search icon
என் மலர்tooltip icon

    கனடா

    • கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது
    • ஆக்கபூர்வமான உறவை வளர்க்க தீவிரமாக உள்ளதாக ஜஸ்டின் தெரிவித்தார்

    இந்தியாவால் பயங்கரவாதி என பிரகடனப்படுத்தப்பட்ட காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த பிரிவினைவாதி ஹர்திப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் 18 அன்று கனடா நாட்டில் உள்ள வேன்கூவர் நகரில் சுட்டு கொல்லப்பட்டான்.

    இந்த கொலையை தீவிரமாக கனடா விசாரித்து வந்த நிலையில், இம்மாதம் 18 அன்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு பாராளுமன்றத்தில் இக்கொலை சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளது என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதனை திட்டவட்டமாக இந்தியா மறுத்தது. இரு நாடுகளும் பரஸ்பரம் தூதர்களை வெளியேற்றும் அளவிற்கு உறவு சீர்கெட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்தியா கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்புபவர்களுக்கு 'விசா' வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

    இந்நிலையில், கனடாவின் க்யூபெக் பிராந்தியத்தில் உள்ள மான்ட்ரியல் பகுதியில் நேற்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேட்டியளித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் வளர்ந்து வருவதை உணர்கிறோம். கனடாவும் அதன் நட்பு நாடுகளும் இந்தியாவுடன் ஆக்கபூர்வமாகவும் தீவிரமாகவும் நல்லுறவு வளர்க்க வேண்டியது மிக அவசியம். கடந்த வருடம் நாங்கள் வெளியிட்டிருந்த இந்தோ-பசிபிக் திட்டப்படி, இந்தியாவுடன் நெருங்கிய உறவினை வளர்க்க நாங்கள் தீவிரமாக உள்ளோம். அதே சமயம், ஹர்திப் விவகாரத்தில் சட்டப்படி நடக்க விரும்பும் நாடான எங்களுடன் இணைந்து பணியாற்றி உண்மையை வெளிக்கொண்டு வர இந்தியா உதவ வேண்டும்.

    இவ்வாறு ஜஸ்டின் தெரிவித்தார்.

    ஹர்திப் சிங் கொலையில் இந்தியாவிற்கு உள்ள தொடர்புகள் குறித்து கனடாவிடம் இந்தியா ஆதாரங்களை கேட்டிருந்தது. இதுவரை தங்களின் குற்றச்சாட்டுகளுக்கு கனடா அரசாங்கம் ஆதாரங்கள் எதுவும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெலன்ஸ்கியுடன் வந்திருந்த 98 வயதான போர் வீரர் யாரோஸ்லாவ் ஹூன்கா கனடா பாராளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டார்.
    • கனடா பாராளுமன்றத்தை முழுவதுமாக தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    ஒட்டாவா:

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த 22-ந்தேதி கனடா வந்திருந்தார். அவருடன் வந்திருந்த 98 வயதான போர் வீரர் யாரோஸ்லாவ் ஹூன்கா கனடா பாராளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டார்.

    இதனிடையே அவர் 2-ம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜிப் படையில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்றும் லட்சக்கணக்கான யூத மக்கள் உயிரிழக்க காரணமானவர் எனவும் தகவல் பரவியது.

    இதற்கு அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், இந்த விவகாரம் கனடா பாராளுமன்றத்தை முழுவதுமாக தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த நிகழ்வுக்கு வருந்துகிறேன்.

    அப்போதைய சூழலை அறியாமல் யூத மக்களின் நினைவுகளை மீறியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

    • கனடாவில் இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • இரு நாட்டுக்கும் இடையே பகை உருவாகி இருப்பதால் இந்தியாவில் உள்ள அவர்களது பெற்றோர்கள் கவலை அடைந்து இருக்கிறார்கள்.

    கனடா நாட்டில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா- கனடா நாடுகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது.

    ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்தியாவின் ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தினார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது.

    இந்த சம்பவத்தையொட்டி கனடாவில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை அந்நாடு வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரியை வெளியேறுமாறு உத்தரவிட்டது. இரு நாடுகள் இடையே இந்த நடவடிக்கை மேலும் மோதலை அதிகரித்து வருகிறது.

