"நாட்டைவிட்டு வெளியேறுங்கள்": கனடாவில் வாழும் இந்துக்களுக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல்

இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகளை கனடா ஒப்படைக்காத வேளையில், தேடப்படும் பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர். படிப்புக்காகவும், வேலைவாய்ப்புகளுக்காகவும் கனடா சென்ற பல லட்சம் இந்தியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
"நாட்டைவிட்டு வெளியேறுங்கள்": கனடாவில் வாழும் இந்துக்களுக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல்
Published on

டொரன்டோ:

இந்தியாவின் பஞ்சாப், அரியானாவில் சீக்கியர்கள் பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு அமைக்க வேண்டும் என சீக்கியர்கள் ஆயுதப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் முறியடிக்கப்பட்டது.

இதனால் இந்தியாவை விட்டு தப்பி ஓடிய சீக்கியர்கள் லட்சக்கணக்கானோர் கனடாவில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தனர். கனடாவின் மொத்த மக்கள்தொகையில் சீக்கியர்கள் தற்போது 2.1 சதவீதம் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கனடா அரசியலிலும் சீக்கியர்கள் பங்களிப்பு வலிமையாகி விட்டது.

இந்நிலையில் இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகளை கனடா ஒப்படைக்காத வேளையில், தேடப்படும் பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர். கனடாவில் நிகழ்ந்த இந்த கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என்று கனடா குற்றம் சாட்டியதோடு இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியது.

இதை கண்டித்த இந்தியா கனடாவின் தூதரக அதிகாரியை வெளியேற்றியது. இதனால் இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு என்ற காலிஸ்தான் பயங்கரவாத இயக்கம், கனடாவில் வாழும் இந்துக்களை மிரட்டி இருக்கிறது.

இதுதொடர்பாக காலிஸ்தான் பயங்கரவாதிகள் வெளியிட்ட அறிவிப்பில், கனடாவில் இருந்து இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் வெளியேறி இந்தியாவுக்கு செல்ல வேண்டும். நீங்கள் இந்தியாவை மட்டும் ஆதரிக்கவில்லை.

காலிஸ்தான் தனிநாடு கோருகிறவர்கள் மீதான அடக்குமுறையையும் ஆதரிக்கிறீர்கள். ஆகையால் கனடாவை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு செல்லுங்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் படிப்புக்காகவும், வேலைவாய்ப்புகளுக்காகவும் கனடா சென்ற பல லட்சம் இந்தியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com