search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inflation"

    • வருவாயில் 11 சதவீதத்திற்கும் மேல் உணவிற்காக செலவிடுகின்றனர் அமெரிக்கர்கள்
    • கேரி பில்னிக் ஆண்டுதோறும் 1 மில்லியன் டாலர்களுக்கு மேல் வருமானம் பெறுகிறார்

    அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான கெல்லாக்'ஸ் (Kellogg's) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிபவர், கேரி பில்னிக் (Gary Pilnick).

    அதிகரிக்கும் உணவு பொருட்களின் விலை குறித்து கேரி பில்னிக் ஒரு பேட்டியில், "இரவு உணவுக்கு கெல்லாக்'ஸ் மற்றும் பால் மற்றும் ஒரு பழம் உண்ண பழகி கொள்ள வேண்டும். இதற்கு ஒரு டாலருக்கும் குறைவாக செலவாகும். " என தெரிவித்தார்.

    இது அமெரிக்க மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    சமூக வலைதளங்களில் கேரிக்கு எதிராக பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    மளிகை பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் ஏறுவதால், தங்கள் வருவாயில் 11 சதவீதத்திற்கும் மேல் உணவிற்காக மட்டுமே செலவு செய்ய வேண்டிய நிலையில் அமெரிக்கர்கள் உள்ளனர்.

    காலை உணவை தாண்டி இரவு உணவிற்கும் கெல்லாக்'ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளதாக கேரி தெரிவித்தார்.

    கேரி பில்னிக் ஆண்டுதோறும் 1 மில்லியன் டாலர்களுக்கு மேல் வருமானம் பெறுகிறார். இதை தவிர பல ஊக்க தொகைகளும், சலுகைகளும் அவருக்கு நிறுவனம் வழங்கும்.

    மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் போது, மிக அதிக ஊதியம் பெறும் நிறுவனத்தின் தலைவர் ஒருவர் இவ்வாறு கூறியுள்ளது, அவரது அலட்சிய மனப்பான்மையை காட்டுவதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    2021-ஐ ஒப்பிடும் போது 2023 இறுதிக்குள் மளிகை பொருட்களின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கெல்லாக்'ஸ் போன்ற உணவு பண்டங்களில் உள்ள சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்பதால் அதனை தவிர்க்குமாறு ஊட்டச்சத்து நிபுணர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் கேரியின் இந்த கருத்து பார்க்கப்படுகிறது.

    • 2024ல் உள்நாட்டு மொத்த உற்பத்தி 0.5 சதவீதம் குறைய உள்ளதாக எச்சரித்தது ஐஎம்எஃப்
    • அத்தியாவசிய பொருட்களின் விலை, வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது

    கடந்த ஜூலை மாதம், பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு, வாஷிங்டனை மையமாக கொண்ட ஐஎம்எஃப் (IMF) எனும் சர்வதேச நிதி நாணயம், $1.2 பில்லியன் வழங்கியிருந்தது.

    பாகிஸ்தானின் பொருளாதார நிலையை ஆய்வு செய்த ஐஎம்எஃப், தற்போது $700 மில்லியன் நிதியுதவி வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கடந்த டிசம்பர் மாதம், இது குறித்து முடிவெடுக்கவிருந்த அதன் செயற்குழு சந்திப்பு, தள்ளி போடப்பட்டது. தொடர்ந்து, வரும் ஜனவரி 11 அன்று இது குறித்து ஆலோசிக்க உள்ளது.

    பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இவ்வருடம் 0.5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள ஆணையம், அதிகரிக்கும் விலைவாசியினால் பொருளாதாரம் நிலையற்றதன்மையை அடைந்திருப்பதாக எச்சரித்துள்ளது.

    கடந்த 2023 டிசம்பர் 22 காலகட்டத்தில், அந்நாட்டின் மத்திய வங்கியில் டாலர் கையிருப்பு $853 மில்லியன் அளவிற்கு உயர்ந்தது. இது ஐஎம்எஃப் விதித்திருந்த இலக்கை விட பாகிஸ்தான் கரன்சியில் ரூ.43 பில்லியன் அதிகம்.

