search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலை"

    • "பிளாஸ்டர் ஆப் பாரீஸ்" ரசாயனம் பயன்படுத்தப்படாத சிலைகள் என சிலை வைத்துள்ள அமைப்பினர் கூறி அனுமதி வாங்கியுள்ளனர்.
    • நான்கு சக்கர வாகனத்தில் மட்டுமே கொண்டு வரவேண்டும்.

    மாமல்லபுரம்:

    இன்று விநாயகர் சதூர்த்தி கொண்டாட வைக்கப்படும் சிலைகளை மாமல்லபுரம் கடலில் வரும் 24ம் தேதி கரைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்., செங்கல்பட்டு மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 365 சிலைகளும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின்படி "பிளாஸ்டர் ஆப் பாரீஸ்" ரசாயனம் பயன்படுத்தப்படாத சிலைகள் என சிலை வைத்துள்ள அமைப்பினர் கூறி அனுமதி வாங்கியுள்ளனர்.

    இந்த சிலைகளை செங்கல்பட்டு மாவட்ட கடலோர பகுதிகளான மாமல்லபுரம், சதுரங்கபட்டினம், கடலூர், கடப்பாக்கம், பெரியகுப்பம் பகுதிகளுக்கு பக்தர்கள் கரைக்க வரும் போது சிலைகள் பரிசோதனை செய்யப்படும் அதில் ரசாயன கலவை இருப்பது தெரியவந்தால் கடலில் கரைக்க அனுமதி கிடையாது. அதேபோல் சிலைகளை மாட்டு வண்டி, மீன்பாடி ஆட்டோ, ரிக்ஷா, தள்ளுவண்டி போன்றவைகளில் கொண்டுவரவும் அனுமதி கிடையாது. டிராக்டர், மினிலாரி, வேன் போன்ற நான்கு சக்கர வாகனத்தில் மட்டுமே கொண்டு வரவேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • அனைத்து இடங்களிலும் பல வண்ண விநாயகர் சிலைகள் வைத்து விழா விமரிசையாக நடந்து வருகிறது.
    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 313 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது.

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமானோர் தங்கள் வீடுகளில் சிறிய விநாயகர் சிலைவைத்து வழிபாடு நடத்தினர். இதேபோல் பொது இடங்களில் இந்து அமைப்பினர் சார்பில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

    காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 1456 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து இடங்களிலும் பல வண்ண விநாயகர் சிலைகள் வைத்து விழா விமரிசையாக நடந்து வருகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 313இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீஸ் சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஏகாம்பரநாதர் கோயில், குமரகோட்டம் முருகன் கோவில், காமாட்சி அம்மன் கோவில்களில் இன்று அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் வேதாச்சலம் நகர் பகுதியில் 13 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டது.

    காமாட்சியம்மன் சன்னதி தெருவில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.விநாயகருக்கு ரூபாய் நோட்டுகளால் ரூ.15 லட்சத்தில் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதேபோல் காஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. விநாயக பெருமானுக்கு பலவிதமான நறுமண பொருட்களால் கலச அபிஷேகமும். சிறப்பு அலங்காரமும், 27 நட்சத்திர அதிதேவதைகள், ராகு, கேது, சனீஸ்வர பகவான்களுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து லட்சர்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட், நேரு மார்க்கெட் மற்றும் தேரடி பகுதிகளில் விநாயகர் சிலை, பூ, பழங்கள், எருக்கம்பூ மாலை, அருகம்புல் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை களைகட்டியது.

    வழிபாட்டுக்கு வைக்கப்படும் விநாயகர் சிலைகளை 5 நாட்களில் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை, சர்வதீர்த்த குளம் ஆகிய 2 இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் எனவும், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலை ஊர்வலம் செல்லவேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர்.

    திருவள்ளூரில் கடந்த ஆண்டைவிட குறைவான இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி அளித்து இருந்தனர். திருவள்ளூரில் 111, திருத்தணியில் 121, ஊத்துக்கோட்டையில் 209, பொன்னேரியில் 46, கும்மிடிப்பூண்டியில் 153 என மொத்தம் 640 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீசார் அனுமதி அளித்து இருந்தனர்.

