search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rameswaram ramanathaswamy temple"

    • சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பஞ்சாங்கத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வாசிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று பிற்பகலில் ராமேசுவரம் கோவிலின் சுவாமி சன்னதி பிரகாரத்தில் அமைந்து உள்ள சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆற்காடு நவாப் பஞ்சாங்கம், சமஸ்தான அரண்மனை பஞ்சாங்கம் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டு பஞ்சாங்கத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை 1-ந்தேதியில் இருந்து 2025-ம் ஆண்டு பங்குனி 31-ந்தேதி வரை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் பஞ்சாங்கமாக வாசிக்கப்பட்டது. இந்த பஞ்சாங்கத்தை கோவிலின் உதயகுமார் குருக்கள் வாசித்தார். பஞ்சாங்கத்தில் வாசிக்கப்பட்ட முக்கிய தகவல்கள் வருமாறு:-

    தங்கம் விலை ஏற்றம்

    மத்திய அரசு பல நல்ல திட்டங்களை வாரி வழங்க நேரும். உலக அளவில் இந்தியா முதலிடத்தில் பதவி வகிக்கும். புற்று நோய்க்கு இந்தியா மருந்து கண்டுபிடித்து சாதனை படைக்கும். இந்த ஆண்டு அரசியலில் பல மாற்றங்கள் நிகழும். குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும். சொத்து பிரச்சினை அதிகம் ஏற்படும். தனியார் முதலீட்டு நிறுவனங்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரும்.

    பணத்தேவைகள் அதிகரிப்பதுடன் ஆன்லைன் வியாபாரமும் பெருகும். விலைவாசி ஏற்றம், இறங்குமுகமாக இருக்கும். தங்கம், வெள்ளி, மஞ்சள் விலை ஏற்றம், இறக்கமாக இருக்கும்.

    விளையாட்டுத்துறையில் இந்திய வீரர்கள் பல சாதனைகளை படைக்க நேரும். போதைப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக புழக்கத்தில் இருக்கும். தவறு செய்பவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைக்கும். கல்வி கட்டணங்கள் உயரக்கூடும். மாணவ-மாணவிகளுக்கு புதிய கல்விக் கொள்கை மூலம் சுமைகள் குறைய வாய்ப்புகள் உள்ளது.

    எல்லைகள் எப்போதும் போர் பதற்றமாக இருக்கும். புலிகளின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு வவ்வால் தொல்லை அதிகமாக இருக்கும். பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும். குற்றம் செய்து தலைமறைவாக வாழ்ந்தவர்கள் இச்சமயம் மாட்டிக் கொள்ள நேரும்.

    அரசியல் மாற்றம்

    அரசியலில் மாற்றங்கள் ஏற்படும். கட்சி கூட்டணிகள் மாறுபடும். அரசியல்வாதிகள் வழக்குகளில் சிக்கும் நிலை உருவாகலாம். இந்த ஆண்டு புதிதாக இருமல், கண் நோய் அதிகமாக பரவும். இந்த ஆண்டு விவசாயம் வளமாக இருக்கும். காட்டில் உள்ள புலி, சிங்கம் உள்ளிட்டவைகளுக்கு உணவு பஞ்சம் இருக்காது. எல்லா உயிரினங்களுக்கும் உண்ண உணவும், இடமும் கிடைக்கும்.

    இந்த ஆண்டு இந்தியா கடுமையாக வெள்ளத்தில் பாதிக்க நேரும். பல புதிய வரிகள் விதிக்க நேரும். விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும். மஞ்சள் விலை உச்சத்தை தொடும். கல்வி கட்டணம், கம்ப்யூட்டர், தொலை தொடர்பு சாதனங்கள், மின்சார கட்டணம் ஆகியவை விலை உயரும். நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்படலாம்.

    புதிய வரிகளால் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இந்த ஆண்டு வெப்பமும், மழையும், குளிர்ச்சியும் அதிகமாக இருக்கும். வெளி மாநிலத்தவர்களால் திருட்டு பயம் அதிகரிக்கும். இந்த தகவல்கள் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளன.

    • மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் திரளுவார்கள்.
    • இந்து சமய அறநிலையத் துறையின் இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரம்:

    இந்தியாவில் புகழ் பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றாகும். தென்னகத்து காசி என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகு திகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

    இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பல்வேறு தோஷங்கள் கழிந்து, குடும்பமும், வம்சமும் செழித்து நன்மைகள் உண்டாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்னதாக அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். குறிப்பாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்ப ணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் திரளுவார்கள்.

    அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்வது வழக்கம். இதற்காக பக்தர்கள் புரோகிதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பேசி வழங்கி வந்தார்கள்.

    இந்த நிலையில் தற்போது அக்னி தீர்த்தகடற்கரையில் மேற்கண்ட சடங்குகளை செய்ய இந்து சமய அறநிலையத்துறை கட்டணம் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்ய ரூ.200 முதல் 400 வரை வசூலிக்கப்படும் எனவும். அதில் இருந்து ரூ.80, 160 புரோகிதர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்து சமய அறநிலையத் துறையின் இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னோர்களுக்காக திதி கொடுக்க கட்ட ணம் அறிவிக்கப்பட்டு உள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேசுவரம் அக்னி தீர்த்தத்ததில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிண்ட பூஜை செய்யக்கூட கோவில் நிர்வாகத்திற்கு பணம் கொடுக்க வேண்டும் என தி.மு.க. அரசு உத்தரவிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

    நம் முன்னோர்களுக்கு நாம் காட்டும் பாசத்தின், மரியாதையின் வெளிப்பாடாக மரித்தவர்களின் மறுமை வாழ்வுக்காக இறைவனை வேண்டி வைக்கப்படும் பிண்டத்திலும் பணம் பார்க்க வேண்டும் என்ற தி.மு.க. அரசு ஒரு தவறான முன்னுதாரணத்தை விதைப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இந்த முறையற்ற உத்தரவை உடனடியாக திரும்பப்பெற்று இறைவனுக்கான சேவையை முறைப்படுத்தவும், ஆலய மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கான கட்டணங்களை தவிர வேறெந்த கட்டணமும் வசூலிக்க வேண்டாம் எனவும் முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    அதேபோல், தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறையின் விதிகளின்படியே கோவில் வழிபாடு, பூஜை மற்றும் நம்பிக்கைகள் என்று எதிலும் அந்த துறை தலையிட முடியாது. அவ்வாறு இருக்கும்போது கோவிலுக்கு வெளியே திதி, தர்ப்பண பூஜை செய்யும் இந்துக்களின் அடிப்படை கலாச்சாரத்தின் மீது எப்படி தலையிட முடியும்? எனவே உடனடியாக இந்த அறிவிப்பை அரசு திரும்பப்பெற வேண்டும், இல்லையென்றால் அதற்கான விலையை தி.மு.க. அரசு கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், சட்ட விதிகளின்படி கோவிலுக்குள் நடக்கும் பூஜைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை கட்டணம் நிர்ணயிக்கலாம். ஆனால் கடற்கரையில் தனிமனித பூஜைக்கு எப்படி கட்டணம் வசூலிக்க முடியும். இது பக்தர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். மேலும் அதிக கட்டண வசூலிக்கும் வழிவகுக்கும். எனவே அரசின் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றனர்.

    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலில் ஆகம விதி முறைப்படி பழமை மாறாமல் ஆண்டுதோறும் சித்திரை மாத பிறப்பு, தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு வருகிறது.இதே போல் நேற்று சித்திரை மாத பிறப்பு தமிழ் புத்தாண்டையொட்டி கோவிலின் சாமி சன்னதியில் உள்ள உற்சவ மண்டபம் எதிரில் வைத்து பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

    பஞ்சாங்கத்தை கோவில் குருக்கள் உதய்குமார் வாசித்தார்.அதில் 2019-ம் ஆண்டு சித்திரை மாத தமிழ் புத்தாண்டு நாள் முதல் வருகிற 2020-ம் ஆண்டு பங்குனி மாதம் கடைசி தேதி வரையிலும் ஒரு ஆண்டில் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை வாசித்தார்.

    அவற்றில் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றிருந்த முக்கிய தகவல்கள் சில வற்றை காணலாம்.