    கடந்த நவம்பர் மாதம், அந்நாட்டு நிதியமைச்சர், "மிக விரைவாக நிதியுதவி தேவைப்படுகிறது" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டே நிதியுதவி வழங்கினாலும், அதற்கு ஈடாக பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இவற்றை கடைபிடித்தாக வேண்டிய கட்டாயத்தால் பாகிஸ்தான் பல இலவசங்களையும், மானியங்களையும் நிறுத்தியுள்ளது.

    இதன் விளைவாக பால், உணவு, பெட்ரோல், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு வரலாறு காணாத உயர்வு அங்கு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    அங்கு சில வாரங்களில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இவையனைத்தும் எதிரொலிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பிற்கு 130 நாடுகளில் அலுவலகங்கள் உள்ளன
    • 2020ல் கொண்டு வரப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு பொருளாதாரம் இன்னும் சீராகவில்லை

    ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அங்கம், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agricultural Organization).

    உலக நாடுகள் முழுவதும் பசியை ஒழிக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உணவு பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்தவும் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் 194 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்துள்ளது. இதன் தலைமையகம், இத்தாலி தலைநகர் ரோம் நகரில் உள்ளது.

    உலகளவில் 130 நாடுகளில் இந்த அமைப்பிற்கு அலுவலகங்கள் உள்ளன.

    சமீபத்தில் இந்த அமைப்பு ஆசிய நாடுகளில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. தற்போது அந்த ஆய்வின் முடிவுகள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு தரவுகள், புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்த நீண்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    2021ல் இந்தியர்களில் 74.1 சதவீதம் பேரால் ஆரோக்கியமான, சமச்சீரான உணவை பெற முடிவதில்லை என இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2020ல் இந்த விகிதாசாரம் 76.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா கால ஊரடங்கிற்கு பிறகு முழுவதுமாக பொருளாதாரம் சீராகாததாலும், அதிகரிக்கும் உணவு பண்டங்களின் விலை மற்றும் எகிறும் விலைவாசிக்கு ஏற்றவாறு மக்களுக்கு ஊதிய உயர்வு இல்லாததும்தான் இதற்கு காரணம் என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஊதியத்திற்கும் மக்களின் வாங்கும் சக்திக்கும் இடையே இடைவெளி அதிகரித்தால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் சத்தான உணவின்றி வாடும் சூழ்நிலை அதிகரிக்கலாம் என்றும் ஆரோக்கியமான உணவு எட்டாக்கனியாகலாம் என்றும் இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

    • விமான நிறுவனங்கள் தன்னுடைய வருமானத்தில் 45 சதவீதத்தை எரிபொருளுக்காகவே செலவு செய்யப்படுகிறது.
    • மற்ற விமான நிறுவனங்களும் தங்களுடைய விமான டிக்கெட் கட்டணத்தை விரைவில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆலந்தூர்:

    சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் உள் நாட்டு விமான சேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோர் தற்போது விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள்.

    விமான நிறுவனங்கள் தன்னுடைய வருமானத்தில் 45 சதவீதத்தை எரிபொருளுக்காகவே செலவு செய்யப்படுகிறது. மேலும் எரிபொருளின் விலை கடந்த மூன்று மாதங்களாக உயர்வை சந்தித்து வருகிறது.

