search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருளாதார நெருக்கடி"

    • பாகிஸ்தானில் வரும் மாதங்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • 22 நாடுகளில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு குறைந்து வருவதால் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. மேலும் கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பும் நிலவி வருவது அந்நாட்டை மேலும் சிக்கலில் தள்ளி உள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் வரும் மாதங்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக ஐ.நா. சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாகிஸ்தானில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் விளைவுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பு தீவிரமடைந்துள்ளதால் கடுமையான உணவு பாதுகாப்பின்மை அடுத்த மாதங்களில் உயரக் கூடும்.கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் விளைவுகளால் நிலைமை மோசமாசி உள்ளது. இது விவசாய துறையில் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது. உணவு உற்பத்தி, உணவு கிடைப்பது, வாழ்வாதார சாத்தியக் கூறுகளை பாதித்தது.

    பொருளாதார நெருக்கடியால் உணவு மற்றும் பிற முக்கிய பொருட்களை குடும்பங்கள் வாங்கும் சக்தி குறைந்து இருக்கின்றன. வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை, பணத்தின் மதிப்பு குறைந்து வருவது ஆகியவை நாட்டின் முக்கிய உணவு மற்றும் எரிசக்தி விநியோகங்களை இறக்குமதி செய்வதற்கான திறனை குறைக்கின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கை வருகிற ஜூன் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தை உள்ளடக்கியது. ஏற்கனவே பாகிஸ்தானில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்று ஐ.நா. சபை தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

    அதே போல் ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான், ஏமன், ஹைட்டி, சூடான் புர்கினா பாசோ, மாலி உள்பட 22 நாடுகளில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.

    • உணவு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் பாகிஸ்தான் சின்னாபின்னமாகி வருகிறது.
    • பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் மத்திய வங்கி திணறி வருகிறது.

    லாகூர்:

    பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது.

    உணவு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் பாகிஸ்தான் சின்னாபின்னமாகி வருகிறது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் மத்திய வங்கி திணறி வருகிறது.

    மேலும், கையிருப்பு டாலர்களும் குறைந்து வருவதால் பாகிஸ்தான் திவால் நிலையை எட்டிவிட்டது. அதேவேளை, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது.

    1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு பல்வேறு விதிகளை விதித்துள்ளது. கடனை பெற சர்வதேச நாணய நிதியம் விதித்த விதிகளை பின்பற்ற பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்க சீனா முன்வந்துள்ளது. 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை சீனா பாகிஸ்தானுக்கு வழங்க உள்ளது. இதற்கான ஒப்புதலை சீன அரசு வழங்கியுள்ளது.

    சீனா கடனாக வழங்கும் இந்த பணம் இந்த வாரத்திற்குள் பாகிஸ்தான் மத்திய வங்கியில் செலுத்தப்பட உள்ளது. சீனாவின் இந்த நிதியுதவி பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பொருளாதார நெருக்கடியால் அந்த நாட்டில் அரசியல் குழப்பங்களும் ஏற்பட்டது.
    • தொழிலாள்ரளின் எண்ணிக்கையும் சரிந்து விட்டது.

    கொழும்பு:

    இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை வரலாறு காணத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பொருளாதார நெருக்கடியால் அந்த நாட்டில் அரசியல் குழப்பங்களும் ஏற்பட்டது. இதனால், கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து அனைத்துக் கட்சிகளுடன் ஆதரவுடன் இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி வகித்து வருகிறார். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக பல்வேறு முயற்சிகளை அவர் முன்னெடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் இலங்கையில் தொழிற்சங்கங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசிய ரணில் விக்ரமசிங்கே அப்போது கூறியதாவது: - இலங்கையின் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்து இருப்பது நாங்கள் அனைவரும் அறிவோம். எனவே நாடு எதிர்கொண்டுள்ள சிரமங்களையும் நன்கு அறிவேன். தொழிலாள்ரளின் எண்ணிக்கையும் சரிந்து விட்டது. பணவீக்கம் அதிகரித்துள்ளது. மக்களின் வாழ்க்கை செலவு உயர்ந்துள்ளது. இதனால், அவர்களின் வாழ்க்கை முறையே மாறிவிட்டது.

