என் மலர்
இந்தியா
- சூடான் மற்றும் நைஜீரியா நாட்டைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சென்னை மாநகர போலீசார் போதை பொருட்களை தடுப்பதற்கு தொடர் நடவடிக்கை.
சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் நடவடிக்கையால் வானகரம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களோடு தொடர்பில் இருந்த சூடான் மற்றும் நைஜீரியா நாட்டைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, இதுவரை போதைப்பொருள் வழக்குகளில் 29 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சென்னை மாநகர போலீசார் போதை பொருட்களை தடுப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
- தற்போது உற்பத்தி செலவு, பணியாளர்கள் சம்பளம் என செலவு அதிகரித்து உள்ளது.
- பனியன் ஆடைகளை வாங்கும் வியாபாரிகள் சிலர் அதற்கான தொகையை சரிவர கொடுப்பதில்லை.
திருப்பூர்:
திருப்பூரில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) கலந்துரையாடல் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் சிறுகுறு தொழில்களில் ஜாப் ஒர்க்கிற்கான பணத்தை 45 நாட்களுக்குள் வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.
அதேபோல் ரீடெய்லர்களும் பணத்தை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் தற்போது உற்பத்தி செலவு, பணியாளர்கள் சம்பளம் என செலவு அதிகரித்து உள்ளது. மேலும் பனியன் ஆடைகளின் விலையை உயர்த்தி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை விலையை உயர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
பனியன் ஆடைகளை வாங்கும் வியாபாரிகள் சிலர் அதற்கான தொகையை சரிவர கொடுப்பதில்லை. அவர்களை பிளாக் லிஸ்ட்டில் (கருப்பு பட்டியல்) கொண்டு வருவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
- இந்தியா கூட்டணியை யாரும் சிதைக்கவும் முடியாது, உடைக்கவும் முடியாது.
- அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் 5 பேர் குழு அமைத்துள்ளது.
சென்னை:
பி.ஆர். அம்பேத்கர் 69-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவரிடம், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி த.வெ.க. தலைவர் விஜயை சந்தித்து உள்ளார். ஏற்கனவே காங்கிரஸ், த.வெ.க இடையே கூட்டணி வரலாம் என்று பேசப்படும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. கூட்டணி மாற்றம் தொடர் பாகவும் காங்கிரஸ் யோசிக்கிறதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி விஜயை சந்தித்து பற்றி எனக்கு தெரியாது. இந்தியா கூட்டணியை யாரும் சிதைக்கவும் முடியாது, உடைக்கவும் முடியாது. இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் 5 பேர் குழு அமைத்துள்ளது. இந்த குழு தான் திமுகவிடம் பேசியது. அடுத்தகட்டமாக திமுக குழு அமைக்கப்பட்ட பிறகு பேச்சுவார்த்தை தொடரும். இந்த குழு தான் அதிகாரபூர்வமான காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழு.
கூட்டணி தொடர்பாக புற வாசல் வழியாக காங்கிரஸ் ஒருபோதும் பேசாது. காங்கிரஸ் நேர் வழியில் தான் செல்லும். பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்ததாக, நீங்கள் தான் கூறுகிறீர்கள்.
எனக்கோ, தமிழக காங்கிரஸ் கட்சிக்கோ, எதுவும் தெரியாது. அவர் சந்தித்தது உண்மை என்று தெரியவந்தால் அல்லது அவரே தான் விஜயை சந்தித்ததாக சொன்னாலோ, மேலிடத்துக்கு தகவல் தெரிவிப்போம். அதன் பிறகு நடவடிக்கை எடுப்பது குறித்து மேலிடம் முடிவெடுக்கும்.
ஒரு வேளை அவர் வேறு விஷயமாக கூட விஜயை பார்க்க சென்று இருக்கலாம். அரசியலாக ஏன் பார்க்கிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது.
- சனாதன தர்மத்தை அழிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபடுகிறார்களா?
தமிழ்நாடு அயோத்தி போல மாறுவதில் தவறில்லை என பேசிய நயினார் நாகேந்திரனுக்கு திமுக எம்பி கன
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்," திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை. அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி ராமனின் ஆட்சியாக இருக்கும். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
சனாதன தர்மத்தை அழிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபடுகிறார்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?
கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா?
கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக பலி போடுகிறார்கள்.
