என் மலர்tooltip icon

    டெல்லி

    • ஏழைகளின் உயிர் நாடியாக இருந்த திட்டத்தை மாற்றி அவர்கள் மீது மத்திய பாஜக அரசு தாக்குதல்.
    • பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 100 நாள் வேலை திட்டத்தை பலவீனப்படுத்த முயற்சி.

    100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கப்பட்டதுடன் திட்டத்தின் அம்சங்களும் மாற்றப்பட்டதற்கு சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஏழைகளின் உயிர் நாடியாக இருந்த திட்டத்தை மாற்றி அவர்கள் மீது மத்திய பாஜக அரசு தாக்குதல் நடத்தி உள்ளதாக சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.

    கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மீது பாஜக அரசு தாக்குதல் தொடுத்துள்ளது. 11 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 100 நாள் வேலை திட்டத்தை பலவீனப்படுத்த முயற்சித்ததாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சோனியா காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

    20 ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த அந்த நேரத்தில் MGNREGA பாராளுமன்றத்தில் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்பட்டது. இது ஏழைகளுக்கு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையை வழங்கியது மற்றும் அதன் மூலம் கிராம பஞ்சாயத்துகளை வலுப்படுத்தியது.

    MGNREGA மூலம், மகாத்மா காந்தியின் கனவுகளை நோக்கி ஒரு உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏழைகளின் நலன்களை பலவீனப்படுத்த மோடி அரசு முயன்றது.

    சமீபத்தில், MGNREGA மீது அரசாங்கம் புல்டோசரை விட்டு ஏற்றியுள்ளது. MGNREGA-வை கொண்டு வந்து செயல்படுத்துவதில் காங்கிரஸ் பெரும் பங்களிப்பைச் செய்தது. இது நாட்டின் மற்றும் மக்களின் நலனுடன் இணைக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இதன் மூலம் மோடி அரசு ஏழைகளின் நலன்களைத் தாக்கியுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்த தாக்குதலை பார்த்த தனது மகள் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
    • தங்கள் ஊழியரின் இத்தகைய நடத்தையை வன்மையாகக் கண்டிப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

    டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானி ஒருவர் பயணியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் அங்கித் திவான் என்பவர், ஸைப்ஸ் ஜெட் விமானத்தில் ஏறுவதற்கு, தனது 7 வயது மகள், 4 மாத கைக்குழந்தை மற்றும் மனைவியுடன் பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது ஊழியர்கள் என்ட்ரி வழியாக வரிசையில் புகுந்து முன்னால் செல்ல முயன்ற ஏர் இந்தியா விமானி வீரேந்தர் என்பவரை அங்கித் திவான் கடிந்துகொண்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த விமானி வீரேந்தர், இது ஊழியர்கள் என்ட்ரி என்றும், திவானை படிப்பறிவு இல்லையா என்று திட்டியுள்ளார். அதோடு அவரை தாக்கியும் உள்ளார்.

    இந்தத் தாக்குதலில் அங்கித் திவானின் முகத்தில் ரத்தம் வழிந்தது.முகம் முழுவதும் ரத்தக் கறையுடன் இருக்கும் தனது புகைப்படத்தை அங்கித் திவான் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், இந்த தாக்குதலை பார்த்த தனது மகள் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து புகார் அளிக்க வேண்டாம் என அதிகாரிகள் தன்னை வற்புறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் ஊழியரின் இத்தகைய நடத்தையை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வருகிறது.  

    • டெல்லியில் ரஷிய அதிபர் புதினுடன் மோடி ஒரே காரில் பயணம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் அதிகம் விரும்பப்பட்டு உள்ளது.
    • விரும்பப்பட்ட பதிவுகளை கொண்ட முதல் 10 பேர் பட்டியலில் இடம் பெற்ற ஒரே அரசியல்வாதியும் மோடிதான்.

    புதுடெல்லி:

    கடந்த 30 நாட்களில் எக்ஸ் சமூக வலைதளத்தில் அதிகம் விரும்பப்பட்ட மற்றும் மறுபதிவு செய்யப்பட்ட பதிவுகள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதில் பிரதமர் மோடி வெளியிட்ட 8 கருத்துகள் அல்லது படங்கள்தான் அதிகம் விரும்பப்பட்ட மற்றும் மறுபதிவு செய்யப்பட்ட பதிவுகளாக தெரியவந்துள்ளது.

