search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புயல்"

    • அர்ஜென்டினாவில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
    • புயல் பாதிப்பால் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    அர்ஜென்டினாவின் துறைமுக நகரமான பஹியா பிளாங்காவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த புயலால் அங்குள்ள விளையாட்டுக் கழகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நகரத்தில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதன் எதிரொலியால், சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    பாஹியா பிளாங்காவைத் தாக்கிய கனமழை மற்றும் காற்று, ஸ்கேட்டிங் போட்டி நடைபெறும் மைதானத்தின் மேற்கூரையை அடித்து தள்ளியது.

    மேலும், இடிபாடுகளில் சிக்கிய மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டதில் பெரும் பகுதி அரசுக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.
    • குடும்பங்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் ரூ.6,000 நிதியுதவி, நாளை முதல் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட இருக்கிறது. குடும்பங்களின் துயரத்தை துடைப்பதற்காக வழங்கப்படும் நிதி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் துயரத்தை ஏற்படுத்தி விடாமல் இருப்பதை அரசு தடுக்க வேண்டும்.

    வழக்கமாக அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும் போது, அந்தத் தொகையின் பெரும் பகுதி குடும்பத்திற்கு செல்வதில்லை என்றும், குடும்பத் தலைவர்களின் வழியாக மதுக்கடைகள் மூலம் மீண்டும் அரசுக்கே செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றனர்.

    தீபாவளி திருநாளுக்கு சில நாட்கள் முன்பாக கடந்த நவம்பர் 10-ந் தேதி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு மக்களுக்கு ரூ.1138 கோடி வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு அடுத்தநாளில் தொடங்கி 5 நாட்களில், தீப ஒளி திருநாளையொட்டி வரலாறு காணாத வகையில், ரூ.1000 கோடிக்கும் கூடுதலான மது விற்பனையானது. அதன் மூலம் மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டதில் பெரும் பகுதி அரசுக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.


    மழை-வெள்ளப் பாதிப்புக்காக வழங்கப்படும் ரூ.6,000 நிதியும் அதேபோல் மக்களுக்கு பயன்படாமல், மதுக்கடைகளுக்கு சென்று விடக் கூடாது. மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது ரூ.25 ஆயிரத்தில் தொடங்கி சில லட்சங்கள் வரை வாழ்வாதார இழப்பும், பொருள் இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசால் வழங்கப்படும் நிதியைக் கொண்டு தான் இந்த இழப்பின் ஒரு பகுதியையாவது சரி செய்ய முடியும். மாறாக, வழக்கம் போல, நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் தொகை மீண்டும் மதுக்கடைகளுக்கு சென்றால், எந்த ஒரு குடும்பத்திலும் மழை-வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய முடியாது. அது அந்த குடும்பங்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கும்.

    தமிழக அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படுவதற்கும், மது வணிகத்திற்கும் தொடர்பு இல்லை என்று கூற முடியாது. கடந்த காலங்களில் பொங்கல் பரிசு, மகளிர் உரிமைத் தொகை, வெள்ள நிவாரணம் என நிதியுதவி வழங்கப்பட்ட காலங்களில் எல்லாம் வணிகரீதியாக பயனடைந்தது மதுக்கடைகள் மட்டும் தான். தமிழ்நாட்டின் மது வணிகம் குறித்த புள்ளி விவரங்கள் இதை உறுதி செய்யும். அதனால், கடந்த காலங்களில் நடந்த அதே தவறு இப்போதும் மீண்டும் நடப்பதற்கு தமிழக அரசு வாய்ப்பளித்து விடக் கூடாது.

    எனவே, மழை நிவாரண உதவி வழங்கப்படவிருக்கும் நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, புத்தாண்டு நாளான ஜன 1-ந் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மட்டுமின்றி, அவற்றையொட்டிய பிற வட மாவட்டங்களிலும் மதுக்கடைகளை மூட தமிழக அரசு ஆணையிட வேண்டும். அதன் மூலம் தமிழக அரசால் வழங்கப்படும் ரூ.6000 நிதி குடிக்கு செல்லாமல், குடும்பச் செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்தப் படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எண்ணெய் கழிவுகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை நாசப்படுத்தியது.
    • நவீன எந்திரங்கள் மூலமாகவும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சென்னை:

    எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பகுதியில் மிச்சாங் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எண்ணெய் கழிவுகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை நாசப்படுத்தியது. பின்னர் எண்ணூர் முகத்துவார பகுதியில் போய் கடலில் கலந்தது.

