என் மலர்
ஆசிரியர் தேர்வு
- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுமி சிகிச்சை பெற்று வந்தார்.
- சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என பிஜு ஜனதா தளம் கோரிக்கை
ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள பாலங்கா பகுதியில் 15 வயது சிறுமி தோழி வீட்டுக்கு சாலையில் நடந்து சென்றபோது இளைஞர்கள் சிலரால் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறது.
இந்நிலையில், ஆபத்தான நிலையில் புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார் என்று ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், " பலங்கா பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணச் செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள சிறப்பு மருத்துவக் குழுவின் 24 மணி நேர முயற்சிக்கு பின்பும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. சிறுமியின் ஆன்மா சாந்தியடையவும், இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தினருக்கு வழங்கவும் நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பிஜு ஜனதா தள தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான நவீன் பட்நாயக், சிறுமியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், குற்றம் சாட்டப்பட்ட 3 பேரை 7 நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும் என்றும் பிஜு ஜனதா தளம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஒடிசாவில் கடந்த மாதம் கல்லூரியில் ஒரு இளம் பெண் (பேராசிரியரால் பாலியல் தொல்லை செய்யப்பட்டு) தனக்கு நீதி கிடைக்காததால் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. .
- முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படங்களுக்கு, மலர்தூவி வணக்கம் செலுத்துங்கள்.
- 2026 சட்டமன்றத் தேர்தலில் 7-ஆவது முறையாகக் கழக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் நினைவு போற்றும் மடல்.
நெடுநாள் கழித்து, உங்களுடன் இந்த மடல் வாயிலாக உரையாடுகிறேன். காரணம், சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் – வீட்டில் ஓய்வெடுத்தும் வந்தேன். சிகிச்சை – ஓய்வு என்று சொன்னாலும், மருத்துவமனையில் இருந்தபடியே அரசு அலுவல்களையும் கழகப் பணிகளையும் செய்துகொண்டுதான் இருந்தேன். ஓய்வுக்குப் பிறகு, தலைமைச் செயலகத்தில் என்னுடைய வழக்கமான பணிகளைத் தொடங்கியும், நேற்று கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில், 'உடன்பிறப்பே வா' என உத்திரமேரூர் தொகுதி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தேன். அரசுப் பணிகளுக்கிடையில், நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதுவரையில் 39 தொகுதிகளின் கழக நிர்வாகிகளைச் சந்தித்திருக்கிறேன். இந்தச் சந்திப்பு அடுத்தடுத்து தொடர உள்ளது.
தமிழே உயிராக - தமிழர் வாழ்வே மூச்சாக - தமிழ்நாட்டின் உயர்வே வாழ்வாகக் கொண்டு தமிழினத் தலைவராக மக்கள் மனங்களில் நிறைந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். இயற்கை அவரை நம்மிடமிருந்து பிரித்து 7 ஆண்டுகளானாலும் அவர்தான் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறார். வாரத்தின் 7 நாட்களும் தலைவர் கலைஞரின் நினைவுகளுடன்தான் கழக உடன்பிறப்புகளின் பொழுது விடிகிறது. எந்நாளும் நம்மை இயக்கும் ஆற்றலாகத் திகழ்பவரும் முத்தமிழறிஞர் கலைஞர்தான்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அவர் கட்டமைத்த ஆட்சியையும் கட்டிக்காத்து, அரை நூற்றாண்டு காலம் இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கி, 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, 19 ஆண்டுகாலம் சிறப்பான நிர்வாகத்தை அளித்து, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டி எழுப்பிய சிற்பியான நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் வழியில்தான், உங்களில் ஒருவனான என் தலைமையில் 6-ஆவது முறையாகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைத்து, மக்கள் நலன் காக்கும் நல்லரசாகச் செயலாற்றி வருகிறது.
