search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவேற்காடு கருமாரி"

    • ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை - நீண்ட ஆயுள் கிடைக்கும்.
    • பூர நட்சத்திரம் - கலைகளில் வல்லமை பெறலாம்.

    திருவேற்காடு கருமாரி அம்மன் தலத்தில் எந்தெந்த நாட்களில் வழிபாடு செய்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விவரம் வருமாறு:

    ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை - நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    மாசி மாத அமாவாசை - குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    மாசி பவுர்ணமி - எதிரிகளை வெல்லலாம்.

    தை மாத ஞாயிற்றுக்கிழமை - தீய சக்திகள் விலகும்.

    தை மாத பவுர்ணமி - பல புனித நதிகளில் நீராடிய பலன்.

    தை மாத அமாவாசை - நோய்கள் குணமாகும்.

    பூச நட்சத்திர தினம் - அரிய செல்வம் சேரும்.

    பூர நட்சத்திரம் - கலைகளில் வல்லமை பெறலாம்.

    சித்திரை மாத பவுர்ணமி - நினைத்தது நிறைவேறும்.

    புரட்டாசி, ஐப்பசி மாத பவுர்ணமி நாட்கள் - புனிதம் பெறலாம் பாவம் நீங்கும்.

    நவராத்திரி நாட்கள் - பிரார்த்தனைகள் நிறைவேறும்

    • கர்ப்பக்கிருகத்துக்கு முன்னால் இடதுபுறம் விநாயகரும் வலதுபுறம் முருகரும் காட்சி தருகிறார்கள்.
    • மூன்றாம் பிராகாரத்தில் இருக்கும் துர்க்கை வெகு லட்சணம்.

    கர்ப்பக்கிருகத்துக்கு முன்னால் இடதுபுறம் விநாயகரும் வலதுபுறம் முருகரும் வெள்ளிக் கவசங்கள் துலங்கக் காட்சி தருகிறார்கள்.

    காவலுக்கு துவார பாலகிகள்.

    அர்த்த மண்டபச் சுற்றுச்சுவரில் கவுமாரி, மகேஸ்வரி, வைஷ்ணவி, சதுர்முகி, சாமூண்டீஸ்வரி.

    முதல் பிராகாரத்தில் லக்ஷ்மி, பாலவிநாயகர், ஏகாம்பரேசுவரர் - காமாட்சி, முருகன் - வள்ளி - தெய்வானை, சரஸ்வதி.

    இரண்டாவது பிராகாரத்தில் உற்சவ நாயகி. அடுத்திருக்கும் சந்நிதியில் வேல்கண்ணி அம்மன்.

    அடுத்து, தமிழில் துதித்த குறுமுனி அகத்தியனுக்கோர் சந்நிதி. அதையடுத்து உற்சவ ஆறுமுகன்.

    வடகிழக்கு மூலையில் வேங்கடாசலபதிக்கென ஒரு சிறுகோவில்.

    மகாலக்ஷ்மி தாயாரும் கருடாழ்வாரும் காட்சி தரும் இந்தக் கோவிலில் உற்சவமூர்த்திகளாக,

    ஸ்ரீனிவாசப்பொருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ராமானுஜர், சக்கரத்தாழ்வார்.

    பின்னும் ராம, லக்ஷ்மணர், சீதாதேவி, ஆஞ்சநேயன், ஆண்டாள்.

    அந்தக் கோவிலுக்கு வெளியே அரசமரத்தடியில் வலம்புரி விநாயகர்.

    தென்கிழக்கில் நவக்கிரகங்களுக்கென ஒரு சந்நிதி.

    மூன்றாம் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு ஒரு தனிக்கோவில். அங்காள பரமேஸ்வரிக்கு ஒரு தனிக் கோவில்.

    கல்வி நல்கும் நீலா சரஸ்வதி எனும் அன்னையை மடியில் தாங்கும் உச்சிஷ்ட கணபதிக்கென ஒரு கோவில்.

    பிரத்தியங்கரா தேவிக்கென பிறிதோர் கோவில். சப்தமாதர்கள், சுப்ரமணியர், பைரவர்.

    மூன்றாம் பிராகாரத்தில் இருக்கும் துர்க்கை வெகு லட்சணம்.

    உக்கிர காளியாக இருந்த கருமாரியின் ஆலயத்தில் சங்கராச்சாரியார் ஸ்ரீசக்ரம் ஸ்தாபித்து அன்னையின் உக்கிரம் தணித்திருக்கிறார்.

    உமாபார்வதிக்கான மந்திரங்களை உச்சரித்து சாந்த சொரூபீயாக்கியிருக்கிறார்.

    இன்னும் அன்னை உமையவளுக்கான மந்திரங்களால் உபாசிக்கப்படுகிறாள்.

    • புற்று இருந்த இடத்தில் அம்மனின் திருவடிவச் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
    • புற்று, ஆலயத்தின் ஈசானமூலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.

    இன்றைக்கு கருமாரியம்மன் ஆலயத்துக்கு நேர் எதிரே தீர்த்தக்குளம் அமைந்து இருக்கிறது.

    புற்று இருந்த இடத்தில் அம்மனின் திருவடிவச் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    புற்று, ஆலயத்தின் ஈசானமூலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.

    மஞ்சளும் குங்குமமும் துலங்கக் காட்சியளிக்கும் புற்றில் ஒரு திரிசூலம் எழுந்து நின்று,

    அன்னையை அடி பணிவோருக்கு அபயம் அளிக்கிறது.

    புற்றில் பாலையும் முட்டைக் கருவையும் இடைவிடாது சமர்ப்பிக்கிறார்கள் பக்தர்கள்.