    டெல்லியில் ரஷிய அதிபர் புதினுடன் மோடி ஒரே காரில் பயணம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் அதிகம் விரும்பப்பட்டு உள்ளது. அந்த புகைப்படம் 34 ஆயிரம் மறுபதிவுகளையும், 2 லட்சத்து 14 ஆயிரம் விருப்பங்களையும் பெற்றது.

     

    எக்ஸ் வலைதளத்தில் மோடியின் 8 வலைத்தள பதிவுகளும் சேர்த்து ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 700 மறு பதிவுகளையும், 14.76 லட்சம் விருப்பங்களையும் பெற்றுள்ளன.

    இப்படி அதிகம் பகிரப்பட்ட மற்றும் விரும்பப்பட்ட பதிவுகளை கொண்ட முதல் 10 பேர் பட்டியலில் இடம் பெற்ற ஒரே அரசியல்வாதியும் மோடிதான். அவரது 8 பதிவுகளே முதல் 10 இடங்களை ஆக்கிரமித்து உள்ளன.

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.
    • மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று தேநீர் விருந்தளித்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    காப்பீடு துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பு, அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட 'விபி ஜி ராம் ஜி' மசோதா உள்ளிட்டவை விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்பட்டன.

    கூட்டம் தொடங்கிய போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அதன்பின், விவாதங்களில் அக்கட்சிகள் பங்கேற்றன.

    இதற்கிடையே, ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுபெறும் போது, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா எம்.பி.க்களுக்கு தேநீர் விருந்தளிப்பது வழக்கம்.

    இந்நிலையில், நேற்றும் சபாநாயகர் ஓம்பிர்லா தேநீர் விருந்து அளித்தார். இந்த முறை எதிர்க்கட்சி எம்.பி.க்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அருகே காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா அமர்ந்திருந்தார்.

    அப்போது, எத்தியோப்பியா, ஜோர்டான் மற்றும் ஓமன் பயணம் குறித்து மோடியிடம் பிரியங்கா கேட்டார்.அதற்கு மோடி, பயணம் சிறப்பாக அமைந்ததாக தெரிவித்தார்.

    சமாஜ்வாதி கட்சியின் தர்மேந்திர யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • பா.ஜ.க. தேசியத் தலைவராக கடந்த 2020-ம் ஆண்டு ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார்.
    • பாராளுமன்றத் தேர்தலால் அவரது 3 ஆண்டு பதவிக்காலம் முடிந்தும் நீட்டிக்கப்பட்டு வந்தது.

    புதுடெல்லி:

    இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல்இன்று வெளியிடப்பட்டது. இதனால் அனைத்து கட்சி அலுவலகங்களும் பிசியாக இருந்தன.

    தனது கட்சி அலுவலகத்துக்குச் சென்ற முனுசாமி, என்னப்பா, நம்ம தொகுதியில எத்தனை வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்காங்க என கேட்டார்.

    அதற்கு பதிலளித்த சிவகுரு, சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நீக்கப்பட்டு இருக்காங்க என தெரிவித்தார்.

    பரவாயில்லையே, நான் கூட இன்னும் நிறைய இருக்குமோனு நினைச்சேன். இனி வரும் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்கு செலுத்த வேண்டும். அப்படி செய்தால் தான் ஒரு நல்ல தலைவரை தேர்வு செய்ய முடியும். அதனால நமக்கும் நல்ல ஆட்சி கிடைக்கும் இல்லையா என கேள்வி எழுப்பினார் முனுசாமி.

    ஆமாம்பா, ரொம்ப கரெக்டா சொன்னே, தேர்தல் ஆணையம் எதை செய்தாலும் நாம் அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் அதன் பயனே இருக்கு என்றார் சிவகுரு.

    ஆமா, சமீபத்தில பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு தலைவரை தேர்வு செய்தார்களாமே, யாரு அவரு? என கேட்டார் முனுசாமி.

    அவர் நிதின் நபின். பீகாரைச் சேர்ந்தவர் என பதிலளித்த சிவகுரு, நிதின் நபின் பாஜக தேசிய தலைவராக செய்யப்பட்டதன் சாராம்சத்தை விவரித்தார். அது பின்வருமாறு:

    பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக கடந்த 2020-ம் ஆண்டு ஜே.பி.நட்டா நியமனம் செய்யப்பட்டார்.

