search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனிப்பொழிவு"

    • கரேரி, டிரையண்ட், ஆதிஹிமானி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அதிகாரிகள் தடை விதித்தனர்.
    • மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள சிறிய மலைகளிலும் பயணிகள் யாரும் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

    சிம்லா:

    இந்தியாவில் அழகிய மலைகளும், ஏராளமான சுற்றுலா தலங்களும் அடங்கிய மாநிலம் இமாச்சல பிரதேசம்.

    இந்த மாநிலத்தில் டிசம்பர் மாதம் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். அதன்படி இங்குள்ள குப்ரி, மணாலி, நர்காண்டா பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. கீலாங், ஹன்சா பகுதிகளில் 2 சென்டி மீட்டர் அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது.

    சிம்லாவின் புறநகர் பகுதியில் ஒரு சென்டி மீட்டர் அளவுக்கு பனி பெய்தது. அடுத்து வரும் நாட்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி காங்கரா மாவட்டத்தில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம் பனி படர்ந்து காணப்பட்டது. சாலைகளிலும் பனி உறைந்து இருந்தது.

    பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை காணப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

    இம்மாவட்டத்தின் கரேரி, டிரையண்ட், ஆதிஹிமானி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அதிகாரிகள் தடை விதித்தனர்.

    இதற்கிடையே இம்மாவட்டத்தில் பெய்த பனிப்பொழிவு காரணமாக பல சுரங்க பாதைகளில் சுற்றுலா வாகனங்கள் சிக்கி கொண்டன. சுமார் 400 -க்கும் மேற்பட்ட வாகனங்கள் சுரங்கங்களில் சிக்கி கொண்டன. இது பற்றிய தகவல் அறிந்த மீட்பு படையினர் அப்பகுதிக்கு சென்று வாகனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுபோல மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள சிறிய மலைகளிலும் பயணிகள் யாரும் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

    மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெறாமல் யாரும் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

    • அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை நிலவுகிறது.
    • பனிப்பொழிவால் அமெரிக்கா முழுவதும் நேற்று 2,270 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை நிலவுகிறது.

    கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுது.

    சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனித்துகள் குவிந்துள்ளன. குளிர் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.

    இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக அமெரிக்கா முழுவதும் நேற்று 2,270 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமை செல்லும் 1000 விமானங்கள் ரத்தாகியுள்ளன. மேலும் விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக வந்தடைகின்றன.

    பனிப்பொழிவால் விமான சேவை தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் பயணிகள் பாதிப்புக்கு இலக்காகினர்.

    • தமிழகம் முழுவதும் மார்கழி மாதம் தொடங்கியதில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.
    • எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.

    சென்னை:

    சென்னையில் இன்று அதிகாலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. வழக்கமாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாகதான் இருக்கும்.

    அந்த வகையில் தமிழகம் முழுவதும் மார்கழி மாதம் தொடங்கியதில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனி மூட்டம் காணப்படுகிறது.

    கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி, தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம் விமான நிலையம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், நீலாங்கரை, திருவொற்றியூர், மாதவரம், புழல், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று காலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

    எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.

    • டெல்லியில் 20 மீட்டர் தொலைவுக்குள் வருபவர்களை மட்டுமே லேசாக காண முடிந்தது.
    • டெல்லியில் பல்வேறு இடங்களில் வெண் புகை மூட்டம் சூழ்ந்திருந்தது.

    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக மிக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. உத்தரபிரதேசத்தில் நேற்று பனி பொழிவு புகைமூட்டத்தால் 2 இடங்களில் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு 5 பேர் பலியானார்கள்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலங்களில் மிக கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது.

    பனிப்பொழிவு நீடித்ததால் வட மாநிலங்களில் இன்று காலை பல முக்கிய நகரங்களில் நீண்ட நேரத்துக்கு புகைமூட்டம் காணப்பட்டது. டெல்லியில் 20 மீட்டர் தொலைவுக்குள் வருபவர்களை மட்டுமே லேசாக காண முடிந்தது. அந்த அளவுக்கு டெல்லியில் பல்வேறு இடங்களில் வெண் புகை மூட்டம் சூழ்ந்திருந்தது.

    இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். அனைத்து வாகனங்களும் முன் விளக்குகளை எரிய விட்டபடி சென்றாலும் கூட மெல்ல ஊர்ந்தபடிதான் செல்ல முடிந்தது. அமிர்தசரஸ், கங்கா நகர், பாட்டியாலா, லக்னோ நகரங்களிலும் பனிப்பொழிவும், புகைமூட்டமும் இன்று காலை மக்களை திணற வைத்தது.

    இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை தகவலில் பனிப்பொழிவு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப், டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களிலும் காலை மிக மிக கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    அதிகாலை நேரங்களில் வட மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் வாகன போக்குவரத்து முடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் வாகனங்களில் பயணிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    கடும் பனிப்பொழிவு காரணமாக வட மாநிலங்களில் சில இடங்களில் விமான சேவை ஒத்திவைக்கப்பட்டது. சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    டெல்லி, பஞ்சாப் இரு மாநிலங்களிலும் தெருக்களில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. இதனால் காலை நீண்ட நேரம் வரை மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர்.

    • மார்கழி மாதம் இன்று பிறந்த நிலையில் நாமக்கலில் கடும் பனி மூட்டம் நிலவியது.
    • அதிகாலை முதல் பனிமூட்டம் இருந்ததால் சாலை முழுவதும் மேகம் போல் பனி படர்ந்து இருந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த நிலையில் மார்கழி மாதம் இன்று பிறந்த நிலையில் நாமக்கலில் கடும் பனி மூட்டம் நிலவியது.

    அதிகாலை முதல் பனிமூட்டம் இருந்ததால் சாலை முழுவதும் மேகம் போல் பனி படர்ந்து இருந்தது. இதனால் அருகில் இருப்பவர்கள் கூட பார்க்க முடியாமல் நிலை காணப்பட்டது. வாகனங்கள் சாலையில் முகப்ப விளக்கை எரிய விட்டபடியே சென்றன. ராசிபுரம், மோகனூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் இதே போல் பனிமூட்டம் இருந்தது. பனி காரணமாக கடும் குளிர் நிலவியது. காலை 8 மணிக்கு மேல் தான் வெயில் வந்தது. குளிரால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. பனி பொழிவு அதிகாமாக இருந்தாலும், இன்று வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது.

    • உடன்குடி வட்டார பகுதியில் பனை, தென்னை தோப்புகள் அதிக அளவில் உள்ளன.
    • கடந்த ஆண்டு இங்குள்ள குளங்கள், ஊரணி குட்டைகள், கருமேனி ஆகியவை நிரம்பி வழிந்தன.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதி என்பது 18 கிராம ஊராட்சி ஒரு பேரூராட்சி உள்பட பெரும் பகுதியாகும். இங்கு சுமார் 75 சதவீத பகுதி விவசாய நிலங்களாக உள்ளன. அதுவும் செம்மணல் நிறைந்த தேரிபகுதியில் பனை, தென்னை தோப்புகள் அதிக அளவில் உள்ளன.

    இங்கு ஊடுபயிராக முருங்கை விவசாயம் நடந்து வருகிறது. மேலும் மரவள்ளி கிழங்கு, சக்கர வள்ளி கிழங்கு, நிலக்கடலை, சப்போட்டா, மா, வாழை போன்ற விவசாய பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

    கடந்த ஆண்டு இங்குள்ள தாங்கைகுளம், சடையனேரி குளம், தருவைகுளம் மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட 10 குளங்கள், ஊரணி குட்டைகள், கருமேனி ஆகியவை நிரம்பி வழிந்தன. திரும்பிய திசைகள் எல்லாம் தண்ணீராகவே காட்சி தெரிந்தது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த ஆண்டு இதுவரை மழை பெய்யாததால் எந்த குளமும், நிரம்பவில்லை. இப்படியே இந்த ஆண்டு மழை ஏமாற்றி விடுமோ?என விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர். மேலும் தண்ணீர் தேங்க கூடிய பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் தற்போது விளையாட்டு மைதானம் ஆக்கி கிரிக்கெட், வாலிபால் போன்ற விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.

    இன்னும் சில இடங்களில் ஆடு மாடுகளை மேய்ப்பதற்கு மேய்ச்சல் நிலங்களாகவும் பயன்படுத்திவிட்டனர்.

    இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நல சங்க தலைவர் சந்திரசேகர் கூறுகையில்,

    மழை வருமா? குளங்கள் நிரம்புமா?என்பது கேள்விக்குறியாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் குளங்களை எல்லாம் முழுமையாக நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த ஆண்டு குளங்கள், குட்டை கள் முழுமையாக நிரம்ப வில்லை என்றால் அருகில் உள்ள கடல் நீர்மட்டம் விவசாய விளை நிலங்களில் புகுந்து பல ஏக்கர் விவசாய நிலங்கள் உவர் நிலமாக மாறி போகும் என்றார்.