    அன்னை காட்சி தரும் கர்ப்பக்கிருகத்தில் பதிவிளக்கு என்னும் அணையா விளக்கு, அது ஏற்றப்பட்ட நாளில்

    இருந்து எரிந்து கொண்டே இருக்கிறது.

    நெய் உண்டு எரியும் இந்த விளக்கின் சுடரொளியில், அன்னையின் இரு வடிவங்களும் அற்புதமாகக் காட்சியளிக்கின்றன.

    சிரசு மட்டும் காட்டும் உக்கிர நாரணியின் கண்கள் அல்லவரை அச்சப்படுத்துகின்றன.

    நல்லவருக்கு அபயமளிக்கின்றன.

    சிவை வடிவமான கருமாரி காண்போர் கருத்தைக் கவரும் விதத்தில் அழகுற காட்சி தருகிறாள்.

    மேல் வலதுகரத்தில் உடுக்கையும் பாம்பும். மேல் இடது கரத்தில் திருசூலம்.

    கீழ் வலது கரத்தில் கத்தி கீழ் இடதுகரத்தில் அமுத கலசம்!

    ஒரு காலத்தில் மண்டையோட்டு மாலை தவழ்ந்த அன்னையின் மார்பில், இப்போது எலுமிச்சை மாலை.

    உதட்டில் சிறு புன்னகை. கிழக்கு நோக்கும் கருமாரி! கண் மூடி வணங்கி நின்றால் உடலில் சிலிர்ப்பு ஓடுகிறது.

    மனதில் அமைதி நிலவுகிறது.

    • நல்லவர் தேவர். அல்லவர் அசுரர். அல்லவை அழித்து, நல்லவை காக்கும் பொறுப்பு ஆண்டவனுடையது.
    • தேவர்கள், தங்களுக்கு அபயம் அளிக்கப் புறப்பட்ட சக்தியை நெஞ்சாரப் போற்றித் துதித்தனர்.

    அசுரருக்கும் தேவருக்குமிடையே ஆதிகாலந்தொட்டே போர் நடந்து வருகிறது.

    நல்லவர் தேவர். அல்லவர் அசுரர். அல்லவை அழித்து, நல்லவை காக்கும் பொறுப்பு ஆண்டவனுடையது.

    அசுரர்களின் கை ஓங்கியிருந்த காலம் அது. தேவர்கள் தீரா துன்பத்தில் சிக்கிச் சிறுமைப்பட்டுக் கொண்டு இருந்தனர்.

    அவர்தம் குறைகேட்ட பரமசிவன், அசுரரின் ஆதிக்கம் அகற்றி, தேவரின் இடர் களைய எண்ணம் கொண்டார்.

    'அசுரரின் ஆதிக்கத்தை சக்தியால் மட்டுமே சமாளிக்க இயலும்' என்பதால் பரமசிவன், பார்வதியை நோக்கினார்.

    'உமையே... கருமாரியாகக் காட்சி தந்து, நீ ஆட்சி புரிய வேண்டிய காலம் கனிந்துவிட்டது.

    இந்த வெண் நீற்றைப் பெற்று சிவனும் சக்தியுமாக இருந்து ஐந்தொழிலையும் புரிந்தருள்க' என்று கூறி தன் மேனிச் சாம்பலை எடுத்து அவளிடம் நீட்டினார்.

    அன்னை சாம்பலைப் பெற்றாள். சிவனும் சக்தியுமாகத் தானே ஆகிக் காட்சி தந்தாள்.

    தேவர்கள், தங்களுக்கு அபயம் அளிக்கப் புறப்பட்ட சக்தியை நெஞ்சாரப் போற்றித் துதித்தனர்.

    அசுரரை அடக்க, அன்னை சக்தி கருநீல நிறத்தில் பயங்கரமான உக்கிர உருவம் எடுத்தாள்.

    திரிசூலம் ஒன்றைத் தன்முன் நாட்டினாள். அன்னையின் உக்கிரம் தாங்காமல், அல்லல் விளைவித்த அசுரர்கள் அடங்கி ஒடுங்கினர்.

    உக்கிர சக்தியை மகாவிஷ்ணு சாந்தப்படுத்தி, 'கருமாரி.... உலக மக்கள் உய்வதற்கு உன் கடைக்கண் அருட்பார்வையே போதும்.

    தலை காட்டி, உடல் மறை...' என உள்ளன்போடு உரைத்தார்.

    கருமாரி புன்முறுவலுடன் தலைகாட்டி, தன்னிலை மறைத்தாள்.

    ஞாலத்து மக்கள் நாளும் வந்து வழிபட, எப்போதும் போல் ஓர் அழகிய வடிவமுடனும் எழுந்தருளினாள்.

    மகாவிஷ்ணு சாந்தப்படுத்திய கருமாரி உருவம் நாரணி (நாராயணனின் பெண் வடிவம்) என்றும் கிருஷ்ணமாரி என்றும் அழகிய வடிவம் சிவை என்றும் (சிவனின் பெண் வடிவம்) அறியப்பட்டது.

    காலத்துக்கு அப்பாற்பட்ட அகத்தியமுனிவர் அம்மையை இரட்டை உருவுடன் கூடிய இந்த நிலையில் கண்டு செந்தமிழால் போற்றித் துதித்தார்.

    அம்மை அகத்தியருக்குக் காட்சி தந்தது தை மாதத்தில்.

    பவுர்ணமி தினத்தில் பூச நட்சத்திரத்தில், ஞாயிற்றுக்கிழமையில், இந்த நாளே அன்னையின் அவதார தினமாகக் கருதப்படுகிறது.