    இந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந் தேதியில் இருந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 75 படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றி வருகிறார்கள். நவீன எந்திரங்கள் மூலமாகவும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் எண்ணூர் முகத்துவார பகுதியில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும் இடத்தை அமைச்சர் உதயநிதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் மெய்யநாதன், கலாநிதி வீராசாமி எம்.பி., கே.பி.சங்கர் எம்.எல்.ஏ., சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷனர் ராதாகிருஷ்ணன், மண்டலக் குழு தலைவர் தனியரசு மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


    எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் எப்படி நடைபெற்று வருகிறது? பணிகள் முடிய இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்பது பற்றி உதயநிதி, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். எண்ணெய் கழிவுகளால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மீனவர்கள் அமைச்சர் உதயநிதியிடம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் பாதிப்புகள் பற்றி எடுத்துக் கூறி முறையிட்டனர்.

    எண்ணெய் கழிவுகளால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புகளை விரைந்து சரி செய்து விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என்றும் மீனவர்கள் முறையிட்டனர். கோரிக்கை மனுக்களையும் வழங்கினார்கள்.

    மீனவர்களின் குறைகளை கவனமுடன் கேட்டுக் கொண்ட அமைச்சர் உதயநிதி அரசு நிச்சயம் உரிய உதவிகளை செய்யும் என்று உறுதி அளித்தார்.

    • ஏரியின் ஒருபகுதியில் 1300 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • வெள்ள நீரை ராட்சத மோட்டார்கள் அமைத்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    திருநின்றவூர்:

    மிச்சாங் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. தற்போது வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது.

    எனினும் திருநின்றவூர் நகராட்சியில் ஈசா ஏரியையொட்டி உள்ள ராமதாஸ்புரம் பெரியார் நகர், முத்தமிழ் நகர், பாரதியார் தெரு, கம்பர் தெரு, ஆகிய குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் இன்னும் வடியாமல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    வெள்ள நீரை ராட்சத மோட்டார்கள் அமைத்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு, மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது குடியிருப்பு பகுதிகளில் தேங்கி உள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை விரைந்து முடிக்க நகராட்சி அலுவலர்களுக்கும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டனர்.

    இதேபோல் கொட்டாமேடு பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரை கால்வாய் அமைத்து கல்வெட்டு மூலம் வெளியேற்றும் பணி நடைபெறுகிறது. இதனையும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் கலெக்டர் பிரபு சங்கர் கூறும்போது, கனமழையால் திருநின்றவூர் நகராட்சிக் குட்பட்ட 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஈசா ஏரி 11.5 அடி உயரம் நிரம்பியது. இதனால் ஏரியின் ஒருபகுதியில் 1300 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டிற்கு பிறகு மிச்சாங் புயலினால் 2 நாட்களில் 68 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலமும், கொட்டமேடு பகுதியில் தனியாக கால்வாய் அமைத்தும் வெளியேற்றப்படுகிறது என்றார்.

    • கடந்த 2015-ம் ஆண்டு பெரு வெள்ளத்தின் நிவாரணத் தொகை வங்கி கணக்கில் தான் செலுத்தப்பட்டது.
    • டோக்கன் முறை மூலம் நிவாரணம் வழங்குவது தவறாக பயன்படுத்தக்கூடும்.

    சென்னை:

    மக்களுக்கு வெள்ள நிவாரணம் உடனடி தேவை என்று தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இடைக்கால உத்தரவு பிறப்பித்து அதை தாமதப்படுத்த முடியாது என கூறி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டது.

    மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ரொக்கமாக வழங்கப்படும் இந்த நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தக் கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவரும், நிவாரண தொகையை அதிகரித்து வங்கி கணக்கில் வழங்க வேண்டும் என சட்டக் கல்லூரி மாணவர் செல்வகுமார் என்பவரும் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில் ரொக்கமாக நிவாரணத்தை வழங்கும்போது முறையானவர்களுக்கு சென்றடையாது.

