search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் விரட்டியடிப்பு"

    • தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து, நிம்மதியின்றி தவிக்கின்றார்கள்.
    • தமிழக மீனவர்கள் பாதுகாப்பான முறையில் மீன்பிடிக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து இவர்களின் இதுபோன்ற நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து, நிம்மதியின்றி தவிக்கின்றார்கள்.

    மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர தீர்வுகாணும் வகையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தையின் மூலம் முடிவெடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பாதுகாப்பான முறையில் மீன்பிடிக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்களின் எதிர்கால பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மீனவர்களின் படகுகள் கடலுக்குள் தெளிவான எல்லை நிர்ணயம் மற்றும் எல்லை தொடர்பான வரையறைகள் ஏதும் இல்லாததால், சில நேரங்களில் தற்செயலாக இலங்கைக் கடற்பரப்பிற்குள் சென்று விடுகிறது.
    • கைது நடவடிக்கைகளால் மீனவ சமுதாயத்தினரிடையே பதற்றம் அதிகரித்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், உடனடியாக அவர்களை விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கடிதம் எழுதி உள்ளார்.

    அக்கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் (பதிவு எண்கள் IND-TN-10-MM-407, IND-TN-08-MM-214 and IND-TN-16-MM-2046) மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இது போன்று கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதாகவும், இது தமிழ்நாட்டு மீனவர்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இந்த மீனவர்களின் படகுகள் கடலுக்குள் தெளிவான எல்லை நிர்ணயம் மற்றும் எல்லை தொடர்பான வரையறைகள் ஏதும் இல்லாததால், சில நேரங்களில் தற்செயலாக இலங்கைக் கடற்பரப்பிற்குள் சென்று விடுகிறது. இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மீனவ சமுதாயத்தினரிடையே பதற்றம் அதிகரித்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்திட ஏதுவாக, இலங்கை அரசுடன் உடனடியாகத் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று ஒன்றிய வெளியுறவுத் துறை மந்திரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேலும், பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்வில் அமைதியை ஏற்படுத்திடவும், இப்பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வினைக் காணவும், இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்ற தனது முந்தைய கோரிக்கையினை மீண்டும் இத்தருணத்தில் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

    • விசைப்படகை இயக்கியபோது திடீரென என்ஜினில் பழுது ஏற்பட்டது.
    • கடலோர காவல்படையில் இருந்த சில வீரர்கள் மீனவர்களின் படகில் ஏறி என்ஜின் பழுதை சரி செய்தனர்.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேர் ஒரு விசைப்படகில் நேற்று இரவு மீன் பிடிக்க சென்றனர். ராமேசுவரத்தில் இருந்து 5 நாட்டிகல் கடல் தொலைவில் மீனவர்கள் வலைகளை விரித்து மீன் பிடித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கரைக்கு புறப்பட ஆயத்தமானார்கள்.

    இதற்காக விசைப்படகை இயக்கியபோது திடீரென என்ஜினில் பழுது ஏற்பட்டது. உடனே மீனவர்கள் அதனை சரி செய்ய முயன்றனர். ஆனால் எந்த பலனுமில்லை. இதனால் மீனவர்கள் செய்வதறியாது தவித்தனர். பல மணிநேரம் நடுக்கடலில் மீனவர்கள் படகுடன் தத்தளித்தனர். மற்ற மீனவர்களும் அந்த பகுதியில் வரவில்லை.

    இந்த நிலையில் இந்திய கடலோர காவல்படையினர் அந்த பகுதியில் ரோந்து வந்தனர். தனியாக தத்தளித்து கொண்டிருந்த படகை பார்த்த கடலோர காவல்படையினர் படகின் அருகில் சென்று மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நடந்த விவரத்தை கூறினர். இதையடுத்து கடலோர காவல்படையில் இருந்த சில வீரர்கள் மீனவர்களின் படகில் ஏறி என்ஜின் பழுதை சரி செய்தனர்.