முத்தமிழறிஞர் ஆட்சியில் இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்ந்த குடிசை மாற்று வாரியம், கை ரிக்சா ஒழிப்பு, பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் சம உரிமை, முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குக் கட்டணமில்லா உயர்கல்வி, உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், சமத்துவபுரங்கள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்ற எண்ணற்ற திட்டங்களின் வழியில், நமது திராவிட மாடல் அரசு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், விடியல் பயணம், நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை வழங்கி, இந்தியாவின் பிற மாநிலங்கள் வியந்து நோக்கிப் பின்பற்றக்கூடிய வகையில் செயல்படுத்தி வருகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனுநீதி நாளை அறிமுகப்படுத்தியவர் தலைவர் கலைஞர். அவர் வழியில், திராவிட மாடல் அரசின் திட்டங்களில் பயன்பெறும் வகையில் மக்களைத் தேடிச் சென்று மனுக்களைப் பெறும் முகாம்களை நடத்தி, உரிய தீர்வுகளை மேற்கொண்டு வருகிறோம். எளிய மக்களுக்கும் கண்ணொளித் திட்டம் மூலம் கண்புரை அறுவை சிகிச்சை, பெரியம்மை தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து எனப் பல மருத்துவ முகாம்கள் தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்டது போல, நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களின் உடல்நலன் காத்திட வட்டாரங்கள்தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உரிய சிகிச்சைக்கு வழியமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியின் சமூகநீதிக் கொள்கைகளால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளால், பொருளாதாரம் சார்ந்த திட்டங்களால் ஏதேனும் ஒரு வகையில் பயன்பெற்று உயர்ந்தது போலவே, நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு பயனையாவது பெற்று முன்னேற்றம் கண்டு வருவதை நாடறியும். கல்வியிலும் சமுதாய முன்னேற்றத்திலும் தனிநபர் வருமானத்திலும் பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகக் திகழ்வதை நாம் மட்டும் சொல்லவில்லை, ஒன்றிய பா.ஜ.க அரசின் பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் பல்வேறு துறைகளின் அறிக்கைகளே உறுதி செய்கின்றன. இவையனைத்தும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் கட்டமைத்த வழித்தடத்தில் தொடரும் நம்முடைய பயணத்தின் வெற்றிகள்.
தமிழ்நாட்டின் நலன் காக்கும் திட்டங்களை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் வழியிலான திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் நிலையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதிலும் தலைவர் கலைஞர் முன்னெடுத்த மாநில சுயாட்சி முழக்கத்தின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் நலன்களையும் காக்கின்ற வகையில் சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது நமது திராவிட மாடல் அரசு. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆகஸ்ட் 15 விடுதலை நாளில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் மாநிலத் தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுகின்ற உரிமையைப் பெற்றுத் தந்தார். மாநிலத் திட்டக்குழுவை அமைத்தார். தி.மு.கழகத்தின் ஆதரவுடன் சமூகநீதிக் காவலர் திரு. வி.பி.சிங் அவர்கள் பிரதமரானபோது ஒன்றிய - மாநில உறவுகளை மேம்படுத்தும் 'இன்டர் ஸ்டேட் கவுன்சில்' அமைத்திட வழி செய்தார்.
நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வு, உதய் மின்திட்டம் , சொத்து வரி உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சகத் திட்டங்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததால், தமிழ்நாடு அதன் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடுவதற்காக நாடாளுமன்றத்தில் போர்க்குரல் எழுப்புவதோடு, உச்சநீதிமன்றத்திலும் சட்டப்போராட்டத்தை நடத்துகிறது கழக அரசு. அதற்கான நெஞ்சுரத்தை நமக்குத் தந்திருப்பவர் 'மானமிகு சுயமரியாதைக்காரர்' எனத் தன்னை அடையாளப்படுத்திய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.
பா.ஜ.க. ஆட்சி செய்யாத - ஆட்சிக்கே வர முடியாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அதிகாரப் பறிப்பு செய்யும் ஜனநாயகப் படுகொலை தொடர்ந்து வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு முன்னெடுத்த சட்டப்போராட்டத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசே அதிகாரம் படைத்தது என்பது நிலைநாட்டப்பட்டு, தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமான ஜனநாயக நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்தப் போராட்டங்களை இன்னும் வலிமையாகத் தொடர வேண்டியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் நலன் மீது கொஞ்சமும் அக்கறையில்லாத அ.தி.மு.க, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு மிகப் பெரும் துரோகத்தை இழைத்து வருகிறது.