    காட்சியளித்த கருமாரி அகத்தியரிடம் சொன்னாள்.

    'அகத்தியா, நீ வந்து வணங்கி வழிபடவே நான் காத்திருந்தேன். அசுரர் ஆணவம் அடங்கிவிட்டது.

    இனி நானும் பாம்பு உருக்கொண்டு புற்றில் அடங்கியிருக்கப் போகிறேன்.

    மறுபடி கலியுகத்தில் காட்சியளிப்பேன் கலியின் கொடுமையால் வாடும் மக்களுக்கு சாம்பலைக் கொண்டே சாந்தி அளிப்பேன்.

    அப்போது எனக்கு திருக்கோவிலும் தீர்த்தக் குளமும் அமையும்.

    பரிவாரக் கடவுளர்களும் பாங்குடனே அமைவர்.

    அன்னை உரைத்தபடியே அனைத்தும் நடந்தேறின.

    வேலங்காட்டில், வெள்ளை வேல மரத்தின் கீழ் பாம்புருவில் அன்னை, புற்றில் குடி கொண்டிருப்பது தெரிய வந்தது.

    அந்த இடத்தில் அவளுக்கோர் ஆலயம் எழுந்தது.

    • கொடுங்கோலன் கம்சன் அநீதி ஆட்சி புரிந்து கொண்டிருந்தான்.
    • பிறந்திருப்பது பெண் குழந்தை என அறிந்து திகைத்தான்.

    கொடுங்கோலன் கம்சன் அநீதி ஆட்சி புரிந்து கொண்டிருந்தான்.

    தன் தங்கை தேவகியை வசுதேவனுக்குக் கட்டிக் கொடுத்தான்.

    தங்கையை அவளது கணவனுடன் அனுப்பிவைக்கும் நேரத்தில் ஆகாயத்திலிருந்து அசரீரி ஒன்று ஒலித்தது.

    'கம்சா, உன் தங்கை தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்லும்'

    'தன் தங்கையின் பிள்ளை தன்னைக் கொல்வதா?' என்று ஆத்திரமடைந்து தேவகியையும் வசுதேவனையும் சிறையில் அடைத்தான் கம்சன்.

    அவர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கொன்று வந்தான்.

    ஏழு குழந்தைகள் கொல்லப்பட்டன.

    தேவகியின் எட்டாவது கர்ப்பம்.

    அந்தக் கருவில் உதிக்க இருந்தவன் கண்ணன்.

    அதே சமயம், ஆயர்பாடியில் நந்த கோபனின் மனைவி யசோதையும் கருவுற்றிருந்தாள்.

    அவள் கருவில் குடி கொண்டிருந்தது மாயா எனும் சக்தி.

    தேவகிக்குக் குழந்தை பிறந்தது.

    இறைவனின் எண்ணப்படி தேவகியின் குழந்தை ஆயர்பாடி போய்ச் சேர்ந்தது.

    யசோதையின் குழந்தையான மாயா சக்தி சிறைக்கு இடம் மாறியது.

    அதன் பின்னரே குழந்தை பிறந்த செய்தி கம்சனுக்குத் தெரியவந்தது.

    குழந்தையைக் கொல்ல கம்சன் குதூகலத்துடன் வந்து சேர்ந்தான்.

    பிறந்திருப்பது பெண் குழந்தை என அறிந்து திகைத்தான்.

    பிள்ளை அல்லவா பிறக்கப்போகிறது என அசரீரி அறிவித்திருந்தது.

    இருந்தும் கம்சன், 'உன்னை விட்டாலும் தவறு. ஆதலால் எங்கிருந்து வந்தாயோ அங்கேயே செல்' என வானதிர சிரித்து வாளை ஓங்கினான் வெட்ட...

    அவனுக்கு மேல் ஆயிரம் மடங்கு அதிகமாகச் சிரித்து விண்ணில் தாவியது அந்தக் குழந்தை.

    'அடேய் ஆத்திரக்காரா! கரு மாறி வந்த என் கழுத்தை நெரிக்கப்பார்க்கும் கல்நெஞ்சக் கம்சா!

    உன்னை வதைக்க என் அண்ணன் ஆயர்பாடியிலிருந்து இடையனாக எட்டு வயதில் வருவான்! அதுவரை காத்திரு' என்று சொல்லி மறைந்தது.

    கரு மாறி விட்டதை உணர்ந்த கம்சன் கலக்கத்துடன் 'கருமாறி' என்றான்.

    அக்கணமே ஆகாயம், பூமி அனைத்தும் 'கருமாரி, கருமாரி' என்று அழைக்கத் தொடங்கின.

    இப்படித்தான் கருமாரி உருவானாள்.

    கம்சனின் கண்ணில் இருந்து மறைந்த அவள் கண்ணனிடம் சென்றாள்.

    தானெடுத்த ஒரு பிறவி இவ்வளவு விரைவில் முடிவுக்கு வந்துவிட்டதே என அண்ணனிடம் ஆதங்கப்பட்டாள்.

    'இல்லை, கருமாரி என்ற பெயருடன் நீ அகிலத்தை ஆட்சி செய்யப் போகிறாய்.

    நடக்கப் போவதைப் பொறுத்திருந்து பார்' என கண்ணன் கூறினான்.

    • திருவேற்காடு ஆதிகாலத்தில் வேப்ப மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது.
    • நாளடைவில் வேலங்காடு திருவேற்காடு ஆகியது. கருமாரி அன்னை ஆலயம் எழுந்தது.

