search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாங்கம் வாசிப்பு"

    • சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பஞ்சாங்கத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வாசிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று பிற்பகலில் ராமேசுவரம் கோவிலின் சுவாமி சன்னதி பிரகாரத்தில் அமைந்து உள்ள சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆற்காடு நவாப் பஞ்சாங்கம், சமஸ்தான அரண்மனை பஞ்சாங்கம் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டு பஞ்சாங்கத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை 1-ந்தேதியில் இருந்து 2025-ம் ஆண்டு பங்குனி 31-ந்தேதி வரை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் பஞ்சாங்கமாக வாசிக்கப்பட்டது. இந்த பஞ்சாங்கத்தை கோவிலின் உதயகுமார் குருக்கள் வாசித்தார். பஞ்சாங்கத்தில் வாசிக்கப்பட்ட முக்கிய தகவல்கள் வருமாறு:-

    தங்கம் விலை ஏற்றம்

    மத்திய அரசு பல நல்ல திட்டங்களை வாரி வழங்க நேரும். உலக அளவில் இந்தியா முதலிடத்தில் பதவி வகிக்கும். புற்று நோய்க்கு இந்தியா மருந்து கண்டுபிடித்து சாதனை படைக்கும். இந்த ஆண்டு அரசியலில் பல மாற்றங்கள் நிகழும். குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும். சொத்து பிரச்சினை அதிகம் ஏற்படும். தனியார் முதலீட்டு நிறுவனங்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரும்.

    பணத்தேவைகள் அதிகரிப்பதுடன் ஆன்லைன் வியாபாரமும் பெருகும். விலைவாசி ஏற்றம், இறங்குமுகமாக இருக்கும். தங்கம், வெள்ளி, மஞ்சள் விலை ஏற்றம், இறக்கமாக இருக்கும்.

    விளையாட்டுத்துறையில் இந்திய வீரர்கள் பல சாதனைகளை படைக்க நேரும். போதைப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக புழக்கத்தில் இருக்கும். தவறு செய்பவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைக்கும். கல்வி கட்டணங்கள் உயரக்கூடும். மாணவ-மாணவிகளுக்கு புதிய கல்விக் கொள்கை மூலம் சுமைகள் குறைய வாய்ப்புகள் உள்ளது.

    எல்லைகள் எப்போதும் போர் பதற்றமாக இருக்கும். புலிகளின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு வவ்வால் தொல்லை அதிகமாக இருக்கும். பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும். குற்றம் செய்து தலைமறைவாக வாழ்ந்தவர்கள் இச்சமயம் மாட்டிக் கொள்ள நேரும்.

    அரசியல் மாற்றம்

    அரசியலில் மாற்றங்கள் ஏற்படும். கட்சி கூட்டணிகள் மாறுபடும். அரசியல்வாதிகள் வழக்குகளில் சிக்கும் நிலை உருவாகலாம். இந்த ஆண்டு புதிதாக இருமல், கண் நோய் அதிகமாக பரவும். இந்த ஆண்டு விவசாயம் வளமாக இருக்கும். காட்டில் உள்ள புலி, சிங்கம் உள்ளிட்டவைகளுக்கு உணவு பஞ்சம் இருக்காது. எல்லா உயிரினங்களுக்கும் உண்ண உணவும், இடமும் கிடைக்கும்.

    இந்த ஆண்டு இந்தியா கடுமையாக வெள்ளத்தில் பாதிக்க நேரும். பல புதிய வரிகள் விதிக்க நேரும். விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும். மஞ்சள் விலை உச்சத்தை தொடும். கல்வி கட்டணம், கம்ப்யூட்டர், தொலை தொடர்பு சாதனங்கள், மின்சார கட்டணம் ஆகியவை விலை உயரும். நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்படலாம்.

    புதிய வரிகளால் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இந்த ஆண்டு வெப்பமும், மழையும், குளிர்ச்சியும் அதிகமாக இருக்கும். வெளி மாநிலத்தவர்களால் திருட்டு பயம் அதிகரிக்கும். இந்த தகவல்கள் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளன.

    • புதிய பஞ்சாங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
    • சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கம் வாசித்தனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணா மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    அருணசலேஸ்வரர் உண்ணாமுலை அம்மன் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாளித்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் புதிய பஞ்சாங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    பின்னர் சம்பந்த விநாயகர் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கம் வாசித்தனர். இதில் அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் உறுப்பினர்கள் கோமதி குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கோவிலில் பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். ஏராளமான பக்த்ர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் இன்று காலை முதல் கிரிவலம் சென்றனர்.

    • தேவஸ்தான பிரதான கோவிலில் பஞ்சாங்கம் வாசித்தல் நடந்தது.
    • அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் நேற்று தெலுங்கு புத்தாண்டான உகாதி பண்டிகையொட்டி தேவஸ்தான பிரதான கோவிலில் பஞ்சாங்கம் வாசித்தல் நடந்தது. முன்னதாக காலையில் மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    மேலும் தேவஸ்தான ஆஸ்தான ஜோதிடர் சிவக்குமார் சர்மா எழுதிய காணிபாக்கம் தேவஸ்தானம் பஞ்சாங்கம் கோவில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டது. காணிப்பாக்கம் கிராம அர்ச்சகர் மோகன் ராமலிங்கம், பஞ்சாங்கம் படித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள் வித்யாசாகர் ரெட்டி, கிருஷ்ணா ரெட்டி, கண்காணிப்பாளர் கோதண்டபாணி, வாசு, கோவில் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    அதேபோன்று ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்துள்ள சுருட்டுப் பள்ளியில் வீற்றிருக்கும் சர்வமங்கள சமேத பள்ளிகொன்டேஸ்வர சுவாமி தேவஸ்தானத்திலும் தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    திருப்பதியை சேர்ந்த சிலக்கப்பாட்டி குமார ஆச்சாரியர்களால் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கே.ராமச்சந்திரா ரெட்டி மற்றும் தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    ×