என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கெஜ்ரிவால்"

    • 2027 கோவா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும்.
    • காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி::

    மாயேம் பகுதியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை அக்கட்சியின் ஒருங்கிணைப்பை அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரசுடன் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி கிடையாது.

    கடந்த சில ஆண்டாக எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் மொத்தமாக பா.ஜ.க.வுக்கு விநியோகித்து வருகிறது.

    எதிர்காலத்தில் எந்தவொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் பா.ஜ.க.வுக்கு மாற மாட்டார்கள் என கோவா வாக்காளர்களுக்கு அக்கட்சியால் உறுதியளிக்க முடியுமா?

    2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் 13 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவினர். 2022ம் ஆண்டில் மட்டும் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

    ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால், அது பா.ஜ.க.வுக்கு எம்.எல்.ஏ.க்களை வழங்குவதற்கு சமமாகி விடும்.

    கோவாவில் பா.ஜ.க. அரசு அமைவதற்கு உதவும் வகையிலான எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம்.

    கோவாவில் அமைந்துள்ள காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வின் சீரழிந்த அரசியல் கட்டமைப்பை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டு, கோவா மக்களுக்கு ஒரு புதிய விருப்பத்தை வழங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்தார்.

    • இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வந்தது.
    • வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்றார்,

    புதுடெல்லி:

    இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஏற்கனவே விதித்த 25 சதவீதம் வரியோடு இந்த கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்துள்ள நிலையில், 50 சதவீதம் வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்கா வரி விதிப்பால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மாற்று வழியை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    டெல்லி முன்னாள் முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இதுதொடர்பாக கூறியதாவது:

    வரி விதிப்பு விவகாரத்தில் மத்திய அரசிடம் இருந்து உடனடி பதில் எதுவும் இல்லை. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி பொருட்களுக்கான 11 சதவீதம் வரியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இது உள்ளூர் வணிகத்தை கடுமையாக பாதிக்கும். பிற நாடுகள் அமெரிக்காவிற்கு அடிபணியவில்லை; அவர்கள் கூடுதல் வரியை விதித்துள்ளனர். எனவே நாமும் கூடுதல் வரியை விதிக்க வேண்டும்.

    அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தால், இந்தியா 100 சதவீத வரியை அமெரிக்காவிற்கு விதிக்க வேண்டும். மொத்த நாடும் இந்த முடிவுக்கு ஆதரவாக இருக்கும். எந்தவொரு நாடும் இந்தியாவை புண்படுத்த முடியாது. 140 கோடி மக்களைக் கொண்ட நாடு இந்தியா என தெரிவித்தார்.

    • 2024 மக்களவை தேர்தலுக்காக இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது.
    • தற்போது தேசிய அளவில் இக்கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக-வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியது. இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்றாலும், பாஜக-வை வீழ்த்தியே தீர வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் சேர்ந்தது.

    இந்தியா கூட்டணி 2024 மக்களவை தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டது என அதிலுள்ள பெரும்பாலான கட்சிகள் தெரிவித்து வந்தன. இருந்தபோதிலும் பாராளுமன்ற கூட்டம் போன்றவற்றில் ஒருமித்த எதிர்ப்பை தெரிவிக்க காங்கிரஸ் இந்தியா கூட்டணி என்ற பெயரில்தான் ஆலோசனை கூட்டம் நடத்தி வந்தது.

    இந்த நிலையில் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    • சமீபத்தில் 5 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடந்தது.
    • இந்த இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக, காங்கிரஸ், டிஎம்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன.

    இந்நிலையில், குஜராத் மற்றும் பஞ்சாப் சட்டசபை இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:

    குஜராத் மற்றும் பஞ்சாப் இடைத்தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபின் லூதியானா மேற்கு சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளர் சஞ்சீவ் அரோரா வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி மீதான தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

    குஜராத்தின் விசாவதார் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரும், கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான கோபால் இத்தாலியா வெற்றி பெற்றுள்ளார். குஜராத் மக்கள் இப்போது பா.ஜ.க. மீது வெறுப்படைந்து, ஆம் ஆத்மி கட்சிமீது நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    பஞ்சாபிலும், குஜராத்திலும் ஆம் ஆத்மியை தோற்கடிக்க காங்கிரசும், பா.ஜ.க.வும் முயன்றன. ஆனால், மக்கள் அவர்களை நிராகரித்துள்ளனர்.