    திருவேற்காடு ஆதிகாலத்தில் வேப்ப மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது.

    இதனால் அந்த பகுதியை வேலக்காடு என்று அழைத்தனர்.

    அந்த வேலங்காட்டில் ஒரு பாம்புப்புற்று இருந்தது

    பாம்பு வடிவில் அந்தப் புற்றில் கருமாரி இருந்து வருகிறாள் என்பது தெரிய வந்தது.

    மெல்ல, மெல்ல கருமாரியின் புகழ் பரவியது.

    பக்தர்கள் கருமாரியை தேடி வந்து குறிகேட்டு பலன் பெற்று சென்றனர்.

    கடந்த நூற்றாண்டில்தான் இந்த அற்புதம் நடந்தது.

    நாளடைவில் வேலங்காடு திருவேற்காடு ஆகியது. கருமாரி அன்னை ஆலயம் எழுந்தது.

    இந்த கருமாரி யார்? நீண்ட நாட்களாக நாக வடிவில் மக்கள் அறியாதபடி இருந்ததற்கு என்ன காரணம்?

    அதற்கு ஒரு புராண கதை உள்ளது.

    அதைப்பற்றி அடுத்த பதிவில் காணலாம்.

    • திருவேற்காடு ஆலயம் வந்து, மண்ணை மிதித்தாலே போதும் குறைகள் மறைந்து விடுகின்றன.
    • “முடித்து நிற்கிறேன்” என்று வாக்கிட்டால் எப்படியும் நன்மையாக முடித்து நிற்பாள்.

    திருவேற்காடு ஆலயம் வந்து, மண்ணை மிதித்தாலே போதும் குறைகள் மறைந்து விடுகின்றன.

    அம்மனின் திருச்சாம்பலைப் பெற்று சென்றாலே தங்கள் வாழ்வில் அதன்பின் ஏற்படும் மாற்றங்களை அவர்களே உணரத் தலைப்பட்டு விடுகிறார்கள்.

    அம்மனிடம் வாய்விட்டுச் சொல்லாமலே அவர்கள் வந்த காரியம் ஆராய்ந்து அருளுகிறாள்.

    "அம்மனிடம் மனமுருகித் தாயே நீ காத்து நில்" என்று வேண்டினால் போதும்.

    மலைபோல் வரும் துயர் ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் பனிபோல், நீங்கி விடுகிறது.

    இங்கு மந்திரமோ, தாயத்தோ, மாய வித்தைகளோ கிடையாது.

    இறைவியிடம் பேசும் தெய்வத்திடம், அகில உலகையும் காத்து இரட்சிக்கும் தெய்வத்திடம்

    மனமுருக மனதில் வேண்டினால் போதும் அப்படியொரு சக்தி.

    அது மட்டும்மல்ல, அன்னை வாக்கிட்டால் இதுவரை தப்பியதில்லை.

    "முடித்து நிற்கிறேன்" என்று வாக்கிட்டால் எப்படியும் நன்மையாக முடித்து நிற்பாள்.

    சிலர் வந்த உடனேயே முடியவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

    "அம்மன் முடித்து நிற்பாள்" எனக் காத்திருந்து பொறுமை காத்தவர்கள் உரிய பலனை பெறாமல் போனதில்லை.

    அன்னையின் செயல்பாடு அவள் நாதன் இட்ட கட்டளைப்படி நடைபெறுகிறது.

    தலையெழுத்தை மாற்றம் வலிமை இல்லையென்றால் அதையும் எடுத்துக் கூறிவிடுகிறாள்.

    இது நடக்கமா? நடக்காதா? என்று சோதிடம் போல் கேட்கக்கூடாது "தாயே முடித்து வை"

    என்று வேண்டுவோர்க்கு நன்மையாக முடிகிறது.

    "நாம் விரும்பியது நிறைவேற வேண்டும்" என்று வேண்டும்போது, நல்லதாயின் முடித்துவை

    என்று விபரமாகக் கேட்பவர்களுக்கு நல்லதாக நடைபெறுமாயின் முடித்து வைக்கிறாள்.

    கெடுதல் விளையுமாயின் அதனைத் தடுத்து நிறுத்தி விடுகிறாள் அத்தெய்வம்.

    • ‘சுகப் பிரம்மனே! விதியை வெல்வது கடினம்.
    • தேவி சிங்க வாகனம் மீதமர்ந்து காட்சி தந்தாள். நாடி வந்த காரணத்தை உரைத்தார் சுகர்.

    சுக முனிவர் அறிந்த சோதிடக் கலை

    துன்பத்தில் உழல்வது மானிடப் பிறப்பு. நாம் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப நமக்கு சுக, துக்கங்கள் நிகழ்கின்றன. பூர்வ ஜென்ம பாவ, புண்ணியங்களுக்கு ஏற்பவும் நமது தலையெழுத்து நிர்ணயிக்கப்படுகிறது. நம்முடைய வாழ்வைக் கட்டுப்படுத்துபவை நவகிரகங்கள். பன்னிரண்டு ராசியிடங்களில் இருபத்தேழு நட்சத்திரங்களைக் கட்டுப்படுத்தி மனிதனை ஆட்டிப் படைக்கின்றன அந்த நவகோள்கள்.

    கோள்களின் விளையாட்டு மானிட வாழ்வு. அந்தக் கோள்களுக்கு எப்படிப்பட்டவர்களும் ஆட்பட்டே தீர வேண்டும்.

    'முதிர்தரு தவமுடை முனிவ ராயினும்

    பொதிவறு திருவொடு பொலிவ ராயினும்

    மதியின ராயினும் வலியின ராயினும்

    விதியினை யாரே வெல்லும் நீர்மையார்?