    இதையடுத்து மீனவர்களின் விசைப்படகு அங்கிருந்து புறப்பட்டு சென்றது. முன்னதாக கடலோர காவல்படையினருக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து அச்சமின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை துறையில் இருந்து நேற்று முன்தினம் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டனர். ஆறுக்காட்டுதுறையில் இருந்து 22 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது 15-க்கும் மேற்பட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் 5 பைபர் படகுகளில் அங்கு வந்தனர். பின்னர் அந்த கடல் கொள்ளையர்கள் ஆறுகாட்டுதுறை மீனவர்களின் 4 விசைப்படகுகள் மற்றும் ஒரு பைபர் படகை அடுத்தடுத்து வழிமறித்து படகில் அத்துமீறி ஏறினர். தொடர்ந்து கத்தி, கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தமிழக மீனவர்களை தாக்கி படகில் இருந்த மீன்பிடி வலைகள் , திசை காட்டும் கருவி, பேட்டரிகள், வாக்கி டாக்கி மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்தனர்.

    இந்த கொடூர தாக்குதலில் மீனவர்கள் பாஸ்கர், அருள்ராஜ், சுப்பிரமணியன், வெற்றிவேல், செந்தில்அரசன், மருது, வினோத் உள்பட 8 பேர் பலத்த காயமடைந்தனர்.

    அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நாகை மாவட்ட கலெக்டர் ஜானிவாம் டர்கீஸ் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இந்நிலையில் அந்தப் பதற்றம் தணிவதற்குள் இன்று அதிகாலை மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதசுவாமி (வயது 45) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ராமராஜன், செல்வராஜ் ஆகியோர் கடந்த 21-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 மீனவர்களையும் கொடூரமாக தாக்கினர். பின்னர் படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி, பேட்டரி, செல்போன், 20 லிட்டர் டீசல், விலை உயர்ந்த மீன்கள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சமாகும். இன்று காலை மீனவர்கள் கரை திரும்பினர். இது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கடந்த 2 நாட்களில் 3 முறை நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்திற்கு முற்றுபுள்ளி வைத்து கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொடர்ந்து தாக்குதலில் நிலை குலைந்து போன மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து அச்சமின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடல் கொள்ளையர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும்.
    • இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. கடந்த 10-ந்தேதி நள்ளிரவிலும் இதே பகுதியில் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். அதனால் ஏற்பட்ட அச்சமும், பதற்றமும் விலகும் முன்பே இலங்கைக் கடல் கொள்ளையர்கள் அடுத்தத் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். இதனால் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவே அஞ்சுகின்றனர்.

    கடல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 2019-ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கடல் கொள்ளையர்கள் எதிர்ப்புச் சட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி கடல் கொள்ளையர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும். எனவே, அந்த சட்டத்தின்படி இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொடூர தாக்குதலில் மீனவர்கள் பாஸ்கர், அருள்ராஜ், சுப்பிரமணியன், வெற்றிவேல், செந்தில்அரசன், மருது, வினோத் ஆகிய 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
    • 8 மீனவர்களை கொடூரமாக தாக்கி ரூ.10 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி பொருட்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை துறையில் இருந்து நேற்று மதியம் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டனர். ஆறுக்காட்டுதுறையில் இருந்து 22 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் நேற்று இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது 15-க்கும் மேற்பட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் 5 பைபர் படகுகளில் அங்கு வந்தனர். பின்னர் அந்த கடல் கொள்ளையர்கள் ஆறுகாட்டுதுறை மீனவர்களின் 4 விசைப்படகுகள் மற்றும் ஒரு பைபர் படகை அடுத்தடுத்து வழிமறித்து படகில் அத்துமீறி ஏறினர். தொடர்ந்து கத்தி, கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தமிழக மீனவர்களை தாக்கி படகில் இருந்த மீன்பிடி வலைகள், திசை காட்டும் கருவி, பேட்டரிகள், வாக்கி டாக்கி மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்தனர்.

