search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநெல்வேலி மாவட்டம்"

    • சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது.
    • இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதும் தான் முக்கியமாக இருக்கிறது.

    கோவை:

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்தனர். மழை வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளில் தி.மு.க அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை.

    மொத்தத்தில் தி.மு.க அரசு வெள்ள பாதிப்பை சரியாக கையாளவில்லை என்றே கூற வேண்டும்.

    தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு மக்கள் தவித்து கொண்டிருந்த போது, முதலமைச்சர் டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டத்தில் இருந்தார்.

    மத்தியக்குழு கடந்த 20-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தனர்.

    அதனை தொடர்ந்து நெல்லையிலும் ஆய்வு பணி மேற்கொண்டனர். ஆய்வு பணியை முடித்து அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் கொடுக்கும் பணியை மத்திய குழு செய்து வருகிறது.


    மத்திய அரசு ஆய்வு மேற்கொண்ட பின்னர் கடந்த 21-ந் தேதி தான் முதலமைச்சர் வெள்ள பாதிப்பை பார்வையிட தூத்துக்குடி செல்கிறார். தமிழக முதலமைச்சர் மற்றும் உதயநிதி ஆகியோருக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை.

    மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் மழை வெள்ள பாதிப்பு பணியில் அவர்கள் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். அதனை விடுத்து, உதயநிதி, மத்திய அரசுடன் வம்புக்கு இழுத்து வருகிறார்.

    மக்களை காப்பதை விட மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதிலேயே தி.மு.க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

    மேலும் மழை பாதிப்பு ஏற்பட்ட போது நெல்லை மாநகராட்சி மேயர் கூட அங்கு இல்லை. அவர் சேலத்தில் மாநாடு பணிகளை கவனித்து கொண்டிருந்தார். தி.மு.கவினருக்கு மக்களை விட சேலத்தில் நடைபெற உள்ள மாநாடும், இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதும் தான் முக்கியமாக இருக்கிறது.

    மழை பாதிப்புகளை தமிழக அரசு முறையாகவும், சரியாகவும் செய்யாத காரணத்தினாலேயே மத்திய அரசு அந்த பணிகளை பொறுப்பெடுத்து செய்து வருகிறது.

    சென்னை வெள்ளத்திற்கு ரூ.450 கோடியும், பிறகு ரூ.550 கோடி என மொத்தம் ரூ.ஆயிரம் கோடியை மத்திய அரசு தமிழக அரசு கொடுத்துள்ளது. தென் மாவட்ட வெள்ளத்தை ஆய்வு செய்து, தமிழக அரசு அறிக்கை கொடுத்த பின்னர், அதற்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கும்.


    அதற்குள்ளாகவே மழை பாதிப்புக்கு நாங்கள் கேட்ட நிதியை விட குறைவாகவே தந்துள்ளதாக கூறுகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு குஜராத்தில் புயல் ஏற்பட்ட போது அந்த மாநில அரசு ரூ.9 ஆயிரத்து 836 கோடி மத்திய அரசிடம் கேட்டது. ஆனால் மத்திய அரசு உடனடி நிவாரண நிதியாக ரூ.1000 கோடி மட்டுமே கொடுத்தது.

    மேலும் 2020-21-ல் கொரோனா காலகட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள குஜராத்திற்கு ரூ.304 கோடியும், தமிழகத்திற்கும் ரூ.868 கோடியும் கொடுக்கப்பட்டது. அந்த நிதி தொடர்பாக தமிழக அரசு இன்னும் ஏன் கணக்கு கொடுக்கவில்லை.

    இப்படி ஒவ்வொன்றாக கணக்கெடுத்து சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் தி.மு.கவின் பொய்யை தோலுரிக்க விரும்பவில்லை.

    அவர்கள் தங்கள் மீது உள்ள தவறை மறைக்க மற்றவர்கள் மீது பழியை போட்டு தப்பித்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி தான் வானிலை மையத்தின் மீது பழியை தூக்கி போட்டுள்ளனர். வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே ரெட் அலர்ட் கொடுத்து இருந்தது. ஆனால் அப்போது அவர்கள் இதனை கண்டு கொள்ளவில்லை. இப்போது வானிலை மையத்தின் மீது குறை சொல்லி வருகிறார்கள்.

    தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசிடம் தமிழக அரசு நிதி கேட்டுள்ளது. அந்த நிதியை மத்திய அரசு விரைவில் வழங்கும் என நம்புகிறேன். நாளை மறுநாள் தென் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தூத்துக்குடிக்கு வருகிறார்.

    அவர் தென் மாவட்டங்களில் மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு மத்திய அரசிடம் தெரிவித்து, நிதியை பெற்றுத்தருவார்.