    கனடாவில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இங்குள்ள சிறுபான்மை இந்துக்களை கனடாவை விட்டு வெளியேறும் படி காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் வெளிப்படையாக மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் கனடா டொராண்டோ மற்றும் வான்கூவர் நகரில் உள்ள இந்திய தூதரகம் முன்பும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலிஸ்தான் கொடியுடன் போராட்டம் நடத்திய அவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அங்குள்ள இந்து கோவில்களும் சேதப்படுத்தப்பட்டன. இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

    கனடாவில் இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இரு நாட்டுக்கும் இடையே பகை உருவாகி இருப்பதால் இந்தியாவில் உள்ள அவர்களது பெற்றோர்கள் கவலை அடைந்து இருக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இங்கு பாதுகாப்பாக இருந்து வந்தாலும் கனடா அரசு அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் கனடா நாட்டினர் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கனடா அரசு சமூகவலைதளம் மூலம் அறிவுறுத்தி இருக்கிறது.

    • கொலையில் இந்திய ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி உள்ளார்.
    • கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஏராளமான இந்திய மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    ஒட்டாவா:

    கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா-கனடா இடையே மோதல் போக்கை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலையில் இந்திய ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி உள்ளார். இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்து உள்ளது.

    இந்த பிரச்சினையில் இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளதால் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

    கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஏராளமான இந்திய மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இரு நாடுகளுக்கு இடையே பகை அதிகரித்து வருவதால் சில மாணவர்கள் இனியும் கனடாவில் படிப்பை தொடரலாமா? என யோசித்து வருகின்றனர். இது இந்தியாவில் வசித்து வரும் அவர்களது பெற்றோர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இது தொடர்பாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பல்விந்தர் சிங் கூறும்போது என்னுடைய மகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் கனடாவுக்கு படிக்க சென்றார்.

    தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை அவளுக்கு கவலை அளித்து இருக்கிறது. படிப்பில் அவளால் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறினார்.

    மற்றொரு மாணவியின் தந்தை குல்தீப்கவுர் கூறும்போது என்னுடைய 2 மகள்கள் கனடாவில் படித்து வருகிறார்கள்.அவர்களுக்கு ஏதாவது ஆகி விடுமோ? என்ற பதற்றத்தில் உள்ளேன். இந்த பிரச்சினைக்கு இருநாட்டு அரசும் உடனடியாக தீர்வு காண வேண்டும். அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

    பஞ்சாப் மாநில பா.ஜனதா தலைவர் சுனில் ஜக்காரி மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள மனுவில் கனடாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தை எளிதில் தொடர்பு கொள்ள உதவி மையம் அமைத்து அதற்கான தொலைபேசி எண்ணையும், வெளிநாடு செல்ல திட்டமிடும் மாணவர்கள் தேவைப்படும் பட்சத்தில் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண்ணையும் வெளியிட வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

    காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங் பிட்டு இந்த பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட்டு மாணவர்களின் நலனை பாதுகாப்பதில் உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    • 2020ல் இந்தியாவால் பயங்கரவாதி என பிரகடனப்படுத்தபட்டவர் ஹர்திப் சிங் நிஜ்ஜார்
    • அமெரிக்கா, கனடா இடையே பல உரையாடல்கள் நடைபெற்றன என்றார் கோஹென்

    அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய உளவுத்துறை கூட்டமைப்பு, ஃபை ஐஸ் (Five Eyes). உலகளாவிய தீவிரவாத, பயங்கரவாத மற்றும் நாசவேலைகள் குறித்து கண்காணிப்பின் மூலமாகவும் சமிக்ஞைகளை உள்ளடக்கியும் பெறப்படும் தகவல்கள், இந்த 5 நாடுகளுக்கிடையே பரிமாறி கொள்ளப்பட்டு அதன் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    2020ல் இந்தியாவால் பயங்கரவாதி என பிரகடனப்படுத்தப்பட்ட ஹர்திப் சிங் நிஜ்ஜார் எனும் காலிஸ்தான் தீவிரவாதி கடந்த 18 அன்று கனடாவில் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவிற்கு பெரும்பங்கு உண்டு என கனடாவின் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை ஆதாரமற்றது என இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

    இரு நாடுகளும் தங்கள் நாட்டு தூதர்களை திரும்ப அழைத்து கொள்ளும் அளவிற்கு இரு நாட்டு உறவு நலிவடைந்தது.