    இந்த கொடூர தாக்குதலில் மீனவர்கள் பாஸ்கர், அருள்ராஜ், சுப்பிரமணியன், வெற்றிவேல், செந்தில்அரசன், மருது, வினோத் ஆகிய 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் நள்ளிரவில் ஆறுக்காட்டுதுறை கடற்கரைக்கு திரும்பினர். தொடர்ந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் பாஸ்கர், அருள்ராஜ் ஆகிய இரண்டு மீனவர்கள் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதேபோல் வேதாரண்யம் அடுத்த வெள்ளபள்ளம் கிராமத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர் அருள்செல்வம் என்பவரையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பைபர் படகில் இருந்த பொருட்களை பறித்து சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த அருள்செல்வம் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மொத்தம் ஒரே இரவில் 6 படகுகளை வழிமறித்து 8 மீனவர்களை கொடூரமாக தாக்கி ரூ.10 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி பொருட்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து இதுபோன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்களையும், வலைகளையும் பறித்து செல்வது வாடிக்கையாக நடந்து வருவதால் மீனவர்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    எனவே மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களின் நலன் காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி அதிகாலையில், கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
    • வாகனம் மூலம் 9 மீனவர்களும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஆலந்தூர்:

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் இருந்து இரண்டு விசைப்படகுகளில் 9 மீனவர்கள், கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி அதிகாலையில், கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சிறையில் அடைத்தனர். மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் ராமநாதபுரம் மீனவர்கள் 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் அவர்கள் அனைவரும் இன்று காலை கொழும்பு நகரில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர். அவர்களை தமிழ்நாடு அரசு சார்பில் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் வாகனம் மூலம் 9 மீனவர்களும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • கடலோர காவல் படையினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஒரு படகில், படகு இருக்கும் இடத்திற்கு சென்றனர்.
    • படகு என்ஜின் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்தாக கூறினர்.

    வேதாரண்யம்:

    நாகை மற்றும் வேதாரண்யத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நடப்பது உண்டு. இந்நிலையில் இன்று நடுக்கடலில் தத்தளித்த இலங்கையை சேர்ந்த 3 பேரை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

    வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுதுறைமுகம் கடல் பகுதியில் சுமார் 4 நாட்டிக்கல் தொலையில் ஒரு படகு நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருப்பதாக வேதாரண்யம் கடலோர காவல் படை பிரிவுக்கு இன்று காலை தகவல் வந்தது.

    இதைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஒரு படகில், படகு இருக்கும் இடத்திற்கு சென்றனர். பின்னர் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த படகையும், அதில் இருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டு வேதாரண்யம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த சிவகுமார் (வயது 25), ஸ்ரீகாந்த் (37), ரீகன் (45) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் வந்த படகு என்ஜின் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்தாக கூறினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 10 பேரையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • இலங்கை கடற்படையால் நாகை மீனவர்கள் 10 பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் நாகை மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் அக்கரைபேட்டையை சேர்ந்த 10 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக கூறி அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்கள் மற்றும் வலைகள், தொழில் நுட்ப சாதனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அவர்கள் 10 பேரையும் இலங்கை திரிகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் அனைவரும் திரிகோணமலை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    மீனவர்கள் கைது சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 10 பேரையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இலங்கை கடற்படையால் நாகை மீனவர்கள் 10 பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் நாகை மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 21-ந்தேதி 15 மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்
    • நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கைது செய்துள்ளது

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் காலம் காலமாய் தொடர்ந்து வருகிறது. இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த போதும் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை தாக்குவது, வலைகளை சேதப்படுத்துவது, தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருக்கும் மீன்களை அபகரிப் பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தற்போது சிறைப்பிடிக்கப்படும் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள விசைப்படகுகளையும் இலங்கைக்கு கொண்டு நாட்டுடமையாக்குவது நடந்து வருகிறது. இதனால் படகுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் தமிழக மீனவர்கள் மாற்று தொழிலை தேட தொடங்கி விட்டனர். இதனை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நிரந்த தீர்வு எட்டப்படாமலேயே இருக்கிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை தமிழக மீனவர்கள் மேலும் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் 200 விசைப்படகுகளில் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று பாம்பன் மீனவர்களின் படகுகளை நோக்கி மின்னல் வேகத்தில் வந்தது. இதைப் பார்த்து அச்சம் அடைந்த மீனவர்கள், நமது எல்லையில் மீன்பிடித்தாலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி தாக்குவார்கள் என்று பயந்தனர். மேலும் அவர்கள் அவர்கள் தாங்கள் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள்.