    இதேபோல் சமூக ஆர்வலர் சிவலூர் ஜெயராஜ் கூறும்போது, இதோ வருகிறது, அதோ வருகிறது என்று அனைத்து குளங்களும், குட்டைகளும், புதியதாக உருவாக்கப்பட்ட ஊரணிகளும், மழைக்காக தண்ணீருக்காக, காத்தி ருக்கின்றது. ஆனால் இப்பகுதியில் பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதனால் தான் மழை குறைந்துவிட்டது. என்று பலர் கூறுகிறார்கள்.

    அதனால் தமிழக அரசு, மாவட்ட கலெக்டர், மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்துரையாடல் நடத்தி பல இடங்களில் வீணாக செல்லும் மழை தண்ணீரை கொண்டு வந்து உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அனைத்து குளங்கள், குட்டைகளை முழுமையாக நிரப்ப வேண்டும்.

    சடையனேரி கால்வாய்யை நிரந்தர கால்வாயாக அறிவித்து அடிக்கடி தண்ணீர் திறந்து குளங்கள் மறறும் குட்டைகளில் தண்ணீர் தேக்கி இருக்கும்படி வைக்க வேண்டும். என்று கூறினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த பலரும் இனியும் மழையை நம்பி காத்திருக்காமல் இங்குள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    • நாள் ஒன்றுக்கு 1 டன் முதல் 2 டன் வரை மட்டுமே பூ கிடைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
    • சீசன் காலத்தில் கிலோ ரூ.50 முதல் 70 வரை கொள்முதல் செய்யப்–படுகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர், நெய்விளக்கு, பஞ்சநதிகுளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் முல்லைப்பூ சாகுபடி நடைபெறுகிறது.

    ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் வரை இந்த முல்லைப்பூ சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் முல்லைப்பூ விளைவிக்கப்படுகிறது .

    தற்போது வேதாரண்யம் பகுதியில் கடும் பனிப்–பொழிவால் பூச்செடிகள் இலைகள் உதிர்ந்து பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 1 டன் முதல் 2 டன் வரை மட்டுமே பூ கிடைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    சீசன் காலத்தில் கிலோ ரூ.50 முதல் 70 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. சீசன் இல்லாத நவம்பர் முதல் பிப்ரவரி வரை கிலோ ரூ.600 முதல் 1000 வரை விற்பனை ஆகிறது.

    பனிப்பொழிவால் முல்லைப்பூ அதிகம் விளையாததால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

    விலை ஏற்றம் இருந்தாலும் விளைச்சல் குறைவால் விவசாயிகள் அவதியடைந்து உள்ளனர்.எனவே முல்லைப்பூ விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவியும், நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கன்னியாகுமரி முதல் வழுக்கம்பாறை வரை உள்ள சாலைகளில் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்தது.
    • தோவாளை, ஆரல்வாய்மொழி, வளவூர், செண்பகராமன் புதூர் பகுதிகளில் பயிர் செய்யப்பட்டுள்ள பூக்களின் உற்பத்தி குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கார்த்திகை மார்கழி மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும். இந்த கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பனிப்பொழிவு சற்று குறைந்து இருந்தது. ஆனால் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இன்று அதிகாலையில் பனிப்பொழிவின் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் ஐயப்ப பக்தர்கள் குளித்துவிட்டு கோவில்களில் வழிபட்டனர். சாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் விண்ணை முட்டும் அளவில் இருந்தது. பனிப்பொழிவின் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    கன்னியாகுமரி முதல் வழுக்கம்பாறை வரை உள்ள சாலைகளில் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்தது. இந்த பனிப்பொழிவு காலை 8 மணிக்கு மேல் வரை நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு லைட்டுகளை எரியவிட்டவாறு வாகனம் ஓட்டினார்கள்.

