search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முடி உதிர்வு பிரச்சினை"

    • செம்பருத்திப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
    • கண்களும், உடலும் குளிர்ச்சி அடையும்.

    நமது ஊர்களில் பலபேர் வீடுகளின் முன்பு சாதாரணமாக செம்பருத்தி செடி வளர்ந்து இருப்பதை பார்த்து இருப்போம். நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு செம்பருத்திப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

    தோல் நோய் வராமல் பாதுகாக்க காயவைத்த செம்பருத்தி இதழ்களுடன், ஆவாரம்பூ பாசிப்பயிறு, கருவேப்பிலை இவைகளைச் சேர்த்து பொடியாக்கி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். தினம்தோறும் குளிப்பதற்கு, சோப்புக்கு பதிலாக இந்த தூளை உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். இதன் மூலம் நம் சருமமும் பளபளப்பாக இருக்கும்.

    பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தன்னுடைய தலைமுடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் தற்போது இருக்கும் வாழ்க்கை முறை மாற்றம், சூழல், ரசாயன ஷாம்போ பாவனை இவற்றால் அது பலவீனமடைகின்றது. இது போன்ற பிரச்சினை இருப்பவர்கள் ஆங்கில மருத்துவத்திற்கு செல்வதற்கு முன் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு கை வைத்தியம் செய்வதால் ஆரோக்கியமான முடிவை பெற முடியும்.

    இதன்படி, செம்பருத்தி பூவை பயன்படுத்தி எண்ணெய் செய்து தடவுவதால் தலைமுடி பிரச்சினைகள் அனைத்தும் சரியாகின்றது என கூறப்படுகின்றது.

    செம்பருத்தி பூ வெப்பமண்டல பகுதிகளில் பொதுவாக காணப்படும் பூச்செடி. இதில் இருக்கும், இலை மற்றும் பூ உங்கள் கூந்தலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அந்த வகையில், செம்பருத்தியை தலைமுடி பிரச்சினைக்கு எப்படி பயன்படுத்துவது, அதன் நன்மைகள் என்ன? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்...

    1. தேங்காய் எண்ணெய் + செம்பருத்தி பூ ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி தலைக்கு தடவினால் தலைமுடி உதிர்வு குறையும்.

    2. செம்பருத்தி எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ மற்றும் சி மற்றும் ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் தலைமுடி பாதுகாக்கப்படுகின்றது.

    3. செம்பருத்தி எண்ணெய் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, தலைமுடியை பளபளப்பாக்கவும் உதவியாக இருக்கின்றது.

    4. மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் இரத்த ஓட்டம், புதிய முடி வளர்ச்சி மற்றும் சுழற்சியைத் தூண்டுதல் ஆகிய வேலைகளை செம்பருத்தி பார்க்கிறது.

    5. இந்த எண்ணெயை குளிக்கும் முன்னர் தடவுவதால் பலவீனமான தலைமுடிகள் உதிர்ந்து புதிய தலைமுடி வளர்வதற்கு உதவியாக இருக்கின்றது.

    6. சிலருக்கு இளநரை, பொடுகு தொல்லை, முடி உதிரும் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். செம்பருத்திப்பூ இலைகளுடன் கருவேப்பிலை, மருதாணி இலை இவற்றை சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து பின்பு குளிக்க வேண்டும். இதேபோன்று வாரத்திற்கு 2 முறை செய்துவந்தால் தலைமுடி பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இப்படி செய்து வரும்போது நம் கண்களும், உடலும் குளிர்ச்சி அடையும். உடம்பில் உள்ள சூடு தன்மை குறையும்.

    7. அதிக தலைமுடி உள்ளவர்களுக்கு பேன் ஈறு தொல்லை அதிகமாக இருக்கும். அப்படி உள்ளவர்கள் இரவில் தூங்கும் போது செம்பருத்திப் பூவை தலையில் வைத்துக்கொண்டு அப்படியே படுத்து உறங்கலாம். நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க 2, 3 செம்பருத்திப் பூக்களை நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு டம்ளர் அளவு நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை நீங்கும்.

    • பொடுகு இல்லாத கூந்தல் வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.
    • நீங்களும் கூந்தல் அழகியாக சில டிப்ஸ்

    கூந்தல் பராமரிப்பில் பலருக்கும் உள்ள சிக்கல் தங்களின் வறண்ட கூந்தலை எப்படி சரி செய்வது என்பதுதான். குறிப்பாக இந்த வகை கூந்தல் உள்ளவர்களுக்கு முடி எளிதில் உடையும். அதிகமாக உதிரும். முடியில் ஈரப்பதம் நிச்சயம் தேவையான ஒன்று. அதை எப்படி தக்க வைத்துக் கொள்வதென இங்கு பார்ப்போம்.

    எல்லா பெண்களும் அடிக்கடி முடி உதிராத, நீண்ட, பளபளப்பான, பொடுகு இல்லாத கூந்தல் வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். நீங்களும் கூந்தல் அழகியாக சில டிப்ஸ்:

    அவகேடா, தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்ந்த ஹேர் மாஸ்க் வறண்ட கூந்தலுக்கு சிறந்த ஒன்று. இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் மென்மையான பட்டு போன்ற கூந்தல் கிடைக்கும்.

    ஒரு கையளவு வேப்பிலை எடுத்து 4 கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடுங்கள். ஆறியதும் அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம். வினிகரை தலையில் தடவி குளித்து வந்தாலும் பொடுகு தொல்லை குறையும்.

    வெந்தயம், வேப்பிலை, கறிவேப்பிலை, பாசிபருப்பு, ஆவாராம் பூ ஆகியவற்றை வெயிலில் காய வைத்து மெஷினில் நன்கு பொடித்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்புக்கு பதிலாக வாரம் இருமுறை கூந்தலில் தேய்த்து அலசி குளியுங்கள். உங்கள் கூந்தல் பளப்பளக்க தொடக்கிவிடும்.

     ஹேர் டிரையரை அதிகம் உபயோகிக்காதீர்கள். அப்படி செய்தால் தலை வறண்டு, முடியின் வேர்களும் பழுதடைந்து போய்விடும். மேலும், அதிக கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ, ஹேர் கலர் ஆகியவற்றை பயன்படுத்தாதீர்கள்.