    இந்நிலையில் எரி பொருள் விலை உயர்வு காரணமாக முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் இன்று முதல் விமான கட்டணத்தை ரூ.300 முதல் ரூ.1000 வரை உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த கட்டண உயர்வு முதல் 500 கிலோ மீட்டர் வரை ரூ.300 ,501 கி.மீ - 1000 கிலோமீட்டர் வரை ரூ.400, 1001- 1500 கி.மீட்டர் வரைரூ.550, 1501 -2500 கி.மீட்டர் வரை ரூ.650, 2501-3500 கி.மீட்டர் வரை ரூ.800, 3500 கிலோமீட்டருக்கு மேல் ரூ.1000 என்ற அளவில் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இண்டிகோ விமான நிறுவனத்தின் விமான டிக்கெட் கூடுதல் கட்டணம் உயர்வை முன்னிட்டு, மற்ற விமான நிறுவனங்களும் தங்களுடைய விமான டிக்கெட் கட்டணத்தை விரைவில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணவீக்கம் 5.8 சதவீதமாக இருந்தது.
    • இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பண வீக்கம் ஒற்றை இலக்கத்துக்கு வந்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

    அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் மக்கள் அவதியடைந்தனர். இதனால் மக்களின் போராட்டங்களால் ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டனர்.

    அதன்பின் அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்கியது.

    பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பண வீக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணவீக்கம் 5.8 சதவீதமாக இருந்தது. அதன்பின் கடந்த ஆண்டு செப்டம்பரில் 69.8 சதவீதமாக உயர்ந்தது.

    பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பண வீக்கம் குறைய தொடங்கியது.

    இந்நிலையில் இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பண வீக்கம் ஒற்றை இலக்கத்துக்கு வந்துள்ளது.

    கடந்த ஜூன் மாதம் 12 சதவீதமாக இருந்த பண வீக்கம், ஜூலை மாதம் 6.3 சதவீதமாக குறைந்துள்ளது.

    இது இலங்கை அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவர அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கி கூறும்போது, பண வீக்கம் மேலும் மிதமானதாகவும், நடுத்தர காலத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை சுற்றி ஸ்திரமாகவும் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. இதையடுத்து இலங்கை, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • மக்கள் தங்கள் அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்டுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
    • இதற்கு காரணம் பல்பொருள் அங்காடிகளின் பேராசை என்று தொழிற்சங்கங்கள், அரசியல்வாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    உலகெங்கிலும் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையின் தாக்கம் பிரிட்டனையும் விட்டு வைக்கவில்லை.

    உயர்ந்து வரும் பணவீக்கத்தின் காரணமாக, பிரிட்டனில் கடந்த ஆண்டு 7 பேரில் ஒருவர், உணவு வாங்க போதிய பணமில்லாததால் பசியுடன் இருந்ததாக உணவு வங்கி தொண்டு நிறுவனமான, "ட்ரஸ்ஸல் டிரஸ்ட்" எனும் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

    இந்த புள்ளி விவரத்தின்படி, அந்நாட்டின் மக்கள் தொகையில் 11.3 மில்லியன் மக்கள் பசியால் வாடி வருவதாகவும், இந்த நிலை ஒரு செயலிழந்த சமூகப் பாதுகாப்பு முறையாலும், வாழ்வதற்கான செலவுகள் உயர்வதனாலும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கிறது.

    பிரிட்டனின் பொருளாதாரம் உலகில் 6வது இடத்தில் உள்ளது. ஆனால், ஒரு வருடத்திற்கும் மேலாக அதிகரித்து வரும் பணவீக்கம், தொழிலாளர்களின் ஊதிய உயர்வை விட மிக அதிகமாக உள்ளதால், அனைத்து தொழிலாளர்களுமே மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    ட்ரஸ்ஸல் டிரஸ்ட் அமைப்பின் உணவு வங்கிகளை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஐந்தில் ஒருவர், வேலை செய்யும் குடும்பத்தில் இருப்பதாகவும், மக்கள் தங்கள் அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்டுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1950களில் பதிவுகள் தொடங்கியதில் இருந்து, பிரிட்டனின் வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்து வரும் உணவு விலைகள் தற்போதுதான் மிக பெரிய அழுத்தத்தை தருகின்றது.