    இதே போல் ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகமாகவே இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு லைட்டுகளை எரிய விட்டு வாகனம் ஓட்டி சென்றனர். பனிப்பொழிவின் காரணமாக குமரி மாவட்டத்தில் பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    தோவாளை, ஆரல்வாய்மொழி, வளவூர், செண்பகராமன் புதூர் பகுதிகளில் பயிர் செய்யப்பட்டுள்ள பூக்களின் உற்பத்தி குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பூக்களின் உற்பத்தி குறைந்ததையடுத்து தோவாளை பூ மார்க்கெட்டில் பிச்சி மல்லிகை பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

    • பருவ மழைக்கு முன்பாகவே கரூரில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது
    • பொதுமக்கள் கடும் அவதி

    கரூர்:

    அக்டோபர் முதல் டிசம்பர் வரை மூன்று மாதங்கள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த காலக்கட்டத்தில் பெய்யும் மழைதான் ஆண்டின் சராசரி மழையளவான 652.20 எட்ட உதவியாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்தது. இதனைத்தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் 11 - தேதி அன்று ஒரு நாள் மட்டுமே மாவட்டம் முழுவதும் மிகப் பலத்த மழை பெய்தது. அதற்கு பிறகு கருர் மாவட்டத்தில் மழை எதுவும் பெய்யவில்லை. ஆனால், மழைக்கு பதி லாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. பொதுவாக, வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகுதான் பனி பொழிவு இருக்கும்.

    ஆனால், வடகிழக்கு பருவமழை சீசனிலேயே பனிப் பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழையின் காலம் ஒரு மாதமே உள்ள நிலையில், இனி வரும் நாட்களில் மழை பெய்யுமா? என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும், அதிகாலை

    4மணி முதல் 8மணி வரை பனியின் தாக்கம் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள், முதியோர்கள், வேலைக்கு செல்லும் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்ற னர். எனவே, புயல் சின்னம் உருவாகி மழை வரும் பட்சத்தில்தான் பனியின் தாக்கம் குறையும் என்பதால் அனைத்து தரப்பினர்களும் மழையை எதிர் நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடும் குளிரால் பள்ளி செல்லும் குழந்தைகள் நடுங்கியபடி பள்ளிக்கு செல்கின்றனர்.
    • ஊட்டி-மேட்டுபாளையம் வரை சாலையில் கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே காலை, மாலை நேரங்களில் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. மழையுடன், பனிப்பொழிவும் காணப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    கடும் குளிரால் பள்ளி செல்லும் குழந்தைகள் நடுங்கியபடி பள்ளிக்கு செல்கின்றனர். முதியவர்கள் மற்றும் பெண்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. அதேசமயம் ஊட்டிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    ஊட்டி-மேட்டுபாளையம் வரை சாலையில் கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. பனி மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    காலை 8 மணிக்கு பிறகும் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவான வேகத்தில் வாகனங்களை இயக்கிச் செல்கிறார்கள்.

    இன்று காலை வெகு நேரமாகியும் வெயில் தென்படாத நிலையில், குளிர் அதிகமாக காணப்பட்டது. இந்த காலநிலை மாற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • கடுமையான பனிப்பொழிவும், நடுங்க வைக்கும் குளிரும் வீசுகிறது.
    • 200 பேர் ஸ்வெட்டர் ரக விற்பனையில் ஈடுபட திருப்பூர் மாவட்டத்தில் வந்து கடை விரித்துள்ளனர்.

    திருப்பூர் :

    கார்த்திகை, மார்கழி மாதங்களில் வழக்கமாக அதிக அளவில் பனிப்பொழிவு காணப்படும்.அவ்வகையில் திருப்பூர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கடுமையான பனிப்பொழிவும், நடுங்க வைக்கும் குளிரும் வீசுகிறது.குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள பல தரப்பினரும் பல்வேறு நடைமுறைகளை கையாளுகின்றனர்.

    இதில் பொதுவான விஷயமாக உடலில் குளிர் பாதிக்காமலும் வெப்பத்தை தக்க வைக்கும் விதமாகவும், உல்லன் ஸ்வெட்டர்கள், குரங்கு குல்லா, மப்ளர், ஜெர்கின், காதுகளை அடைக்கும் ஹியர் கேப் என பல விதமான உடை வகைகளை பயன்படுத்துகின்றனர்.அவ்வகையில் இவற்றின் விற்பனை தற்போது திருப்பூர் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. பஞ்சாப் பகுதியில் இருந்து இவற்றை கொள்முதல் செய்து வந்து வட மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். 200 பேர் ஸ்வெட்டர் ரக விற்பனையில் ஈடுபட திருப்பூர் மாவட்டத்தில் வந்து கடை விரித்துள்ளனர்.