    அவரது 3 ஆண்டு பதவிக்காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது. எனினும், பாராளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையே, பா.ஜ.க.வுக்கு புதிய தேசியத் தலைவரை நியமனம் செய்ய அக்கட்சியில் தொடர்ந்து ஆலோசனை நடந்தன.

    இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி மற்றும் மந்திரிகள் அமித் ஷா, ஜே.பி. நட்டா ஆகியோர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபின் பா.ஜ.க.வின் தேசிய செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் பா.ஜ.க. தேசியத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


    நிதின் நபின் பீகார் மாநில அரசின் சாலைப் போக்குவரத்துத்துறை மந்திரியாகவும், சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. பொறுப்பாளராகவும் உள்ளார்.

    பாட்னாவில் பிறந்த நிதின் நபின், பா.ஜ.க.வின் முதுபெரும் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான நபின் கிஷோர் பிரசாத் ஷின்காவின் மகன்.

    பங்கிபூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு பீகாரில் முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன இவர், அதன்பின் 2010, 2015, 2020 மற்றும் 2025 ஆகிய சட்டசபைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தக்கவைக்க நிதின் நபின் முக்கிய பங்காற்றினார்.

    இவர் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய பொதுசெயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

    தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நபினுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் வாழ்த்தி வருகின்றனர் என தெரிவித்தார்.


    பரவாயில்லையே, அந்தக் கட்சி மேல எவ்வளவோ சர்ச்சைகள் இருந்தாலும் ஒரு தலைவரை தேர்வு செய்யும்போது பிரபலம் இல்லாத ஆளையே நியமனம் செய்வது வரவேற்கத்தக்கது எனக்கூறியபடி வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டார் முனுசாமி.

    • வக்பு சொத்துக்களைப் பதிவு செய்யும் நடைமுறைகளை முறைப்படுத்துகிறது.
    • ஐஐஎம் நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்புகளில் மத்திய அரசின் பங்களிப்பை முறைப்படுத்துகிறது.

    2025-ம் ஆண்டில் இந்திய பாராளுமன்றத்தில் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) பல முக்கியமான மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

    குறிப்பாகப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், நிர்வாக மேலாண்மை மற்றும் சமூக நலன் சார்ந்த சட்டங்கள் இதில் முக்கிய இடம் பிடித்துள்ளன. 

    2025-ல் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய மசோதாக்களின் பட்டியல் இதோ:

    காப்பீட்டுச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2025 (Sabka Bima Sabki Raksha Bill)

    இந்த மசோதா 2025-ன் மிக முக்கியமான பொருளாதாரச் சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது. காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) 74%-லிருந்து 100% ஆக உயர்த்த இந்த மசோதா வழிவகை செய்கிறது.

    2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கை அடைவதும், காப்பீட்டுத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதும் இதன் நோக்கமாகும்.

    வக்பு (திருத்தம்) மசோதா 2025:

    நீண்ட விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, வக்பு வாரியங்களின் நிர்வாகத்தில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது.

    வக்ப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் இடம்பெறுவதை இது உறுதி செய்கிறது. மேலும், வக்ஃபு சொத்துக்களைப் பதிவு செய்யும் நடைமுறைகளை முறைப்படுத்துகிறது.

    ஆன்லைன் கேமிங் (முறைப்படுத்துதல்) மசோதா, 2025:

    வளர்ந்து வரும் ஆன்லைன் விளையாட்டுத் துறையை முறைப்படுத்தவும், சூதாட்டம் போன்ற சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கவும் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது.

    ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்குக் கடுமையான விதிகள் மற்றும் வயதுக் கட்டுப்பாடுகளை இது விதிக்கிறது.

    தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, 2025:

    இந்தியாவில் உள்ள விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவது.

    விளையாட்டு வீரர்களின் நலனைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்கமருந்து சோதனைகளை (Anti-Doping) சர்வதேசத் தரத்திற்கு ஏற்பக் கொண்டு வருதல்.

    நிதி மசோதா மற்றும் வரி விதிப்புச் சட்டங்கள் (திருத்தம்), 2025:

    சுகாதாரப் பாதுகாப்பு வரி, புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் மீது புதிய வரியை விதிக்க இந்த மசோதா வழி செய்கிறது. இந்த நிதி தேசியப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரத்திற்காகப் பயன்படுத்தப்படும்.