    இந்த ஆண்டு சூறவாளியுடன் நல்ல மழை பொழியும்.வான்வெளி மண்டலத்தில் ஓசோனில் துளை ஏற்படுவதால் மரங்கள்,வீடுகள்,செல்போன் டவர்கள் அதிகஅளவில் பாதிக்கும்.கொசுக்களால் வைரஸ், டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவும். தங்கம்,வெள்ளி,ஆபரண நகைகள் விலையில்லாத வியாபாரமாக அமையும். மஞ்சள், ஏலக்காய், கிராம்பு, லவங்கம் போன்ற வியாபாரம் அதிக விலை விற்று வியாபாரிகள் லாபம் சம்பாதிக்க நேரும்.எங்கும் நிலையில்லாத வியாபாரம் நடக்கும். பருப்பு, எண்ணெய், நவதானியம் விலை வீழ்ச்சியடையும்.

    அரசாங்கம் பல சட்ட திட்டங்களை விதித்து கருப்பு பணத்தை பதுக்கியிருப்பவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க நேரும். மத்திய-மாநில அரசுகளில் சில மாற்றங்கள் ஏற்படும்.புதிய விண்வெளி ராக்கெட் மூலம் பல புதிய சாதனைகளை படைக்க நேரும். வானத்தில் மின்காந்த அலை ஏற்பட்டு விமான போக்குவரத்து தடைபடும். அரசியல் கட்சி தொடர்புடையவர்களுக்கு சிலருக்கு வாகன விபத்து மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்பட்டு உயிர் பிரிய நேரும்.

    அரசு பல ஏற்றுமதி வணிக நிறுவனத்தை தடை செய்ய நேரும்.கியாஸ் சிலிண்டரின் விலை அதிகமாகும். மலை பகுதிகளில் தீ விபத்து ஏற்படும். மலைகளில் இடி விழுந்து நிலச்சரிவு ஏற்படும். அணுமின் நிலையங்களில் மழையால் அதிகஅளவில் பாதிப்பு ஏற்படும்.மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் இந்தாண்டு அனைத்தும் நிறைவு பெறும். பால் உற்பத்தி அதிகமாக இருக்கும். பாலினால் புதிய நோய் பரவ நேரும்.கறவை மாடுகளின் விலை குறைய தொடங்கும். பூமிக்கடியில் ஒரு வெடி சத்தம் உண்டாகும். மதுரை, சதுரகிரி, போடி, தேவாரம், உத்தமபாளையம், ராஜபாளையம், மேகமலை, தேனி, கம்பம், மூணாறு, வால்பாறை, திருப்பதி, ஏற்காடு, ஜவ்வாதுமலை போன்ற பகுதிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.பல ஜீவராசிகள் மடிய நேரும்.

    புயல் தாக்கம்

    இந்தாண்டு ஆனி மாதம் புயல் தாக்கம் காரணமாக முக்கிய பாலத்தில் அபாயம் ஏற்பட்டு சேதமும், மெட்ரோ ரெயில் பாலம் பழுது ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.நீர்மூழ்கி கப்பலை புதியதாக இந்தியா வாங்க நேரும். விண்வெளியில் ராக்கெட்டால் பல பிரச்சினைகள் ஏற்படும்.மணல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வியாபாரம் செய்ய நேரும்.செங்கல்,மணல் சிமெண்டு, மரம், ரப்பர், கண்ணாடி பொருட்கள் விலை சற்று குறையும். செங்கல் சூளை வியாபாரம் கடுமையாக பாதிக்கும்.கோடிக்கணக்கான மதிப்புள்ள புதையல் அரசுக்கு கிடைக்கும்.

    அரசியலில் பல பெரிய மாற்றங்கள் ஏற்படும்.ஆளுங் கட்சியினரிடையே பிளவு ஏற்பட்டு இதன் காரணமாக எதிர்க் கட்சிகளுக்கு எதிர்பாராத ராஜயோகம் கிடைக்கும். மக்கள் சுபிட்சமாக இருப்பார்கள். விளையாட்டுத்துறை மற்றும் அரசியல் கட்சி தொடர்புடையவர்களுக்கு உடல் கடுமையாக பாதிக்கும்.