    இந்நிலையில், ஹர்திப் கொலையில் இந்திய அரசுக்கு பங்கு இருப்பதற்கான ஆதாரங்கள் ஃபை ஐஸ் அமைப்பின் மூலம் கனடாவிற்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக கனடா மற்றும் அமெரிக்காவிற்கிடையே பல உரையாடல்கள் நடைபெற்றதாகவும் கனடாவிற்கான அமெரிக்க தூதர் டேவிட் கோஹென் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா இந்த கொலை குற்றச்சாட்டு குறித்து கனடாவுடன் ஒத்துழைப்பதாகவும், இதற்கு பொறுப்பானவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும் தனது தரப்பிலிருந்து முன்னரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து இந்தியா அடுத்து என்ன செய்ய போகிறது என அரசியல் விமர்சகர்கள் கவனித்து வருகின்றனர்.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு சென்றுள்ளார்.
    • அங்கு அவரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரில் வரவேற்றார்.

    ஒட்டாவா:

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கி ஆகியோரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரில் வரவேற்றார்.

    அதன்பின், அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி சென்றார். அவரை அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதாவது:

    நேட்டோ உள்ளிட்ட நமது கூட்டாளிகளுடன் இணைந்து உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.

    உக்ரைனுக்கு அடுத்த வருடமும் தொடர்ந்து கனடா அரசு பொருளாதார உதவிகளை வழங்கும். ஆனால் நாங்கள் விரும்புவது உக்ரைனுக்கு நீண்ட காலத்திற்கு ராணுவ உதவிகளோ அல்லது பொருளாதார உதவிகளோ தேவைப்படாத வகையில் அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்பது தான்.

    நிரந்தரமான அமைதி என்பது ராணுவத்தின் அளவை கணக்கில் கொள்ளாமல் அண்டை நாடுகளின் எல்லைகளை மதிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

    உக்ரைன் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் வகையில் அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்றார்.

    • உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
    • ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு முதல் முறையாக அதிபர் ஜெலன்ஸ்கி கனடா சென்றுள்ளார்.

    ஒட்டாவா:

    உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன.

    இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்ற ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா ஆகியோரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.

    இதையடுத்து, அதிபர் ஜோ பைடன் மற்றும் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    அமெரிக்கப் பயணத்தைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா ஆகியோரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரில் சென்று வரவேற்றார்.

    இந்நிலையில், கனடா நாட்டு பாராளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    ரஷியாவின் ஆக்கிரமிப்பு நமது வெற்றியின் மூலம் முடிவுக்கு வர வேண்டும். உக்ரைனில் மீண்டும் ஒரு இனப்படுகொலையை நிகழ்த்த முயற்சி செய்யாத வகையில் ரஷியா நிரந்தரமாக தோற்கடிக்கப்பட வேண்டும்.

    கனடா அரசு வழங்கிய ராணுவ உதவி மற்றும் பொருளாதார உதவிகளால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

    ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்ததற்காக கனடா அரசுக்கு நன்றி. கனடா அரசு எங்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி என தெரிவித்தார்.

    ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு முதல் முறையாக ஜெலன்ஸ்கி கனடா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐ.நா.வில் இன்னும் ரஷியாவிற்கு இருக்கை கொடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
    • ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவி செய்ய கோரிக்கை விடுக்க இருக்கிறார்.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடிவருகிறார். உலக நாடுகளில் இருந்து ரஷியாவை தனித்துவிட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு நேரடியாக சென்று உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்.

    கடந்த சில நாட்களாக ஐ.நா. சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஐ.நா.வில் இன்னும் ரஷியாவிற்கு இருக்கை கொடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், வெறுப்பு ஆயுதமாகும்போது, அது ஒரு நாடுடன் நிற்காது என்று எச்சரித்தார். இந்த கூட்டத்தில் கனடா, உக்ரைனுக்கு ஆதரவாக பேசியது.

    இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா சென்று இருக்கிறார். கனடா சென்று இருக்கும் அவர், அங்குள்ள பாராளுமன்றத்தில் உரையாற்றி, ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவி செய்ய கோரிக்கை விடுக்க இருக்கிறார்.

    2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கியது. அதன்பிறகு தற்போது தான் ஜெலன்ஸ்கி முதன்முறையாக கனடா சென்றுள்ளார். கனடாவின் ஒட்டாவாவில் தரையிறங்கிய ஜெலன்ஸ்கியை கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரவேற்றார்.

    பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜெலன்ஸ்கி மற்றும் ட்ரூடோ டொரோண்டோ பயணம் மேற்கொண்டு அங்குள்ள உக்ரைன் மக்களை சந்திக்கின்றனர். உக்ரைனின் மொத்த மக்கள் தொகையில் நான்கு சதவீதம் பேர் தற்போது கனடாவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக பேசிய கனடாவுக்கான ஐ.நா. தூதர் பாப் ரே, "அவருக்கு உதவுவதற்காக பலவற்றை செய்து இருக்கிறோம், மேலும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது. உக்ரைன் மக்களுக்காக எங்களால் முடிந்தவற்றை தொடர்ச்சியாக செய்யப் போகிறோம்," என்று தெரிவித்து உள்ளார்.

    • அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை சந்தித்த நிலையில், கனடா செல்கிறார்
    • மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடும் வகையில் இந்த பயணம் பார்க்கப்படுகிறது

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடிவருகிறார். உலக நாடுகளில் இருந்து ரஷியாவை தனித்துவிட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு நேரடியாக சென்று உதவிகளை நாடி வருகிறார்.

    கடந்த சில நாட்களாக ஐ.நா. சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஐ.நா.வில் இன்னும் ரஷியாவிற்கு இருக்கை கொடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், வெறுப்பு ஆயுதமாகும்போது, அது ஒரு நாடுடன் நிற்காது என்று எச்சரித்தார்.

    இந்த கூட்டத்தில் கனடா, உக்ரைனுக்கு ஆதரவாக பேசியது. கனடா அதிபர் ட்ரூடோ, எரிபொருள் மற்றும் உணவை ஆயுதமாக்குகிறது என ரஷியா மீது குற்றம்சாட்டினார்.

    இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா செல்கிறார். கனடா செல்லும் அவர், இன்று அங்குள்ள பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.

    2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கியது. அதன்பின் தற்போது முதன்முறையாக ஜெலன்ஸ்கி கனடா செல்கிறார். இதற்கு முன்னதாக வீடியோ கான்பெரன்ஸ் மூலம் கனடா பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.

    • கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்திய அரசு இடைக்கால தடை விதித்துள்ளது.
    • எங்களுடன் இணைந்து பணியாற்ற வாருங்கள் என இந்தியாவுக்கு கனடா பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

    ஒட்டாவா:

    இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர். கனடாவில் நிகழ்ந்த இந்தக் கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என்று கனடா குற்றம் சாட்டியதோடு, இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியது.

    இதுதொடர்பாக கனடாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி, பதிலடியாக கனடா உயர் தூதரக அதிகாரியை நாட்டை விட்டே வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் கனடா, இந்தியா இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது:

    இந்த விவகாரம் தொடர்பாக நான் பிரதமர் மோடியிடம் வெளிப்படையாக உரையாடினேன். அப்போது என் கவலைகளைப் பகிர்ந்துகொண்டேன்.

    இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளவும், முழு வெளிப்படைத் தன்மையை வெளிப்படுத்த எங்களுடன் இணைந்து பணியாற்றவும் இந்திய அரசை கேட்டுக்கொண்டேன்.

    இந்தியா வளர்ந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த நாடு. உலகெங்கிலும் நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய ஒரு நாடு. நாங்கள் பிரச்சினைகளைத் உருவாக்கவோ அல்லது அதிகப்படுத்தவோ நினைக்கவில்லை. இந்த விஷயத்தின் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான செயல்முறைகளை மேற்கொள்ள எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

    • இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகளை கனடா ஒப்படைக்காத வேளையில், தேடப்படும் பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர்.
    • படிப்புக்காகவும், வேலைவாய்ப்புகளுக்காகவும் கனடா சென்ற பல லட்சம் இந்தியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

    டொரன்டோ:

    இந்தியாவின் பஞ்சாப், அரியானாவில் சீக்கியர்கள் பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு அமைக்க வேண்டும் என சீக்கியர்கள் ஆயுதப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் முறியடிக்கப்பட்டது.

    இதனால் இந்தியாவை விட்டு தப்பி ஓடிய சீக்கியர்கள் லட்சக்கணக்கானோர் கனடாவில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தனர். கனடாவின் மொத்த மக்கள்தொகையில் சீக்கியர்கள் தற்போது 2.1 சதவீதம் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கனடா அரசியலிலும் சீக்கியர்கள் பங்களிப்பு வலிமையாகி விட்டது.

    இந்நிலையில் இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகளை கனடா ஒப்படைக்காத வேளையில், தேடப்படும் பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர். கனடாவில் நிகழ்ந்த இந்த கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என்று கனடா குற்றம் சாட்டியதோடு இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியது.

    இதை கண்டித்த இந்தியா கனடாவின் தூதரக அதிகாரியை வெளியேற்றியது. இதனால் இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு என்ற காலிஸ்தான் பயங்கரவாத இயக்கம், கனடாவில் வாழும் இந்துக்களை மிரட்டி இருக்கிறது.