    சிலைகளுக்கு அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 313 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வீடுகளில் வைத்து வழிபட சிறிய வகை விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    விநயாகர் சதுர்த்தியை முன்னிட்டு திருத்தணி மா.பொ.சி. சாலை மார்க்கெட் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது. ஏராளமான பொதுமக்கள் பூ, மாலை, பழங்கள் உள்ளிட்ட விநாயகருக்கு படையலிடும் பூஜை பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் மார்க்கெட்டில் வழக்கத்தை விட இன்று காலை கூட்டம் அதிகாமாக காணப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. களி மண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகள் விற்பனை அதிகம் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் அந்தந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் வழபட்டு சென்றனர்.

    மாமல்லபுரம் கடலில் வருகிற 24-ந் தேதி விநாயர் சிலைகளை கரைக்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.மாமல்லபுரம், சதுரங்கபட்டினம், கடலூர், கடப்பாக்கம், பெரியகுப்பம் பகுதிகளுக்கு பக்தர்கள் சிலைகளை கரைக்க வரும் போது சிலைகள் பரிசோதனை செய்யப்படும். அதில் ரசாயன கலவை இருப்பது தெரியவந்தால் கடலில் கரைக்க அனுமதி கிடையாது. அதேபோல் சிலைகளை மாட்டு வண்டி, மீன்பாடி ஆட்டோ, ரிக் ஷா, தள்ளுவண்டி போன்றவைகளில் கொண்டுவரவும் அனுமதி கிடையாது. டிராக்டர், மினிலாரி, வேன் போன்ற நான்கு சக்கர வாகனத்தில் மட்டுமே கொண்டு வரவேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • இருதரப்பினரும் இன்று விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யக்கூடாது என போலீசார் தடை விதித்துள்ளனர்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கூனிமேடு ஊராட்சி. இங்கு கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள விநாயகர் கோவிலில் ஒரு பிரிவினர் ஆண்டுதோறும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வதும், அதனைத் தொடர்ந்து விநாயகர் கோவிலுக்கு திருவிழா நடத்துவதும் வழக்கமாக உள்ளது.

    இதேபோல் இவர்கள் வைக்கும் விநாயகர் சிலைக்கு அருகில் அதே ஊரை சேர்ந்த மற்றொரு தரப்பினரும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு இரு தரப்பினரும் வழக்கம்போல் தாங்கள் விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் கொட்டகை அமைக்க ஏற்பாடு செய்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதிக் கொள்ளும் அபாயம் உருவானது.

    இது பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்து முறையாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யுமாறு கூறினர்.

    ஆனால் போலீசாரின் கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர். இதனால் இருதரப்பினரும் இன்று விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யக்கூடாது என போலீசார் தடை விதித்துள்ளனர்.

    இந்த தடையை மீறி யாரும் அப்பகுதியில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    மேலும் இது சம்பந்தமாக இரு தரப்பையும் அழைத்து மரக்காணம் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தவும் போலீஸ் சார்பில் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட உள்ளனர்.
    • மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட உள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்துக்களுக்கு முன்னாள் கவுன்சிலர் அஸ்லம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட முஸ்லீகள் விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்களான மாலை, ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு, கற்பூரம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கிருஷ்ணகிரி அடுத்த ராசுவீதி பகுதியில் உள்ள வீடுகளுக்கு சிலை மற்றும் பூஜை பொருட்களை அவர்கள் வழங்கினார்கள். மேலும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியின் போது ரியாஸ், நதிம், அஷ்ரப், ஏஜாஸ், ஜாபர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 312 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
    • இந்து முன்னணி மாவட்ட தலைவர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் 312 சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இன்று காலை கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அனைத்து விநாயகர் கோவில்களும் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.

    ராமநாதபுரம் கோட்டை வாசல் விநாயகர் கோவில், மண்டபம், தேவிபட்டினம், கீழக்கரை சக்தி விநாயகர் கோவில், ஏர்வாடி வெட்டமனை, தொத்தன் மகன்வாடி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    உலக நன்மை வேண்டியும் கல்வி, குடும்பம், திருமண தடை ஆகியவைகள் நீங்கி சிறப்படைய கூட்டுப்பிராத்தனையும் கோவில்களில் நடந்தது. தொடர்ந்து இன்றும் நாளையும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    ராமநாதபுரம் போலீஸ் சப் டிவிசனில்-65, பரமக் குடி-67, கமுதி-17, ராமேசு வரம்-103, கீழக்கரை 35, திருவாடானை-14, முது குளத்தூர் போலீஸ் சப் டிவிசனில் 11 என மாவட் டத்தில் மொத்தம் 312 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சிலைகள் 3 அடி முதல் 9 அடி உயரம் வரையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    மக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை அதிகாலை யிலேயே வாங்கி வந்து வீடுகளில் வைத்து வழிபட்டனர். பின்னர் விநாய கருக்கு உகந்த சுண்டல், கொழுக்கட்டை, கடலை, பொங்கல் அவல், பொரி போன்ற பொருட்களை வைத்து படைய லிட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை உத்தரவின்படி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு நேற்று மாலை முதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

    இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராம மூர்த்தி விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கான முன்ஏற்பாடு பணிகளை செய்து வருகிறார்.

    பின்னர் அவர் கூறுகையில், நாளை 19-ந்தேதி ராமேசுவரம், தங்கச்சி மடம், பாம்பன், மண்டபம், பரமக்குடியில் ஊர்வலம் நடக்கிறது. நாளை மறுநாள் 20-ந்தேதி தேவிபட்டினம், திருப்புல்லாணி, ஏர்வாடி, சாயல்குடி, திருப்பாலைக் குடி ஆகிய பகுதிகளில் ஊர்வலம் நடைபெறும் என்றார்.

    • சிலை விநாயகர் சதுர்த்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
    • பென்சில் நுனியில் 12 மில்லி மீட்டர் நீளம், 4 மில்லி மீட்டர் அகலத்தில் விநாயகர் சிலையை செதுக்கி உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம், வனப்பள்ளியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பழங்கால நாணயங்களான அரை அனா, 1 அனா, 10 பைசா, 20 பைசா மற்றும் தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் என 10 ஆயிரம் நாணயங்களை கொண்டு 3 அடி உயரத்தில் விநாயகர் சிலையை வடிவமைத்து உள்ளார்.

    இந்த சிலை விநாயகர் சதுர்த்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது அந்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த அமீர்ஜான் என்பவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 666 மக்காசோள விதைகளில் அக்ரிலிக் பெயிண்ட்டால் மைக்ரோ பிரஸ்களை கொண்டு விநாயகர் உருவங்களை வரைந்தார்.

    அனக்கா பள்ளி மாவட்டம் நக்கப்பள்ளி மண்டலம் சினொட்டிக் கல்லுவை சேர்ந்த டாக்டர் வெங்கடேஷ் என்பவர் பென்சில் நுனியில் 12 மில்லி மீட்டர் நீளம், 4 மில்லி மீட்டர் அகலத்தில் விநாயகர் சிலையை செதுக்கி உள்ளார்.

    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேசுவரத்தில் விநாயகர் சிலை விற்பனை மும்முரம் நடந்தது.
    • பல்வேறு இடங்களில் சாலையோரம் கடைகளை வைத்துள்ளனர்.

    ராமேசுவரம்

    நாடு முழுவதிலும் நாளை விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டா டப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று சிலையை வைத்து வழிபாடு நடத்தி நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

    இந்த நிலையில், ராமேசுவரத்தில் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்திடும் வகையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு கொண்டு வைக்கப் பட்டுள்ளது. இதில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த வியாபாரிகள் செந்தில் மற்றும் ராமன் ஆகியோர் 800 விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய கொண்டு வந்து பல்வேறு இடங்களில் சாலையோரம் கடைகளை வைத்துள்ளனர்.

    கண்மாய் மணல் மூலம் தயாரிக்கப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கும் போது மீன்களுக்கும், நீரின் தன்மை மாசுபடாமல் இருக்கும் வகையில் வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தனர். வீடுகளில் வழிபாடு செய்திடும் வகையில் பல வர்ணங்களில் சிறிய அளவி லான சிலைகள் விற்ப னைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