    கூட்டணி ஆட்சி

    இயற்கை சீற்றத்தால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும்.மத்திய-மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க நேரும். மத்தியில் பல புதிய வரித் திட்டங்களை அமல் படுத்த நேரும்.வங்கிகளில் பல புதிய மாற்றங்கள் ஏற்படும்.புதிய ரக ரூபாய் நோட்டு அச்சிட நேரும்.கொசுக்களால் ஒரு புதிய நோய் உருவாகும்.மடாதிபதிக்கு உயிர்க்கண்டம் ஏற்படும்.இந்த ஆண்டு 2 கிரகணங்கள் ஏற்படுகின்றன. ஜூலை மாதம் 16-ந்தேதி சந்திரகிரகணமும்,டிசம்பர் மாதம் 26-ந்தேதி சூரிய கிரகணமும் ஏற்படுகின்றது.இந்த ஆண்டு அரசு பல வரிகளை விதித்து பல ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும். இயற்கை சீற்றத்தினால் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா,கர்நாடகா தத்தளிக்க நேரும்.எங்கும் வெள்ள அபாயம் ஏற்படும். மின்சாரம் கடுமையாக பாதிக்கும். உணவு பொருட்களின் விலை கடுமையாக உயரும். தண்ணீருக்கு பிரச்சினை வராது.சென்னை,தென் மாவட்டங்கள்,கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தை அமாவாசையையொட்டி ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
    ராமேசுவரத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களான ஆடி அமாவாசை, தை அமாவாசை, மாசி சிவராத்திரி போன்ற நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னிதீர்த்த கடல் மற்றும் கோவிலில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடுவது வழக்கம். தைஅமாவாசையொட்டி நேற்று கார், வேன், பஸ் போன்றவற்றின் மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்தனர். அதனை தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    தை அமாவாசையையொட்டி ராமர் தங்க கருட வாகனத்திலும், சாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். அதன் பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

    கடலில் புனித நீராடிய பக்தர்கள் கோவிலின் உட்புறத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடுவதற்காக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதனை தொடர்ந்து சாமி-அம்பாளை தரிசனம் செய்தனர். அமாவாசையை முன்னிட்டு நாள் முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு இருந்தது.

    சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி ஆணையர் குமரேசன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, துணை சூப்பிரண்டு மகேஷ் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 
    புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரத்தில் 30 தீர்த்தங்கள் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி வருகிற 12-ந்தேதி நடக்கிறது.
    புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலை சுற்றி 108 தீர்த்த கிணறுகள் பல இடங்களில் அமைந்துள்ளன. மேலும் ராமேசுவரம் தீவு பகுதிகளை சுற்றியுள்ள தீர்த்த கிணறுகளை விவேகானந்தா கேந்திரம் மூலம் புனரமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

    இதில் அனுமன் தீர்த்தம், தர்மர் தீர்த்தம், ஜடா தீர்த்தம், மங்கல தீர்த்தம் உள்பட 30 தீர்த்தங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. இந்த 30 தீர்த்தங்களை பக்தர்களுக்கு அர்ப்பணிப்பதற்கான நிகழ்ச்சி வருகிற 12-ந் தேதி விவேகானந்தா கேந்திரம் மூலம் தங்கச்சிமடம் மங்கல தீர்த்த வளாகத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி 120 கலசங்களில் 30 தீர்த்தங்களின் புனிதநீர் வைக்கப்பட்டு யாகபூஜை நடைபெறுகிறது.

    12-ந் தேதி தங்கச்சிமடம் மங்கல தீர்த்தத்தில் நடைபெறும் தீர்த்த கலச பூஜையில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 11-ந் தேதி ராமேசுவரம் வந்து சங்குமால் கடற்கரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அவர் 12-ந் தேதி காலை கார் மூலமாக புறப்பட்டு தங்கச்சிமடத்திற்கு 8 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கு நடைபெறும் தீர்த்த கலச பூஜையில் கலந்து கொள்கிறார்.

    பின்னர் அங்கிருந்து ரெயில்வே நிலையம் அருகே உள்ள ராணிமங்கம்மாள் சத்திரத்திற்கு வருகை தரும் கவர்னர் அங்கு சிறிது நேரம் தியானம் செய்கிறார். அதன் பின்னர் காலை 10.30 மணியளவில் சீதா தீர்த்தம் அருகே உள்ள கோசாமி மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராமேசுவரத்தில் உள்ள தீர்த்தங்களின் சிறப்பு குறித்த புத்தகங்களை வெளியிட்டு கவர்னர் பேசுகிறார்.