    என்று தனது கந்த புராணத்தில் கேட்பார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

    'சோதிடம் பொய்க்கா தென்று

    சாற்றுவர் பெரியோர்'

    என்பது வில்லிபுத்தூர் ஆழ்வாரின் கூற்று.

    எனவே விதியினை யாராலும் வெல்ல இயலாது. இருப்பினும் விதியின் விளையாட்டை முன்கூட்டியே அறிய முடியுமா?

    இந்தக் கேள்வி முதன்முதலாக சுகமுனிவரின் மனத்திலே எழுந்தது.

    சிவனை எண்ணி ஐந்தெழுத்தை ஓதினார்.

    சிவனார் காட்சி தந்தார்.

    தனது கேள்வியை ஆண்டவனிடம் வைத்தார்.

    'சுகப் பிரம்மனே! விதியை வெல்வது கடினம். விதியை வென்றவன் ஒருவன் இருக்கிறான். அவன் என் அன்பு மகன் மார்க்கண்டேயன்! அவனை அடைந்து தெளிவு பெறுவாய்!' என்றார் இறைவன்.

    சிவனுரை ஏற்ற சுக முனிவன் செண்பக காட்டை அடைந்து மார்க்கண்டேயரைப் பணிந்தான்.

    மார்க்கண்டேயர் சொன்னார்: 'சுகமே! விதியை வெல்வது கடினமே! என் அப்பனின் அருளால் அதை வெல்ல முடியும். அதே போல விதியை முன்கூட்டியே அறியவும் வழியுண்டு. நவக்கிரகங்களைப் படைத்து அவைகளைக் கட்டப்படுத்துபவள் ஆதிபராசக்தி. அந்த ஆதிபராசக்தி திருவேற்காட்டிலே கருமாரியாகக் கோவில் கொண்டு விளங்குகிறாள். அவளைப் பணிந்து இதற்கொரு வழி காண்போம்' என்றார்.

    இருவரும் வேற்காடு அடைந்தனர்.

    பனைத்தாயை வாழ்த்தி, அகத்தியரைப் பணிந்து, புற்றுருகுற்று கருமாரியைப் போற்றினர்.

    தேவி சிங்க வாகனம் மீதமர்ந்து காட்சி தந்தாள். நாடி வந்த காரணத்தை உரைத்தார் சுகர்.

    'மகனே! நாடி வந்து நாடியைப் பற்றிக் கேட்கின்றாய்! திருநீற்றைப் பூசி சிவாய நம என்று சொல்லிப் பவுர்ணமி நாளில் ஐம்புலனை அடக்கி காத்த வீரனைப் பணிவாய்! பெரிய நாடி, கலைநாடி, இடை நாடி ஆகிய நாடிகளின் நிலையறிந்து பெருமைமிக்க சோதிடக் கலையை ஓதாது உணர்வாய்' என்று திருவாய் மலர்ந்தருளினாள் தாய்.

    அன்றிலிருந்து கலைகளின் தாயாம் கருமாரியின் வாக்கினால் சோதிடக்கலை இப்பூவுலகில் நிலைபெற்று விளங்குகிறது.

    • குறத்தி வடிவில் வந்த அன்னையின் அருள்வாக்கு கேட்டுத் துர்க்கை அம்மனை துதித்தனர்.
    • அடுத்த கணம் பொம்மி, வெள்ளையம்மா இருவரும் மாயமாய் மறைந்து கயிலாயம் அடைந்தனர்.

    முத்து வீர சுவாமியின் வரலாறு

    காசிமாநகரைத் துளசி என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் மகப்பேறு இன்றித் துன்புற்றான். காசி விசுவநாதரையும், விசாலாட்சி அம்மையையும் எண்ணி ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்தான்.

    அம்மையப்பன் காட்சி அளித்தார்.

    என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

    பிள்ளை வரம் கேட்டான் துளசி.

    அருளி மறைந்தார் ஆண்டவன்.

    துளசி மன்னன் தன் மனையாள் கற்பூரவல்லியுடன் மகிழ்ந்திருக்கும் நேரத்தில் விசுவநாதரின் அருளால் மகன் பிறந்தான்.

    அரசகுமாரன் பிறந்த நேரத்தைக் கணித்த சோதிடன் சித்திரைப் பருவத்தில் பிறந்த அரசகுமாரனால் நாட்டுக்கு ஆபத்து என்றான்.

    நாட்டின் எல்லையிலுள்ள ஆலமரத்தடியில் குழந்தையைக் கிடத்தினார்கள்.

    கானகத்தில் குழந்தை கதியற்றுக் கிடந்தது.

    இறையருளால் பிறந்த குழந்தையைக் கொஞ்சிட துளசி அரசனுக்குக் கொடுத்து வைக்கவில்லை.

    குழந்தை பசியால் அழுதது.

    அன்னை கருமாரி உருமாறி நாகமாக அங்கு வந்தாள். வெயில் படாமல் படமெடுத்துக் குழந்தையைக் காத்தாள். அவ்வழியாகச் சென்ற மாதிகத்தன் என்பவன் இக்காட்சியைக் கண்டான். அவனைக் கண்டதும் பாம்புருக் கொண்ட தாய் மறைந்தாள். குழந்தையை எடுத்து வந்து வளர்த்தான் மாதிகத்தன். 'வீரன்' என்று பெயரும் சூட்டினான்.

    குழந்தை வாலிபனானான்.