    இதுதொடர்பாக காலிஸ்தான் பயங்கரவாதிகள் வெளியிட்ட அறிவிப்பில், கனடாவில் இருந்து இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் வெளியேறி இந்தியாவுக்கு செல்ல வேண்டும். நீங்கள் இந்தியாவை மட்டும் ஆதரிக்கவில்லை.

    காலிஸ்தான் தனிநாடு கோருகிறவர்கள் மீதான அடக்குமுறையையும் ஆதரிக்கிறீர்கள். ஆகையால் கனடாவை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு செல்லுங்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் படிப்புக்காகவும், வேலைவாய்ப்புகளுக்காகவும் கனடா சென்ற பல லட்சம் இந்தியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

    • 2017-ம் ஆண்டில் சுக்தூல் சிங் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
    • இந்தியா மீது கனடா கொண்டுள்ள கோபம் ஏற்கனவே சமீபத்தில் முடிவடைந்த ஜி20 உச்சி மாநாட்டின்போது வெளிப்பட்டது.

    ஒட்டாவா:

    கனடாவில் சமீபத்தில் காலிஸ்தான் பிரிவினைவாத குழு தலைவர் நிஜார் சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு இந்தியா காரணம் என்று கனடா குற்றம் சாட்டியது.

    இதை இந்தியா மறுத்த நிலையில் 2 நாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள தூதர்களை வெளியேற்றின. இதனால் இந்தியா-கனடா இடையே உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

    கனடாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதே வேளையில் கனடாவில் உள்ள இந்துக்கள் வெளியேறுமாறு காலிஸ்தான் பயங்கரவாத கும்பல் மிரட்டி உள்ளது.

    இது போன்ற பரபரப்புகளுக்கு மத்தியில் கனடாவில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். அவர் இந்தியாவின் என்.ஐ.ஏ. அமைப்பால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த சுக்தூல் சிங் ஆவார்.

    கனடாவின் வின்னிபெக் நகரில் பிரிவினைவாத குழுக்களுக்கு இடையேயான மோதலில் சுக்தூல்சிங் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 2017-ம் ஆண்டில் சுக்தூல் சிங் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

    இந்தியாவில் இருந்து கனடாவுக்கு தப்பி சென்ற அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். கொல்லப்பட்ட சுக்தூல்சிங் போலி பாஸ்போர்ட்டில் அங்கு தங்கி இருந்தார்.

    கனடாவில் பெரும்பான்மையாக உள்ள சீக்கியர்களின் வாக்குகளை பெறுவதற்காக கனடா அரசு தொடர்ந்து பிரிவினைவாத குழுக்களுக்கு ஆதரவா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    இந்தியா மீது கனடா கொண்டுள்ள கோபம் ஏற்கனவே சமீபத்தில் முடிவடைந்த ஜி20 உச்சி மாநாட்டின்போது வெளிப்பட்டது. அப்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்பட மாநாட்டுக்கு வந்திருந்த தலைவர்களுக்காக சிறப்பு பாதுகாப்புகளுடன் ஓட்டலில் அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

    ட்ரூடோ தங்கியிருந்த மத்திய டெல்லியில் உள்ள லலித் என்ற ஓட்டலில் ஸ்னைப்பர் தோட்டாக்கள் துளைக்க முடியாத தடிமனான பாலிகார்பனேட் பிளாஸ்டிக் குண்டுகள் துளைக்காத கண்ணாடி மூலம் மேம்பட்ட பாதுகாப்பு கவசம் நிறுவப்பட்டிருந்தது. இது தவிர மற்ற பாதுகாப்பு உபகரணங்களும் இருந்தன.

    இருப்பினும், ட்ரூடோவின் பிரதிநிதிகள் அங்கு தங்க வேண்டாம் என்று முடிவு செய்து, அதற்குப் பதிலாக சாதாரண அறைகளை தேர்ந்தெடுத்து தங்கியதால், இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது.

    இந்திய அதிகாரிகள் பல முறை கனடா பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சாதாரண அறைகளில் தங்கியிருந்தது மட்டுமின்றி, அதற்காக கனடா தரப்பில் பணம் செலுத்தவும் முன்வந்ததாக கூறப்படுகிறது.

    உச்சிமாநாட்டிற்குப் பிறகு நாடு திரும்பியபோது கனடா பிரதமரின் சிறப்பு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு தாமதம் ஆனது. அப்போது அவர் நாடு திரும்ப இந்தியா விமானத்தை வழங்க முன்வந்தது. ஆனால் அதுவும் கனடா தரப்பில் நிராகரிக்கப்பட்டது.

    ×