search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமேசுவரம் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு
    X

    ராமேசுவரம் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலில் ஆகம விதி முறைப்படி பழமை மாறாமல் ஆண்டுதோறும் சித்திரை மாத பிறப்பு, தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு வருகிறது.இதே போல் நேற்று சித்திரை மாத பிறப்பு தமிழ் புத்தாண்டையொட்டி கோவிலின் சாமி சன்னதியில் உள்ள உற்சவ மண்டபம் எதிரில் வைத்து பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

    பஞ்சாங்கத்தை கோவில் குருக்கள் உதய்குமார் வாசித்தார்.அதில் 2019-ம் ஆண்டு சித்திரை மாத தமிழ் புத்தாண்டு நாள் முதல் வருகிற 2020-ம் ஆண்டு பங்குனி மாதம் கடைசி தேதி வரையிலும் ஒரு ஆண்டில் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை வாசித்தார்.

    அவற்றில் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றிருந்த முக்கிய தகவல்கள் சில வற்றை காணலாம்.

    இந்த ஆண்டு சூறவாளியுடன் நல்ல மழை பொழியும்.வான்வெளி மண்டலத்தில் ஓசோனில் துளை ஏற்படுவதால் மரங்கள்,வீடுகள்,செல்போன் டவர்கள் அதிகஅளவில் பாதிக்கும்.கொசுக்களால் வைரஸ், டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவும். தங்கம்,வெள்ளி,ஆபரண நகைகள் விலையில்லாத வியாபாரமாக அமையும். மஞ்சள், ஏலக்காய், கிராம்பு, லவங்கம் போன்ற வியாபாரம் அதிக விலை விற்று வியாபாரிகள் லாபம் சம்பாதிக்க நேரும்.எங்கும் நிலையில்லாத வியாபாரம் நடக்கும். பருப்பு, எண்ணெய், நவதானியம் விலை வீழ்ச்சியடையும்.

    அரசாங்கம் பல சட்ட திட்டங்களை விதித்து கருப்பு பணத்தை பதுக்கியிருப்பவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க நேரும். மத்திய-மாநில அரசுகளில் சில மாற்றங்கள் ஏற்படும்.புதிய விண்வெளி ராக்கெட் மூலம் பல புதிய சாதனைகளை படைக்க நேரும். வானத்தில் மின்காந்த அலை ஏற்பட்டு விமான போக்குவரத்து தடைபடும். அரசியல் கட்சி தொடர்புடையவர்களுக்கு சிலருக்கு வாகன விபத்து மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்பட்டு உயிர் பிரிய நேரும்.

    அரசு பல ஏற்றுமதி வணிக நிறுவனத்தை தடை செய்ய நேரும்.கியாஸ் சிலிண்டரின் விலை அதிகமாகும். மலை பகுதிகளில் தீ விபத்து ஏற்படும். மலைகளில் இடி விழுந்து நிலச்சரிவு ஏற்படும். அணுமின் நிலையங்களில் மழையால் அதிகஅளவில் பாதிப்பு ஏற்படும்.மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் இந்தாண்டு அனைத்தும் நிறைவு பெறும். பால் உற்பத்தி அதிகமாக இருக்கும். பாலினால் புதிய நோய் பரவ நேரும்.கறவை மாடுகளின் விலை குறைய தொடங்கும். பூமிக்கடியில் ஒரு வெடி சத்தம் உண்டாகும். மதுரை, சதுரகிரி, போடி, தேவாரம், உத்தமபாளையம், ராஜபாளையம், மேகமலை, தேனி, கம்பம், மூணாறு, வால்பாறை, திருப்பதி, ஏற்காடு, ஜவ்வாதுமலை போன்ற பகுதிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.பல ஜீவராசிகள் மடிய நேரும்.

    புயல் தாக்கம்

    இந்தாண்டு ஆனி மாதம் புயல் தாக்கம் காரணமாக முக்கிய பாலத்தில் அபாயம் ஏற்பட்டு சேதமும், மெட்ரோ ரெயில் பாலம் பழுது ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.நீர்மூழ்கி கப்பலை புதியதாக இந்தியா வாங்க நேரும். விண்வெளியில் ராக்கெட்டால் பல பிரச்சினைகள் ஏற்படும்.மணல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வியாபாரம் செய்ய நேரும்.செங்கல்,மணல் சிமெண்டு, மரம், ரப்பர், கண்ணாடி பொருட்கள் விலை சற்று குறையும். செங்கல் சூளை வியாபாரம் கடுமையாக பாதிக்கும்.கோடிக்கணக்கான மதிப்புள்ள புதையல் அரசுக்கு கிடைக்கும்.

    அரசியலில் பல பெரிய மாற்றங்கள் ஏற்படும்.ஆளுங் கட்சியினரிடையே பிளவு ஏற்பட்டு இதன் காரணமாக எதிர்க் கட்சிகளுக்கு எதிர்பாராத ராஜயோகம் கிடைக்கும். மக்கள் சுபிட்சமாக இருப்பார்கள். விளையாட்டுத்துறை மற்றும் அரசியல் கட்சி தொடர்புடையவர்களுக்கு உடல் கடுமையாக பாதிக்கும்.

    கூட்டணி ஆட்சி

    இயற்கை சீற்றத்தால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும்.மத்திய-மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க நேரும். மத்தியில் பல புதிய வரித் திட்டங்களை அமல் படுத்த நேரும்.வங்கிகளில் பல புதிய மாற்றங்கள் ஏற்படும்.புதிய ரக ரூபாய் நோட்டு அச்சிட நேரும்.கொசுக்களால் ஒரு புதிய நோய் உருவாகும்.மடாதிபதிக்கு உயிர்க்கண்டம் ஏற்படும்.இந்த ஆண்டு 2 கிரகணங்கள் ஏற்படுகின்றன. ஜூலை மாதம் 16-ந்தேதி சந்திரகிரகணமும்,டிசம்பர் மாதம் 26-ந்தேதி சூரிய கிரகணமும் ஏற்படுகின்றது.இந்த ஆண்டு அரசு பல வரிகளை விதித்து பல ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும். இயற்கை சீற்றத்தினால் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா,கர்நாடகா தத்தளிக்க நேரும்.எங்கும் வெள்ள அபாயம் ஏற்படும். மின்சாரம் கடுமையாக பாதிக்கும். உணவு பொருட்களின் விலை கடுமையாக உயரும். தண்ணீருக்கு பிரச்சினை வராது.சென்னை,தென் மாவட்டங்கள்,கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×