது. இதற்காக திகார் ஜெயிலுக்குள் லேப்டாப் உள்ளிட்ட கருவிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் செல்லலாம் என்று சிறப்பு கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

    வாக்குமூலம் பெறப்பட்ட பிறகு ஜாபர்சாதிக் மீதான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த அமலாக்கத்துறை முடிவு செய்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
    • இது ஒன்றும் புதிய தகவல் இல்லை என இந்திய மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன.

    இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. பல நாடுகளில் இந்த தடுப்பூசிதான் போடப்பட்டது.

    இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது குறித்து இந்திய மருத்துவர்கள் கூறியதாவது:

    இது ஒன்றும் புதிய தகவல் இல்லை. பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே கோவிஷீல்டு தடுப்பூசி குறித்த எச்சரிக்கையை நன்கு அறிவோம்.

    இந்த தடுப்பூசி செலுத்துவதால் அரிதான ரத்த உறைவு ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு மிகக் குறைந்த ஆபத்தை அறிவித்தது.

    இங்கிலாந்தில் ஒரு மில்லியன் பேருக்கு 4 வழக்குகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் 1,00,000 பேருக்கு ஒரு வழக்கு, இந்தியாவில் ஒரு மில்லியன் டோசுக்கு 0.61 வழக்கு பதிவாகியுள்ளது என தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் பள்ளிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • பள்ளியில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு டெல்லியில் உள்ள மதர் மேரி பள்ளி, துவாரகாவில் உள்ள டிபிஎஸ் பள்ளி மற்றும் சன்ஸ் கிரிதி ஆகிய பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் பள்ளிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து நொய்டாவில் உள்ள பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

    டெல்லியில் உள்ள பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    ஒரே மின்னஞ்சல் மூலம் ஒரே விதமான முறையில் பல்வேறு பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    • டெல்லி மாநில காங்கிரசுக்கு இடைக்கால தலைவராக தேவேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டார்.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

    புதுடெல்லி:

    டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் முன்னாள் டெல்லி மந்திரி அரவிந்த் சிங் லவ்லி. இவர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

    இதற்கிடையே, கடந்த இரு நாட்களுக்கு முன் தனது கட்சியின் மாநில தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து, டெல்லி மாநில காங்கிரசின் இடைக்கால தலைவராக தேவேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள தேவேந்தர் யாதவ் ஏற்கனவே பஞ்சாப் மாநில பொறுப்பாளராக உள்ளார்.

    இந்நிலையில், டெல்லி மாநில இடைக்கால தலைவராக தேவேந்தர் நியமனம் செய்யப்பட்டதற்கும், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம் எல் ஏக்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளனர். இதுதொடர்பான கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • இணையதளத்தில் வழக்கு விவரங்கள், அதன் தற்போதைய நிலைப்பாடு, தீர்ப்புகள் ஆகியவற்றை மக்கள் மிக எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளம் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
    • கடந்தவாரம் தான், ‘வாட்ஸ்-அப்’ மூலம் வழக்கு விவரங்களை வக்கீல்களுக்கும், சம்பந்தப்பட்ட மக்களுக்கும் வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அறிவித்து இருந்தார்.

    புதுடெல்லி:

    நீதித்துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் ஆர்வம் காட்டி வருகிறார்.

    மத்திய அரசும், நீதித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் பணிக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகள் மற்றும் மாவட்ட கோர்ட்டுகளின் பணிகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக சுப்ரீம் கோர்ட்டுக்கு என்று https://www.sci.gov.in என்ற புதிய இணையதளம் ஒன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதன் முழு செயல்பாடு இன்று (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது. இந்த இணையதளத்தில் வழக்கு விவரங்கள், அதன் தற்போதைய நிலைப்பாடு, தீர்ப்புகள் ஆகியவற்றை மக்கள் மிக எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளம் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

    அதேபோல் சுப்ரீம் கோர்ட்டு மூலம் வழங்கப்படும் ஆன்லைன் சேவைகளான வழக்கு தாக்கல், சுப்ரீம் கோர்ட்டில் பார்வையாளருக்கு வழங்கப்படும் 'இ-பாஸ்', தீர்ப்பு நகல்கள் பெறுவது உள்பட அனைத்து சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம். மிக முக்கியமாக கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணைகளை பொதுமக்கள் நேரலையில் காணலாம். அதோடு பழைய வழக்கு விசாரணைகளையும் பார்வையிடுவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு விவரங்களை மக்கள் எளிதான தேடல்கள் மூலம் பெறுவதற்கும் இந்த இணையதளம் உதவி செய்கிறது.

    கடந்தவாரம் தான், 'வாட்ஸ்-அப்' மூலம் வழக்கு விவரங்களை வக்கீல்களுக்கும், சம்பந்தப்பட்ட மக்களுக்கும் வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அறிவித்து இருந்தார். அதாவது வழக்கினை தாக்கல் செய்யும் பொதுமக்கள் மற்றும் வக்கீலுக்கு வழக்கின் விவரம், விசாரணைக்கு வரும் தேதி மற்றும் தீர்ப்பு விவரம் ஆகியவை வாட்ஸ்-அப் எண் 87676- 87676 மூலம் அனுப்பி வைக்கப்படும். அந்த சூழ்நிலையில் இந்த புதிய இணையதளமும் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருவது மக்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும்.

    • பா.ஜனாவின் நிலை மிகவும் தெளிவானது. நாங்கள் நாட்டின் தாய்மார்கள் அல்லது பெண்களுடன் நிற்கிறோம்.
    • கர்நாடகா மாநிலத்தில் யாருடைய அரசு என்பதை காங்கிரசிடம் கேட்க விரும்புகிறேன்.

    தேவகவுடா பேரனும், மக்களவை எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா பெண்களை பலாத்காரம் செய்து அவற்றை வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இது தொடர்பாக பல வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த கர்நாடகா அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது.

    இந்த விவகாரம் நாடு தழுவிய அளவில் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. பிரஜ்வால் ரேவண்ணா மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். தற்போது கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதசார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதனால் பா.ஜனதாவையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

    காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி "10 நாட்களுக்கு முன்பு பிரதமர் கைகளை குலுக்கியும், தோள்களில் கைபோட்டும் கர்நாடக பிரசார கூட்டத்தில் புகழ்ந்து பேசிய நபர் இன்று நாட்டை விட்டே தப்பியோடி தலைமறைவாக இருக்கிறார். நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த மோடி ஆதரித்த வேட்பாளரின் குற்றங்களை கேட்கும்போதே நெஞ்சம் நடுங்குகிறது. இந்த கொடூரத்துக்காவது பிரதமர் மோடி வாய் திறப்பாரா?" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

    இந்த நிலையில் பிரியங்கா காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான அமித் ஷா பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-

    பா.ஜனாவின் நிலை மிகவும் தெளிவானது. நாங்கள் நாட்டின் தாய்மார்கள் அல்லது பெண்களுடன் நிற்கிறோம். கர்நாடகா மாநிலத்தில் யாருடைய அரசு என்பதை காங்கிரசிடம் கேட்க விரும்புகிறேன். அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது வரை அவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பதால் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது மிகவும் முக்கியமான விசயம். நாம் இதை சகித்துக் கொள்ள முடியாது. ஆட்சியில் இருந்தும் கூட இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதைத்தான் நாங்கள் காங்கிரசிடம் கேட்க விரும்புகிறோம். பிரியங்கா காந்தி அவர்களுடைய முதல்-மந்திரி, துணை முதல்வரிடம் கேட்க வேண்டும்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    ×