    கடந்த 2015-ம் ஆண்டு பெரு வெள்ளத்தின் நிவாரணத் தொகை வங்கி கணக்கில் தான் செலுத்தப்பட்டது. டோக்கன் முறை மூலம் நிவாரணம் வழங்குவது தவறாக பயன்படுத்தக்கூடும். பலர் ஒரு முறைக்கு மேல் நிவாரணத்தை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்த உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.


    அரசு தரப்பில் ஏற்கனவே 37 லட்சம் குடும்பத்தினர் அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவர்களுக்கு டோக்கன்களும் வழங்கப்பட்டு விட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், வெள்ள நிவாரணம் என்பது உடனடியாக வழங்க வேண்டியது. மழை வெள்ளத்தால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால், நிவாரணம் வழங்குவதை தாமதப்படுத்த முடியாது, அதை மறுக்க முடியாது. நிவாரணத்தை முடக்க முடியாது.

    நிவாரணம் வழங்குவது தற்போதைய தருணத்தில் உடனடி தேவை என்பதால் இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை. வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம்.

    நிவாரணம் வழங்குவதை தாமதப்படுத்துவது மக்கள் நலனுக்கு உகந்தது அல்ல. உண்மை பயனாளிகளுக்கு நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். விசாரணையை ஜனவரி 5-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம்.

    அன்றைய தினம் நிவாரணம் வழங்கியது குறித்து விரிவான அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 462 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் 442 ஏரிகள் முழுமையாக நிரம்பி விட்டன.

    வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து காணப்பட்டது. மிச்சாங் புயல் மற்றும் கனமழை காரணமாக 4 மாவட்ட ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் சென்னையில் 26 ஏரிகள் முழுமையாக நிரம்பின. மீதமுள்ள 2 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் 462 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. 68 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 442 ஏரிகள் முழுமையாக நிரம்பி விட்டன. 59 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 205 ஏரிகள் நிரம்பி உள்ளன. 104 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. 4 மாவட்டங்களிலும் மொத்தம் 1135 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

    • பல ஆண்டுகளாக கோவில் குளத்தில் நீரின்றி தரை மட்டம் தெரியும் அளவிற்கு இருந்தது.
    • பக்தர்கள் முன்னாள் கவுன்சிலர் வே.வாசுவுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

    வில்லிவாக்கம்,டிச.13-

    அயனாவரம் சயானி பஸ் நிறுத்தம் அருகே உள்ளது அருள்மிகு காசி விசுவநாதர் ஆலயம். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் கோவில் எதிர் திசையில் சுற்றிலும் குடி யிருப்புகளுக்கு மத்தியில் பரந்து விரிந்து உள்ளது. பல ஆண்டுகளாக கோவில் குளத்தில் நீரின்றி தரை மட்டம் தெரியும் அளவிற்கு இருந்து முற்றிலும் நீர்வரத் தும் குறைந்து இருந்தது. இது குறித்து அயனாவரம் பகுதியில் உள்ள பல்வேறு திருக்கோவில் குளங்களை பராமரித்து வரும் தி. மு.க. பகுதி செயலாளரும் மலர் டிரஸ்ட் நிறுவனரும் முன்னாள் கவுன்சிலருமான வே.வாசுவின் கவனத்துக்கு பக்தர்கள் கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து தனது சொந்த நிதியிலிருந்து சென்னை மாநகராட்சியின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூபாய் 11, 45,970 (11லட்சத்து 45 ஆயிரத்து 970 ரூபாய்) மதிப்பில் சாலையின் மேற்குப் பகுதியில் இருந்து 150 மீட்டர் நீளத்திற்கு 3 அடி அகலம் 3 அடி ஆழத் திற்கு சொந்த பணத்தில் மழைநீர் கால்வாய் அமைத்து சாலையோரம் ஓடும் மழை நீரினை குளத்திற்கு பைப் மூலம் கொண்டு செல்லும் வகையில் பணியினை நடத்தி முடித்தார். இதன் காரணமாக கடந்த வாரம் மிக்ஜாம் புயலின் தாக்கத் தால் பெய்த கனமழையால் சாலை ஓரத்தில் இருந்த மழை நீர் அனைத்தும் குளத்திற்கு சென்றது. இதையடுத்து சுமார் 30 அடி ஆழத்திற்கு குளம் முழுவதும் மழை நீர் நிரம்பி சுற்றி மழை நீரால் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதன் மூலம் அந்த பகுதியை சுற்றியுள்ள வீடுகளில் நிலத்தடி நீர் உயரும். இதனை தொடர்ந்து

