search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காத்த வீரசாமி"

    • குறத்தி வடிவில் வந்த அன்னையின் அருள்வாக்கு கேட்டுத் துர்க்கை அம்மனை துதித்தனர்.
    • அடுத்த கணம் பொம்மி, வெள்ளையம்மா இருவரும் மாயமாய் மறைந்து கயிலாயம் அடைந்தனர்.

    முத்து வீர சுவாமியின் வரலாறு

    காசிமாநகரைத் துளசி என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் மகப்பேறு இன்றித் துன்புற்றான். காசி விசுவநாதரையும், விசாலாட்சி அம்மையையும் எண்ணி ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்தான்.

    அம்மையப்பன் காட்சி அளித்தார்.

    என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

    பிள்ளை வரம் கேட்டான் துளசி.

    அருளி மறைந்தார் ஆண்டவன்.

    துளசி மன்னன் தன் மனையாள் கற்பூரவல்லியுடன் மகிழ்ந்திருக்கும் நேரத்தில் விசுவநாதரின் அருளால் மகன் பிறந்தான்.

    அரசகுமாரன் பிறந்த நேரத்தைக் கணித்த சோதிடன் சித்திரைப் பருவத்தில் பிறந்த அரசகுமாரனால் நாட்டுக்கு ஆபத்து என்றான்.

    நாட்டின் எல்லையிலுள்ள ஆலமரத்தடியில் குழந்தையைக் கிடத்தினார்கள்.

    கானகத்தில் குழந்தை கதியற்றுக் கிடந்தது.

    இறையருளால் பிறந்த குழந்தையைக் கொஞ்சிட துளசி அரசனுக்குக் கொடுத்து வைக்கவில்லை.

    குழந்தை பசியால் அழுதது.

    அன்னை கருமாரி உருமாறி நாகமாக அங்கு வந்தாள். வெயில் படாமல் படமெடுத்துக் குழந்தையைக் காத்தாள். அவ்வழியாகச் சென்ற மாதிகத்தன் என்பவன் இக்காட்சியைக் கண்டான். அவனைக் கண்டதும் பாம்புருக் கொண்ட தாய் மறைந்தாள். குழந்தையை எடுத்து வந்து வளர்த்தான் மாதிகத்தன். 'வீரன்' என்று பெயரும் சூட்டினான்.

    குழந்தை வாலிபனானான்.

    ஒருமுறை சோழ நாட்டுத் தலங்களை தரிசித்த வீரன் பாண்டிய நாடு சென்றான். பாண்டிய நாட்டின் வட பகுதியில் கள்ளர் குலம் வாழ்ந்து வந்தது. அந்தக் கள்ளர் குலத்தோர் பகைவர்களால் அவதிப்பட்டு வந்தனர்.

    குல தெய்வமாகிய துர்க்கையைச் சரிவர வணங்காத காரணத்தினால் அவர்களுக்கு இந்நிலை வந்தது. குறத்தி வடிவில் வந்த அன்னையின் அருள்வாக்கு கேட்டுத் துர்க்கை அம்மனைத் துதித்தனர்.

    அம்மனின் அருளால் வீரன் அங்கு வந்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தான். பகைவர்களை முறியடிக்கப் புறப்பட்டான்.

    கள்ளர்கள் துணையுடன் பகைவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தான்.

    கள்ளர்களின் அன்பைப் பெற்ற வீரன் சோழ நாட்டில் பொம்மண்ண துரை வாழும் ஊருக்குச் சென்றபோது விதிவசத்தால் இரண்டு பெண்களைக் கண்டான்.

    பரமசிவனின் அருளால் பிறந்த வீரன் உண்மையில் முருகவேளின் அம்சம். வள்ளி, தெய்வானை என்ற இரு மங்கையரை மணந்த அந்த முருகப் பெருமான் ஆலால சுந்தரனாய்க் கமலினி, அநிதையை மணந்தது, புவியில் பிறந்து கந்தனாகிப் பரவை நாச்சியாரையும், சங்கிலியாரையும் மணந்தது எல்லாமே அவனின் தொடர் வரலாறு. அதே வரலாறு மீண்டும் தொடர்ந்தது. இந்தப் பிறவியில் வீரனாகப் பிறந்து வெள்ளையம்மா, பொம்மி என்ற இரு கன்னியரைக் கண்டு காதல் கொண்டான்.