    இரவு படுக்கைக்கு செல்லுமுன் ஆலிவ் ஆயிலை தலையில் தடவி ஊறவிட்டு, மறுநாள் காலையில் குளித்து வந்தால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

    தலைக்கு குளித்த பின்னர், ஒரு கப் தண்ணீரில் 1/2 கப் வினிகரை கலந்து தலையில் தேய்த்து அலசவும். பின் அப்படியே துண்டால் தலையில் கட்டிக் கொள்ளவும். 15 நிமிடத்திற்கு ஊற விடுங்கள். பின்பு, பேன் சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்துவிடும். 2 வாரத்திற்கு ஒருமுறை இப்படி செய்து வந்தாலே போதும். பேன் தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.

    முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, தலையில் தேய்த்து ஊறவைத்து, மாதம் 2 முறை அவ்வாறு செய்து குளித்து வந்தால் போதும். கூந்தல் பளபளக்க ஆரம்பித்து விடும்.

    கறிவேப்பிலை, மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரையை தடுக்கலாம். மாதம் இரு முறை இவ்வாறு செய்தாலே போதும்.

    • பழங்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
    • சரியான கூந்தல் பராமரிப்பு இல்லாததும் ஒரு காரணம்.

    பழங்கள் மற்றும் காய்கறிகளை டயட்டில் சேர்ப்பதால், அவை உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டும் தருவதில்லை, சருமம் மற்றும் கூந்தலுக்கும் தான் ஆரோக்கியத்தை தருகிறது. மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது, மட்டுமின்றி, அவற்றை அழகுப் பொருளாகவும், சருமம் மற்றும் கூந்தலுக்கும் பயன்படுத்தலாம்.

    இத்தகைய சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு நிறைய பழங்கள் பயனுள்ளவையாக உள்ளன. உதாரணமாக, மிகவும் பிரபலமான வாழைப்பழம் கூந்தலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் மிகவும் சிறந்தது. அதேபோன்று காய்கறிகளில் பசலைக் கீரை, ப்ராக்கோலி மற்றும் கேரட் போன்றவையும் கூந்தலுக்கு மிகவும் நல்லது.

    தற்போது கூந்தல் உதிர்தல் பிரச்சனை அதிகமாக உள்ளது. இவற்றிற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுகள் மட்டுமின்றி, சரியான கூந்தல் பராமரிப்பு இல்லாததும் ஒரு காரணம். எனவே இத்தகைய கூந்தல் உதிர்தலைத் தடுப்பதற்கு, பழங்களில் எவை பயன்படுகின்றன என்று ஒருசில பழங்களை பட்டியலிட்டுள்ளோம்.

     நெல்லிக்காய்

    நெல்லிக்கால் கூந்தல் வளர்ச்சிக்கான பொருள் நிறைந்துள்ளது. மேலும் தலையில் பொடுகு உள்ளவர்கள், நெல்லிக்காய் சாற்றுடன், எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முடியின் வேர்கால்களில் படும் படியாக தேய்த்து ஊற வைத்து குளித்தால், பொடுகுத் தொல்லையோடு, கூந்தல் உதிர்தல் பிரச்சனையும் நீங்கும்.

     அவகேடோ

    அவகேடோவின் நன்மைகளை சொல்லித் தான் தெரியுமா என்ன? அவகேடோ சருமத்திற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் பெரிதும் நன்மையைத் தருவதாக உள்ளது. அதிலும் ஸ்கால்ப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. அதற்கு அவகேடோ பழத்தை அரைத்து, அத்துடன், வெந்தயப் பொடி, சிறிது க்ரீன் டீ மற்றும் சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து, தலையில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும்.

     வாழைப்பழம்

    வாழைப்பழத்தை மசித்து, அதனை கூந்தலில் தடவி ஊற வைத்து குளித்தால், கூந்தல் பட்டு போன்றும் மிருதுவாக இருக்கும்.

     கொய்யாப்பழம்

    கொய்யாப்பழத்தில் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வைட்டமின் ஏ அதிகம். எனவே கொய்யாப்பழத்தை அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, கூந்தலில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும்.

     பப்பாளி

    கூந்தலை பராமரிக்க சிறந்த பழங்களில் பப்பாளியும் ஒன்று. அதற்கு பப்பாளியின் ஜூசை, பால் மற்றும் தேனுடன் கலந்து, ஸ்கால்ப்பில் தடவினால், ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகள் மட்டுமின்றி, கூந்தல் உதிர்தலும் நீங்கும்.

     ஆரஞ்சு

    சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான இனிப்புச் சுவையுடைய ஆரஞ்சு பழங்கள் கூந்தல் உதிர்தலைத் தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். அதற்கு ஆரஞ்சு பழத்தின் சாற்றினை தலையில் ஸ்கால்ப்பில் படும்படியாக தடவினால், நல்ல பலனைப் பெறலாம்.

     பெர்ரிஸ்

    இந்த அடர்ந்த நிறமுடைய பழங்கள் கூந்தல் உதிர்தலை தடுக்கவும், கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கவும் உறுதுணையாக உள்ளது. எப்படியெனில் இதில் உள்ள பயோஃப்ளேவோனாய்டுகள், ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு, மயிர்கால்களை வலுவாக்கி, கூந்தல் உதிர்தலை தடுக்கின்றன.

     செர்ரி

    செர்ரி பழங்களிலும், கூந்தல் உதிர்தலை தடுக்கும் பளோஃப்ளேவோனாய்டுகள் இருக்கின்றன.

     ப்ளம்ஸ்

    நல்ல ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? அப்படியெனில் கூந்தலைப் பராமரிக்க ப்ளம்ஸ் பயன்படுத்த வேண்டும். அதிலும், ப்ளம்ஸ் வைத்து, ஹேர் மாஸ்க் போட்டால், கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.