    பொருளாதார மாநிலத்தில் தமிழகத்தை உத்தரபிரதேசம் முந்தி விட்டது. உத்தரபிரதேசம் முதல் இடத்தையும், தமிழகம் 3-வது இடத்திலும் உள்ளது.

    தமிழகத்திற்கு புதிதாக தொழில் தொடங்க எந்த நிறுவனம் முன்வரவில்லை. காரணம் தி.மு.க அரசு அவர்களிடம் லஞ்சம், கமிஷன் போன்றவற்றை கேட்கிறார்கள். இதன் காரணமாக தமிழகத்திற்கு முதல் முதலாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்பாலும் மாநிலத்திற்கு வரக்கூடிய வருவாயில் இழப்பு ஏற்படும்.

    உதயநிதி ஸ்டாலின் சனதானத்தை பற்றி தப்பாக பேசவில்லை என்றார். மேலும் தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதாக கூறி வந்தனர். ஆனால் தி.மு.க.வினருக்கு பாடம் எடுக்கும் வகையில் டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இந்தியை கற்றுக்கொள்ளுங்கள் என முதல்வர் இருந்த போதே கூறிவிட்டார். தி.மு.க.வை மூட்டை கட்டி கடலில் போடும் வேலையை தான் உதயநிதி செய்து வருகிறார். அவர் வடிவேலு காமெடியை போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சாதிவாரி கணக்கெடுப்பில் என்னை பொறுத்தவரை தமிழகத்தில் ஏழை என்ற சாதியே இருக்க கூடாது என்பது தான்.

    கம்யூனிஸ்டு கட்சி என்பது மக்களுக்கான கட்சி இல்லை. அது தி.மு.கவிற்கான கட்சியாக மாறி விட்டது. அவர்களுக்காக தான் கட்சி நடத்துகிறார்கள். பொன்முடி தீர்ப்பு விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிப்பது கேவலமான விஷயம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தண்டவாளம் அந்தரத்தில் தொங்குகிறது.
    • தண்டவாளம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்துங்கநல்லூர்:

    தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டது.

    குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் நெல்லை-திருச்செந்தூர் ரெயில்வே தண்டவாளம் பல்வேறு இடங்களில் ஜல்லி கற்கள் அரித்து செல்லப்பட்டு சேதமடைந்தது.

    இதனால் செய்துங்கநல்லூர் ரெயில் நிலையம் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடத்திலும், தாதன்குளம் பகுதியில் ஒரு இடத்திலும், ஆழ்வார்திருநகரியில் இருந்து நாசரேத் வரையிலான ரெயில்வே தண்டவாளம் பகுதியில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே தண்டவாளம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.


    இந்த பகுதியில் தண்டவாளம் அந்தரத்தில் தொங்குகிறது. தண்டவாளத்தை ஒட்டியுள்ள மின் கம்பிகள் அனைத்துமே சாய்ந்து வயல்வெளிகளில் கிடக்கின்றன. அவற்றை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

    முதல்கட்டமாக ரெயில்வே அதிகாரிகள் செய்துங்கநல்லூர் மற்றும் தாதன்குளம் பகுதியில் தண்டவாளம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையில் தண்டவாளம் சேதமடைந்த காரணத்தினால் நெல்லை-திருச்செந்தூர் வரையிலான அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களும் வருகிற 31-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • ஒவ்வொரு குழுவிலும் டாக்டர்கள், நர்சுகள் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    தூத்துக்குடி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அதேபோல் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அங்கு சிக்கியவர்களுக்கும், சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி 4 மாவட்டங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி 190 நடமாடும் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் டாக்டர்கள், நர்சுகள் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மருத்துவ முகாம்களை மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்திலும், நேற்று நெல்லை அரசு மருத்துவ மனையில் வெள்ளம் புகுந்த பகுதிகளை அவர் ஆய்வு செய்த பின்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.


    இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களில் இன்று தனியார் மருத்துவ மனைகளுடன் இணைந்து மெகா மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அவர் கீதா மெட்ரிக் பள்ளி, டி.எம்.சி. காலனி, கோரம்பள்ளம், முத்தையாபுரம், புன்னக் காயல், முக்காணி, உமரிக்காடு, வாழவல்லான், ஏரல் பஸ் நிலையம், ஏரல் காந்தி சிலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாம்களை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் சிறப்பு முகாம்களில் 31 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் ஒரு நாளைக்கு 3 இடங்களுக்கு சென்று முகாம் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    அந்த வகையில் 93 இடங்களில் முகாம் நடக்கிறது. இதேபோல் 4 பேர் கொண்ட ஒரு மருத்துவ குழுவும் தினமும் 3 இடங்களுக்கு சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதன் மூலம் 12 பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து இன்று நெல்லை மாவட்டத்தில் மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்காக 5 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. நெல்லை மாநகர பகுதிகளில் 4 குழுக்களும், புறநகர் மாவட்ட பகுதிகளில் ஒரு குழுவும் சென்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    • மழை தொடங்கியதுமே அந்தந்த மாவட்ட அமைச்சர்களை மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து விட்டார்.
    • செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். சொல்ல வேண்டியதையே சொல்ல வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவசர அழைப்பின் பேரில் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி கூட்டத்துக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருநாள் சென்று வந்ததை பெரிது படுத்துகிறார்கள். ஒரு முதலமைச்சர் எங்கிருந்தாலும் சரி, நடக்க வேண்டிய பணிகள் நடக்கும். மழை தொடங்கியதுமே அந்தந்த மாவட்ட அமைச்சர்களை மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து விட்டார்.

    இது போன்ற குற்றச்சாட்டை சொல்ல கூடியவர்கள் மணிப்பூரில் 6 மாத காலம் கலவரம் நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். பிரதமர் மோடி ஒரு முறை கூட அங்கு சென்றதும் இல்லை. அதுபற்றி பேசியதும் இல்லை.


    இதை போன்ற தலைமையை வைத்துக் கொண்டு பேசுவது கண்மூடித்தனமாக தமிழக அரசு மீது வெறுப்பை காட்டுவதாகத்தான் அர்த்தம்.

    தமிழகத்துக்கு மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியாக எதுவும் ஒதுக்கவில்லை. தர வேண்டிய நிதியை மட்டுமே தந்துள்ளார்கள். தற்போது ஏற்பட்ட பெரும் சேதத்துக்கு தனியாக நிவாரணம் தர வேண்டும்.

    நிவாரணம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தரக் குறைவும் இல்லை. அவர் பேச்சு வழக்கில் பேசுவது போல் பேசி உள்ளார். இதை வைத்து அரசியல் ஆதாயம் தேடக்கூடாது. செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். சொல்ல வேண்டியதையே சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 400 மீனவர்கள் தங்கள் படகுகளுடன் சென்று கிராம மக்களை மீட்டு வருகிறார்கள்.
    • கிராமங்களுக்குள் சென்று தண்ணீரில் தவித்துக் கொண்டு இருக்கும் மக்களை மீட்க உள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் இன்றும் மழை தண்ணீர் வடியவில்லை. இதனால் குக்கிராமங்களில் சிக்கி இருக்கும் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே 400 மீனவர்கள் தங்கள் படகுகளுடன் சென்று கிராம மக்களை மீட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இன்று 60 படகுகளுடன் மீனவர்கள் விரைந்துள்ளனர். அவர்கள் பிற்பகல் முதல் கிராமங்களுக்குள் சென்று தண்ணீரில் தவித்துக் கொண்டு இருக்கும் மக்களை மீட்க உள்ளனர்.

    • ஆடி மாதத்தில் காற்று அடித்தால் வாழைகள் சரிந்து இழப்பு ஏற்படும்.
    • ஓரிரு ஆண்டுகளில் அந்த இழப்பில் இருந்து விவசாயிகள் மீண்டு விடுவார்கள்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழையில் விவசாயிகள் வரலாறு காணாத இழப்புக்கு தள்ளப்பட்டு உள்ளனர். முந்தைய காலங்களில் ஆடி மாதத்தில் காற்று அடித்தால் வாழைகள் சரிந்து இழப்பு ஏற்படும்.

    ஆனால் ஓரிரு ஆண்டுகளில் அந்த இழப்பில் இருந்து விவசாயிகள் மீண்டு விடுவார்கள். ஆனால் தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள வாழைகள் வேரோடு சரிந்து விட்டன. இன்னும் சில மாதங்களில் குலைதள்ளி பலன் கொடுக்க வேண்டிய வாழைகள் சரிந்ததால் விவசாயிகள் கண்ணீர் மல்க கவலை தோய்ந்த முகத்துடன் காணப்படுகிறார்கள்.

    • எப்போது சொந்த ஊருக்கு செல்வோம் என வெள்ளத்தில் காத்திருத்தோம்.
    • 3 நாட்களுக்கு பிறகு உயிர் தப்பி விட்டோம் என்ற நிம்மதி.

    ஆம்னி பஸ்சில் சிக்கி தவித்த பெண் பயணி நந்தினி கூறியதாவது:-

    நான் கடந்த 18-ந் தேதி சென்னையில் இருந்து எனது 2 குழந்தைகளுடன் ஆம்னி பஸ்கள் சொந்த ஊரான குலசேகரபட்டினத்திற்கு புறப்பட்டு சென்றேன். 19-ந் தேதி காலை தூத்துக்குடி வந்தபோது மழை வெள்ளத்தால் ஊரே தத்தளித்து கொண்டிருந்தது.