    75 ஆண்டுகளுக்கு பிறகு காசி விஸ்வநாதர் கோவில் குளத்தில் மழை நீரை பார்த்து மகிழ்ச்சி அடைந்த பக்தர்கள் முன்னாள் கவுன்சிலர் வே.வாசுவுக்கு பாராட்டுகளையும் நன்றி களையும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தி.மு.க. வில்லிவாக்கம் கிழக்கு பகுதி செயலாளரும் மலர் டிரஸ்ட் நிறுவனருமான வே.வாசு கூறியதாவது:-

    பல ஆண்டுகளாக நீர் இல்லாமல் இருந்த இந்த கோவில்குளத்தை நாங்கள் சரி செய்ததால் தற்சமயம் பெய்த பலத்த மழையால் 30 அடிக்கு மேல் மழை நீர் தேங்கி உள்ளது. இதனை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் குளத்தில் மழை நீர் தேங்கும் வகையில் கிழக்குப் பகுதியில் இருந்து 250 மீட்டர் அளவிற்கு மழைநீர் வடிகால் அமைத்து கிழக்குப் பகுதியில் தேங்கும் மழை நீரை குளத்திற்குள் விடும் பணிகள் விரைவில் தொடங்கும். காசி விசுவநாதர் கோவில் நிர்வாகத்தின் கீழ் வரும் இந்த குளத்தினை நாங்கள் சீர் செய்து விட்டோம். ஆனால் கோவில் நிர்வாகத்தினர் கோவில் குளத்தினை முறையாக பராமரிக்காத காரணத்தினால் சுற்றி உள்ள மரத்தில் உள்ள கழிவுகள் அனைத்தும் குளத்தில் மிதிக்கிறது. இதனை சீர் செய்ய எங்கள் பங்களிப்பை நாங்கள் தருவதற்கு தயாராக இருக்கி றோம். கோவில் நிர்வாகம் இந்த கோவில் குளத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்பது எனது தாழ்வான கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளி வளாகத்தில் சேறும் சகதியுமாக உள்ளது.
    • ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் வடிந்து இருந்தாலும் சேறும்சகதியுமாக காணப்படுகிறது.

    பூந்தமல்லி:

    மிச்சாங் புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் மழைநீர் தேங்கியது. தற்போது மழை வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது.

    எனினும் நிலையில் பூந்தமல்லியில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் செல்ல வழியில்லாததால் தொடர்ந்து தேங்கி நின்றது.

    இதனால் மழைவெள்ள விடுமுறைக்கு பின்னர் மற்ற பள்ளிகள் திறக்கப்பட்டாலும் இந்த பள்ளிகளுக்கு நேற்று விரைவிடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று முதல் அரையாண்டு தேர்வு தொடங்கி உள்ளதால் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளை இன்று திறக்க வளாகத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி வேகமாக நடைபெற்றது. எனினும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மழை நீரை இன்னும் முழுமையாக அகற்றமுடியவில்லை. மேலும் பள்ளி வளாகத்தில் சேறும் சகதியுமாக உள்ளது.

    இதைத்தொடர்ந்து மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு நுழைவாயிலில் இருந்து வகுப்பறை வரை அவர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக மரப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை பள்ளி திறந்ததும் அந்த பாலத்தில் மாணவிகள் புதிய அனுபவத்துடன் பயந்தபடி வகுப்பறைக்கு நடந்து சென்றனர்.

    இதேபோல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் வடிந்து இருந்தாலும் சேறும்சகதியுமாக காணப்படுகிறது. அதில் மாணவர்கள் சென்றனர்.