    பீச்

    பொதுவாக பீச் பழம் ஸ்கால்ப் பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் ஒரு பொருள். அதிலும் ஸ்கால்ப்பானது சுத்தமாக இல்லாமல், பொடுகுத் தொல்லை இருந்தால், கூந்தல் உதிர்தல் ஏற்படும். எனவே இதற்கு ஒரே சூப்பரான தீர்வு என்றால், அது பீச் ஹேர் மாஸ்க் தான்.

     பம்பளிமாஸ்

    வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள சிட்ரஸ் பழங்களில் பம்பளிமாஸ் பழத்தின் சாற்றினை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், தலையில் ரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, கூந்தல் உதிர்தலும் நீங்கும்.

     எலுமிச்சை

    எலுமிச்சையில் நிறைய கூந்தலுக்கான நன்மைகள் உள்ளன. அதிலும் எலுமிச்சை சாற்றினை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால், கூந்தல் உதிர்தல் நிற்பதோடு, பொடுகுத் தொல்லை, வறட்சியான ஸ்கால்ப் போன்றவை தடைப்படும்.

    • ரசாயன ஷாம்பூக்கள் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
    • நம் தலைமுடியை பாதுகாக்க சூப்பரான ஹேர் பேக் ஒன்றை பார்க்கலாம்.

    இன்றைய வாழ்க்கைமுறை, பணிச்சுமை, உடல் உஷ்ணம் ஆகியவை நமது உடல் மற்றும் உள்ளம் ஆகியவற்றுக்கு பல பிரச்சனைகளை தருகிறது. அவற்றில் தலைமுடி பிரச்சனை முக்கியமானது. ரசாயன ஷாம்பூக்களை அளவு தெரியாமல் பயன்படுத்துவதால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகிறது.

    அதில் உள்ள சோடியம் லாரில் சல்ஃபேட், சோடியம் லாரத் சல்ஃபேட் போன்ற வேதியியல் பொருட்கள் முடி உதிர்தல், தோல்வீக்கம், நோயெதிர்ப்புக்கேடு, ஒவ்வாமை, கண்புரைக்கேடு போன்றவற்றை ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு மாற்றாக இயற்கையான முறையில் வீட்டிலேயே ஒரு ஹேர் பேக் தயாரித்து பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும்.

    பொதுவாக நம்முடைய தலை முடியை நாம் சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு வாஷ் செய்து வருவது வழக்கம். தொடர்ச்சியாக இவற்றை நாம் பயன்படுத்துவதால் நம்முடைய கூந்தல் வறட்சியை சந்திக்கக் கூடும். இதனால் முடி உடைத்தல், உதிர்தல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதனால் இந்த பாதிப்பில் இருந்து நம் முடியை பாதுகாத்துக் கொள்ள ஒரு சூப்பரான ஹேர் பேக் ஒன்றை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    ஷியா பட்டர் – 2 டீஸ்பூன்

    தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்

    பாதாம் ஆயில் – 2 டீஸ்பூன்

    கற்றாழை – 50 கிராம்

     செய்முறை:

    இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு ஒரு குட்டி பவுலில் ஷியா பட்டரை போட்டுக் கொள்ளவேண்டும். டபுள் பாய்லிங் முறையில் இதனை உருக்க வேண்டும். அதாவதுஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து அதன் நடுவில் அந்த குட்டி பவுலை வைத்து பட்டரை உருக்கிக் கொள்ள வேண்டும்.

    அதன் பிறகு கற்றாழையை சுத்தம் செய்து மிக்சி ஜாரில் போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் இதோடு உருக்கிய பட்டர், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேக்கை நம் தலை முடி முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும். மேலும் ஒரு 20 நிமிடங்கள் கழித்து தலை முடியை மைல்டான ஷாம்பு போட்டு வாஷ் செய்து கொள்ளலாம்.

    • வாரம் ஒரு முறை ஹேர் பேக் அப்ளை செய்வது அவசியம்.
    • முடியின் வேர்களை உறுதியாக்கும்.

    தலைமுடி உதிர்வுக்கு பல காரணங்களை இருக்கலாம். பலரும் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். ஹார்மோன் சமநிலையின்மை, பிசிஓடி, பிசிஓஎஸ் பிரச்னை, தலையில் அதிக கெமிக்கல் பயன்பாடு என இந்த தலைமுடி உதிர்வுக்கு பல காரணங்களை அடுக்கலாம். பொதுவாக கொய்யா பழத்தில் சத்துக்கள் அதிகம் இருப்பதால் அதை நம் உணவில் சேர்த்து வருவது வழக்கம். அப்படி சத்துக்களை அள்ளித்தரும் கொய்யா இலையை வைத்து இன்று நாம் சூப்பரான ஹேர் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. வாரம் ஒரு முறை ஹேர் பேக் அப்ளை செய்வது அவசியம். கொய்யா இலை ஹேர் பேக்கை அரைத்து முடியில் தடவுங்கள். நன்கு ஊறியதும் தலைக்கு குளித்துவிடுங்கள். இது முடியின் வேர்களை உறுதியாக்கும். இதனால் முடி உதிர்வு பிரச்னையும் இருக்காது.

    தேவையான பொருட்கள்:

    கொய்யா இலை – 1 கைப்பிடி

    முட்டை – 1

    கடுகு எண்ணெய் – 2 டீஸ்பூன்

    செய்முறை:

    இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு ஒரு கைப்பிடி கொய்யா இலையை கழுவி சுத்தம் செய்து மிக்சி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். பின்னர் அதோடு ஒரு முட்டை மஞ்சள் கருவுடன் சேர்த்து போட்டு கொள்ள வேண்டும். மேலும் அதில் 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய் ஊற்றி நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.

     இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேக்கை நம் உச்சந்தலை முதல் முடி முழுவதும் அப்ளை செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு 30 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை வாஷ் செய்து கொள்ள வேண்டும். இந்த ஹேர்பேக்கை வாரத்தில் ஒரு முறை என்ற கணக்கில் 3 மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் புதிதாக முடி வளர உதவியாக இருக்கும். அடர்த்தியாகவும் முடி கருமையாகவும் வளரும்.

    • முடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
    • வயது அதிகமாகும் போது முடிகொட்டுவது இயற்கையாகவே நடக்கும்.