    2027-ம் ஆண்டில் பஞ்சாப், குஜராத் ஆகிய இரு மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. சிலர் இது 2027-க்கான அரையிறுதி என கூறுகிறார்கள். 2027-ல் ஆம் ஆத்மி கட்சியின் புயல் வீசும். குஜராத்தைப் பொறுத்தவரை 2027 தேர்தல் போட்டி என்பது பா.ஜ.க-ஆம் ஆத்மி கட்சி இடையேதான் இருக்கும் என தெரிவித்தார்.

    • இந்தோனேசியாவில் செய்ய முடியும்போது நம்மால் முடியாதா? என்று கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.
    • கரன்சி நோட்டுகளில் நேதாஜி படம் இடம்பெற செய்ய வேண்டும் என இந்து மகாசபை வலியுறுத்தி இருந்தது.

    புதுடெல்லி:

    டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் கரன்சி (ரூபாய்) நோட்டுகளில் இந்து கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் ஆகியோரது உருவங்களை இடம்பெற செய்ய வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

    தொடர்ந்து அவர் கூறும்போது, 'நாம் முயற்சிகளை மேற்கொண்டாலும், கடவுள்களின் ஆசி இல்லையென்றால் சில சமயங்களில் நம்முடைய அந்த முயற்சிக்கு பலன் இருக்காது. அதனால், புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தி உருவமும், மற்றொரு புறம் பெண் கடவுள் லட்சுமி மற்றும் கடவுள் விநாயகர் படங்கள் இடம்பெற வேண்டும். இரு தெய்வங்களின் உருவங்கள் ரூபாய் நோட்டுகளில் இருப்பது, நாட்டை வளம்பெற செய்ய உதவும். இதனால், நாட்டின் பொருளாதார சூழ்நிலை மேம்படும். ஒட்டுமொத்த நாடும் ஆசிகளை பெறும். இதுபற்றி நாளை அல்லது நாளை மறுநாள் நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன்' என்றார்.

    இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் கரன்சியில் விநாயகர் படம் இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவில் செய்ய முடியும்போது நம்மால் முடியாதா? என்றும் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன், இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக நேதாஜி படம் இடம் பெற வேண்டும் என அகில பாரத இந்து மகாசபை வலியுறுத்தி இருந்தது.

    இதுபற்றி அகில பாரத இந்து மகாசபையின் மாநில செயல் தலைவர் சந்திரசூர் கோஸ்வாமி, கொல்கத்தா நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, இந்திய விடுதலை போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பங்கு எந்த வகையிலும் மகாத்மா காந்திக்கு குறைந்ததில்லை. அதனால், இந்தியாவின் தலைசிறந்த சுதந்திர பேராட்ட வீரர் நேதாஜிக்கு கவுரவம் அளிக்கும் சிறந்த வழி, அவரது புகைப்படம் கரன்சி நோட்டுகளில் இடம்பெற செய்ய வேண்டும். காந்திஜியின் புகைப்படத்திற்கு பதிலாக நேதாஜியின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என கூறினார்.

    இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகர் படங்கள் இடம் பெற வேண்டும் என கெஜ்ரிவால் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு 12.92 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன
    • ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சி ஆவதற்கு குஜராத் மக்கள்தான் காரணம் என கெஜ்ரிவால் தெரிவித்தார்

    புதுடெல்லி:

    குஜராத் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி, பாஜக 149 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 7 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஒரு இடத்தில் முன்னிலையில் இருந்தது. ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அந்த கட்சி 5 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

    குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஆம் ஆத்மி கட்சி 12.92 சதவீத வாக்குகளை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. டெல்லி, பஞ்சாப், கோவாவை தொடர்ந்து குஜராத்தில் தடம் பதித்துள்ளது ஆம் ஆத்மி. இதன்மூலம் தேர்தல் ஆணைய விதிகளின்படி ஆம் ஆத்மி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற தகுதிப்பெற்றது.

    இதுபற்றி டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜரிவால் பேசியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மி சிறிய கட்சியாக இருந்தது. தற்போது தேசியக் கட்சியாகி உள்ளது. 2 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இதற்கு கட்சியின் தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். குஜராத் மக்களுக்கும் நன்றி. ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சி ஆவதற்கு குஜராத் மக்கள்தான் காரணம். தேர்தல் பிரசாரத்தின்போது வரவேற்பு அளித்த மக்களுக்கு நன்றி. குஜராத் பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது. 13 சதவீத வாக்குகளைப் பெற்றதன் மூலம் நாங்கள் அந்தக் கோட்டைக்குள் நுழைய முடிந்திருக்கிறது. இதுவரை 40 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளோம். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மேலும் அதிக வாக்குகள் கிடைக்கும் என நம்புகிறோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள குஜராத் மக்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் கர்நாடகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பேரவைத் தேர்தல் நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
    • மாநிலத்துக்கு மார்ச் 4ம் தேதி பயணம் மேற்கொள்ளும் கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    நடப்பாண்டில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் கர்நாடகம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.

    பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் கர்நாடகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பேரவைத் தேர்தல் நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி, அந்த மாநிலத்துக்கு மார்ச் 4ம் தேதி பயணம் மேற்கொள்ளும் கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் பிரசாரத்தை தொடங்குவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    காங்கிரஸ் ஆட்சியில் உள்ள சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு முறையே மார்ச் 5, 13ம் தேதிகளில் கெஜ்ரிவால் செல்ல விருக்கிறார். பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசத்துக்கு அவர் 14ம் தேதி பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த 3 மாநிலங்களிலும் நடப்பாண்டின் பிற்பகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2018ல் நடைபெற்ற இந்த மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களில் ஆம் ஆத்மி போட்டியிட்ட போதிலும், அக்கட்சிக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை.

    கடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில், மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 28ல் ஆம் ஆத்மி களமிறங்கி இருந்தது. சத்தீஸ்கரில் 90ல் 85 இடங்களிலும், ராஜஸ்தானில் 200-ல் 142 தொகுதிகளிலும் மத்திய பிரதேசத்தில் 230-ல் 208 இடங்களிலும் அக்கட்சி போட்டியிட்டிருந்தது.

    அண்மைக் காலங்களில் கிடைக்கப் பெற்ற தேர்தல் வெற்றிகளால் உற்சாகத்தில் உள்ள ஆம் ஆத்மி, மேற்கண்ட 4 மாநில தேர்தல்களிலும் மீண்டும் களமிறங்க முடிவு செய்துள்ளது.

    டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி, பஞ்சாப்பில் கடந்த ஆண்டு மார்ச்சில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற கோவா பேரவைத் தேர்தலில், இரு தொகுதிகள் அக்கட்சிக்கு கிடைத்தன.

    குஜராத்தில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற சட்டசபைத்தேர்தலில், 5 தொகுதிகளைக் கைப்பற்றி, 13 சதவீத வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றது. இந்த வெற்றிகள், ஆம் ஆத்மிக்கு தேசியக் கட்சி அங்கீகாரம் கிடைக்க வழி ஏற்படுத்தின.

    • மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து 230 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது.

    போபால்:

    டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    மத்திய பிரதேசத்தில் 20 ஆண்டுகளாக அவர்கள் (பா.ஜ.க.வினர்) ஆட்சி செய்தனர். அவர்களுக்கு மாற்றாக ஆம் ஆத்மி வந்துள்ளது. அடுத்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. பிரச்சனைகளை எதிர்கொள்ளும். ஆம் ஆத்மியைப் பார்த்து மோடிஜி (பிரதமர்) அச்சமடைந்து உள்ளார்.

    மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து 230 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும்.

    டெல்லியில் கல்வி பிரிவில் ஆம் ஆத்மி கட்சி புரட்சி செய்துள்ளது. எந்தவொரு கட்சியும், உங்களது குழந்தைகளுக்கு கல்வி வாக்குறுதி அளித்து வாக்கு கேட்கவில்லை. அவர்களுக்கு அதில் விருப்பமும் இல்லை.

    டெல்லி, பஞ்சாப் போன்று மத்திய பிரதேசத்திலும் இலவச மின்சாரம் வழங்கப்படும். மொஹல்லா கிளினிக்குகளை தொடங்கி இலவச சிகிச்சை அளிக்கப்படும். எங்களுக்கு வாக்களித்து ஆட்சி அதிகாரத்திற்கு வர ஒரு வாய்ப்பு வழங்குங்கள். நாங்கள் கூறியவற்றை செய்யவில்லை எனில், அடுத்து வாக்கு கேட்டு உங்களிடம் நான் வரமாட்டேன்.