    இதையொட்டி மங்கல தீர்த்தம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் சுத்தப்படுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது.
    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள மகாலட்சுமி தீர்த்தம் இடமாற்றம் செய்யப்பட்டு யாகபூஜை நடந்து இன்று பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அக்னி தீர்த்த கடலில் முன் னோர்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்குள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    கோவில் வளாகத்தில் அமைந்துள்ள 22 தீர்த்தங்களில் மகாலட்சுமி, காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி, சங்கு, சக்கரம் ஆகிய தீர்த்தங்கள் பக்தர்களுக்கு இடையூறாக இருந்தது.

    இந்த தீர்த்தங்களை கோவில் வளாகத்திலேயே வேறு இடத்தில் அமைக்கக் கோரி மதுரை ஐகோர்ட் டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட்டு தீர்த்த கிணறுகளை மாற்றி அமைக்க உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி தீர்த்த கிணற்றை தவிர மற்ற 5 கிணறுகளும் வேறு இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    மகாலட்சுமி தீர்த்த கிணறை மாற்றக்கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவில் நிர்வாகம் அதனை மாற்ற முன்வரவில்லை. இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனை விசாரித்த நீதிபதிகள் 10 நாட்களுக்குள் மகாலட்சுமி தீர்த்த கிணற்றை மாற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து தீர்த்த கிணற்றை மாற்றும் பணியை கோவில் நிர்வாகம் முடுக்கி விட்டது. அதன்படி கோவிலின் 2-ம் பிரகாரத்தில் உள்ள யானைகட்டு இடம் அருகில் மகாலட்சுமி தீர்த்த கிணறு அமைக்கப்பட்டது.

    இதனை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் நேற்று கோவில் மண்டபத்தில் முதல்கால யாகபூஜை நடத்தப்பட்டது. இன்று காலை 2-ம் கால பூஜை நடந்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பக்தர்கள் புனித நீராடினர்.
    ராமேசுவரம் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்தக் கிணறுகள் பூஜைகளுக்கு பின்னர் பயன்பாட்டுக்கு வந்தன. பக்தர்கள் புனித நீராடினர்.
    அகில இந்திய புண்ணியதலமாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு பின்னர் கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடுவது வழக்கம். இந்த நிலையில் கோவிலுக்குள் அமைந்துள்ள 1-வது தீர்த்தமான மகாலட்சுமி தீர்த்தம் முதல் 6 தீர்த்தம் வரை மிகவும் குறுகலான பாதையில் அமைந்திருந்தன.

    இதையடுத்து ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராடும் வகையில் வசதிகள் செய்ய வேண்டும். குறுகலான இடத்தில் அமைந்துள்ள 1 முதல் 6 தீர்த்தக்கிணறுகளை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து கோவிலின் 2-ம் பிரகாரத்தின் வடக்கு பகுதியில் புதிதாக 6 தீர்த்தக் கிணறுகள் தோண்டப்பட்டு பணிகள் முடிவடைந்தன.

    இவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது தீர்த்தக் கிணறுகளை இடமாற்றம் செய்வதற்கு அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இடமாற்றம் செய்வது ஆகம விதிக்கு எதிரானது எனவே இடமாற்றம் செய்யக்கூடாது என்று கோவில் இணை ஆணையரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். இதையடுத்து கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி அவர்களை சமரசம் செய்தார். இதையடுத்து இதையடுத்து அனைவரும் அமைதியாக கலைந்துசென்றனர்.