    முடிகொட்டுதல் பிரச்சினை அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினையாகும். பொதுவாக எல்லோருக்குமே தினமும் கொஞ்சம் முடிகள் தலையில் இருந்து கொட்டத்தான் செய்யும். இது போக கொட்டும் முடியைவிட சற்று அதிகமாகவே புதிய முடிகளும் வளர ஆரம்பிக்கும். முடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

    1) பரம்பரை காரணங்கள் முக்கியமான தாகும்

    2) பெண்களைப் பொறுத்தவரை கர்ப்ப காலம், பிரசவ காலம், மாதவிடாய் நிரந்தரமாக நிற்கின்ற காலம், தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள், இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் ஆகியோருக்கு தலைமுடி தற்காலிகமாகவோ, அல்லது நிரந்தரமாகவோ கொட்டலாம்.

    3) தலையில் ஏற்படும் தோல் நோய்கள், நோய்த் தடுப்பு சக்தி குறைவு, இன்னும் சில காரணங்களினாலும் தலைமுடி கொட்டலாம்.

    4) புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு தலை முடி முழுவதும் கொட்டி, நோய் குணமான பிறகு மறுபடியும் தலை முடி வளர்ந்து விடுவதுண்டு,

    5) உடலாலும், மனதாலும் ஏற்படும் மிகப் பெரிய அதிர்ச்சியான சம்பவத்திற்குப் பின்னர், தலைமுடி கொட்டுவதுண்டு. பிரச்சினை சரியான பின் முடி மீண்டும் வளர ஆரம்பித்துவிடும்.

    6) அடிக்கடி விதவிதமாக ஹேர் ஸ்டைல் செய்தல், தலைமுடி கொட்டுவதைத் தடுக்க எண்ணெய், கிரீம், பேஸ்ட் போன்ற ரசாயனப் பொருட்கள் கலந்தவைகளை அடிக்கடி அதிகமாக உபயோகித்தல், ஹேர் டை, ஹேர் ஷாம்பு, ஹேர் கிரீம் இன்னும் தலைமுடியை பாதுகாக்க என்னென்ன ரசாயனம் கலந்த பொருட்களை உபயோகிக்கிறீர்களோ அவை எல்லாமே பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும்.

    7) அப்பா, அம்மாவுக்கு தலை வழுக்கை. தலைமுடி அதிகமாக கொட்டுதல் இருந்தால், பிள்ளைகளுக்கும் அதே போன்று மூடி கொட்டலாம்.

    8) வயது கூடக்கூட முடிகொட்டுவது இயற்கையாகவே நடக்கத்தான் செய்யும்.

    9) திடீரென்று உடல் எடை குறைந்தால் தலைமுடி கொட்ட வாய்ப்புண்டு.

    10) சர்க்கரை நோய், லூப்பஸ் நோய் உள்ளவர்களுக்கு தலைமுடி அதிகமாக கொட்டும்.

    11) அதிக மன அழுத்தம், தலைமுடியை அதிகமாக பிய்த்துக் கொள்வது, டென்ஷன் முதலியவைகளும் தலைமுடியைக் கொட்டச்செய்யும்.

    12) போதுமான, தேவையான சரிவிகித சத்துணவு உடலுக்குக் கிடைக்காவிட்டாலும் தலைமுடி கொட்டும்.

     ஆண்களை பொறுத்தவரை தலைமுடி இழப்பால் குடும்பத்திலோ, சமுதாயத்திலோ பெரிய பிரச்சினை எதுவும் வராது. ஆனால், பெண்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு தலைமுடி இழப்பும் குடும்பத்திலும் சரி, சமுதாயத்திலும் சரி மிகப்பெரிய பிரச்சினைதான். தலைமுடியை மிகவும் லாவகமாகக் கையாள வேண்டும்.

    தலைமுடியிடம் உங்கள் கோபத்தை காட்டக்கூடாது. பெரிய பல் உள்ள சீப்புகளை உபயோகிக்க வேண்டும். ரப்பர், பிளாஸ்டிக் கிளிப்புகளை தவிர்க்க வேண்டும். தலைமுடி இழப்பை சரிகட்ட என்னென்ன வைட்டமின்கள், சத்துணவுகள், பழங்கள் சாப்பிடலாம் என்பதை உங்கள் குடும்ப டாக்டரிடம் கேட்டறிந்து அவைகளை அதிகமாக பயன்படுத்துங்கள்.

    அதிக சூரிய ஒளி நேரடியாக தலையில் படுமாறு இருப்பதை தவிர்க்கவும். சிகரெட் புகைப்பவர்கள் உடனே நிறுத்தவும். புற்றுநோய்க்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் உங்களது டாக்டரிடம் கூலிங் தொப்பி போட்டுக் கொள்ளலாமா என்று கேட்டபின் அதை உபயோகிக்கவும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். தலைமுடி காய்ந்து போய் இருக்கக் கூடாது என்று பெற்றோர்கள் கண்டிப்பதுண்டு. மூத்தோர் சொல்லை தட்டக்கூடாது. விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். அது முடியுமோ முடியாதோ தலை முடியின் விதியை யாராலும் வெல்ல முடியாது.

    • முடி லேசாக உதிர்ந்தால் கூட பலருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தும்.
    • ஆண்கள் அதிகம் வெளியில் செல்வதால் தூசுகள் பட்டு மிகவும் பாதிப்படைகிறது.

    தலை முடி என்றாலே அனைவருக்கும் அது அழகு சேர்க்கும். ஆண்கள் என்றாலும் பெண்கள் என்றாலும் முடி மிக முக்கியமான ஒன்றாக கருதுவார்கள். இது மிகவும் இயல்பான ஒன்றே. முடி லேசாக உதிர்ந்தால் கூட பலருக்கு அது மன வருத்தத்தை ஏற்படுத்தும்.

    குறிப்பாக பெண்களை காட்டிலும் இன்றளவு ஆண்களுக்கே முடியை பற்றி கவலைப்படும் பிரச்சினை இருக்கிறது. ஆண்கள் அதிகம் வெளியில் செல்வதால் அவர்களின் முடிகள் தூசுகள் பட்டு மிகவும் பாதிப்படைந்து விடுகிறது. இதற்கு தீர்வாக எண்ணற்ற மருந்துகளையெல்லாம் பயன்படுத்தி சோர்ந்து விட்டீர்களா..? இனி அந்த கவலை வேண்டாம்.