உண்மையான அ.தி.மு.க தொண்டர்களே மனம் புழுங்குகிற வகையில், அடிப்படைக் கொள்கைகள் ஏதுமற்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி டெல்லி வரை சென்று மண்டியிட்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். சேராத இடந்தன்னில் சேர்ந்து தீராத பழி சுமந்தபடி ஊர் ஊராகப் பயணித்து, பொய்களைப் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் 14 வயதில் பள்ளி மாணவனாகத் திருவாரூர் வீதிகளில் தமிழ்க்கொடி ஏந்தி, இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பியவர். கல்லக்குடி போராட்டத்தில் வடமொழி ஆதிக்கத்தை எதிர்த்து, தமிழ் காத்திடத் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தவர். 1965 மொழிப்போர்க்களத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து பாளையங்கோட்டையில் தனிமைச் சிறை கண்டவர். தனது 95 ஆண்டு வாழ்வில் 81 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான முத்தமிழறிஞர் கலைஞரின் இனம் - மொழி காக்கும் போராட்டங்கள் ஓய்வின்றித் தொடர்ந்தன. தமிழுக்குச் செம்மொழித் தகுதி தரப்படவேண்டும் என்கிற தமிழறிஞர்களின் நூற்றாண்டுக் கனவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிறைவேறிடச் செய்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்.
இந்தியாவின் முதல் செம்மொழி என்ற தகுதிபெற்ற தமிழுக்கு மிகக் குறைந்த நிதியை ஒதுக்குகிற தமிழர் விரோத ஒன்றிய பா.ஜ.க. அரசு, சமஸ்கிருத மொழிக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொட்டிக் கொடுக்கிறது. இந்தி அல்லாத மொழிகளைச் சிதைக்கின்ற வகையில் 'தேசியக் கல்விக் கொள்கை 2020' மூலம் இந்தி மொழியைத் திணிக்க முயற்சிக்கிறது. ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்கின்ற கல்வியைப் பறிக்கின்ற வகையில் குலக்கல்வி முறையைக் கொண்டு வரத் துடிக்கிறது. அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்ட தமிழர் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வு முடிவுகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளியிட மறுக்கிறது. ஆரியப் பண்பாட்டை நம் மீது திணிக்கப் பார்க்கிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் இன்று நம்முடன் இருந்திருந்தால் எத்தகைய உணர்வெழுச்சியுடன் ஒன்றிய அரசை எதிர்த்து நிற்பாரோ, அவரிடம் அரசியல் பாடம் கற்ற கழத்தினரான நாமும் அதே உணர்வுடன் ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழர் விரோத - மனிதகுல விரோத சூழ்ச்சிகளை எதிர்த்து நிற்கிறோம். எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வோ அடங்கி ஒடுங்கி பா.ஜ.க.வுக்கு அடிமைச் சேவகம் செய்து கொண்டிருக்கிறது.
"வீரன் சாவதே இல்லை, கோழை வாழ்வதே இல்லை" என்றார் தலைவர் கலைஞர். கழகத்தினர் களத்தில் வீரர்களாக நிற்கிறார்கள். தமிழைக் காக்கவும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்கவும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் உறுதியுடனும் தெளிவுடனும் தன் போராட்டத்தை முன்னெடுக்கும். தமிழ் மக்களின் வளமான வாழ்வுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தும்.
எப்போதும் மக்களுடன் நிற்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் தலைவர் கலைஞர் கட்டிக் காத்த இயக்கம். அவர் இல்லை என்று எண்ணாமல், என்றென்றும் அவர் நினைவுகளில் வாழ்கின்ற கோடிக்கணக்கான உடன்பிறப்புகளில் உங்களில் ஒருவனான நானும் இருக்கிறேன். ஆகஸ்ட் 7 அன்று நம் உயிர்நிகர் தலைவரின் நினைவு நாளில் தமிழர் வாழும் நிலமெங்கும் அவர் நினைவைப் போற்றுவோம்.
வங்கக் கடற்கரையில் தன் அண்ணனுடன் நிரந்தர ஓய்வு கொண்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7 அன்று நடைபெறும் அமைதிப் பேரணியில் உடன்பிறப்புகள் கடலெனத் திரண்டு வணக்கத்தைச் செலுத்துவோம். மாவட்டங்கள்தோறும் அமைக்கப்பட்டுள்ள தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலைகளுக்கு அந்தந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் - உடன்பிறப்புகள் மாலையிட்டு மரியாதை செலுத்திட வேண்டும். கிளைகள்தோறும் தலைவர் கலைஞரின் நினைவு போற்றப்பட வேண்டும். இந்நிகழ்வுகளில் கழக நிர்வாகிகள் காலை 7 மணியளவில் பங்கேற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
வீடுகளிலும் வீதிகளிலும் தமிழ்காத்த போராளியாம் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படங்களுக்கு, மலர்தூவி வணக்கம் செலுத்துங்கள். தலைவர் கலைஞரின் நினைவுகளை நெஞ்சிலேந்தி, கொள்கைவழிப் பயணத்தைத் தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் 7-ஆவது முறையாகக் கழக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம். ஓரணியில் தமிழ்நாடு எனும் மகத்தான முன்னெடுப்பில் மக்களை ஒருங்கிணைத்துக் களத்தில் வெல்வோம்! தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக! திராவிட முன்னேற்றக் கழகம் வெல்க!" என்று தெரிவித்துள்ளார்.
- கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.
- கூலி தி பவர்ஹவுஸ் பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. அண்மையில் படத்தின் பாடலான கூலி தி பவர்ஹவுஸ் பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு இருக்கிறது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், கூலி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றுது. அவ்விழாவில் கூலி படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து யூடியூபில் வெளியான கூலி டிரெய்லர் விரைவில் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
- அதிரடியாக விளையாடிய ஏபி டிவில்லியர்ஸ் 60 பந்துகளில் 120 ரன்களை குவித்தார்.
- அதிரடி சதம் விளாசிய ஏபி டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகன் விருதை வென்று அசத்தினார்.
உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் - தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷர்ஜீல் கான் 76 ரன்கள் அடித்தார்.
பின்னர் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 16.5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய ஏபி டிவில்லியர்ஸ் 60 பந்துகளில் 120 ரன்களை குவித்தார். ஜேபி டுமினி 50 ரன்கள் அடித்தார்.
அதிரடி சதம் விளாசிய ஏபி டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய விருதுகளை வென்று அசத்தினார்.
- இந்தோனேசியாவில் லக்கி லக்கி எரிமலை வெடித்துச் சிதறியது.
- அதில் இருந்து வானுயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறியது.
ஜகார்த்தா:
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இருப்பதால் இந்தோனேசியாவில் பல எரிமலைகள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது வெவோடோபி நகரில் உள்ள லிவோட்பி எரிமலை.
1,500 மீட்டர் உயரமுள்ள அந்த எரிமலை பிரபலமாக லக்கி லக்கி என அறியப்படுகிறது. இந்த மலையின் அழகைக் காண வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர்.
அந்த எரிமலை சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுகிறது. அதன்படி லக்கி லக்கி எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் எரிமலையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் உயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறியது.
இதனை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் எரிமலை வெடிக்க தொடங்கியது. எனவே அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதனால் எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் 8 கிலோமீட்டர் தூரம் வரை ஆறாக ஓடியது.
எரிமலை அருகே உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
- இந்தியா 2வது இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
ஓவல்:
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.
முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய ஆகாஷ் தீப் 66 ரன்கள் சேர்த்தார். ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். ஜடேஜா அரை சதம் கடந்து 53 ரன்னில் அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் அரை சதம் கடந்து 53 ரன் எடுத்தார்.
இறுதியில், இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஜெய்ஸ்வால் 118 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
- ஆகாஷ் தீப் 66 ரன்கள் அடித்து ஸ்கோர் உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. முகமது சிராஜ் (4), ஆகாஷ் தீப் (4) ஆகியோர் சிறப்பாக பந்து வீச இங்கிலாந்து 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய ஆகாஷ் தீப் 66 ரன்கள் சேர்த்தார்.
இன்றைய 3ஆவது நாள் தேனீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது 300 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. மேலும் ஒரு ரன் சேர்க்காமல் ஜுரெல் விக்கெட்டை இந்தியா இழந்தது.
ஜுரெல் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகின்றனர். இந்தியா 77 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா அரை சதத்தை நெருங்கி வருகிறார்.
- உடலுறுப்புகளை ஈந்து, பல நூறு உயிர்களை வாழ வைத்திருக்கிறார்கள்.
- உடலுறுப்புகளைக் கொடையளிப்போருக்கு அரசு மரியாதையுடன் விடை கொடுக்கப்படும்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
உயிர் பிரிந்த பின் தமது உடற்பாகங்கள் தீக்கும் மண்ணுக்கும் இரையாகாமல், பிறரது வாழ்வுக்குத் துணையாவதே பெருவாழ்வு!
அதனால்தான், துணை முதலமைச்சராக இருந்தபோது, எனது உடலுறுப்புகளைக் கொடையளித்தேன்; முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், உடலுறுப்புகளைக் கொடையளிப்போருக்கு அரசு மரியாதையுடன் விடை கொடுக்கப்படும் என்று அறிவித்தேன்.