    அதனை தொடர்ந்து நேற்று யாகசாலை பூஜைகள் நடைபெற்று பிச்சை குருக்கள் தலைமையில் கோவில் குருக்கள் 5 பேர் யாகசாலையில் இருந்து புனித நீர் கலசத்தை தலையில் சுமந்து 3-ம் பிரகாரத்தை வலம் வந்தனர். பின்னர் புதிய தீர்த்தக் கிணறுகளுக்கு வந்து அதில் புனித நீரை ஊற்றி பிரதிஷ்டை செய்தனர். புதிய தீர்த்தக் கிணறுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கோவில் தக்கார் குமரன் சேதுபதி, ராணி லட்சுமி நாச்சியார், கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டுகள் ககாரின்ராஜ், பாலசுப்பிரமணியன், பேஸ்கார்கள் அண்ணாதுரை, செல்லம், கண்ணன், கலைச்செல்வன், கமலநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் இந்த புதிய தீர்த்தக்கிணறுகளில் பக்தர்கள் நீராடலாம் எனவும், யாத்திரை பணியாளர்கள் இவற்றில் இருந்து நீர் இரைத்து பக்தர்கள் மீது ஊற்றலாம் என்றும் இணை ஆணையர் மங்கையற்கரசி தெரிவித்தார். மேலும் பழைய தீர்த்தக்கிணறுகள் உடனடியாக மூடப்பட்டன. ஆனால் இணை ஆணையர் தெரிவித்தும் யாத்திரை பணியாளர்கள் புதிய தீர்த்தக் கிணறுகளில் நின்று தண்ணீர் ஊற்றமாட்டோம் என்று தெரிவித்தனர். அதன் பின்னர் இணை ஆணையர் தலைமையில் யாத்திரை பணியாளர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது சங்க தலைவர் பாஸ்கரன், கோவிலில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் எழுத்துபூர்வமாக எங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து தகவல் தெரிவிக்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோவில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு யாத்திரை பணியாளர்கள் சங்கத்துக்கு அழைப்பிதழ் கொடுப்பதில்லை. புதிய தீர்த்தக் கிணறுகள் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கும் எங்களை அழைக்கவில்லை.

    புதிய தீர்த்தக் கிணறுகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், அதில் யாத்திரை பணியாளர்கள் தீர்த்தம் எடுத்து பக்தர்களுக்கு ஊற்ற வேண்டும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் தான் யாத்திரை பணியாளர்கள் அங்கு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தார். அதற்கு இணை ஆணையர் இது ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இடநெருக்கடியை சமாளிக்கவும், பக்தர்கள் வசதிக்காகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆனால் இதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

    இதனால் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை புதிய தீர்த்தக் கிணறுகளில் பக்தர்கள் நீராட வந்தும் யாத்திரை பணியாளர்கள் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். தொடர்ந்து இணை ஆணையர் யாத்திரை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை தொடர்ந்து அந்த தீர்த்தக் கிணறுகளில் யாத்திரை பணியாளர்கள் நின்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டனர். தற்போது மகாலட்சுமி தீர்த்தம் தவிர மற்ற 5 தீர்த்தங்கள் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
    ராமேசுவரம் கோவில் புதிய தீர்த்தங்களுக்கு இன்று காலை பூஜைகள் நடந்தன. நாளை முதல் இந்த தீர்த்த கிணறுகளில் நீராட அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    தென்னிந்தியாவின் காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர்லிங்க தலங்களில் சிறப்பானதாக கருதப்படுகிறது. இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களது ஆசி கிடைக்கும் என்பது நம் பிக்கை.

    இதன் காரணமாக நாடு முழுவதும் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கானோர் வருவார்கள்.

    பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவில் வளாகத்தில் 22 புனித தீர்த்த கிணறுகள் உள்ளன. இங்கு நீராடினால் பாவங்கள் போகும் என்பது நம்பிக்கை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்து திரளான பக்தர்கள் நீராடுவார்கள்.

    இந்த புனித தீர்த்தங்களில் 6 தீர்த்த கிணறுகள் மிகவும் குறுகலான பாதையில் இருந்தது. இதனால் பக்தர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். சிலருக்கு காயமும் ஏற் பட்டது.

    இதையடுத்து நெருக்கடியான இடத்தில் உள்ள 6 புனித தீர்த்த கிணறுகளை மாற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு சவுகரியமான இடத்தில் 6 புனித தீர்த்த கிணறுகளை மாற்ற உத்தரவிட்டது.

    கடந்த சில மாதங்களாக கோவிலின் வடக்கு பகுதியில் ரூ.30 லட்சம் செலவில் புதிய கிணறு தோண்டும் பணி நடந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன.

    புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்த கிணறுகளுக்கு மகாலட்சுமி, சரஸ்வதி, கங்கா, யமுனா, சங்கு, சக்கரம் என பெயரிடப்பட்டுள்ளது.

    புதிய தீர்த்தங்களுக்கு இன்று காலை கோவிலில் கணபதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அம்பாள்-சுவாமி புனித தீர்த்தத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    இதில் கோவில் இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நாளை (28-ந்தேதி) 2-ம் கால யாகசாலை பூஜை முடிந்த பின் பக்தர்கள் புனித தீர்த்த கிணறுகளில் நீராட அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×