search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பனிப்பொழிவால் பயிர்-பூக்கள் சாகுபடி பாதிப்பு
    X

    கோப்புபடம்

    பனிப்பொழிவால் பயிர்-பூக்கள் சாகுபடி பாதிப்பு

    • பயிர் பாதுகாப்பில் கூடுதல் கவனம்
    • நகரங்களை விட மரங்கள் அடர்ந்திருக்கும் கிராமங்களில் கூடுதலாக பனி பெய்கிறது

    மடத்துக்குளம்:

    உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் தக்காளி, மிளகாய், பீட்ரூட், வெண்டை, கத்தரி உள்ளிட்ட காய்கறிப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதாலும், ஈரப்பதத்தாலும் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அதற்கேற்ப விலை ஏற்றம் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில்பயிர் பாதுகாப்பில் கூடுதல் கவனம்செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

    இதுகுறித்து குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:-

    மழைக்குப் பின் நிலவி வரும் குளிர்ந்த வானிலை என்பது பூச்சிகளின் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற பருவநிலையாக இருக்கும். தற்போதைய நிலையில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் இலைகளின் அடியில் முட்டையிட்டு பல்கிப் பெருகும் வாய்ப்பு உள்ளது. இவை இலையில் உள்ள சாற்றை உறிஞ்சுவதோடு பூஞ்சணங்கள், வைரஸ், பாக்டீரியா, மைக்கோ பிளாஸ்மா போன்ற சில நோய்க் கிருமிகளையும் செடிகளுக்குள் செலுத்தி பலவிதமான நோய்களை உருவாக்குகின்றன. எனவே பூச்சி தாக்குதல் அறிகுறி தென்படாவிட்டாலும் முன்னெச்சரிக்கையாக சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

    பொதுவாக பயிர் சாகுபடி செய்யும்போதே தட்டைப்பயறு, மக்காச்சோளம் போன்ற கவர்ச்சிப் பயிர்களை வரப்புப் பயிராக நடவு செய்து சாறு உறிஞ்சும் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். மேலும் இவற்றின் இயற்கை எதிரிகளான பொறி வண்டுகள் வளர்வதற்கேற்ற சூழலை உருவாக்கலாம். வெள்ளை ஈக்கள் தென்னையில் மட்டுமல்லாமல் பப்பாளி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட 300 விதமான பயிர்களில் சேதத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ரசாயன மருந்துகளைப் பயன்படுத்தும் போது அவற்றின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பலமடங்கு வீரியத்துடன் பெருகும் சூழல் உருவாகலாம்.

    எனவே இயற்கை முறையில் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்தி அவற்றை கவர்ந்து அழிக்கலாம். மேலும் அசுவினி, தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதவீதம் ஏக்கருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். பூச்சிகளின் பாதிப்பு அதிக அளவில் தென்பட்டால் தோட்டக்கலைத் துறையினரின் பரிந்துரை பெற்று ரசாயன மருந்துகளைப் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் பனிப்பொழிவு அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மல்லிகை பூ வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ, 1,200 ரூபாய்க்கு மல்லிகை பூ விற்றது. வழக்கமாக திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு 1.5 டன் மல்லிகை பூ விற்பனைக்கு வரும். நல்ல வருவாய் கிடைப்பதுடன் விரைவாக விற்றுத்தீர்ந்து விடுவதால் மொத்த வியாபாரிகள் பலர் மல்லிகை பூ வாங்கி, விற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

    இரவு, அதிகாலையில் பனி தூறல் மழை போல் பொழிகிறது. நகரங்களை விட மரங்கள் அடர்ந்திருக்கும் கிராமங்களில் கூடுதலாக பனி பெய்கிறது. திருப்பூர் மார்க்கெட்டுக்கு மல்லிகை பூ வழங்கி வரும் சத்தியமங்கலம், திண்டுக்கல், சேலம், ஓசூர் பகுதியில் பனி அதிகரிப்பால், செடிகளில் மொட்டுக்கள் பூ ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் மல்லிகை பூக்கள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டன் கணக்கில் பூக்கள் வந்த மார்க்கெட்டுக்கு மொத்தம், 350 கிலோ மல்லிகை பூ மட்டும் வருவதால் சீசன் இல்லாவிட்டாலும் தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோ, 1,200 ரூபாய்க்கு மல்லிகை விற்கப்படுகிறது. முல்லை, 600 ரூபாய், செவ்வந்தி 120, அரளி 150 ரூபாய்க்கு விற்றது.பூ வியாபாரிகள் கூறுகையில், பனி குறைந்து விட்டால், ஓரிரு நாளில் நிலை சரியாகும். திருக்கார்த்திகை தீபம் வரை விலை உயர்வு இருக்கும் என்றனர்.

    Next Story
    ×