    பொருளாதார பிரச்சினைக்கான மூலக்காரணம் என்பது பற்றி பேசுவது பயனற்றது. தற்போது இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியை பெறுவது மட்டுமே. இல்லாவிட்டால் பொருளாதார நெருக்கடியில் இருந்து நம்மால் மீள முடியாது" என்றார்.

    • லெபனான் வங்கிகள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    பெய்ரூட் :

    மேற்காசிய நாடான லெபனான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் வாங்க முடியாமல் அல்லாடுகின்றனர்.

    லெபனான் பவுண்ட் மதிப்பு வீழ்ச்சி அடைந்து, பணவீக்கம் உயர்ந்ததையடுத்து 2019-ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் இருந்து டாலர்களை திரும்பப்பெறுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் முடக்கப்பட்ட சேமிப்புகளை மீண்டும் எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வாடிக்கையாளர்கள் வங்கிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவி வந்தது. ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது. குறிப்பாக ஒரு பெண் போலி துப்பாக்கியுடன் நேற்று முன்தினம் அங்குள்ள வங்கியில் குடும்ப மருத்துவ கட்டணத்தை செலுத்த பணம் கோரியது பதற்றத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் பாதுகாப்பு இல்லாததால் அங்கு வங்கிகளை காலவரையின்றி மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி லெபனான் வங்கிகள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும்வரையில் அங்கு வங்கிகள் மூடப்பட்டு இருக்கும் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அங்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    • இலங்கை அதிபர் பதவிக்கான பொறுப்புகளில் வெற்றி பெற வாழ்த்து.
    • இலங்கை இந்தியா இடையே இருதரப்பு உறவு நீண்ட கால அடிப்படையிலானது.

    இந்திய குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரணிலுக்கு, முர்மு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    நான் பதவியேற்றதற்கு உங்கள் அன்பான வாழ்த்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இலங்கையில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தியாவின் மிக நெருங்கிய அண்டை நாடான இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. இலங்கை இந்தியா இடையே இருதரப்பு கூட்டு உறவு நீண்ட கால அடிப்படையிலானது. பாரம்பரியம் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகளின் அடிப்படையில் அது மேலும் வலுவடையும். இலங்கை அதிபருக்கான பொறுப்புகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • புதிய அதிபராக தேர்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக தீவிரம் அடையும் போராட்டம்.
    • அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நெருங்க முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைப்பு.

    கொழும்பு:

    பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுக்க எதிராக பல இடங்களில் திரண்ட போராட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டக்காரர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தால், சட்டத்தின்படி கையாள்வோம் என்று ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்றிரவு கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை வளாககத்திற்கு வெளியே ஆயுதம் ஏந்தி ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நெருங்க முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன. 


    உடனடியாக அங்கிருந்த போராட்டக்காரர்கள் தடுப்பு வேலிகளை அகற்ற முயற்சித்த நிலையில் அதை ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டக்காரர்களின் கூடாரங்களை அப்பறப்படுத்தும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர். இந்த அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

    • அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விலகல்.
    • இலங்கை தற்காலிக அதிபராக சபாநாயகர் அபேவர்தன செயல்படுவார் என தகவல்

    கொழும்பு:

    சுமார் 2 கோடியே 20 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளாக இல்லாத வகையில், பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

    கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசிய உணவு பொருட்கள் விலையேற்றம் மற்றம் பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு உள்பட பல்வேறு சூழல்களால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

    இதையடுத்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் பொருட்களை கைப்பற்றியுள்ளதுடன் அங்கேயே தங்கி வருகின்றனர். 


    இந்நிலையில் இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ரணில் விக்ரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதற்கு முன்னதாக ரணில் அந்த வீட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி உள்ளார். போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.

    முன்னதாக நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலக வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து ரணில் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதேபோல் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு கோத்தபய ராஜபக்சேவை வலியுறுத்தி சபாநாயகர் அபேவர்தன கடிதம் எழுதினார். 