- எங்கள் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். வலிமையாக மாறும்.
சென்னை:
அம்பேத்கர் நினைவு நாளையொட்டி துறைமுகம் அருகே உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம் விவகாரத்தை அயோத்தி போல் ஆக்கத் துடிப்பதாக கூறுகிறார்கள். அயோத்தி என்ன இந்தியாவில்தானே இருக்கிறது. இங்கிலாந்திலா இருக்கிறது. அயோத்தி மாதிரி இருந்தாலும் சரி என்னவாக இருந்தாலும் சரி, ராமர் போல் ஆட்சி வர வேண்டும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபத் தூணுக்கு பக்கத்தில் தர்கா இருப்பது ஊருக்கே தெரியும். அங்கு யாரும் செல்ல அனுமதி இல்லை. தீபம் ஏற்றுவதற்கு மட்டும்தான் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதற்கும் தர்கா தரப்பில் இருந்து யாரும், எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
அப்படி இருக்கும்போது மதக்கலவரம் எப்படி வரும்? துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், கனிமொழி எம்.பி.க்கும் என்ன பாதகம் ஏற்படுகிறது. சனாதன தர்மத்தை அளிப்பேன் என்று உதயநிதி ஸ்டாலின் சபதம் போட்டார். அதற்கான ஆரம்பகட்ட வேலையாகத்தான் இதை பார்க்கிறோம்.
அவரது கனவு ஒருபோதும் பலிக்காது. இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது. கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக பலி போடுகிறார்கள். ஆனால் இந்த திட்டம் பற்றி 2021-ம் ஆண்டு முதல் என்றாவது பட்ஜெட்டில் அறிவித்தது உண்டா?
மத்திய அரசு அறிக்கை கேட்ட பிறகுதான், அறிக்கை தயார் செய்தார்கள். அதுவும் முறையாக இல்லை. ரெயில் பயணத்திற்கும், பஸ் பயணத்திற்கும் 2 நிமிடம் தான் வித்தியாசம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அப்படியானால் மெட்ரோ ரெயில் வேண்டாம் என்பதாகத்தானே அர்த்தம்.
ஒரு நிலையம் கட்ட குறைந்தது 20 மீட்டர் இடம் வேண்டும். ஆனால் 10 மீட்டர் அளவுக்கு 3 நிலையங்கள் கட்டுவதற்கு இடம் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்கள். இந்த குறைகளைத்தான் நிவர்த்தி செய்ய மத்திய அரசு கூறியுள்ளது. இதுதான் தி.மு.க. செய்யும் வளர்ச்சி அரசியலா?
தூத்துக்குடி மற்றும் மதுரை விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையங்களாக மாற்றப்பட்டு உள்ளது. இது வளர்ச்சியை கொடுக்காதா? நாங்கள் வளர்ச்சிக்கான அரசியல் செய்கிறோம். தி.மு.க. என்ன அரசியல் செய்கிறது என்பதை மக்கள் உணருவார்கள். தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கிறது.
எங்கள் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். வலிமையாக மாறும். நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். தி.மு.க. கூட்டணிக்குள்தான் குழப்பம் நிலவுகிறது. காங்கிரசுக்கு அவர்கள் எத்தனை தொகுதிகள் கொடுப்பார்கள். அமைச்சரவையில் இடம் கொடுப்பார்களா? விடுதலை சிறுத்தைகளுக்கு எத்தனை தொகுதிகள் கொடுப்பார்கள்? பேச்சுவார்த்தை தொடங்கட்டும், அப்போது இந்த குழப்பம் வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்.
- தவெக அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் விஜய்.
சட்டமேதை அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி அவரது படத்திற்கு தவெக தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி, எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர், நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அவரது நினைவுநாளை முன்னிட்டு, நமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் காட்டிய வழியில்,
சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- டிசம்பர் 3ம் தேதி ஹூப்பள்ளியில் வரவேற்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
- டிசம்பர்-2 காலை முதல் மறுநாள் அதிகாலை வரை விமானம் தாமதம் என இன்டிகோ ஊழியர்கள் கூறினர்.