    அந்த காலத்தில் முனிவர்கள் பின்பற்றிய பல்வேறு ஆயுர்வேத முறைகள் முடி சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் அற்புதமான தீர்வு தருகிறது. பொதுவாக ஆயர்வேதம் என்றாலே முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த பொருட்களாகவே அதில் நாம் பயன்படுத்துவோம். அந்த வகையில் இந்த பதிவில் ஆயர்வேத முறையை எவ்வாறு வழுக்கை பிரச்சினைக்கு பயன்படுத்தலாம் என்பதை இனி பார்ப்போம்.

     1. கரிசலாங்கண்ணி (பிரிங்கராஜ்)

    `மூலிகைகளின் அரசன்' என்றே அழைக்கப்படும் இந்த பிரிங்கராஜ் பல மருத்துவ குணங்களை கொண்டது. வெறும் பெயரில் மட்டும் இது ராஜாவாக இல்லை. வழுக்கை பிரச்சினையை தீர்ப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் வழுக்கை தலையில் முடி வளர, 5 டேபிள்ஸ்பூன் பிரிங்கராஜ் பவ்டருடன் 2 டேபிள்ஸ்பூன் கற்றாழை சாற்றை கலந்து தலையில் தடவுங்கள். பிறகு 20 நிமிடம் கழித்து சிறிதளவு ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசினால் சொட்டை இருந்த இடத்தில் முடி வளரும். இந்த ஆயர்வேத முறையை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால் நல்ல பலனை தரும்.

     2. அஸ்வகந்தா

    பல நன்மைகளை தனக்குள்ளே வைத்திருக்கும் ஒரு அற்புத மூலிகை இந்த அஸ்வகந்தா. ஹார்மோன் பிரச்சினையினால் முடி உதிரும் பலருக்கும் இது நல்ல நண்பன் போல உதவும். 3 டீஸ்பூன் அஸ்வகந்தா பவுடர், 3 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடர் ஆகியவற்றை எடுத்து, தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு கலந்து தலையில் தடவி மசாஜ் செய்யவும். பின் 30 நிமிடம் கழித்து தலையை அலச வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் உங்கள் வழுக்கை தலை, முடிகளுடன் காணப்படும்.

     3. வெந்தயம்

    நம்ம வீட்டு அஞ்சறை பெட்டியில் இருக்கும் இந்த சிறிய விதைகள்தான் உங்கள் சொட்டை தலைக்கு முற்றுப்புள்ளி வைக்க போகிறது. முடி வளர்ச்சிக்கு தேவையான புரத சத்து இதில் அதிகம் உள்ளதால் முடியின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். அத்துடன் ஹார்மோன்களை சமநிலையில் வைத்து முடி கொட்டும் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும். 3 டீஸ்பூன் வெந்தய பொடியை எடுத்து கொண்டு அதனுடன் பாலை கலக்கவும். இந்த கலவையை தலையில் வாரத்திற்கு 1 அல்லது 2 முறை தடவினாலே சொட்டை விழுந்த இடத்தில் முடி வளரும்.

     4. பிராமி

    முடியின் வளர்ச்சிக்கு வேரில் இருந்து நல்ல ஆரோக்கியத்தை இந்த மூலிகைகள் தருகிறது. முடியின் போஷாக்கை அதிகரிக்கவும், பொடுகு தொல்லையை நீக்கவும் இது நன்கு பயன்படும். 2 டீஸ்பூன் பிராமி பவுடர், 2 டீஸ்பூன் அஸ்வகந்தா பவுடர், 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடர், 1/2 கப் யோகர்ட் ஆகியவற்றை நன்றாக கலந்து முடியின் அடி வேரில் தடவி மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முடி உதிர்வு நின்று, வழுக்கையில் முடி வளர ஆரம்பிக்கும்.

     5. சிகைக்காய்

    தலை முடிக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்க கூடியது இந்த சிகைக்காய். இன்று நாம் பயன்படுத்தும் ஷாம்பூக்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு இனி சிகைக்காய் பயன்படுத்தி பாருங்கள். எந்தவித முடி சார்ந்த பிரச்சினைகளும் உங்களுக்கு வராது. 6 டீஸ்பூன் சிகைக்காய் பவ்டருடன் 2 கப் நீர் சேர்த்து தலையில் தடவுங்கள். பின் 10 நிமிடம் கழித்து தலையை அலசவும். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர செய்யும். மேலும் சிகைக்காயை நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய்களுடனும் சேர்த்து தடவலாம்.

     6. நெல்லிக்காய்

    ஆயர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய் மிக முதன்மையான இடத்தில் உள்ளது. இது உடலில் உள்ள பலவித நோய்களுக்கும் நல்ல தீர்வை தர வல்லது. 5 டீஸ்பூன் நெல்லிக்காய் பவ்டரை நீரில் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். பிறகு அதனை வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து வந்தால் முடிகள் மீண்டும் வளர செய்யும். அத்துடன் தலையில் உள்ள செல்களை புத்துணர்வூட்டி முடி உதிர்வை தடுக்கும்.

     7. வேப்பிலை

    மூலிகைகளில் அதிக வீரியம் கொண்டது இந்த வேப்பிலைதான். இது ஒரு நல்ல கிருமி நாசினியும்கூட. அடிக்கடி இதனை தலையில் தடவி வந்தால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் முடியின் வளர்ச்சியும் கூடும். தலையில் உள்ள பேன், பொடுகு போன்றவற்றை நீக்கும் சக்தி இந்த வேப்பிலைக்கு உள்ளது. கை நிறைய வேப்பிலையை எடுத்து கொண்டு அதனை 2 கப் நீரில் மிதமான சூட்டில் கொதிக்கவிட்டு 15 நிமிடம் கழித்து இறக்கவும். பிறகு குளிர வைத்து வடிகட்டி கொண்டு அதனை தலைக்கு அலசினால் நல்ல பலனை தரும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் முடி கொட்டும் பிரச்சினை தீர்ந்து, வழுக்கை இன்றி இருக்கலாம்.