    வருமான வரி (திருத்தம்):

    வருமான வரி நடைமுறைகளை எளிமையாக்குவதற்கும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

    இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIM) திருத்த மசோதா: ஐஐஎம் நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்புகளில் மத்திய அரசின் பங்களிப்பை முறைப்படுத்துகிறது.

    குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் மசோதா, 2025:

    இந்தியாவில் தங்கும் வெளிநாட்டினரின் பதிவு மற்றும் விசா நடைமுறைகளைப் புதுப்பிக்கிறது.

    2025-ம் ஆண்டின் குளிர்காலக் கூட்டத்தொடர் (டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை) மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் அணுசக்தி, வேலைவாய்ப்பு மற்றும் வரி விதிப்பு எனப் பல்வேறு துறைகளில் நீண்டகால மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட கூடுதல் முக்கிய மசோதாக்கள் இதோ:

    ஷாந்தி (SHANTI) மசோதா, 2025

    (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India Bill) இந்த மசோதா இந்தியாவின் எரிசக்தி கொள்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றமாகும்.

    இந்தியாவின் சிவில் அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்யவும், அணுமின் நிலையங்களை அமைத்து இயக்கவும் முதல்முறையாக அனுமதி அளிக்கிறது.

    இது இந்தியாவின் தூய்மையான எரிசக்தி (Clean Energy) தேவையைப் பூர்த்தி செய்யவும், நிலக்கரி மீதான சார்பைக் குறைக்கவும் உதவும்.

    விக்சித் பாரத் கிராம வேலைவாய்ப்பு மசோதா (VB G-RAM-G Bill)

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக அல்லது அதன் மேம்படுத்தப்பட்ட வடிவமாக இது கொண்டு வரப்பட்டுள்ளது.

    கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதி செய்வதோடு, அந்த வேலைகள் மூலம் நிரந்தரமான கிராமப்புறச் சொத்துக்களை உருவாக்குவதை இது வலியுறுத்துகிறது.

    100 நாள் வேலைத் திட்டத்தின் அடிப்படைத் தன்மை மாறுவதாகக் கூறி எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் (130-வது) மசோதா, 2025

    நிர்வாகத் தூய்மையைக் கருத்தில் கொண்டு இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதமர், முதலமைச்சர்கள் அல்லது அமைச்சர்கள் குற்ற வழக்குகளில் சிக்கி 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால், அவர்கள் தானாகவே பதவியை இழக்க நேரிடும்.

    பிரதமரை நீக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கும், முதலமைச்சர்களை நீக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கும் வழங்கப்படுகிறது.

    பங்குச் சந்தை குறியீடு (SMC) மசோதா, 2025

    செபி (SEBI) சட்டம், டெபாசிட்டரிகள் சட்டம் மற்றும் பரிவர்த்தனை ஒப்பந்தச் சட்டம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து ஒரே சட்டமாக (Unified Code) மாற்றுகிறது.

    இது முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பையும், நிறுவனங்களுக்குத் தொழில் செய்வதை எளிதாக்கவும் உதவும்.

    தேசிய நெடுஞ்சாலைகள் (திருத்தம்) மசோதா, 2025

    நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகளை விரைவுபடுத்தவும், இழப்பீட்டுத் தொகையை டிஜிட்டல் முறையில் நேரடியாக விவசாயிகளின் கணக்கில் செலுத்தவும் இது வழிவகை செய்கிறது.

    • உரிமைகள் அடிப்படையிலான, தேவைக்கேற்ப வழங்கப்படும் உத்தரவாதங்களை அழித்து, மத்திய அரசிடம் இருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு பங்கீட்டுத் திட்டமாக மாற்றுகிறது.
    • கோடிக்கணக்கான தொழிலாளர்களைப் பாதிக்கும் ஒரு சட்டத்தை ஆய்வு செய்யாமல், நிபுணர் ஆலோசனை பெறாமல் மற்றும் பொது மக்கள் கருத்து கேட்காமல் ஒரு போதும் திணிக்கப்பட்டிருக்கக் கூடாது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமான விக்சித் பாரத்-ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (விபி-ஜி ராம் ஜி) என்ற புதிய ஊரக வேலை திட்ட மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    20 ஆண்டுகால மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ) நேற்று ஒரே இரவில் மோடி அரசாங்கம் தகர்த்துவிட்டது.