    ஒருவர் அரசியல் பேரம் பேசி எம்.எல்.ஏ.வை வாங்குகிறார்கள் என கூறுவார்கள். மற்றொருவர் எம்.எல்.ஏ.வை வாங்க தயாராவார்கள். மொத்த தேர்தல் நடைமுறையையே அவர்கள் மாற்றி வைத்துள்ளனர். அரசியலமைப்பையே சந்தைகடையாக ஆக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில காரணங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் பட்ஜெட்டை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டது.
    • நாட்டின் 75 ஆண்டு கால வரலாற்றில் மாநில பட்ஜெட் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    டெல்லியில் கெஜ்ரிவால் அரசு இன்று பட்ஜெட் தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மணீஷ் சிசோடியாவுக்கு பதிலாக கைலாஷ் கெலாட் தாக்கல் செய்வார் என்று கூறப்பட்டது. அதன்படி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் பட்ஜெட்டை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டது. இதனால் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவில்லை.

    இதை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    டெல்லி பட்ஜெட்டை நிறுத்த வேண்டாம் நாட்டின் 75 ஆண்டு கால வரலாற்றில் மாநில பட்ஜெட் நிறுத்தப்படுவது இதுவே முதல்-முறையாகும். டெல்லி மக்கள் வருத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பட்ஜெட்டுக்கு உள்துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

    • ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
    • பாஜக அல்லாத தலைவர்கள் மற்றும் கட்சிகளை ஒழிக்க சதி நடப்பதாக கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது. 30 நாட்கள் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டதால் காங்கிரஸ் தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

    ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். அப்போது திமுக முழு ஆதரவு அளிக்கும் என பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்துகிறது என திமுக எம்.பி. டிஆர் பாலு தெரிவித்தார்.

    பாஜக அல்லாத தலைவர்கள் மற்றும் கட்சிகளை ஒழிக்க சதி நடப்பதாகவும், ராகுல் காந்தியை இப்படி அவதூறு வழக்கில் சிக்க வைப்பது சரியல்ல என்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கேள்வி கேட்பது பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் வேலை என்று கூறிய கெஜ்ரிவால், நீதிமன்றத்தை மதிப்பதாகவும், ஆனால் இந்த தீர்ப்பை ஏற்கவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

    எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்குவதற்காக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ சோதனை நடத்தப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் அரசியல் சாசனம், ஜனநாயகம், அரசியல் மற்றும் நாட்டிற்கு மிகவும் கவலையளிக்கும் விஷயம் என ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறி உள்ளார்.

    • பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
    • ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை அளிக்க வேண்டும் என்றார்.

    புதுடெல்லி:

    கொரோனா பரவலை தொடர்ந்து ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 50 சதவீத கட்டண சலுகை நிறுத்தப்பட்டது. சலுகையை மீண்டும் அளிக்குமாறு பாராளுமன்ற நிலைக்குழு சிபாரிசு செய்தபோதிலும், ரெயில்வே இன்னும் சம்மதிக்கவில்லை.

    இந்நிலையில், பிரதமர் மோடிக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

    மத்திய அரசு ரூ.45 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடுகிறது. மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை அளித்தால் ரூ.1,600 கோடி மட்டுமே செலவாகும். இது, ஒரு பெரிய கடலில் சிறிய துளி போன்றது.

    இத்தொகையை செலவழிப்பதால், அரசு ஒன்றும் ஏழை ஆகிவிடாது. கட்டண சலுகையை நிறுத்தியதால், மூத்த குடிமக்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்ற பிம்பம்தான் உருவாகும். மூத்த குடிமக்களின் ஆசி இல்லாமல், எந்த நாடும், தனிமனிதரும் முன்னேற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

    • டெல்லியில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து மக்கள் போராடிய நேரத்தில் கெஜ்ரிவாலின் பங்களாவை அழகுபடுத்துவதற்கு ரூ.45 கோடி செலவிடப்பட்டது.
    • ரூ.45 கோடி செலவழிக்கப்பட்டது குறித்து டெல்லி மக்களுக்கு கெஜ்ரிவால் பதில் அளிக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அங்கு ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு உள்ளார்.

    அதோடு இந்த முறைகேடு தொடர்பாக முதல்-மந்திரி கெஜ்ரிவாலிடமும் சி.பி.ஐ. சமீபத்தில் விசாரணை நடத்தி இருந்தது. டெல்லி மாநகராட்சி தேர்தல் தொடர்பாகவும் இரு கட்சிகள் இடையே கடுமையான மோதல் நிலவியது.

    இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.

    டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லம் இருக்கிறது. இந்த பங்களாவை புதுப்பிப்பதற்காக ரூ.45 கோடி செலவழிக்கப்பட்டு உள்ளது.