    இந்த நிலைக்கு யார் பொறுப்பு என்பது பற்றிய கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இதற்கு காரணம் பல்பொருள் அங்காடிகளின் பேராசை என்று தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், பல்பொருள் அங்காடிகளின் நிர்வாகிகள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

    பிரிட்டன் முழுவதும் உள்ள 1,300 உணவு வங்கி மையங்களை கொண்ட ட்ரஸ்ஸல் டிரஸ்டின் நெட்வொர்க், 3 மில்லியன் உணவுப் பொட்டலங்களை வழங்கி சாதனை புரிந்துள்ளது. இது 5 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நமது வெளிநாட்டு கடன், நிர்வகிக்கக்கூடிய அளவுக்குத்தான் உள்ளது.
    • அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு நமக்கு எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தாது.

    கொச்சி :

    கேரள மாநிலம் கொச்சியில், பெடரல் வங்கி நிறுவனர் கே.பி.ஹார்மிஸ் வருடாந்திர நினைவுநாள் நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கலந்து கொண்டார்.

    அங்கு அவர் பேசியதாவது:-

    இந்திய நிதித்துறை சீராக உள்ளது. மோசமான பணவீக்க காலம் கடந்து சென்று விட்டது.

    நமது வெளிநாட்டு கடன், நிர்வகிக்கக்கூடிய அளவுக்குத்தான் உள்ளது. எனவே, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு நமக்கு எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தாது.

    அதிகமான வெளிநாட்டு கடன் வைத்திருக்கும் நாடுகளுக்கு ஜி20 நாடுகள் உதவ வேண்டும். பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு போர்க்கால அடிப்படையில் உதவ வேண்டும்.

    அமெரிக்காவில் ஏற்பட்ட வங்கி பிரச்சினையை மனதில் வைத்து, நமது வங்கிகள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உணவு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் பாகிஸ்தான் சின்னாபின்னமாகி வருகிறது.
    • பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் மத்திய வங்கி திணறி வருகிறது.

    லாகூர்:

    பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது.

    உணவு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் பாகிஸ்தான் சின்னாபின்னமாகி வருகிறது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் மத்திய வங்கி திணறி வருகிறது.

    மேலும், கையிருப்பு டாலர்களும் குறைந்து வருவதால் பாகிஸ்தான் திவால் நிலையை எட்டிவிட்டது. அதேவேளை, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது.

    1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு பல்வேறு விதிகளை விதித்துள்ளது. கடனை பெற சர்வதேச நாணய நிதியம் விதித்த விதிகளை பின்பற்ற பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்க சீனா முன்வந்துள்ளது. 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை சீனா பாகிஸ்தானுக்கு வழங்க உள்ளது. இதற்கான ஒப்புதலை சீன அரசு வழங்கியுள்ளது.

    சீனா கடனாக வழங்கும் இந்த பணம் இந்த வாரத்திற்குள் பாகிஸ்தான் மத்திய வங்கியில் செலுத்தப்பட உள்ளது. சீனாவின் இந்த நிதியுதவி பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • விலைவாசி உயர்வுக்கு காரணம் தி.மு.க. அரசு மீது செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டினார்.
    • பொதுமக்கள் விலை உயர்வு காரணமாக கடும் துன்பத்துக்கு ஆளாகி யுள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தாலிக்கு தங்கம், மாண வர்களுக்கு மடிக்கணினி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி தந்தார். ஆனால் இப்போ தைய தி.மு.க. அரசு விலை வாசியை உயர்த்தியது தான் சாதனையாக உள்ளது.