    இந்நிலையில் காதல் வேட்கை மிக அந்த இருவரையும் குதிரையில் வைத்துத் தூக்கிச் சென்றான் வீரன்.

    பொம்மண்ணா கொதித்தான்.

    சமயபுரத்து அன்னை அவன் கனவில் வந்து வீரனின் அம்சத்தை எடுத்துரைத்தாள். எல்லாமே இறைவருளின் விளையாட்டு என்றிருந்து, வீரனுக்கே அந்த இரு நங்கையரையும் மணம் முடித்துத் தந்தான்.

    இதற்குள் கள்ளர் இனத்தில் பூசல் எழுந்தது. இருபிரிவாகப் பிரிந்து கடுமையாக மோதிக் கொண்டனர். இதை அறிந்த வீரன் அவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டான். அது பொறுக்காத சில சூழ்ச்சிக்காரர்கள் வீரன் மீது அடாத பழி சுமத்தினர். விசாரித்து அறியாத கள்ளர் கோமான் வீரனைக் கழுவிலேற்றும்படி உத்தரவிட்டான்.

    வீரன் பொங்கினான். தெய்வாம்சம் வெளிப்பட்டது. முருகவேளின் அம்சம் தன்னை வெளிக்காட்டியது. கழுமரம் தீப்பற்றிக் கொண்டது.

    அடுத்த கணம் பொம்மி, வெள்ளையம்மா இருவரும் மாயமாய் மறைந்து கயிலாயம் அடைந்தனர்.

    பெரும் சினமடைந்து ரௌத்காரமாய் நின்ற வீரனைக் கண்டு பாண்டிய நாடே அஞ்சியது. கள்ளர்கள் பயத்தால் மண்டியிட்டுப் பணிந்து பிழை பொறுத்தருளுமாறு வேண்டினர்.

    அங்கிருந்து அகன்ற வீரன் நேரே அன்னை குடிகொண்ட தாய் வீடாகிய வேற்காட்டை அடைந்தான். வேதபுரீசனை வழிபட்டு, பனைத்தாயை பணிந்து சாம்பர் பொய்கையில் நீராடி, புற்றினை வலம் வந்து அன்னை கருமாரியைப் போற்றி நின்றான். அருளுருவான தேவி அரி மீது அமர்ந்து அருட்காட்சி அளித்தாள். அன்று முதல் அன்னையின் ஆலயத்திலேயே குடியேறி இன்று வரை அன்னையின் பக்தர்களைக் காத்து வருகிறான்.

    காத்த வீரசாமியின் வரலாறு

    ஒருமுறை அன்னை உமாதேவியார் ஆண்டவன் அனைத்து சிவன்களுக்கும் படியளிக்கும் முறையைச் சோதிக்க விரும்பினாள். கல்லுக்குள் உள்ள தேரைக்கும் உணவளிப்பவன் இறைவன். அதை அறிந்திருந்தும் அன்னை விதிவசத்தால் ஓர் எலும்பை எடுத்து பேழையில் மூடி வைத்தாள். ஒருநாள் கழித்து திறந்து பார்த்தபோது அப்பேழையினுள் எலும்பும், அதனுடன் ஒரு சோற்றுப் பருக்கையும் இருக்கக் கண்டாள். இறைவனின் அருள் உள்ளத்தை எண்ணி பூரித்தாள். இருப்பினும் ஆண்டவனைச் சோதிப்பது பாவமல்லவா?

    அந்தப் பாவம் நீங்கிட கங்கைக் கரையோரம் ஒரு மலர்ச்சோலை அமைத்து இறைவனை எண்ணித் தவம் இயற்றினாள். தவமியற்றும்போது தடை வராமல் காக்க இறைவனை வேண்டி நின்றாள்.