பெங்களூரு:
கர்நாடகத்தின் ஹூப்பள்ளியைச் சேர்ந்தவர் மேகா க்ஷீரா சாகர். இவர் ஒடிசாவின் புவனேஸ்வரைச் சேர்ந்த சங்கிராம் தாஸ் என்பவரை காதலித்து நவம்பர் 23-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். டிசம்பர் 3ம் தேதி மேகாவின் சொந்த ஊரான ஹூப்பள்ளியில் ரிசப்ஷனுக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
ரிசப்ஷனில் கலந்து கொள்வதற்காக மணமக்கள் இருவரும் புவனேஸ்வரிலிருந்து பெங்களூருவிற்கும், அங்கிருந்து ஹூப்பள்ளிக்கும் டிசம்பர் 2ம் தேதி விமானத்தில் முன்பதிவு செய்தனர். அதேபோல், சில உறவினர்களுக்கும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, டிசம்பர் 2-ம் தேதி காலை முதல் மறுநாள் அதிகாலை வரை விமானம் தாமதம் என இன்டிகோ ஊழியர்கள் கூறினர். அதன்பின், விமானம் ரத்து செய்யப்பட்டது என தெரிவித்தனர். ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விமானங்கள் ரத்தானது என விமான நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில், விமானம் ரத்தானதால் மணமக்கள் ஹூப்பளி செல்ல முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி புவனேஸ்வரில் இருந்தபடியே வீடியோ காலில் பங்கேற்றனர். ஹூப்பள்ளியில் உறவினர்கள் இருந்தபடி வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
ஹூப்பள்ளியில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்த மேடையில், மணமக்களுக்குப் பதிலாக மணமகளின் பெற்றோர் அமரவைக்கப்பட்டு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
- மேலப்பாளையம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ., த.மு.மு.க. உள்ளிட்டவைகள் சார்பில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது.
- மேலப்பாளையத்தில் ஆட்டோ, வேன்கள் உள்ளிட்டவை ஓடவில்லை.
நெல்லை:
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி இஸ்லாமிய அமைப்பு கள் சார்பில் கருப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமிய அமைப்புகள் இன்று கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி நெல்லை மாநகர பகுதியான மேலப் பாளையத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.
மேலப்பாளையம் சந்தை முக்கு ரவுண்டானா, அண்ணா வீதி, அம்பை சாலை, வி.எஸ்.டி சந்திப்பு, கொக்கிர குளம் சாலை, பஜார் வீதிகள் உள்பட பிரதான சாலைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள டீக்கடைகள், வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சுமார் 1,500 கடைகள் வரை அடைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் முக்கிய சாலைகள், பஜார் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பால் கடைகள், மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. ஒரு சில இடங்களில் கேன்களில் டீ வைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.
மேலப்பாளையம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ., த.மு.மு.க. உள்ளிட்டவைகள் சார்பில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. பதற்றமான இடமாக கருதப்படும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும், ரோந்து வாகனங்கள் மூலமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அதேநேரம் மேலப்பாளையத்தில் இன்று ஆட்டோ, வேன்கள் உள்ளிட்டவை ஓடவில்லை. இருப்பினும், அரசு மற்றும் தனியார் பஸ் சேவைகள் வழக்கம் போல் இயங்கி வருவதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
- விழா முடிவடைந்த பின் பிற்பகலில் விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னை செல்கிறார்.
- பாதுகாப்பு கருதி இன்றும், நாளையும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரையில் நாளை நடைபெறும் தொழில் முதலீட்டு மாநாடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் பிரவீன்குமார் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வரவேற்கின்றனர்.
தொடர்ந்து இன்று இரவு அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் தங்குகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் விடுதலை கட்சி நிறுவனர் முருகவேல்ராஜன் இல்ல திருமண விழா கருப்பாயூரணியில் உள்ள தனியார் மகாலில் நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார்.