    ஆனால் அதற்குள் 2 படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அதில் தாவிக்குதித்தனர். பின்னர் வழக்கம்போல் பாம்பன் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்களை அபகரித்து கொண்டதோடு, கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர்.

    பின்னர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்கள் 9 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து மீனவர்களுடன் அவர்களின் 2 விசைப்படகுகளையும் தங்களது ரோந்து கப்பலில் கட்டி இழுத்து சென்றனர். பின்னர் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு மீனவர்களை அழைத்து சென்று அங்கு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அவர்கள் விடுதலையாவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா என்பது பின்னரே தெரியவரும்.

    கடந்த 8-ந்தேதி இந்திய எல்லையில் மீன்பிடித்த ராமேசுவரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த 15 மீனவர்களை 9-ந்தேதி அதிகாலையில் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் ரணில் விக்கிரமசிங்கேயின் இந்திய பயணத்தை அடிப்படையாக கொண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

    தற்போது மீண்டும் 9 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே ஒவ்வொரு முறையில் மீனவர்கள் கைதாகும்போது அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. நிரந்தர தீர்வு கிடைக்காமல் எப்போதும் துயர வாழ்க்கை வாழ்ந்து வரும் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையின் தொல்லையின்றி மீன்பிடிக்க செல்வது எப்போது என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • இன்று காலை டெல்லி வந்த இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • விடுதலையான மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்வதாக நீதிபதி கூறினார்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தை சேர்ந்த கிரீம்ஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 9-ந்தேதி கிறிஸ்து (வயது40), ஆரோக்கிய ராஜ்(45), ஜெர்மஸ்(33), ஆரோக்கியம் (38), ரமேஷ் (25), ஜெகன்(40), பிரபு(36), மெல்டன்(45) ஆகிய 8 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இதேபோல் ராமேசுவரத்தை சேர்ந்த பாலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பிரியன் ரோஸ்(44), கார்ச்(30), அந்தோணி(45), பிரதீபன்(35), ஈசாக்(25), ஜான்(30), ஜனகர்(32) ஆகிய 7 மீனவர்களும் அன்றைய தினம் கடலுக்கு சென்றனர். இவர்கள் இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும் எல்லைதாண்டி வந்ததாக கூறி மேற்கண்ட 15 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர். இவர்கள் இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மீனவர்கள் சிறைபிடிப்பை கண்டித்தும், அவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும் ராமேசுவரத்தில் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த நிலையில் அரசு முறை பயணமாக இந்தியா வரும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேயுடன் மீனவர் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென தமிழக முதலமைச்சரும் கோரிக்கை விடுத்திருந்தார். இன்று காலை டெல்லி வந்த இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த நிலையில் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் சிறைபிடிக்கப்பட்ட 15 மீனவர்களும் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி கஜபதிபாலன் 15 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த முறை விடுதலையான மீனவர்கள் மீண்டும் எல்லைதாண்டி வந்து கைது செய்யப்பட்டால் ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்வதாக நீதிபதி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் இன்று காலை கைதான 22 மீனவர்களும் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
    • விடுதலையான மீனவர்கள் இன்னும் சில நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்வதும், பல நேரங்களில் சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    மீன்பிடி தடைகாலம் முடிந்த நிலையில் கடந்த மாதம் 22-ந்தேதி தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 22 மீனவர்கள் 4 விசைப்படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களையும், விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர். அவர்கள் இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஜூலை 5-ந்தேதி (இன்று) வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைதான மீனவர்களையும், சிறை பிடிக்கப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டுமென மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் இது தொடர்பாக ராமேசுவரத்தில் வேலைநிறுத்தம், உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    இதற்கிடையே நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் இன்று காலை கைதான 22 மீனவர்களும் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கைதானவர்கள் இனிமேல் எல்லைதாண்டி வந்து மீன்பிடிக்கக்கூடாது. அவ்வாறு மீண்டும் கைதானால் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் 22 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். விடுதலையான மீனவர்கள் இன்னும் சில நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×