என் மலர்
நீங்கள் தேடியது "Liquor Policy Case"
- சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
- மத்திய டெல்லி லோதி சாலையில் உள்ள சிபிஐ அலுவலகம் அருகில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
புதுடெல்லி:
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. அதன்படி கெஜ்ரிவால் நாளை விசாரணைக்கு ஆஜராகிறார். முதலமைச்சரை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருப்பது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்கு போடுவதற்காக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வரிந்துகட்டி நிற்பதாக ஆம் ஆத்மி கட்சி அரசு குற்றம்சாட்டி உள்ளது.
ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவும் அமைச்சருமான சவுரப் பரத்வாஜ், செய்தியாளர்களிடம் பேசுகையில், 'டெல்லியில் தற்போது நிலைமை சரியில்லை. சட்டசபையில் இதுபற்றி விவாதிக்க வேண்டும். என்ன நடக்கிறது என்பது குறித்து தலைவர்கள் பேசுவார்கள்' என்றார்.
பொய்யான தகவல்களையும் பொய் சாட்சிகளையும் நீதிமன்றங்களில் தெரிவிக்கும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
கெஜ்ரிவால் நாளை காலை 11 மணியளவில், மத்திய டெல்லி லோதி சாலையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வர உள்ளார். அந்த சமயத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
- கெஜ்ரிவால் நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
- பஞ்சாப் மாநிலத்தில் அதே மதுபான கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு வருவாய் அதிகரித்துள்ளதாக கெஜ்ரிவால் தகவல்
புதுடெல்லி:
டெல்லியில் கடந்த ஆண்டு மாநில அரசு அமல்படுத்திய மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த மதுபான கொள்கை, மது விற்பனை மீதான அரசின் கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்ததுடன், தனியார் சில்லறை விற்பனையாளர்களுக்கு தேவையற்ற நன்மைகளை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இந்த விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது பாஜகவைம் பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கினார். அவர் கூறியதாவது:-
நீதிமன்றங்களில் பொய்யான தகவல் தாக்கல் செய்யப்படுகிறது, கைது செய்யப்பட்டவர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள், குற்றச்சாட்டுகளுக்கு ஒரு துளி கூட ஆதாரம் இல்லை. சிபிஐ நடத்திய சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் கோவா தேர்தல் பிரச்சாரத்தில் பணம் புழங்கியதாக கூறுகின்றனர். இதற்கு ஆதாரம் எங்கே இருக்கிறது? நாங்கள் செலவு செய்த பணம் அனைத்தும் காசோலைகள் மூலம் செய்யப்பட்டன. எங்களுக்கு கிடைத்ததாக நீங்கள் கூறும் 100 கோடி ரூபாயில் ஒரு ரூபாயையாவது காட்டுங்கள் பார்க்கலாம்.
கடந்த செப்டம்பர் 17ம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமர் மோடிக்கு 1,000 கோடி ரூபாய் கொடுத்தேன் என ஆதாரம் இல்லாமல் நான் கூறினால், அவரை கைது செய்வீர்களா? பொய்யான தகவல் கூறுதல் மற்றும் பொய்யான ஆதாரம் கொடுத்ததற்காக விசாரணை அமைப்புகள் மீது வழக்கு தொடருவேன்.
இவர்கள் ஊழல் நடந்ததாக கூறும் அதே மதுபானக் கொள்கை, பஞ்சாப் மாநிலத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டு, 50 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது. இது மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் வெளிப்படையான கொள்கை. நாளைய விசாரணைக்கு ஆஜராவேன்.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
- இனி சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மணீஷ் சிசோடியா தரப்பில் வாதிடப்பட்டது.
- காவலில் வைத்திருந்த ஒவ்வொரு நாளும் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்தியதாக வாதம்
புதுடெல்லி:
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணைக் காவல் முடிந்ததையடுத்து இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, மணீஷ் சிசோடியாவிடம் இன்னும் தகவல்களை பெற வேண்டியிருப்பதால் மேலும் ஒரு வாரம் விசாரணைக் காவலை நீட்டிக்கும்படி அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
காவலில் வைத்திருந்த ஒவ்வொரு நாளும் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்தியதாகவும், எனவே இனி சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மணீஷ் சிசோடியா தரப்பில் வாதிடப்பட்டது.
'அமலாக்கத்துறை இதுவரை என்ன செய்தது? 7 மாதங்களாக வழக்கை விசாரித்து, மேலும் கஸ்டடி கேட்டால், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் என்ன கிடைத்தது என்பதை அவர்கள் காட்ட வேண்டும். சிபிஐ நடத்த வேண்டிய விசாரணையை அமலாக்கத்துறை மேற்கொண்டு வருவதால் காவலை நீட்டிப்பதை நான் எதிர்க்கிறேன். அமலாக்கத்துறையானது குற்றச்செயல்கள் தொடர்பான வருமானத்தை மட்டுமே விசாரிக்க முடியும், குற்றத்தை அல்ல' என்று சிசோடியாவின் வழக்கறிஞர் வாதாடினார்.
அதற்கு பதிலளித்த அமலாக்க இயக்குனரகம், 'சிபிஐ விசாரித்தபோது மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக சிசோடியா புகார் அளித்தார். எனவே, அவரிடம் அதிக நேரம் விசாரிக்கவில்லை' என்று தெரிவித்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், சிசோடியாவின் கஸ்டடியை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. மேலும், சிசோடியா தனது வீட்டு செலவினங்களுக்காக காசோலையில் கையெழுத்திடவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
- மதுபான கொள்கை ஊழல் வழக்கில் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது.
- மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-22-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் மிகப்பெரிய அளவில் ஆம் ஆத்மி தலைவர்கள் முறைகேடுகள் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த குற்றப் பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள், சந்திரசேகரராவ் மகள் கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 23-ம் தேதி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் சி.பி.ஐ. தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் காலை முதலே சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு மாலையில் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என சி.பி.ஐ. இன்று கோரிய நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் (மார்ச் 4 வரை) சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.