    • பயிர் பாதுகாப்பில் கூடுதல் கவனம்
    • நகரங்களை விட மரங்கள் அடர்ந்திருக்கும் கிராமங்களில் கூடுதலாக பனி பெய்கிறது

    மடத்துக்குளம்:

    உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் தக்காளி, மிளகாய், பீட்ரூட், வெண்டை, கத்தரி உள்ளிட்ட காய்கறிப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதாலும், ஈரப்பதத்தாலும் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அதற்கேற்ப விலை ஏற்றம் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில்பயிர் பாதுகாப்பில் கூடுதல் கவனம்செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

    இதுகுறித்து குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:-

    மழைக்குப் பின் நிலவி வரும் குளிர்ந்த வானிலை என்பது பூச்சிகளின் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற பருவநிலையாக இருக்கும். தற்போதைய நிலையில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் இலைகளின் அடியில் முட்டையிட்டு பல்கிப் பெருகும் வாய்ப்பு உள்ளது. இவை இலையில் உள்ள சாற்றை உறிஞ்சுவதோடு பூஞ்சணங்கள், வைரஸ், பாக்டீரியா, மைக்கோ பிளாஸ்மா போன்ற சில நோய்க் கிருமிகளையும் செடிகளுக்குள் செலுத்தி பலவிதமான நோய்களை உருவாக்குகின்றன. எனவே பூச்சி தாக்குதல் அறிகுறி தென்படாவிட்டாலும் முன்னெச்சரிக்கையாக சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

    பொதுவாக பயிர் சாகுபடி செய்யும்போதே தட்டைப்பயறு, மக்காச்சோளம் போன்ற கவர்ச்சிப் பயிர்களை வரப்புப் பயிராக நடவு செய்து சாறு உறிஞ்சும் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். மேலும் இவற்றின் இயற்கை எதிரிகளான பொறி வண்டுகள் வளர்வதற்கேற்ற சூழலை உருவாக்கலாம். வெள்ளை ஈக்கள் தென்னையில் மட்டுமல்லாமல் பப்பாளி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட 300 விதமான பயிர்களில் சேதத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ரசாயன மருந்துகளைப் பயன்படுத்தும் போது அவற்றின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பலமடங்கு வீரியத்துடன் பெருகும் சூழல் உருவாகலாம்.

    எனவே இயற்கை முறையில் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்தி அவற்றை கவர்ந்து அழிக்கலாம். மேலும் அசுவினி, தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதவீதம் ஏக்கருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். பூச்சிகளின் பாதிப்பு அதிக அளவில் தென்பட்டால் தோட்டக்கலைத் துறையினரின் பரிந்துரை பெற்று ரசாயன மருந்துகளைப் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் பனிப்பொழிவு அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மல்லிகை பூ வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ, 1,200 ரூபாய்க்கு மல்லிகை பூ விற்றது. வழக்கமாக திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு 1.5 டன் மல்லிகை பூ விற்பனைக்கு வரும். நல்ல வருவாய் கிடைப்பதுடன் விரைவாக விற்றுத்தீர்ந்து விடுவதால் மொத்த வியாபாரிகள் பலர் மல்லிகை பூ வாங்கி, விற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

    இரவு, அதிகாலையில் பனி தூறல் மழை போல் பொழிகிறது. நகரங்களை விட மரங்கள் அடர்ந்திருக்கும் கிராமங்களில் கூடுதலாக பனி பெய்கிறது. திருப்பூர் மார்க்கெட்டுக்கு மல்லிகை பூ வழங்கி வரும் சத்தியமங்கலம், திண்டுக்கல், சேலம், ஓசூர் பகுதியில் பனி அதிகரிப்பால், செடிகளில் மொட்டுக்கள் பூ ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் மல்லிகை பூக்கள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டன் கணக்கில் பூக்கள் வந்த மார்க்கெட்டுக்கு மொத்தம், 350 கிலோ மல்லிகை பூ மட்டும் வருவதால் சீசன் இல்லாவிட்டாலும் தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோ, 1,200 ரூபாய்க்கு மல்லிகை விற்கப்படுகிறது. முல்லை, 600 ரூபாய், செவ்வந்தி 120, அரளி 150 ரூபாய்க்கு விற்றது.பூ வியாபாரிகள் கூறுகையில், பனி குறைந்து விட்டால், ஓரிரு நாளில் நிலை சரியாகும். திருக்கார்த்திகை தீபம் வரை விலை உயர்வு இருக்கும் என்றனர்.

    ×