search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gujarat Election Result"

    • 1985-ல் 149 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திய சாதனையை பாஜக முறியடித்தது.
    • கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.

    அகமதாபாத்:

    182 தொகுதிகள் கொண்ட குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ஆளும் பாஜக வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. வெற்றி பெற 92 இடங்கள் தேவை என்ற நிலையில், 150க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஆளும் பாஜக 156 தொகுதிகளை கைப்பற்றி, 7வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு முன்னர் 2002-ல் 127 இடங்களை கைப்பற்றி பாஜக சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை இந்த தேர்தலில் முறியடித்தது மட்டுமல்லாமல், 1985-ல் மறைந்த மாதவ்சிங் சோலங்கியின் தலைமையில் 149 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திய சாதனையையும் முறியடித்தது.

    காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் முறையாக குஜராத்தில் கால் பதித்துள்ள ஆம் ஆத்மி கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலில் 49 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக, இந்த முறை 53 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கான வாக்குகள் 42 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக குறைந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 13 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

    மொத்த தொகுதிகள்- 182

    பாஜக- 156

    காங்கிரஸ்- 17

    ஆம் ஆத்மி கட்சி - 5

    சுயேட்சைகள் - 3

    மற்றவை - 1

    • குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு 12.92 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன
    • ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சி ஆவதற்கு குஜராத் மக்கள்தான் காரணம் என கெஜ்ரிவால் தெரிவித்தார்

    புதுடெல்லி:

    குஜராத் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி, பாஜக 149 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 7 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஒரு இடத்தில் முன்னிலையில் இருந்தது. ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அந்த கட்சி 5 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

    குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஆம் ஆத்மி கட்சி 12.92 சதவீத வாக்குகளை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. டெல்லி, பஞ்சாப், கோவாவை தொடர்ந்து குஜராத்தில் தடம் பதித்துள்ளது ஆம் ஆத்மி. இதன்மூலம் தேர்தல் ஆணைய விதிகளின்படி ஆம் ஆத்மி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற தகுதிப்பெற்றது.

    இதுபற்றி டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜரிவால் பேசியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மி சிறிய கட்சியாக இருந்தது. தற்போது தேசியக் கட்சியாகி உள்ளது. 2 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இதற்கு கட்சியின் தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். குஜராத் மக்களுக்கும் நன்றி. ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சி ஆவதற்கு குஜராத் மக்கள்தான் காரணம். தேர்தல் பிரசாரத்தின்போது வரவேற்பு அளித்த மக்களுக்கு நன்றி. குஜராத் பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது. 13 சதவீத வாக்குகளைப் பெற்றதன் மூலம் நாங்கள் அந்தக் கோட்டைக்குள் நுழைய முடிந்திருக்கிறது. இதுவரை 40 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளோம். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மேலும் அதிக வாக்குகள் கிடைக்கும் என நம்புகிறோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள குஜராத் மக்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • மோர்பி பால விபத்தின்போது ஆற்றில் குதித்து மக்களைக் காப்பாற்றியபோது அம்ருதியா அனைவராலும் பாராட்டப்பட்டார்.
    • எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் படேல் ஜெயந்திலால் 52 ஆயிரம் வாக்குகளை பெற்றார்.

    அகமதாபாத்:

    குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில், தொங்கு பாலம் விபத்துக்குள்ளான மோர்பி தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் யார் என்பது குறித்து பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக படேல் ஜெயந்திலால், பாஜக வேட்பாளராக கான்டிலால் அம்ருதியா உள்ளிடோர் போட்டியிட்டனர். இதில், 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அம்ருதியா வெற்றி பெற்றார். அம்ருதியா ஒரு லட்சத்து 14 ஆயிரம் வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 52 ஆயிரம் வாக்குகளும் பெற்றனர்.

    1995, 1998, 2002, 2007, 2012 ஆகிய 5 முறை மோர்பி தொகுதியில் அம்ருதியா வெற்றி பெற்றவர். எனினும் கடந்த 2017 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். அரசியலில் இருந்து மறக்கப்பட்டிருந்த அம்ருதியா, மோர்பி பால விபத்தின்போது ஆற்றில் குதித்து மக்களைக் காப்பாற்றியபோது அனைவராலும் பாராட்டப்பட்டார். இந்த வீடியோ மோர்பி பால விபத்து காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டது. இதுவே இவரது வெற்றிக்கான காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

    ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் கட்ந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி அறுந்துவிழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 135 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். 7 மாத சீரமைப்புப் பணிகள் முடிந்து அக்டோபர் 26ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்காக பாலம் திறக்கப்பட்டிருந்தது.

    ×