    இறைவனின் விருப்பப்படி அவனது புருவ மத்தியிலிருந்து ஒரு வீரன் தோன்றினான். அவன் அன்னையின் மலர்ச் சோலையைக் காத்து நின்றான். அவன்தான் காத்த வீரன்.

    ஒருமுறை கயிலையைச் சேர்ந்த கன்னியர் எழுவர் ஒரு குளத்தில் நீராடினர். விதிவசத்தால் காத்த வீரன் அந்தக் கன்னியர்களில் இளையாளது ஆடையை மட்டும் கவர்ந்து சென்றான்.

    கயிலை சென்ற கன்னியர் சிவபெருமானிடம் முறையிட்டனர். சினமடைந்த சிவபெருமான் காத்த வீரனைச் சபித்தார். 'சாதாரண மனிதனைப் போல் காமத்திற்கு ஆட்பட்ட நீ ஏழு பிறவியெடுத்து துன்புற்று முடிவில் கழுவில் ஏற்றப்பட்டு என்னிடம் வந்தடைவாய்' என்றார்.

    காத்த வீரன் கதறி அழுதான். அன்னை உமாதேவி மகனுக்குப் பரிந்து வந்தாள்.

    இதனால் சிவபெருமானையே பழித்துப் பேச முற்பட்டாள் சக்தி. சிவனார் கோபம் பொங்கிட வாம பாகத்திலிருந்து நீக்கப்பட்டாள் உமாதேவி.

    தவற்றை உணர்ந்த தாய் காஞ்சிபுரம் வந்து இறைவனுடைய அன்பைப் பெற சிவலிங்க பூஜை செய்து வந்தாள்.

    சிவசாபம் பெற்ற காத்த வீரசாமி ஏழு பிறவியடைந்து இன்னலுற்றான். ஏழாவது பிறவியில் மீண்டும் பாசவினை பற்றிட ஆரியமலை என்ற அரசகுமாரியின் மேல் காதல் கொண்டான்.

    அந்த ஆரியமாலையை அடைய அன்னையை வேண்டினான். அன்னை அவன்முன் தோன்றினாள்.

    'மகனே! அற்ப சுகங்களுக்காக அன்னையைப் பணியாதே! காமத்தைக் கொல். மாயையால் அழிவு நேரும். ஆபத்துக் காலத்தில் நான் கொடுக்கும் சாம்பர் திருநீறு உன்னைக் காக்கட்டும்' என்று திருநீற்றை அளித்தாள்.

    ஆரியமாலையின் மீதுள்ள மோகத்தால் தவித்த காத்தவீரன் பலவித தந்திரங்கள் செய்து அவளது மனத்தில் இடம் பிடித்தான்.

    ரகசியமாக மணமும் செய்து கொண்டான்.

    இதை அறிந்த அரசன் சினமடைந்து காத்த வீரனைப் பிடித்து கழுவிலேற்ற ஆணையிட்டான்.

    சிவபெருமானின் சாபம் இவ்வாறு காத்தவீரனைத் துரத்தியது.

    அன்னையிடம் அடைக்கலம் நாடி ஓடினான் காத்த வீரன். காஞ்சி காமாட்சியை மனத்தில் எண்ணி கழுமரத்தை நோக்கினான். காமத்தை ஆட்சி செய்யும் காமாட்சி அருளால் கழுமரம் தீப்பற்றியது.

    பின்னர் பிறவியின் நோக்கம் உணர்ந்து மெய்ஞ்ஞானம் பெற்ற காத்தவீரன் நேரே வேற்காட்டை அடைந்தான். பாலியில் நீராடினான். ஈசனைப் பணிந்தான். பனைத்தாயைப் போற்றினான். புற்றை வலம் வந்து கருமாரியைத் துதித்தான். அன்னை சூலமேந்தி சிம்ம வாகினியாய்க் காட்சி அளித்தாள். அன்று முதல் அன்னையின் அருட்தலத்தில் ஈசான மூலையில் காத்தவீரன் அன்னையின் பக்தர்களைக் காத்து வருகிறான்.

    ×