search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரத்ததானம், ஏழைகளுக்கு உதவி என விஜய் பிறந்தநாளில் அவரது ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்
    X

    ரத்ததானம், ஏழைகளுக்கு உதவி என விஜய் பிறந்தநாளில் அவரது ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்

    விஜய் பிறந்தநாளை கோலாகலமாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவதுடன், ரத்ததானம், ஏழைகளுக்கு உதவி என பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
    இன்று நடிகர் விஜய்யின் 43-வது பிறந்த நாள்.

    இதையொட்டி, விஜய் நடிக்கும் 61-வது படத்தின் பெயர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. முதல் போஸ்டரும் வெளியானது.

    ‘மெர்சல்’ என்ற பெயருடன் வெளியான முதல் போஸ்டரில் விஜய் பனியன் அணிந்து முறுக்கு மீசையுடன் இருக்கிறார். பின்னணியில் காளைகள் பாய்ந்து வருவது போன்ற படம் இடம் பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு காளையின் கொம்பில் ஆரம்பித்து வாலில் முடிவது போன்று ‘மெர்சல்’ என்ற எழுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.



    நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ‘மெர்சல்’ படத்தின் 2-வது போஸ்டர் வெளி யானது. இதில் ஒரு சிவப்பு நிறகோடும், சீட்டு கட்டுகளை விஜய் சிதற விடுவது போன்றும் அமைந்துள்ளது. இதில் விஜய் இடது கையை தீட்டியபடி கோபத்துடன் காணப்படுகிறது.

    பிரமாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் விஜய்யுடன் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடிக்கிறார்கள். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். அட்லி இயக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இது ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் 100-வது படம்.

    விஜய் பிறந்தநாள், புதிய படத்தின் பெயர், போஸ்டர் வெளியீடு ஆகியவற்றை விஜய் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.



    வெளிநாட்டில் உள்ள ரசிகர்களும் விஜய் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். பல்வேறு இடங்களில் விஜய் நடித்த பிரபல படங்கள் அவரது ரசிகர்கள் சார்பில் திரையிடப்பட்டன. இதை ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து ஆரவாரம் செய்தனர். படம் பார்க்க வந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

    விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு ஊர்களில் விஜய் ரசிகர்கள் ரத்த தானம் வழங்கினார்கள். அனாதைகள் இல்லம், முதியோர் இல்லங்களுக்கு சென்று உணவு வழங்கினார்கள்.

    ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்கள். இதற்காக சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி அதில் உதவிகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் ஆகியவற்றையும் வழங்கினார்கள்.



    விஜய் பிறந்த நாளை யொட்டி ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழைகளுக்கும் பல்வேறு உதவிகள், ரத்த தானம் வழங்கப்பட்டது. வடசென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் கட்பீஸ் விஜய், தென் சென்னை மாவட்ட தலைவர் தாமு, மத்திய சென்னை மாவட்ட தலைவர் பூக்கடைகுமார் தலைமையில் அந்தந்த பகுதிகளில் விஜய் பிறந்த நாள் இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் ஈ.சி.ஆர். சரவணன் தலைமையில் காஞ்சீபுரம் மாவட்டத்திலும், திருவள்ளூர் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் திருவள்ளூர் மாவட்டத்திலும் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். ரத்த தானம், ஏழைகளுக்கு பல்வேறு உதவிகள் ஆகியவை வழங்கப்பட்டன.

    அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் ஆனந்த் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைந்து நடத்த ஏற்பாடுகளை செய்து இருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இனிப்புகளையும், ஏழைகளுக்கு உதவிகளையும் வழங்கினார்.



    விஜய் பிறந்தநாளையொட்டி வெளியான புதிய படம் பெயர், போஸ்டர் ஆகியவற்றை இணையதளத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து பாராட்டி வருகிறார்கள். நிமிடத்துக்கு நிமிடம் இதை இணைய தளத்தில் காண்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் விஜய்யை ‘தளபதி’ என்று குறிப்பிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    விஜய் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. திரைஉலக பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    நெல்லை ரசிகர்கள் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 4 ஆயிரம் அடி நீல போஸ்டரை ஒட்டி இருக்கிறார்கள். இதுவரை எந்த நடிகருக்கும் இது போன்ற போஸ்டர் ஒட்டப்படவில்லை. இது விஜய் ரசிகர்களின் சாதனை என்று நெல்லை ரசிகர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×