    விபி - ஜி ராம் ஜி என்பது எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ திட்டத்தின் மறுசீரமைப்பு அல்ல. உரிமைகள் அடிப்படையிலான, தேவைக்கேற்ப வழங்கப்படும் உத்தரவாதங்களை அழித்து, மத்திய அரசிடம் இருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு பங்கீட்டுத் திட்டமாக மாற்றுகிறது. இது அடிப்படையிலேயே மாநிலங்களுக்கும், கிராமங்களுக்கும் எதிரானது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் பெண்களுக்குத்தான் அதிகம் உதவியது. இந்த திட்டத்தை மாநில அரசுடன் நிதிப்பங்கீடு செய்யும்போது பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், நிலமற்ற தொழிலாளர்கள், ஏழ்மையில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும்தான் முதலில் வெளியேற்றப்படுவார்கள்.

    விபி-ஜி ராம் ஜி மசோதா எவ்வித ஆய்வுமின்றி பாராளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டது. மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

    கோடிக்கணக்கான தொழிலாளர்களைப் பாதிக்கும் ஒரு சட்டத்தை ஆய்வு செய்யாமல், நிபுணர் ஆலோசனை பெறாமல் மற்றும் பொது மக்கள் கருத்து கேட்காமல் ஒரு போதும் திணிக்கப்பட்டிருக்கக் கூடாது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டமானது உலகின் மிகவும் வெற்றிகரமான வறுமை ஒழிப்பு மற்றும் அதிகாரமளிப்புத் திட்டங்களில் ஒன்றாகும்.

    கிராமப்புற ஏழைகளின் கடைசிப் பாதுகாப்பு அரணை அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த நடவடிக்கையைத் தோற்கடிக்கவும், சட்டத்தை திரும்பப் பெறுவதை உறுதி செய்யவும், தொழிலாளர்கள், பஞ்சாயத்துகள் மற்றும் மாநிலங்களுடன் நாங்கள் துணை நிற்போம். இவ்வாறு ராகுல்காந்தி கூறி உள்ளார்.

    • இதற்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.
    • நிறுவனங்களுடன் இணைந்து அரசு விரிவான ஆய்வுகளை நடத்தியுள்ளது.

    கமல் ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் கமல் ஹாசன் அக்கூட்டணியால் மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது.

    இந்நிலையில் கமல் ஹாசன் எம்.பியாக தான் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய முதல் கேள்வி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    பெட்ரோலுடன் வழக்கமான 10 சதவீதத்திற்கு பதிலாக 20 சதவீதம் எத்தனால் கலக்கும் மத்திய அரசின் E20 திட்டம் குறித்து கமல் ஹாசன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதற்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.  

    கமல் ஹாசனின் கேள்விகள்:

    1)E20 எரிபொருளால் வாகனத்தின் மைலேஜ் மற்றும் எஞ்சின் பாகங்கள் பாதிக்கப்படுமா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளதா?

    2) பழைய வாகனங்களுக்கு ஏற்ற E10 பெட்ரோல் நாடு முழுவதும் கிடைப்பது நிறுத்தப்பட்டது ஏன்? அதனை மீண்டும் கொண்டுவரும் திட்டம் உள்ளதா?

    3) E20 பயன்பாட்டால் எஞ்சின் சேதமடைந்தால் அதற்கான உத்தரவாதம் அல்லது காப்பீடு குறித்து வழிகாட்டுதல்கள் உள்ளனவா?

    நிதின் கட்கரி எழுத்துபூர்வமாக அளித்த பதில்:

    நிறுவனங்களுடன் இணைந்து அரசு விரிவான ஆய்வுகளை நடத்தியுள்ளது. E20 எரிபொருள் குறித்து நடத்தப்பட்ட கள சோதனைகளில் வாகனங்களின் செயல்பாட்டில் எந்தப் பாதிப்பும் கண்டறியப்படவில்லை.

    பழைய வாகனங்களில் கூட, E20 எரிபொருளைப் பயன்படுத்துவதால் எஞ்சின் தேய்மானமோ அல்லது செயல்திறன் குறைவோ ஏற்படவில்லை என்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வாகனத்தின் மைலேஜ் என்பது எரிபொருளை மட்டும் சார்ந்தது அல்ல. முறையான பராமரிப்பு, டயர் காற்றழுத்தம் மற்றும் ஏசி பயன்பாடு போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தே அமைகிறது.