    ஒருமுறை சோழ நாட்டுத் தலங்களை தரிசித்த வீரன் பாண்டிய நாடு சென்றான். பாண்டிய நாட்டின் வட பகுதியில் கள்ளர் குலம் வாழ்ந்து வந்தது. அந்தக் கள்ளர் குலத்தோர் பகைவர்களால் அவதிப்பட்டு வந்தனர்.

    குல தெய்வமாகிய துர்க்கையைச் சரிவர வணங்காத காரணத்தினால் அவர்களுக்கு இந்நிலை வந்தது. குறத்தி வடிவில் வந்த அன்னையின் அருள்வாக்கு கேட்டுத் துர்க்கை அம்மனைத் துதித்தனர்.

    அம்மனின் அருளால் வீரன் அங்கு வந்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தான். பகைவர்களை முறியடிக்கப் புறப்பட்டான்.

    கள்ளர்கள் துணையுடன் பகைவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தான்.

    கள்ளர்களின் அன்பைப் பெற்ற வீரன் சோழ நாட்டில் பொம்மண்ண துரை வாழும் ஊருக்குச் சென்றபோது விதிவசத்தால் இரண்டு பெண்களைக் கண்டான்.

    பரமசிவனின் அருளால் பிறந்த வீரன் உண்மையில் முருகவேளின் அம்சம். வள்ளி, தெய்வானை என்ற இரு மங்கையரை மணந்த அந்த முருகப் பெருமான் ஆலால சுந்தரனாய்க் கமலினி, அநிதையை மணந்தது, புவியில் பிறந்து கந்தனாகிப் பரவை நாச்சியாரையும், சங்கிலியாரையும் மணந்தது எல்லாமே அவனின் தொடர் வரலாறு. அதே வரலாறு மீண்டும் தொடர்ந்தது. இந்தப் பிறவியில் வீரனாகப் பிறந்து வெள்ளையம்மா, பொம்மி என்ற இரு கன்னியரைக் கண்டு காதல் கொண்டான்.

    இந்நிலையில் காதல் வேட்கை மிக அந்த இருவரையும் குதிரையில் வைத்துத் தூக்கிச் சென்றான் வீரன்.

    பொம்மண்ணா கொதித்தான்.

    சமயபுரத்து அன்னை அவன் கனவில் வந்து வீரனின் அம்சத்தை எடுத்துரைத்தாள். எல்லாமே இறைவருளின் விளையாட்டு என்றிருந்து, வீரனுக்கே அந்த இரு நங்கையரையும் மணம் முடித்துத் தந்தான்.

    இதற்குள் கள்ளர் இனத்தில் பூசல் எழுந்தது. இருபிரிவாகப் பிரிந்து கடுமையாக மோதிக் கொண்டனர். இதை அறிந்த வீரன் அவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டான். அது பொறுக்காத சில சூழ்ச்சிக்காரர்கள் வீரன் மீது அடாத பழி சுமத்தினர். விசாரித்து அறியாத கள்ளர் கோமான் வீரனைக் கழுவிலேற்றும்படி உத்தரவிட்டான்.

    வீரன் பொங்கினான். தெய்வாம்சம் வெளிப்பட்டது. முருகவேளின் அம்சம் தன்னை வெளிக்காட்டியது. கழுமரம் தீப்பற்றிக் கொண்டது.

    அடுத்த கணம் பொம்மி, வெள்ளையம்மா இருவரும் மாயமாய் மறைந்து கயிலாயம் அடைந்தனர்.

    பெரும் சினமடைந்து ரௌத்காரமாய் நின்ற வீரனைக் கண்டு பாண்டிய நாடே அஞ்சியது. கள்ளர்கள் பயத்தால் மண்டியிட்டுப் பணிந்து பிழை பொறுத்தருளுமாறு வேண்டினர்.

    அங்கிருந்து அகன்ற வீரன் நேரே அன்னை குடிகொண்ட தாய் வீடாகிய வேற்காட்டை அடைந்தான். வேதபுரீசனை வழிபட்டு, பனைத்தாயை பணிந்து சாம்பர் பொய்கையில் நீராடி, புற்றினை வலம் வந்து அன்னை கருமாரியைப் போற்றி நின்றான். அருளுருவான தேவி அரி மீது அமர்ந்து அருட்காட்சி அளித்தாள். அன்று முதல் அன்னையின் ஆலயத்திலேயே குடியேறி இன்று வரை அன்னையின் பக்தர்களைக் காத்து வருகிறான்.

    காத்த வீரசாமியின் வரலாறு

    ஒருமுறை அன்னை உமாதேவியார் ஆண்டவன் அனைத்து சிவன்களுக்கும் படியளிக்கும் முறையைச் சோதிக்க விரும்பினாள். கல்லுக்குள் உள்ள தேரைக்கும் உணவளிப்பவன் இறைவன். அதை அறிந்திருந்தும் அன்னை விதிவசத்தால் ஓர் எலும்பை எடுத்து பேழையில் மூடி வைத்தாள். ஒருநாள் கழித்து திறந்து பார்த்தபோது அப்பேழையினுள் எலும்பும், அதனுடன் ஒரு சோற்றுப் பருக்கையும் இருக்கக் கண்டாள். இறைவனின் அருள் உள்ளத்தை எண்ணி பூரித்தாள். இருப்பினும் ஆண்டவனைச் சோதிப்பது பாவமல்லவா?

    அந்தப் பாவம் நீங்கிட கங்கைக் கரையோரம் ஒரு மலர்ச்சோலை அமைத்து இறைவனை எண்ணித் தவம் இயற்றினாள். தவமியற்றும்போது தடை வராமல் காக்க இறைவனை வேண்டி நின்றாள்.