பின்னர் மதுரை மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் காலை 10 மணியளவில் விரகனூர் ரிங்ரோட்டில் உள்ள வேலம்மாள் ஐடா ஸ்கெட்டா அரங்கில் தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். அப்போது பல்வேறு நிறுவனவங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
இதனை தொடர்ந்து மதுரை உத்தங்குடியில் அரசு சார்பில் நடைபெறும் பிரமாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதில் மாற்றுத்திறனாளிகள், சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட 1 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
மேலும் இந்த விழாவில் முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். விழா முடிவடைந்த பின் பிற்பகலில் விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னை செல்கிறார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம், அவர் தங்கும் இடம், விழா நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி இன்றும், நாளையும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அன்புமணி தரப்பில் கொடுக்கப்பட்ட ஆவணங்களை ஏற்று அவரை பா.ம.க. தலைவராக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
- வருகிற ஆகஸ்டு மாதம் வரை அவரது தலைவர் பதவி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், டாக்டர் அன்புமணிக்கும் மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் டாக்டர் அன்புமணி தரப்பில் கொடுக்கப்பட்ட ஆவணங்களை ஏற்று அவரை பா.ம.க. தலைவராக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. வருகிற ஆகஸ்டு மாதம் வரை அவரது தலைவர் பதவி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டாக்டர் அன்புமணி மீது டெல்லி போலீசில் டாக்டர் ராமதாஸ் சார்பாக ஜி.கே.மணி இன்று புகார் செய்துள்ளார். அந்த புகாரில், "தேர்தல் ஆணையத்திடம் போலி ஆவணங்களை அளித்து டாக்டர் அன்புமணி மோசடி செய்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
- தமிழக வெற்றிக்கழகத்தில் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் இணைவதால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
- வாக்காளர் பட்டியல் தீவிர சுருக்க திருத்த பணி என கூறி ஒரே இரவில் என்னுடைய தொகுதியில் 22,000 பேரை நீக்கி விட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இன்று அம்பேத்கார் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு அமைச்சர் இ.பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மேயர் இளமதி, காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் துரைமணிகண்டன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக வெற்றிக்கழகத்தில் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் இணைவதால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. த.வெ.க. இன்னும் மக்கள் மன்றத்தில் அங்கீகாரம் பெறவே இல்லை. இந்த சூழ்நிலையில் அந்தக் கட்சியுடன் யார் சேர்ந்தாலும், பிரிந்தாலும் எங்களுக்கு எந்த கவலையுமில்லை.
திருப்பரங்குன்றம் விஷயத்தில் தி.மு.க. அரசு சரியான பாதையில் செல்கிறது. தமிழகத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்ய யார் நினைத்தாலும் அது மக்கள் மத்தியில் எடுபடாது. நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டமில்லை. எங்கள் உரிமையை பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாக்காளர் பட்டியல் தீவிர சுருக்க திருத்த பணி என கூறி ஒரே இரவில் என்னுடைய தொகுதியில் 22,000 பேரை நீக்கி விட்டனர். இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு நான் புகார் அனுப்பியுள்ளேன். பி.எல்.ஓ. எனப்படும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் எந்த வீடுகளுக்கும் நேரடியாக சென்று படிவங்களை வழங்கி கையெழுத்து பெறவில்லை. ஒரே அறையில் உட்கார்ந்து கொண்டு கணக்கு காண்பிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு வேலை பார்த்துக் கொண்டு வருகிறார்கள். இதனால் எஸ்.ஐ.ஆர். படிவத்தில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. எனவே மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தேர்தலை நடத்துங்கள், வாக்காளர்கள் அவர்களாக வாக்களிக்கட்டும். திண்டுக்கல்லில் உயிருடன் உள்ள தி.மு.க. நிர்வாகியை இறந்ததாக கூறி பட்டியலில் இருந்து நீக்கி விட்டனர். ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட நரிக்கல்பட்டி, நீலமலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்காளர் குளறுபடி நடந்துள்ளது. பி.எல்.ஓ. அலுவலர்கள் இடமாற்றம் செய்து விட்டதாக பல படிவங்களை தள்ளுபடி செய்து விட்டனர். இது போன்று பல்வேறு தொகுதிகளிலும் குளறுபடி நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய்களின் உதவியுடன் முக்கிய இடங்களில் சோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை:
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கோவை மாவட்டத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அதன்படி கோவை மாநகரில் 1300 போலீசாரும், புறநகரில் 1000 போலீசாரும் என்று மாவட்டம் முழுவதும் 2300 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
பொதுமக்கள் அதிகம் கூடும் கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், டவுன்ஹால், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இதேபோல காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையம், புறநகர் பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை முன்பாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதவிர கோவை ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை போடப்பட்டு வருகிறது. மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய்களின் உதவியுடன் முக்கிய இடங்களில் சோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.