     8. ஆயுர்வேத எண்ணெய்

    தேங்காய் எண்ணெய், பிரிக்கராஜ் எண்ணெய், நெல்லிக்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொரு டீஸ்பூன் சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு குளிர வைத்து தலைக்கு தடவி மசாஜ் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலசவும். இந்த ஆயர்வேத முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முடி கொட்டும் பிரச்சினை குறைந்து, வழுக்கையில் முடி வளரும்.

    இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

    • தலைக்கவசத்துக்கும், முடி உதிர்வதற்கும் சம்பந்தமில்லை.
    • வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கவசத்தை சுத்தம் செய்யவேண்டும்.

    இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். இப்போது பின் இருக்கையில் அமருபவரும் ஹெல்மெட் அணிந்தாக வேண்டும் என்ற விதிமுறை அமலில் இருக்கிறது. சாலை பயணத்தின்போது உயிர் காக்கும் உன்னத கவசமாக பயன்படும் அதனை அணிவதை இன்றைய இளைஞர்கள் பலரும் அசவுகரியமாக கருதுகிறார்கள்.

    தலைக்கவசம் அணிந்தபடி நீண்ட தூரம் பயணம் செய்தால் முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படும் என்ற எண்ணம் வாகனம் ஓட்டும் இளம் பெண்களிடமும் இருக்கிறது. ஆனால் தலைக்கவசத்துக்கும், முடி உதிர்வதற்கும் சம்பந்தமில்லை.

    தலைகவசம் அணியும்போது தலைமுடியின் வேர்க்கால்களுக்கு செல்லும் காற்று தடைபடும். அப்படி ஹெல்மெட் வழியாக காற்று உள்ளே செல்வதற்கு வழி இல்லாமல் போனால் வியர்வை உருவாகி அது முடியில் படிந்துவிடும். அதனால் முடி உதிர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற கருத்தை முன்வைக்கிறார்கள்.

    ஆனால் அதில் உண்மை இல்லை. ஏனெனில் வெளிக்காற்றில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜன் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு தேவைப்படுவதில்லை. அதற்கு தேவையான ஆக்சிஜன் ரத்தத்தின் மூலமே கிடைத்துவிடும்.

    தலைக்கவசம் பயன்படுத்தும் போது முடியை முழுவதுமாக விரித்துவிட்டோ அல்லது Ponytail போட்டுக்கொண்டோ செல்லக்கூடாது. அதற்கு பதிலாக அனைத்து முடிகளையும் ஒன்று சேர்த்து தலையைக் கட்டினால் முடி உதிர்வது குறையும்.

    தலையில் எண்ணெய் அல்லது பொடுகு இருந்தால் அது தலைக்கவசத்தில் ஒட்டாமல் இருப்பதை உறுதி செய்துக்கொள்ளவும். அதற்கு, முதலில் ஒரு காட்டன் துணியை எடுத்து தலையில் கட்டிக்கொண்டு பின்பு தலைக்கவசம் அணியலாம்.

    காற்றோட்டம் இல்லாதா இடத்தில் தலைக்கவசத்தை வைக்க வேண்டும். அதில் கிருமிகள் மற்றும் அழுக்குகள் சேரும் அதனால் அதைக் காற்றோட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் வைப்பது சிறந்த தேர்வாகும்.

    ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கவசத்தை சுத்தம் செய்யவேண்டும்.

    • ஹேர் கலரிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
    • கெமிக்கல் கலந்த ஹேர் கலர்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

    கர்ப்ப காலத்தில் ஹேர் கலரிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் ஹேர் கலரிங் செய்வதை முற்றிலும் தவிர்ப்பதே பாதுகாப்பானது. குறிப்பாக கெமிக்கல் கலந்த ஹேர் கலர்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கருவில் உள்ள குழந்தையின் உறுப்புகள் அந்த முதல் மூன்று மாதங்களில் தான் வளரத் தொடங்கும். தவிர்க்க முடியாத நிலையில் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

    அவசியம் ஹேர் கலர் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில், கர்ப்பிணிகள் அமோனியா கலக்காத ஹேர் கலர் மற்றும் டையை தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம். அது ஓரளவு பாதுகாப்பானதாக இருக்கும்.

     அதேபோல கெமிக்கலே கலக்காத வெஜிடபுள் ஹேர் கலர்களை உபயோகிப்பதும் சிறந்தது. உதாரணத்துக்கு, ஹென்னா உபயோகிக்கலாம். அது கெமிக்கல் ஹேர் டைக்கு சிறந்த மாற்றாக இருக்கும்.

    ஹேர் கலர் அல்லது டை உபயோகிக்கும்போது கூடியவரையில் அது முடியின் வேர்க்கால்களில் படாதபடி தடவவும். அதன் மூலம் அனாவசிய கெமிக்கல் உட்கிரகிப்பைத் தவிர்க்க முடியும். அதாவது இப்படி உபயோகிக்கும்போது ஹேர் கலரில் உள்ள கெமிக்கலானது முடிக்கற்றைகளோடு நின்றுவிடும்.

    மண்டை பகுதியில் பட்டு ரத்தத்துடன் கலப்பதையும் தவிர்க்கலாம். இந்த முறையை பின்பற்றினால் ஹேர் கலரால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தாயும் கருவிலுள்ள குழந்தையும் பாதுகாக்கப்படுவார்கள்.

    • எலக்ட்ரோலைட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
    • இளநீர் கூந்தல் வறட்சி அடைவதை தடுக்க உதவும்.

    இளநீர் சுவையான பானம் மட்டுமல்ல கூந்தலுக்கு எண்ணற்ற நன்மைகளையும் வழங்கக்கூடியது. கூந்தல் பராமரிப்பில் இளநீரை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்களை பார்ப்போம்.