    மு.க.ஸ்டாலின் தற்போது அவரது மகனுக்கு அமைச்சராக முடிசூட்டி யுள்ளார். பொதுமக்கள் விலை உயர்வு காரணமாக கடும் துன்பத்துக்கு ஆளாகி யுள்ளனர். இதற்கு காரணம் தி.மு.க. அரசு தான்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    ஆர்ப்பாட்டத்தில்.ஒன்றிய செயலாளர் செல்வ மணி, நகரசெயலாளர் ராஜா மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், கூட்டுறவு சங்க தலைவர் சங்கர்ராமநாதன், நாலு கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், ஒன்றிய, மாவட்ட, நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பணவீக்கம் விகிதங்களை தேசிய புள்ளி விவர அலுவலகம் வெளியிட்டு உள்ளது.
    • பொருட்களின் சில்லரை பண வீக்கம் கடந்த 5 மாதத்தில் இல்லாத அளவு அதிகரித்து 7.41 சதவீதத்தை தொட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நாட்டில் சில்லரை பணவீக்கம் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்துவதற்காக வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி வருகிறது.

    கடைசியாக கடந்த 1-ந்தேதி கடன்களுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு இருந்தது. ரிசர்வ் வங்கி கடந்த மே மாதத்தில் இருந்து 4-வது முறையாக வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து இருக்கிறது.

    இந்த நிலையில் சில்லரை பணவீக்கம் அதிகரிப்பதால் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பணவீக்கம் விகிதங்களை தேசிய புள்ளி விவர அலுவலகம் வெளியிட்டு உள்ளது. இதில் பொருட்களின் சில்லரை பண வீக்கம் கடந்த 5 மாதத்தில் இல்லாத அளவு அதிகரித்து 7.41 சதவீதத்தை தொட்டுள்ளது.

    பணவீக்க உயர்வை கட்டுப்படுத்த இந்த ஆண்டில் மட்டும் இதுவரை கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி 1.9. சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    ஆனாலும் பணவீக்கம் உயர்வு நீடிப்பதால் மீண்டும் வங்கிகளுக்கான கடன் வட்டியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    டிசம்பரில் மீண்டும் 0.3 சதவீதம் முதல் 0.5 சதவீதம் வரை கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி அதிகரிக்கும் என நிதி சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • சில்லறை பணவீக்கம் 2 முதல் 6 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவாக நிர்ணயம்
    • பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 5.9 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.

    புதுடெல்லி:

    செப்டம்பர் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டது. அதில், இந்தியாவின் ஒட்டுமொத்த சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 7.41 சதவிகிதமாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் மாதம் 7.0 சதவிகிதமாக இருந்தது. 

    சில்லறை பணவீக்கம் 2 முதல் 6 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. ஆனால், அந்த அளவை விட சில்லறை பணவீக்கம் அதிகமாக உள்ளதால் பொருட்களின் விலை உயர்ந்து மக்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும்.

    பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 5.9 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. ஆனாலும், சில்லறை பணவீக்கம் அதிகரித்து வருகிறது. எனவே, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மேலும் சில நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி வரும் மாதங்களில் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலை உயர்வே சில்லறை பணவீக்கம் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது.

    • கடந்த 2021ம் ஆண்டு, மே மாதத்தில் மொத்த விலைப் பணவீக்கம் 13.11 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
    • ஒருவ ருடத்திற்கும் மேலாகவே பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்து வருகிறது.

    புது டெல்லி:

    மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மே மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியாவின் வருடாந்திர மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 15.88-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த அளவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மொத்த விலைப் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 12.96 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரி மாதம் 13.11 சதவீதமாகவும், மார்ச் மாதம் 14.55 சதவீதமாகவும், ஏப்ரல் மாதம் 15.08 சதவீதமாகவும் உயர்ந்தது. பின் கடந்த மே மாதம் 15.88-ஆக அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்திற்கு முன்னரும் சில மாதங்களாக பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் மேலாகவே இருந்தது.

    கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது மே மாதத்தில் கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் 8.52 சதவீதம் உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்கள் 2.40 சதவீதம், கனிமங்கள் 1.73 சதவீதம், உணவு அல்லாத பொருட்கள் 1.52 சதவீதம் அதிகரித்துள்ளன. இதன்காரணமாகவே மொத்த விலை பணவீக்கமும் அதிகரித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு, மே மாதத்தில் மொத்த விலைப் பணவீக்கம் 13.11 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×