    • செங்கோட்டை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவை உள்ளன.
    • வருங்காலத்தில் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காணாமல் போய்விடும்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, இலஞ்சி, தேன்பொத்தை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவை உள்ளன. இவர்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா காலத்தில் களிமண்ணால் விநாயகர் சிலை தயாரித்து விற்பனை செய்து அதன் மூலம் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இதில் செங்கோட்டை நகர் பகுதியில் மட்டும் சுமார் 50 முதல் 60 விநாயகர் சிலைகளை பல்வேறு வடிவங்களில் வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப 1 அடி முதல் 7 அடி வரை சுத்த களிமண்ணால் விநாயகர் சிலைகளை வடிவமைத்து விற்பனை செய்வார்கள். இவற்றை செங்கோட்டை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிற்கும் ரூ. 1,000 முதல் ரூ.7,000 வரை விற்பனை செய்து லாபம் ஈட்டி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில வருடங்களாவே விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக ஆந்திரா, புதுச்சேரி, விஜயவாடா, திருப்பதி ஆகிய பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் தயாரிக்க தேவையான கிழங்குமாவு, காகித கூழ், ரசா யனங்கள் உள்ளிட்ட வை கொண்டு வரப்பட்டு அதன் மூலம் சிலைகள் தயாரித்து சிலர் விற்பனை செய்கின்றனர்.

    இதனால் அந்த சிலைகள் பல வண்ணங்களில் மக்களை ஈர்க்கும் வகையில் உள்ளதால், செங்கோட்டை மக்கள் களிமண்ணால் தயாரிக்கும் சிலைகளுக்கு மவுசு குறைந்துவிட்டது. நாகரீக வளர்ச்சி என்று கூறிக்கொண்டு, நீர்நிலைக ளை மாசுபடுத்தும் ரசா யனங்கள் கலந்த சிலைகளையே மக்கள் அதிகம் விரும்புவதால், களிமண் சிலை விற்பனை குறைந்து விட்டதாகவும், இதனால் வாழ்வாதாரம் பாதிப்ப டைந்துள்ளதாகவும் செங்கோட்டை சிலை தயாரிப்பாளர்கள் குமுறு கின்றனர்.

    இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காணாமல் போய்விடும். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 24 பேர் கொண்ட குழுவினர் சிலை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • இந்தியாவில் மிகப்பெரிய விநாயகர் சிலை இதுதான் என விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கஜுவாக்காவில் 17 அடி உயரமுள்ள ஸ்ரீ அனந்த பஞ்சமுக மகா கணபதி சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த விநாயகர் சிலையை வடிவமைப்பதற்காக அனக்கா பள்ளி மாவட்டம் மற்றும் கொல்கத்தாவில் இருந்து 5 டன் எடையுள்ள களிமண் கொண்டுவரப்பட்டு சிலை செய்யப்பட்டு உள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பிரபல சிலை வடிவமைப்பு கலைஞர் கொத்த கொண்ட நாகேஷ் தலைமையில்சிலையை வடிவமைப்பதற்காக மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 24 பேர் கொண்ட குழுவினர் சிலை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்தியாவில் மிகப்பெரிய விநாயகர் சிலை இதுதான் என விழாக்குழுவினர் தெரிவித்தனர். 

    • அனுமன் சேனா, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் வருகிற 21-ந் தேதி விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.
    • தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 1000 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் விமரிசையாக நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் அங்கு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இந்து முன்னணி சார்பில் ஊட்டி நகர பகுதிகள், மஞ்சூர், எமரால்டு, இத்தலார், காத்தாடி மட்டம், கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

    கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் 30 சிலைகள் என மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இதுதவிர பல்வேறு கிராம பகுதிகளில் பொதுமக்கள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. ஊட்டியில் இந்து முன்னணி சார்பில் வருகிற 20-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காமராஜர் சாகர் அணையில் கரைக்கப்படுகிறது. அனுமன் சேனா, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் வருகிற 21-ந் தேதி விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக ஊட்டியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக இந்த ஆண்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊர்வலத்தின் போது பதட்டமாக கண்டறியப்பட்டு உள்ள பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 1000 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. வெளி மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊட்டியில் நேற்று நடந்தது. தாவரவியல் பூங்கா சாலையில் தொடங்கிய அணிவகுப்பு, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, அப்பர் பஜார், மெயின் பஜார் வழியாக மத்திய பஸ் நிலையத்தை சென்றடைந்தது.

    அதேபோல காந்தலிலும் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பில் ஆயுதம் ஏந்திய போலீசார் பங்கேற்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்த ராஜன், டி.எஸ்.பி.க்கள் யசோதா, விஜயலட்சுமி மற்றும் காவல்துறை உயர்அ திகாரிகள் கலந்து கொண்டனர். 

    • சிலைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய பாளையங்கோட்டை வருவாய் துறையினர் மற்றும் போலீசார் தடை விதிக்க கூடாது என வழக்கு.
    • பிளாஸ்டர் ஆப் பாரிஸில் தயாரிக்கப்பட்ட சிலைகள் இருந்தால் ஆற்றில் கரைக்க கூடாது என்றும் உத்தரவு.

    திருநெல்வேலியில் மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, உடனடியாக விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ராஜஸ்தானைச் சேர்ந்த விநாயகர் சிலை தயாரிப்பாளர் பிரகாஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, சில யோசனைகளுடன், "நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தயார் செய்யப்பட்டுள்ள சிலைகளை விற்க தடையில்லை" என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் விதமாக பிளாஸ்டர் ஆப் பாரிஸில் தயாரிக்கப்பட்ட சிலைகள் இருந்தால் ஆற்றில் கரைக்க கூடாது.

    சிலையை வாங்குபவர்களிடம், அதை ஆற்றில் கரைக்க மாட்டோம் என உறுதிமொழி வாங்கிவிட்டு சிலைகளை விற்கலாம்.

    வீட்டில் வைத்து வழிபடுவதற்கு, விநாயகர் சிலைகளை வாங்குவோரின் விவரங்களை பெற்றுக்கொண்டு, போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் அவர்களை கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை நீதிபதி வழங்கினார்.

    • விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை ஏற்படுத்தும் விதமாக உள்நோக்கத்தோடு தமிழக அரசு செயல்படுவதாக அவர்கள் புகார் கூறினர்.
    • மறியலுக்கு முயன்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    நெல்லை:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு நீர்நிலைகளில் விஜர்சனம் செய்யப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் சதுர்த்தி விழாவையொட்டி ரசாயன கலப்பு கொண்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க ஐகோர்ட்டும், பசுமை தீர்ப்பாயமும் தடை விதித்துள்ளது.

    இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு கூடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் மாதிரிகள் சேகரித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் பாளை சீவலப்பேரி ரோடு கிருபா நகரில் வடமாநில தொழிலாளர்கள் செய்து வரும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான விநாயகர் சிலைகள் ரசாயன கலப்பு இருப்பதாக கூறி, அங்கு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்வதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

    இதைத்தொடர்ந்து தகரம் வைத்து அந்த கூடத்தை அடைத்து அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இதற்கு நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். வழிபடுவதற்காக செய்யப்பட்ட சிலைகளை விற்பனைக்கு வழங்காமல் தடுத்து, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை ஏற்படுத்தும் விதமாக உள்நோக்கத்தோடு தமிழக அரசு செயல்படுவதாக அவர்கள் புகார் கூறினர்.

    மேலும் தயாரித்து வைத்துள்ள சிலைகளை விற்பனைக்கு வழங்க கோரி நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்டத் தலைவர் தயா சங்கர் தலைமையில் இன்று வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளுடன் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் சுரேஷ், வேல் ஆறுமுகம், முத்து பலவேசம், மாவட்ட செயலாளர்கள் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி, நாகராஜன், முன்னாள் மேயர் புவனேஸ்வரி, மண்டல தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனையொட்டி அங்கு பாளை உதவி கமிஷனர் பிரதீப் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    தொடர்ந்து பா.ஜ.க.வினர் சாலை மறியலுக்கு முயற்சி செய்தனர். அப்போது அவர்களிடம் உதவி கமிஷனர் மற்றும் பாளை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியலுக்கு அனுமதி கிடையாது, மீறி மறியலுக்கு முயன்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    அப்போது அவர்களிடம் மாவட்ட தலைவர் தயாசங்கர் கூறுகையில், இந்த ஆண்டு 180 சிலைகள் தயாரிக்கப்பட்டு கிருபா நகர் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகளுக்கு நாங்கள் முன்பணமும் கொடுத்துவிட்டோம். எனவே இந்த ஆண்டு மட்டும் அந்த சிலைகளை எங்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி கரைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு மட்டுமாவது அனுமதி தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து அவர்களின் கோரிக்கையை உயர் அதிகாரிகளிடம் பேசி இறுதி முடிவை அறிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இறுதி முடிவு தெரியும்வரை இங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என்று கூறி பாரதிய ஜனதா கட்சியினர் அங்கேயே அமர்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    ×