    உச்சந்தலையில் நீர்ச்சத்து:

    இளநீரில் வைட்டமின்கள், தாதுக்கள், எலக்ட்ரோலைட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை `ஹேர் வாஷாக' பயன்படுத்தும்போது முடிகளுக்கும், உச்சந்தலைக்கும் போதுமான நீர்ச்சத்தை அளிக்கும். இந்த இயற்கை நீரேற்றம், கூந்தல் வறட்சி அடைவதை தடுக்க உதவும். பொடுகு போன்ற பிரச்சினைகளையும் குறைக்கும்.

    முடி உடைதல்:

    இளநீரில் இருக்கும் ஈரப்பதமூட்டும் பண்புகள் முடி நெகிழ்வுத்தன்மை அடைவதற்கு வழிவகுக்கிறது. முடி வெடிப்பு, முடி உடைதல் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. இளநீரை பயன்படுத்துவதால் நன்கு நீரேற்றமடைந்திருக்கும் கூந்தல், `ஹேர் பிரஷ்' கொண்டு சீவுவதாலோ, சுற்றுப்புற காரணிகளாலோ சேதம் அடைவதற்கான வாய்ப்பும் குறைவு. ஒருவேளை பாதிப்படைந்தாலும் விரைவாகவே இயல்புக்கு திரும்பும் தன்மை கொண்டது.

    முடி உதிர்தல்:

    மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கூந்தல் பராமரிப்பின்மை உள்பட பல்வேறு காரணிகள் முடி உதிர்தலுக்கு காரணமாக அமையலாம். இளநீரில் உள்ளடங்கி இருக்கும் ஊட்டச்சத்து பண்புகள் இந்த பிரச்சினைகளை தீர்க்க உதவும். முடி உதிர்வை குறைக்கும். மயிர்கால்களை வலுவாக்கி முடியையும் பலப்படுத்தும். முடி உதிர்தலை குறைக்கும்.

     பி.எச். சமநிலை:

    இளநீரின் பி.எச் அளவு கூந்தலின் இயற்கையான பி.எச் அளவை ஒத்திருக்கும். அதனால் இளநீரை ஹேர் வாஷாக பயன்படுத்துவது பி.எச். சமநிலையை மீட்டெடுக்க உதவும். கூந்தல் ஆரோக்கியத்திற்கு உகந்த சூழலை உருவாக்கும். இந்த சமச்சீரான பி.எச் அளவுகள் மென்மையான, பளபளப்பான கூந்தலுக்கு வித்திடும்.

    இயற்கை கண்டிஷனர்:

    இளநீர், வணிக ரீதியான ஹேர் கண்டிஷனர்களுக்கு சிறந்த இயற்கை மாற்றாகவும் விளங்கக்கூடியது. கூந்தலில் ஏற்படும் முடிச்சுகள் மற்றும் சிக்கல்களை நீக்கி மிருதுவாக்க உதவுகிறது. சீப்பு, ஹேர் பிரஷ் கொண்டு தலைமுடியை சீவுவதையும் எளிதாக்குகிறது. சுருள் முடி, அடர்த்தியான முடி கொண்டவர்கள் கூந்தலை அலசுவதற்கு இளநீரை பயன்படுத்துவது சிறந்த தேர்வாக அமையும்.

    பிரகாசம்:

    இளநீரில் உள்ளடங்கி இருக்கும் நீரேற்ற பண்புகள் கூந்தல் பிரகாசத்திற்கும் பங்களிக்கின்றன. இளநீரை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பொலிவிழந்த முடியை பளபளப்பானதாக மாற்றலாம். தலைமுடியை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் பராமரிக்கலாம்.

     மென்மை:

    கடுமையான ரசாயனங்கள் கொண்ட சில வணிக ரீதியான முடி தயாரிப்பு பொருட்களுடன் ஒப்பிடும்போது இளநீரை உச்சந்தலையில் பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாக இருக்கும். ஒவ்வாமை உள்ளிட்ட எளிதில் பாதிப்படையும் கூந்தல் உள்பட அனைத்து வகையான முடிகளுக்கும் இளநீரை பயன்படுத்தலாம். இதனை `ஹேர் வாஷாக' பயன்படுத்துவது இயற்கையாகவே கூந்தலை சுத்திகரிப்பு செய்த திருப்தியை கொடுக்கும்.

    வாசனை:

    கூந்தல் பராமரிப்புக்கு அப்பால், இளநீர் இனிமையான நறுமணத்தை வழங்கும். இயற்கையான நறுமண சிகிச்சையாக செயல்படும். கூந்தலுக்கு புத்துணர்ச்சியையும், வாசனையையும் ஏற்படுத்துவதோடு மனநிலையையும் மேம்படுத்தும்.

    முடி வளர்ச்சி:

    இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. மேலும் இந்த ஊட்டச்சத்துக்கள் மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமான, வலுவான முடி வளர்ச்சியை தூண்டுகின்றன. இளநீரை `ஹேர் வாஷாக' வழக்கமாக பயன்படுத்துவது அடர்த்தியான, நீளமான கூந்தலுக்கு வித்திடும்.

    • தலைமுடியை தினமும் பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.
    • ஹேர்பின்கள் தலைமுடியின் வெளிப்புற அடுக்கை சேதப்படுத்தும்.

    சருமத்தைப் போலவே தலைமுடியையும் தினமும் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். அலங்காரத்துக்காக கிளிப்புகள், ஹேர்பின்கள் போன்றவற்றை பயன்படுத்தும்போது தலைமுடியும். அதன் வேர்க்கால்களும் சேதமடைய நேரிடலாம். இதனால் தலைப்பகுதியில் எரிச்சல், காயம், வலி உண்டாகக் கூடும். இதுமட்டுமல்லாமல் தலைமுடி உடைவது. உதிர்வது போன்ற பிரச்சினைகளும் உண்டாகும்.

    கரடுமுரடான ஹேர்பின்கள் தலைமுடியின் வெளிப்புற அடுக்கை சேதப்படுத்தும். கிளிப்புகள், கொண்டை ஊசிகள் அல்லது கொக்கிகளை தொடர்ச்சியாக பயன்படுத்தும்போது அவை தலைமுடியின் வேர்க்கால்களை வலுவிழக்கச் செய்யும். முனைப்பகுதியில் ரப்பர் பூச்சு கொண்ட ஹேர்பின்கள் மற்றும் கிளிப்புகளை பயன்படுத்துவதன் மூலம் முடியின் வேர்க்கால்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும்.