    வரும் காலங்களில் மழைகாலத்தில் பள்ளி பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படாத வகையில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • எல்லா இடங்களுக்கு உள்ளேயும் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர்.
    • வெள்ளத்தில் சில இடங்களில் வலை வீசி மீன்களை பிடித்து வருகின்றனர்.

    சென்னையில் மிச்சாங் புயலின் தாக்கத்தால் கொட்டித் தீர்த்த பெரும் மழையின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    வீடுகள், கடைகள் என எல்லா இடங்களுக்கு உள்ளேயும் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர்.

    சென்னை வெள்ளம் தொடர்பாக பல்வேறு காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி காண்போரை கலங்க வைத்து வருகின்றன.

    இது ஒரு புறம் இருக்க சென்னை வெள்ளத்தில் சில இடங்களில் வலை வீசி மீன்களை பிடித்து வருகின்றனர்.

    இது சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    சென்னை அடையாறு ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மீனவர் ஒருவர் வலைவீசி மீன்களை பிடித்தார். அப்போது இதுவரை இல்லாத வகையில் 20 கிலோ எடை கொண்ட மீன் சிக்கியது. இதனை பிடித்த மகிழ்ச்சியில் அதனை படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகள் தண்ணீரில் மிதந்தன.
    • பைக்குகள் போன்றவை ஆண்டுதோறும் பழுதடைந்து புதிய பொருட்களை வாங்கும் நிலை உள்ளது.

    தாம்பரம்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் அனைத்து இடங்களும் மழைவெள்ளத்தில் தத்தளித்தன. வழக்கம்போல் தாம்பரம் அடுத்த முடிச்சூர், வரதராஜ புரம் பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட இந்த ஆண்டு அதிக பாதிப்பை ஏற்படுத்தி சென்றது.

    முடிச்சூர் ஊராட்சி மற்றும் வரதராஜபுரம் பகுதிகள் அடையாறு ஆற்றை ஒட்டி உள்ளன. இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது தண்ணீர் சூழ்ந்து தனி தீவாக மாறின. முடிச்சூரில் இருந்து தாம்பரம் செல்லும் சாலை, முடிச்சூரில் இருந்து மண்ணிவாக்கம் செல்லும் சாலை மற்றும் மணிமங்கலம் செல்லும் சாலைமுழுவதும் துண்டிக்கப்பட்டு மக்கள் வெளியேற முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

    கடந்த 2015 -ம் ஆண்டு வெள்ளப்பெருக்கிற்கு பின்னர் பலமுறை அதிகாரிகள், அரசியல் கட்சியினர் முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதிகளை ஆய்வு செய்து அங்கு அடையார் ஆற்றை தூர்வாரி அகலப்படுத்தி கரைகளை பலப்படுத்தினர்.

    மேலும் அடையாறு ஆற்றுக்கு செல்லும், சிறு சிறு கால்வாய்களும் தூர்வாரப்பட்டு அடையாறு ஆற்றுக்கு செல்லும்படி வழி செய்யப்பட்டது. மேலும் முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட அமுதம் நகர், ராயப்பா நகரில் மக்கள் ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்து சுமார் ரூ.4 கோடி செலவில் கால்வாய் அமைத்து அப்பகுதி தண்ணீர் அடையாறு ஆற்றில் சென்றடையும் வகையில் வழி ஏற்படுத்தினர்.

    ஆனால் தற்போது பெய்த மழையின்போது ரூ.4 கோடியில் அமைக்கப்பட்ட கால்வாயாலும் எந்தப் பயனும் இல்லாமல் அப்பகுதி மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியது. எப்போதும் போல் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகள் தண்ணீரில் மிதந்தன. சரியான திட்டமிடல் இல்லாதது, தண்ணீர் செல்வதற்கு அகலமான கால்வாய் மற்றும் ஏரிகள் நிரம்பும்போது வெளியேறும் உபரிநீர் அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்காததே இந்த மழை வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதியில் ஆண்டுதோறும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறோம். வீடுகளில் தண்ணீர் புகுவதால் டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கார்கள், பைக்குகள் போன்றவை ஆண்டுதோறும் பழுதடைந்து புதிய பொருட்களை வாங்கும் நிலை உள்ளது. மழைவெள்ள பாதிப்பிற்கு நிரந்தர தீர்வாக அடையாறு ஆற்றை மேலும் அகலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும்.