2023 செப்டம்பர் 23-இல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது முதல், இதுவரையில் 479 பேர் (கடந்த ஆண்டு மட்டும் 268 பேர்) தங்களது உடலுறுப்புகளை ஈந்து, பல நூறு உயிர்களை வாழ வைத்திருக்கிறார்கள்! அவர்களுக்கு எனது வணக்கம்!
#OrganDonation-இல் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகி இருப்பது கூடுதல் சிறப்பு!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மலானா-I நீர்மின் திட்டத்தின் அணை முற்றிலுமாக இடிந்து விழுந்தது
- சுமார் 30 பேர் வெள்ளத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் குலு மாவட்டத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு அணை இடிந்து விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திடீர் மேக வெடிப்பு காரணமாக மலானா நதி கொந்தளிப்பாக மாறியது. வெள்ளத்தின் தீவிரத்தால் நேற்று, மலானா-I நீர்மின் திட்டத்தின் அணை முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த வெள்ளத்தில் மலானா தடுப்பணை முற்றிலுமாக அழிக்கப்பட்டது. திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கார்கள், பாலங்கள் மற்றும் வீடுகள் காகிதப் படகுகள் போல அடித்துச் செல்லப்பட்டன.
சுமார் 30 பேர் வெள்ளத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களில் நான்கு முதல் ஐந்து தொழிலாளர்கள் நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியதாக கூறப்படுகிறது.
இடம்பெயர்ந்த மக்கள் கைவிடப்பட்ட கட்டிடங்களில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், உணவு, சுத்தமான தண்ணீர் இல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) காவல்துறை மற்றும் உள்ளூர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.
- படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. அண்மையில் படத்தின் பாடலான கூலி தி பவர்ஹவுஸ் பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு இருக்கிறது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
முன்னதாக கூலி படத்தின் முழு ஆல்பம் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது கூலி படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
- ஜார்ஜின் மொபைல் போன் காரில் கீழே விழுந்தது.
- மொத்தம் 329 மில்லியன் டாலர்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
எலான் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் பெரும் தொகையை அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு புளோரிடாவின் கீ லார்கோவில் ஜார்ஜ் மெக்கீ என்ற நபர் தனது டெஸ்லா காரை ஓட்டிச் சென்று அதிநவீன ஆட்டோபைலட் அம்சத்தைப் பயன்படுத்தினார்.
இது டெஸ்லா வழங்கிய தானியங்கி ஓட்டுநர் அமைப்பு. வழியில், ஜார்ஜின் மொபைல் போன் காரில் கீழே விழுந்தது. கார் ஆட்டோபைலட்டில் இருப்பதாக நினைத்து, ஜார்ஜ் குனிந்து தொலைபேசியை எடுக்க முயன்றார்.
இருப்பினும், அந்த நேரத்தில், கார் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரில் மோதி, இரண்டு பேர் மீது மோதியது.
இந்த சம்பவத்தில், 22 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், அவரது நண்பர் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகினர்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, சமீபத்தில் புளோரிடா நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தது.
இந்த விபத்துக்கான இழப்பீடாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் 329 மில்லியன் டாலர்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், விபத்துக்கு ஆட்டோபைலட் அமைப்பும் ஒரு காரணியாக இருப்பதைக் கண்டறிந்த நீதிமன்றம், டெஸ்லா நிறுவனம் தன் பங்குக்கு 242 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,996 கோடி) வழங்க உத்தரவிட்டது. மீதமுள்ள தொகையை வாகனத்தின் ஓட்டுநர் செலுத்த வேண்டும்.
இருப்பினும், புளோரிடா நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெஸ்லா மேல்முறையீடு செய்வதாக அறிவித்துள்ளது.
- பீகார் சிறப்பு திருத்தத்திற்கு முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
- பீகாரில் 7.24 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் சிறப்பு திருத்தத்திற்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 65 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் 7.24 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கும் பணி நிறைவு பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் சிறப்பு திருத்தத்திற்கு முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இப்போது 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் பெரும்பாலான வாக்காளர்களில் இறந்துவிட்டனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு இடங்களில் பதிவு செய்தவர்கள், பீகாரில் இருந்து நிரந்தரமாக வெளியேறியவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளவர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் அதிகபட்சமாக 3.95 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கிழக்கு சம்பாரண், மதுபனி மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தலா 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளனர். மேலும் பத்து மாவட்டங்களில் தலா 2 லட்சம் வாக்காளர்கள் மற்றும் 13 மாவட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.