    கிளிப்புகளை இறுக்கமாக அணிவதன் காரணமாக உச்சந்தலையில் ரத்த ஓட்டம் பாதிக்கும். இதன் மூலம் கூந்தல் சேதம் அடைவதோடு, அடிக்கடி தலைவலியும் உண்டாகும். தூங்கச் செல்வதற்கு முன்பு தலைமுடியில் அணிந்திருக்கும் ஹேர்பின்கள், கொண்டை ஊசிகள் ஆகியவற்றை அகற்றுவது முக்கியமானதாகும். இல்லாவிடில் அவற்றில் உள்ள கூர்மையான பாகங்கள் கூந்தலை சேதப்படுத்தும். தலைமுடியை தளர்வாக பின்னிக்கொண்டு தூங்குவது நல்லது.

    தலைமுடியை சுருளச் செய்வதற்காக கிளிப்புகள் பயன்படுத்துபவர்கள், அவற்றை ஹேர் டிரையர் மூலம் அதிகமாக சூடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதன் அதிகப்படியான வெப்பம். தலைமுடியை சேதம் அடையச் செய்யும்.

    எலாஸ்டிக் பேண்டுகள் பார்ப்பதற்கு மென்மையானவையாகத் தெரிந்தாலும், அவற்றை அணிவதன் மூலமாகவும் தலைமுடி பாதிப்படைய நேரிடலாம். எலாஸ்டிக் பேண்டுகள் அணியும்போது தலைமுடி இறுக்கமாக இழுக்கப்படும். இதன்மூலம் முடியின் வேர்க்கால்கள் சேதமடைவது, கூந்தல் உதிர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    நேரடியாக எலாஸ்டிக் பேண்டுகளை கூந்தலில் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இவற்றை கழற்றும்போது தலைமுடி இழைகளை அறுந்து சேதப்படுத்தும். இவற்றுக்கு பதிலாக துணியின் உள் பகுதியில் வைத்து தைக்கப்பட்ட எலாஸ்டிக் பேண்டுகளை உபயோகிக்கலாம்.

    தலைமுடியை இறுக்கமாக இழுத்து சீவுவதையோ, பின்னுவதையோ தவிர்க்க வேண்டும். ஹேர் பேண்டுகளை தலைமுடியில் இறுக்கமாகக் கட்டுவது. முடியின் இழைகளை சிதைத்து, பலவீனம் அடையச் செய்யும்.

    • தலைமுடியை தினமும் முறையாக சீவுவது அவசியம்.
    • தலைமுடி வறட்சி அடைவதை தடுத்து ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.

    தினமும் தவறாமல் பல் துலக்குவது போல தலைமுடியை தினமும் முறையாக சீவுவது அவசியம். இந்த எளிய விஷயம் நம் தலைமுடிக்கு பல நன்மைகளை அளிக்கிறது. எனவே ஆரோக்கியமான முடியை பெற நீங்கள் தினமும் பின்பற்ற வேண்டிய முக்கியமான ஒரு முடி பராமரிப்பு வழக்கம் தலை முடியை சீவுவது. வறண்ட முடி உள்ளவர்கள் அல்லது அதிகமானமுடி உதிர்தலை சந்திப்பவர்கள் கூடுதல் முடி இழப்பை தவிர்ப்பதற்காக சீப்பு பயன்படுத்த தயங்குவார்கள். ஆனால் தலை முடியை சீவ சீப்பு பயன்படுத்துவது ஒரு சுய பாதுகாப்பு நடைமுறை மட்டுமல்ல பல அறிவியல் நன்மைகளையும் கொண்டுள்ளது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.

    காலை ஒருமுறை, இரவு தூங்கும் முன் ஒருமுறை என சராசரியாக நாளொன்றுக்கு 2 முறை தலைமுடியை முறையாக சீவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது நபருக்கு நபர் மாறுபடும். நீண்ட முடி கொண்டவர்கள் சிக்கு மற்றும் முடி உடைவதை தடுக்க ஒரு நாளைக்கு குறைந்தது 3 முறை தலை சீவ அறிவுறுத்தப்படுகிறது.

    கூந்தலைப் பின்னி ஜடை போடுவதன் மூலம் முடிகளில் சிக்கல் ஏற்படுவதைத் தடுக்க முடியும். கூந்தலைப் பின்னுவதன் மூலம் இயற்கையான எண்ணெய் பசையையும், ஈரப்பதத்தையும் தக்கவைத்து கூந்தல் வறட்சி அடைவதை தடுக்கலாம்.

    தலைமுடியை விரித்த நிலையிலேயே வைத்திருப்பதால் சூரியஒளி, காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுகளால் முடிக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படும். கூந்தலைப் பின்னி ஜடை போடுவதன் மூலம் இத்தகைய பாதிப்புகளை குறைக்க முடியும். கூந்தலை அலைபாயவிடாமல் கட்டி வைப்பதன் மூலம், தலைமுடியின் முனையில் வெடிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    சுருள்முடி கொண்டவர்கள் கூந்தலை பின்னிக்கொள்வதால் தலைமுடி வறட்சி அடைவதைத் தடுத்து ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.

    தினமும் தவறாமல் தலை சீவி வருவது பழைய முடி, இறந்த சரும செல்கள், ஹேர் ப்ராடக்டின் மிச்சங்கள், அழுக்கு, முடி மற்றும் உச்சந்தலையில் உள்ள மற்ற படிந்துள்ள தேவையற்றவற்றை சுத்தம் செய்ய உதவுகிறது.

    உச்சந்தலையையும் கூந்தலையும் சுவாசிக்க அனுமதிக்கிறது மற்றும் பொடுகு நிறைந்த முடியை புதுப்பிக்கிறது. தலைமுடியை தினமும் சீவுவது முடியை பளபளப்பாக வைக்க, அடர்த்தியை அதிகரிக்க, ஆரோக்கியமாக மற்றும் புத்துணர்ச்சியுடனும் பராமரிக்க உதவுகிறது.

    ×