    மேலும் முடிச்சூர் பகுதியில் உள்ள சீக்குனா ஏரி கால்வாயை கட்டன் கால்வாய் முறையில் அமைத்து அடையாறு ஆற்றில் விட வேண்டும். இதேபோல் முடிச்சூர் லட்சுமி நகர், நேதாஜி நகர் பகுதிகளில் கட்டன் கால்வாய் அமைத்து அடையாறு ஆற்றுக்கு தண்ணீர் செல்ல வழி செய்தால் மட்டுமே இப்பகுதியில் மழைநீர் தேங்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கே.பி.கே. சதீஷ்குமார் ஏற்பாட்டில் சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.பி. கந்தன் வழங்கினார்.
    • பகுதி கழக பொருளாளர் கே.குமார் மற்றும் கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொது செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி 182 - வது வார்டு கந்தன்சாவடிக்குட்பட்ட அம்பேத்கர் சாலை, வீரமணி சாலை, திரு.வி.க. தெரு, ஜீவானந்தம் தெரு மற்றும் பால்ராஜ் நகர் ஆகிய பகுதியில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. அரிசி, போர்வை, பருப்பு, ரவை, கோதுமை, சமையல் எண்ணெய், சேமியா, பிஸ்கட், மிளகாய் தூள், சர்க்கரை, தண்ணீர் பாட்டில் ஆகிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையை மாவட்ட எம். ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளரும் 182 - வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி கழக குழு தலைவருமான கே.பி.கே. சதீஷ்குமார் ஏற்பாட்டில் சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.பி. கந்தன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் எம். ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளரும் 193- வது வார்டு மாமன்ற உறுப்பினருமான டி.சி. கோவிந்தசாமி, பகுதி செயலாளர் ஜி.எம். ஜானகிராமன், வட்ட செயலாளர் பி. ராஜேந்திரன், எம். வெங்கடேசன், பி.எல். செந்தில்வேல், பகுதி மகளிர் மகளிர் அணி செயலாளர் அமுதா வெங்கடேசன், பகுதி கழக பொருளாளர் கே.குமார் மற்றும் கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஏரியின் மதகு அருகே கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
    • ஏரி நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன.

    ஸ்ரீபெரும்புதூர்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஏரி, குளங்கள் முழுவதும் நிரம்பி உள்ளன. சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள ஏரியும் முழு அளவில் நிரம்பி காணப்பட்டது.

    இந்த ஏரியின் மதகு பகுதி சேதம் அடைந்து இருந்ததால் பாதுகாப்புக்காக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஏரியின் மதகு அருகே கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. இந்த தண்ணீர் நடுவீரப்பட்டு, திருவஞ்சேரி கிராமங்களுக்குள் பாய்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த பின்னரே வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். அப்போது கிராமம் முழுவதும் ஏரி தண்ணீர் புகுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து 2 கிராமங்களில் இருந்தவர்களும் பாதுகாப்பாக வெளியேறினர். அவர்கள் அங்குள்ள அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். திடீரென ஏரி நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன. சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.

    தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். உடனடியாக ஏரியின் உடைந்த கரையில் மணல் மூட்டைகள் அடுக்கி சரிசெய்யப்பட்டது. எனினும் ஏரியில் இருந்த சுமார் 50 சதவீத தண்ணீர் வெளியேறி விட்டது. இந்த ஏரி சுமார் 175 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. சுற்றி உள்ள கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக நடுவீரப்பட்டு ஏரி இருந்தது. இந்த நிலையில் ஏரிக்கரை உடைந்து தண்ணீர் வெளியேறியதால் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஏரிக்கரை தானாக உடைந்ததா? அல்லது வேறு யாரேனும் உடைத்து விட்டனரா?என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். நடுவீரப்பட்டு ஏரியில் தண்ணீர் இருப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தண்ணீர்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். ஏரிக்கரை உடைந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    ×