    இறைவனின் விருப்பப்படி அவனது புருவ மத்தியிலிருந்து ஒரு வீரன் தோன்றினான். அவன் அன்னையின் மலர்ச் சோலையைக் காத்து நின்றான். அவன்தான் காத்த வீரன்.

    ஒருமுறை கயிலையைச் சேர்ந்த கன்னியர் எழுவர் ஒரு குளத்தில் நீராடினர். விதிவசத்தால் காத்த வீரன் அந்தக் கன்னியர்களில் இளையாளது ஆடையை மட்டும் கவர்ந்து சென்றான்.

    கயிலை சென்ற கன்னியர் சிவபெருமானிடம் முறையிட்டனர். சினமடைந்த சிவபெருமான் காத்த வீரனைச் சபித்தார். 'சாதாரண மனிதனைப் போல் காமத்திற்கு ஆட்பட்ட நீ ஏழு பிறவியெடுத்து துன்புற்று முடிவில் கழுவில் ஏற்றப்பட்டு என்னிடம் வந்தடைவாய்' என்றார்.

    காத்த வீரன் கதறி அழுதான். அன்னை உமாதேவி மகனுக்குப் பரிந்து வந்தாள்.

    இதனால் சிவபெருமானையே பழித்துப் பேச முற்பட்டாள் சக்தி. சிவனார் கோபம் பொங்கிட வாம பாகத்திலிருந்து நீக்கப்பட்டாள் உமாதேவி.

    தவற்றை உணர்ந்த தாய் காஞ்சிபுரம் வந்து இறைவனுடைய அன்பைப் பெற சிவலிங்க பூஜை செய்து வந்தாள்.

    சிவசாபம் பெற்ற காத்த வீரசாமி ஏழு பிறவியடைந்து இன்னலுற்றான். ஏழாவது பிறவியில் மீண்டும் பாசவினை பற்றிட ஆரியமலை என்ற அரசகுமாரியின் மேல் காதல் கொண்டான்.

    அந்த ஆரியமாலையை அடைய அன்னையை வேண்டினான். அன்னை அவன்முன் தோன்றினாள்.

    'மகனே! அற்ப சுகங்களுக்காக அன்னையைப் பணியாதே! காமத்தைக் கொல். மாயையால் அழிவு நேரும். ஆபத்துக் காலத்தில் நான் கொடுக்கும் சாம்பர் திருநீறு உன்னைக் காக்கட்டும்' என்று திருநீற்றை அளித்தாள்.

    ஆரியமாலையின் மீதுள்ள மோகத்தால் தவித்த காத்தவீரன் பலவித தந்திரங்கள் செய்து அவளது மனத்தில் இடம் பிடித்தான்.

    ரகசியமாக மணமும் செய்து கொண்டான்.

    இதை அறிந்த அரசன் சினமடைந்து காத்த வீரனைப் பிடித்து கழுவிலேற்ற ஆணையிட்டான்.

    சிவபெருமானின் சாபம் இவ்வாறு காத்தவீரனைத் துரத்தியது.

    அன்னையிடம் அடைக்கலம் நாடி ஓடினான் காத்த வீரன். காஞ்சி காமாட்சியை மனத்தில் எண்ணி கழுமரத்தை நோக்கினான். காமத்தை ஆட்சி செய்யும் காமாட்சி அருளால் கழுமரம் தீப்பற்றியது.

    பின்னர் பிறவியின் நோக்கம் உணர்ந்து மெய்ஞ்ஞானம் பெற்ற காத்தவீரன் நேரே வேற்காட்டை அடைந்தான். பாலியில் நீராடினான். ஈசனைப் பணிந்தான். பனைத்தாயைப் போற்றினான். புற்றை வலம் வந்து கருமாரியைத் துதித்தான். அன்னை சூலமேந்தி சிம்ம வாகினியாய்க் காட்சி அளித்தாள். அன்று முதல் அன்னையின் அருட்தலத்தில் ஈசான மூலையில் காத்தவீரன் அன்னையின் பக்தர்களைக் காத்து வருகிறான்.

    • அம்மனுக்கு உகந்த தினங்களான செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் நீலநிறச் சேலைகளை அணியக் கூடாது.
    • சிவப்புச் சேலையை சனிக்கிழமை தவிர மற்ற அனைத்துக் கிழமைகளிலும் அணியலாம்.

    தீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலைகளைப் பற்றியும் பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    மஞ்சள் நிறச் சேலை அணிந்து தீபமிடுவோர் அம்மன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவர்.

    நீல நிறச் சேலை அணிந்தும் தீபமிடலாம்.

    அம்மனுக்கு உகந்த தினங்களான செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் நீலநிறச் சேலைகளை அணியக் கூடாது. மற்ற நாட்களில் நீலநிறச் சேலை அணிந்தால் நோய்கள் குணமாகும். பேய், பிசாசுத் தொல்லைகள் நீங்கும்.

    சிவப்புச் சேலையை சனிக்கிழமை தவிர மற்ற அனைத்துக் கிழமைகளிலும் அணியலாம். சிவப்புச் சேலை அணிவதால் திருமணத் தடை நீங்கி இல்லறச் சுகம் கிட்டும். மலட்டுத் தன்மை அடியோடு ஒழியும். போய், பிசாசு தொல்லைகள் விலகும். செய்வினை அழியும்.

    வெள்ளைச் சேலையைச் சுமங்கலிப் பெண்கள் தவிர மற்றவர்கள் அணியலாம். வெள்ளைச் சேலை புதியதாகவும், சுத்தமானதாகவும் இருத்தல் வேண்டும். வெள்ளைச் சேலை அணிந்தால் உத்தமமான பலன்கள் வாழ்வில் உண்டாகும்.