    கொரோனா தொற்று காலத்தில் இவ்வளவு பெரிய தொகை செலவழிக்கப்பட்டதாக பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது. 2020-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி முதல் 2022 ஜூன் வரை 6 கட்டங்களாக இந்த தொகை செலவிடப்பட்டதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    உள் கட்டமைப்புக்கு ரூ.11.30 கோடி, கல் மற்றும் பளிங்கு தரைக்கு ரூ.6.02 கோடி, உள் கட்டமைப்பு தொடர்பான ஆலோசனைக்கு ரூ.1 கோடி, மின்சாதனங்கள் மற்றும் இதர உபகரணங்களுக்கு ரூ.2.58 கோடி, அவசரகால தீயணைக்கும் அமைப்புக்கு ரூ.2.85 கோடி, அலமாரி மற்றும் பிற கட்டமைப்புக்கு ரூ.1.41 கோடி, சமையலறை உபகரணங்களுக்கு ரூ.1.1 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அனுமதிக்கப்பட்ட ரூ.9.99 கோடியில் தனித்தொகையான ரூ.8.11 கோடி முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்ள முகாம் அலுலகத்துக்கு செலவழிக்கப்பட்டுள்ளது.

    மறு சீரமைப்புக்கு அனுமதிக்கப்பட்ட ரூ.43.70 கோடிக்கு பதிலாக மொத்தம் ரூ.44.78 கோடி செலவிடப்பட்டதாக ஆவணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பா.ஜனதாவின் இந்த குற்றச்சாட்டுக்கு டெல்லி அரசிடம் இருந்தோ அல்லது ஆளும் ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்தோ எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பொதுப் பணித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் இல்லம் புணரமைக்கப்படவில்லை. பழைய கட்டிடம் இடத்தில் ஒரு புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது முகாம் அலுவலகமும் இந்த இடத்தில் உள்ளது. சுமார் ரூ.44 கோடியில் கட்டுமானம் நடைபெற்றுள்ளது. மேலும் பழைய கட்டிடங்கள் புதிய கட்டிடம் மூலம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து டெல்லி பா.ஜனதா தலைவர் வீரேந்திர சச்தேவா, செய்தி தொடர்பாளர் சமீத்பத்ரா ஆகியோர் கூறியதாவது:-

    டெல்லியில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து மக்கள் போராடிய நேரத்தில் கெஜ்ரிவாலின் பங்களாவை அழகுபடுத்துவதற்கு ரூ.45 கோடி செலவிடப்பட்டது. அவரை மகாராஜ் என்று சொல்லும் அளவுக்கு ஆடம்பரமாக பங்களாவை அமைத்துள்ளார். 8 புதிய திரைச்சீலையில் ஒன்றின் அதிகபட்ச விலை ரூ.7.94 லட்சமாகும்.

    ரூ.45 கோடி செலவழிக்கப்பட்டது குறித்து டெல்லி மக்களுக்கு கெஜ்ரிவால் பதில் அளிக்க வேண்டும். அவர் ஒரு வீட்டில் வசிக்கவில்லை. ஆடம்பர வீடு (ஷூஷ் மகால்) நிறுவப்பட்டுள்ளது. தார்மீக அடிப்படையில் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த நிலையில் கெஜ்ரிவால் வீட்டு முன்பு பா.ஜனதாவினர் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டை சீரமைக்க ரூ.45 கோடி செலவழிக்கப்பட்டதாக கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது காலணிகளை தூக்கி அவரது வீட்டு முன்பு எறிந்தனர். கெஜ்ரிவாலை திருடன் என்று கூறி கோஷமிட்டனர். அவர்கள் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

    பெருமளவில் பா.ஜனதா தொண்டர்கள் அங்கு குவிந்தனர். போலீசாரும், பாதுகாப்பு படை வீரர்களும் தடுப்புகளை அமைத்து இருந்தனர். தடுப்புகளை உடைத்துக்கொண்டு பா.ஜனதா தொண்டர்கள் முன்னேறினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவாலை காங்கிரஸ் விமர்சித்து உள்ளது.

    அஜய் மக்கான் இதுகுறித்து கூறும்போது, 'முதல்-மந்திரியின் இல்லத்தை புதுப்பிக்க ரூ.45 கோடி செலவழிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொது ஊழியராக நீடிக்க கெஜ்ரிவாலுக்கு தகுதியில்லை. கொரோனா தொற்று காலத்தில் பொதுமக்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை தேடிக்கொண்டு இருந்தபோது கெஜ்ரிவால் பங்களாவில் செல்வத்தை செலவிட்டுள்ளார்' என்றார்.

    ×