    அதற்கு பதில் அளித்துள்ள கோத்தபய, வரும் 13ந் தேதி பதவி விலகுவதாக தெரிவித்துள்ளதாக அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்காலிக அதிபராக சபாநாயகர் அபேவர்தன செயல்பட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனிடையே, கொழும்புவில் ரணில் விக்கிரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லம் அருகில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற இலங்கையின் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் போலீஸ் அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த நான்கு ஊடகவியலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சம்வம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ரணில் விக்ரமசிங்கே, இலங்கையின் ஜனநாயகத்திற்கு ஊடக சுதந்திரம் மிகவும் முக்கியமானது. வன்முறையையும் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நிதானத்துடன் செயல்படுமாறு பாதுகாப்புப் படையினரையும் எதிர்ப்பாளர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

    • இலங்கைக்கு இந்தியா ரூ.20,000 கோடி மதிப்பிலான நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் உதவிகளை வழங்கியுள்ளது.
    • இதைத்தவிர ரூ.2000 கோடி மதிப்பிலான மருத்துவ உதவிகளையும் இந்தியா வழங்கியுள்ளது.

    பெய்ஜிங்:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். இதை தொடர்ந்து அந்நாட்டு அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன. இருப்பினும் பொருளாதார பிரச்சனைகள் மட்டும் தீரவில்லை.

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது. ரூ.20,000 கோடி மதிப்பிலான நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது. இதைத்தவிர 2000 கோடி ரூபாய் அளவிலான மருத்துவ உதவிகளையும் இந்தியா வழங்கி இருக்கிறது.

    இந்தியாவின் இந்த உதவிகளை பாராட்டுவதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனா வெளியுறவுத்துறை மந்திரி ஜாவோ லிஜியன் கூறியதாவது:-

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிகளை நாங்கள் அறிவோம். அதை சரி செய்வதற்கு இந்தியா எடுக்கும் முயற்சிகளையும் நாங்கள் குறித்து வைத்திருக்கிறோம். அவற்றை பாராட்டவும் செய்கிறோம். இந்தியா மற்றும் உலக நாடுகளுடன் இணைந்து, இலங்கை மற்றும் கடினமான சூழலை எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவ சீனா தயாராக இருக்கிறது.

    சீனாவும் இலங்கைக்கு தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. எங்களால் முடிந்த அளவிற்கு சீனாவின் சமூக- பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆதரவை வழங்கி வருகிறோம். 500 கோடி அளவிலான மனிதாபிமான உதவிகளையும் நாங்கள் வழங்குகிறோம்.

    இவ்வாறு ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

    • தோல்வி அடைந்த அதிபராக தன்னால் பதவியை விட்டு வெளியேற முடியாது என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
    • ஐந்து வருடங்கள் ஆட்சி செய்ய மக்கள் தனக்கு ஆணை வழங்கியுள்ளதாகவும், எஞ்சியுள்ள 2 ஆண்டு காலத்தையும் ஆட்சி செய்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.

    கொழும்பு:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அந்நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

    மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகிவிட்டு, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே செயல்பட்டு வருகிறார். அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பொருளாதார முன்னேற்றத்தில் எந்த பயனும் இல்லை.

    இதையடுத்து இந்த பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என்றும், இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டத்தை திவீரப்படுத்தியுள்ளனர்.

    இந்நிலையில் தோல்வி அடைந்த அதிபராக தன்னால் பதவியை விட்டு வெளியேற முடியாது என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்,

    ஐந்து வருடங்கள் ஆட்சி செய்ய மக்கள் தனக்கு ஆணை வழங்கியுள்ளனர். எஞ்சியுள்ள 2 ஆண்டு காலத்தையும் ஆட்சி செய்வேன். குறைந்தது ஒரு ஆண்டிற்கு முன்பாக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருந்தால் இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது. இருப்பினும் நெருக்கடியை சமாளிக்க இந்தியா, சீனா நாடுகளிடம் உதவியை நாடியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    ×