    திருவிளக்கும், தீபமும் அன்னையின் அம்சங்கள் என்றாலும் அனைத்தும் தெய்வங்களையும் திருவிளக்கிட்டு தீபமேற்றியே நாம் காலம் காலமாய் வழிபட்டு வருகின்றோம். அவ்வாறு வழிபடுகையில் இன்னின்ன தெய்வங்களுக்கு இன்னின்ன தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று நமது பெரியோர்கள் கூறியுள்ளனர்.

    தேவி கருமாரியை நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் என ஐந்து எண்ணெய் கலந்து தீபமேற்றி வழிபட வேண்டும்.

    • அன்னை தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் பவுர்ணமி தோறும் 108 சுமங்கலிகளை கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.
    • நெய் தீபம் ஏற்றுவது அனைத்து தீபங்களிலும் சால சிறந்தது.

    மஞ்சளின் மகத்துவம்

    நாகலோகத்து மங்கையர் இருவர் பெயர் சுந்தரி, சாரதை, இருவரும் சகோதரிகள். அவர்களின் திருமணம் கைகூடாத நிலையில் நாரதரின் ஆலோசனைப்படி திருவேற்காட்டுறை கருமாரியை பணிந்தனர்.

    அன்னை அவர்களுக்கு அருள்புரிந்தாள்.

    'குழந்தைகளே! ஒரு மண்டலம் சாம்பர்ப் பொய்கையில் நீராடி மஞ்சள் நீரை அருந்துங்கள்' என்றாள்.

    அவ்வாறே செய்து வந்தனர்.

    ஒரு மண்டலம் முடிகின்ற தருவாயில் சம்பு, மாலன் என்ற இரண்டு அரச குமாரர்கள் அங்கு வந்து நாக கன்னியர்களை கண்டனர்.

    மனங்கள் இணைந்தன.

    அன்னையின் அருளால் திருமணம் கூடியது.

    இன்றளவும் மணம் கைகூடாத கன்னியர்களின் கவலை தீர்த்து அவர்களுக்கு இல்லற வாழ்வை வழங்குகிறாள் தாய்!

    திருவிளக்கில் விளங்கும் தேவி கருமாரி

    அன்னை கருமாரியின் அம்சங்களில் ஒன்று திருவிளக்கு. மங்கல விளக்கை ஏற்றி மனதார பணிந்தால் மங்கலம் சூழும்.

    விளக்கை சுத்தமாக துடைத்து திரியிட்டு எண்ணெயிட்டு மலர் சூட்டி திலகம் வைத்து அதன் முன்னே பணிய வேண்டும்.

    விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே

    சோதி மணிவிளக்கே சீதேவி பொன்மணியே

    அந்தி விளக்கே அலங்கார நாயகியே

    காந்தி விளக்கே காமாட்சி தாயாரே!

    என்று மனமுருகிப் பாடினால் நினைத்த காரியம் கைக்கூடும். வெற்றிமேல் வெற்றி கிட்டும்.

    பக்தர்கள் திருவிளக்கு பூஜை முறை குறிப்புகள்

    இதை உணர்த்தும் வண்ணம் நமது அன்னை தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் பவுர்ணமி தோறும் 108 சுமங்கலிகளை கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.

    அப்பூஜையில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொள்வோர் அன்னையின் அருள் பெற்று வாழ்வில் உயர்வர்.

    தேவியின் அம்சம் திருவிளக்கு என்று முன்பு கூறினோம். அந்த அம்சம் அனைத்து தீபங்களிலும் உள்ளுறையாக பொதிந்து கிடக்கிறது. எனவே அன்னையின் அம்சமாகிய திருவிளக்கையும் அது தாங்கும் தீபத்தையும் பற்றி சற்று விரிவாக காண்போம்.

    தீப முறைகளும், அதன் நன்மைகளும்

    நெய் தீபம் ஏற்றுவது அனைத்து தீபங்களிலும் சால சிறந்தது. நெய் தீபம் ஏற்றி பரம்பொருளை துதித்தால் சகல சவுபாக்கியங்களும் கிட்டி வீட்டில் நன்மை வந்து சேரும்.

    விளக்கெண்ணெய் தீபம் தேக நலன் தரும். புகழ் வழங்கும். நல்ல நட்பு வாய்க்க பெறும். ஆரோக்கிய உணவு கிடைக்கும். சுகம் வரும். சுற்றத்தாரும் சுகமடைவர். அனைத்திற்கும் மேலாக இல்லற இன்பம் கிட்டும்.

    எக்காரணத்தை முன்னிட்டும் கடலை எண்ணெயில் தீபமிடக்கூடாது.

    வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்றிடின் சகல சுகங்களும் சித்திக்கும். நன்மை வந்து சேரும்.

    நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து தீபமிட்டு ஒரு மண்டலம் எம்பிராட்டியை எண்ணி பூஜை செய்தால் அம்பிகையின் அருள் கிடைப்பது திண்ணம். சகல சவுபாக்கியங்களும் தானாய் வரும். ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

    பொதுவாக பிரம்ம முகூர்த்தம் என்று குறிப்பிடப்படும் விடியற்காலை நேரம் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபமேற்றி வழிபடுதல் சிறப்பானதாகும். அவ்வாறு செய்தால் அனைத்து நலன்களும் அடைய பெற்று மண்ணில் வாழ்வாங்கு வாழ்வர்.

    ×