    எத்தனால் கலப்பு அதிகரிப்பது நாட்டின் இறக்குமதிச் செலவைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • இதில் வந்தே மாதரம் பாடல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்டவை குறித்து காரசார விவாதங்கள் நடந்தன.
    • காற்று மாசு குறித்து விவாதிக்கப்படாமலேயே கூட்டத்தொடர் முடிந்தது/

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டத்தொடர் 19-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    15 அமர்வுகள் கொண்ட குளிர்கால கூட்டத்தொட ரின் முதல் 2 நாட்களில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் பணி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. 3-ந் தேதி முதல் கூட்டத் தொடரின் அலுவல்கள் நடந்தன.

    இதில் வந்தே மாதரம் பாடல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்டவை குறித்து காரசார விவாதங்கள் நடந்தன. அணுசக்தித் துறையில் தனி யாரை அனுமதிப்பது உள்பட முக்கிய மசோதாக்கள் இரு அவையிலும் நிறை வேற்றப்பட்டன.

    மக்களவையில் நேற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமான விக்சித் பாரத்-ரோஜ்கர் மற்றும் அஜீவிகாமிஷன் (விபி-ஜி ராம் ஜி) மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நிறைவேறியது.

    இந்த நிலையில் இன்று காலை மக்களவை கூடிய தும் குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுவதாகவும், கால வரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அப்போது இந்தக் கூட்டத்தொடரின் போது சபையின் செயல்பாடு 111 சதவீதமாக இருந்தது என்று ஓம் பிர்லா கூறினார்.

    மேல்சபை இன்று காலை கூடியதும் அவைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், 15 நாட்கள் நடைபெற்ற கூட்டத் தொடரின் போது மேற்கொள்ளப்பட்ட சட்ட மியற்றும் மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்த சுருக்கத்தை வாசித்தார்.  

    பின்னர் மேல்-சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அவை தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் அறிவித்தார். இதையடுத்து மேல் சபையிலும் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவுபெற்றது. இரு அவைகளின் நிறைவிலும் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது. இன்று டெல்லி காற்று மாசு குறித்து விவாதிக்கப்பட இருந்த நிலையில் அது குறித்து விவாதிக்கப்படாமலேயே தொடர் முடிவுக்கு வந்தது. 

    • மத்திய அரசின் நிதியில் இருந்து ஒதுக்கீட்டை இவ்வளவு குறைக்கும்போது, ​​மாநிலங்களால் அதைச் சமாளிக்க முடியாது.
    • இதன் பொருள், அந்தத் திட்டம் செயலிழந்துவிடும் என்பதே.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றம் செய்து புதிய விதிகளை அறிமுகம் செய்யும் மசோதா நேற்று பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேதப்பட்டது. இது ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின் இது அமலுக்கு வரும்.

    மசோதாவின்படி இந்தத் திட்டத்திற்கு விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுருக்கமாக VB G RAM G என அழைக்கப்படுகிறது.

    திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கும், புதிய திட்டத்தில் ஏழைகளுக்கு பாதகமாக உள்ள அம்சங்களுக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று மசோதா தாக்கலின்போது எதிர்கட்சி எம்.பிக்கள் மசோதா நகலை கிழித்து எறிந்தனர். மேலும் நேற்று இரவு முழுவதும் பல எம்.பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் தர்ணா நடத்தினர்.

    இந்நிலையில் குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றும் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய எதிர்காட்சி எம்.பிக்கள் பங்கேற்றுள்ளனர். 

    இதன்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, "இந்த மசோதா மிகவும் ஏழ்மையான மக்களுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கப் போகிறது. ஏனென்றால், அசல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், அது வடிவமைக்கப்பட்ட விதத்தின்படி அதில் 90% நிதியை மத்திய அரசு வழங்கியது.

    கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், மிகவும் ஏழைகளாக இருந்து வேலைவாய்ப்பு பெறுவதில் சிரமப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய ஆதரவாகவும் இருந்தது.

    கடந்த 20 ஆண்டுகளாக, இது ஏழை மக்களுக்கு, குறிப்பாக எதுவுமற்றவர்களுக்கு உதவிய ஒரு நல்ல திட்டமாகச் செயல்பட்டு வருகிறது. இப்போது, இந்த மசோதாவின் புதிய வடிவத்தில், மத்திய அரசின் நிதியில் இருந்து ஒதுக்கீட்டை இவ்வளவு குறைக்கும்போது, மாநிலங்களால் அதைச் சமாளிக்க முடியாது. இதன் பொருள், அந்தத் திட்டம் செயலிழந்துவிடும், அது மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதே" என்று தெரிவித்தார்.

    • பொய்யான உறுதிமொழி அளிக்கப்பட்டு ரஷிய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படுகின்றனர்.
    • இந்த ஆண்டு செப்டம்பர் முதல் உக்ரைன் போர் மண்டலத்தில் குறைந்தது நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 59 பேர் காணாமல் போயுள்ளனர்.

    உக்ரைன் உடனான போரில் ரஷிய ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட்டு பணியாற்றிய 2 இந்தியர்கள் அண்மையில் சண்டையில் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் கடந்த புதன்கிழமை இந்தியா வந்தடைந்தது.

    இறந்தவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த அஜய் கோதர் (22) மற்றும் உத்தரகண்டைச் சேர்ந்த ராகேஷ் குமார் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    ஒரு வருடம் முன்பு, அஜய் மற்றும் ராகேஷ் இருவரும் மாணவர் விசாவில் ரஷ்யாவுக்குச் சென்றிருந்தனர். அங்கு பொய்யான வேலைவாய்ப்பு உறுதிமொழி அளிக்கப்பட்டு இருவரும் ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு, உக்ரைனுக்கு எதிராகப் போராட போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.

    இந்த ஆண்டு செப்டம்பர் முதல் உக்ரைன் போர் மண்டலத்தில் குறைந்தது நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 59 பேர் காணாமல் போயுள்ளனர்.

    இதற்கிடையே நேற்று மாநிலங்களவையில் கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பதில் அளிக்கையில், ரஷிய ஆயுதப் படைகளில் பணியாற்றிய 26 இந்தியர்கள் இறந்துள்ளதாகவும், ஏழு பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்திய குடிமக்கள் இராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட மாட்டார்கள் என்று ரஷியா கடந்த ஆண்டு உறுதியளித்த போதிலும், ரஷிய தரைப்படைகளில் இந்தியர்கள் தொடர்ந்து சேர்க்கப்படுவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த மாத தொடக்கத்தில் ரஷிய அதிபர் புதின் இந்தியா வந்து பிரதமர் மோடியுடன் டெல்லியில் இந்தியா - ரஷியா உச்சிமாநாட்டில் கலந்துகொண்டபோதும் தீர்வு எட்டப்படாமல் இந்தியர்களின் உயிரிழப்புகள் தொடர்கின்றன.

    • இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களைத் தொடங்க அனுமதிக்கும் அணுசக்தி மசோதா.
    • பாதுகாப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளை இந்த மசோதா கையாளவில்லை

    இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களைத் தொடங்க அனுமதிக்கும் 'SHANTHI' மசோதா புதன்கிழமை மக்களவையில் நிறைவேறிய நிலையில் நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு இந்த மசோதா சட்டமாகும்.

    நேற்று மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.பிக்கள், அணுசக்தி துறையை தனியார்மயமயக்குவதற்கு கவலை தெரிவித்தனர்.

    இருப்பினும், தனது உரையில், அணுசக்தி அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த மசோதா நாட்டின் அணுசக்தித் துறையில் பெரும் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்று கூறினார்.

    காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், இந்தியாவில் அணுசக்தியின் வளமான வரலாறு 2014 க்கு பல தசாப்தங்களுக்கு முன்பே தொடங்கியது என்று சுட்டிக்காட்டினார்.

    அறிவியல் உட்பட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பாஜக ஆட்சிக்கு வந்த 2014 இல் தொடங்கியது என்று இப்போது நமக்கு பொய் சொல்லப்படுகிறது என தெரிவித்தார்.

    திமுக எம்பி வில்சன், பாதுகாப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளை இந்த மசோதா கையாளவில்லை என்றும், காலநிலை மாற்றத்திற்கு மத்தியில் அணுசக்தி நிறுவல்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.

    பிஆர்எஸ் எம்பி சுரேஷ் ரெட்டி, பாதுகாப்பு குறித்த கவலைகளைப் எழுப்பி, மசோதாவை தேர்வுக் குழுவிற்கு பரிந்துரைக்க வேண்டும் அல்லது சுற்றுச்சூழல் குழுவின் நிலையான மேற்பார்வையில் வைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

    அணுசக்தி விநியோகஸ்தர்களுக்கு பயனளிக்கும் வகையில் இதுபோன்ற மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதாக சிபிஐ(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் குற்றம் சாட்டினார்.  

    ×