    வெள்ளத்தில் மிதந்தபடி நாங்கள் வந்த பஸ் சிரமத்திற்கு இடையே மாற்று வழியில் ஏரல் அருகே உள்ள தென் திருப்பேரை வந்தது.

    அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பஸ் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது.

    எங்களை பின் தொடர்ந்து வந்த சுமார் 25 ஆம்னி பஸ்கள் வரிசையாக அங்கேயே நிறுத்தப்பட்டன. சுமார் 500 பேர் என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தைகளுடன் பரிதவித்தோம். 19-ந் தேதி மதியம் தென் திருப்பேரை பேரூராட்சியில் உணவு கொடுத்தனர். பின்னர் யாரும் கண்டு கொள்ளவில்லை. சாப்பாடு மற்றும் செல்போன் இணைப்பு கிடைக்காமல் மின்சாரமும் இல்லாத இடத்தில் இரவு முழுவதும் தவித்து வந்தோம்.

    யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. நேற்று (20-ந் தேதி) தகவலறிந்து ஹெலிகாப்டர் மூலம் எங்களுக்கு உணவு பொட்டலங்களை வீசினர். அதில் பொட்டலங்கள் மழை வெள்ளத்தில் விழுந்தன.

    என்ன செய்வதென்று தெரியாமல் எப்போது சொந்த ஊருக்கு செல்வோம் என வெள்ளத்தில் காத்திருத்தோம். வெள்ளம் வடிந்து வரும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு சில பஸ்களில் அனைவரையும் ஒன்றாக ஏற்றி நாசரேத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்கிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு வந்து சேர்ந்தோம். 3 நாட்களுக்கு பிறகு உயிர் தப்பி விட்டோம் என்ற நிம்மதியும் மகிழ்ச்சியும் உள்ளது என்று அவர் கூறினார்.

    • தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
    • நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏராளமான பொதுமக்கள் பள்ளிகள் மற்றும் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியான ஊட்டுவாழ்மடத்தில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து அரசாங்க உதவிகள் கிடைக்கின்றனவா என்று கேட்டறிந்தார்.

    பின்னர் நாகர்கோவில், வடிவீஸ்வரம் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு விஜய் வசந்த் எம்.பி. ஏற்பாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

    இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு கே.எஸ். அழகிரி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இதேபோன்று நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு காரணமாக வெள்ள பாதிப்புகள் ஒவ்வொரு முறையும் ஏற்பட்டு வருகிறது. இது இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது. எனவே தமிழக அரசு இதனை ஒரு முக்கிய பிரச்சினையாக கருதி நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதில் வசதி படைத்தவர்கள் இல்லாதவர்கள் என்ற பாகுபாடு பார்க்க கூடாது. அதற்கான ஒரு முழு திட்டத்தையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். சென்னையை பொறுத்த வரை 17 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் பாதிப்பை சந்திக்க நேர்ந்தது. இந்தியாவில் எந்த மாநிலமும் இதுபோன்று 17 மணி நேரம் தொடர்ச்சியாக மழையை சந்தித்த மாநிலம் கிடையாது எனினும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் ஓராண்டுக்குள் ஆக்கிரமிப்புகளை நீர் நிலைகளில் இருந்து அகற்றி வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல கிராமங்கள் மீட்பு குழுவினரின் கவனத்திற்கு வரவில்லை.
    • நெல்லை கலெக்டருக்கு கவர்னர் தமிழிசை பாராட்டும், நன்றியும் தெரிவித்து தகவல் அனுப்பியுள்ளார்.

    பெரு மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தனி தீவுகளாக மாறி உள்ளன. இன்னும் பல கிராமங்கள் மீட்பு குழுவினரின் கவனத்திற்கு வரவில்லை. இந்த நிலையில் உமரி காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் மூன்று நாட்களாக தங்கள் கிராமத்தினர் வெளியேற முடியாமலும் யாரும் உதவிக்கு வராமலும் தவித்துக் கொண்டிருப்பதாக தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    அதை பார்த்ததும் நேற்று நள்ளிரவில் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு தகவல் அனுப்பியுள்ளார். கலெக்டரும் அதை பார்த்துவிட்டு உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக பதில் தெரிவித்துள்ளார். நள்ளிரவிலும் தூங்காமல் பணியாற்றிய நெல்லை கலெக்டருக்கு கவர்னர் தமிழிசை பாராட்டும், நன்றியும் தெரிவித்து தகவல் அனுப்பியுள்ளார்.

    • கடந்த 2 நாட்களாக ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை.
    • சென்னைக்கு ஆம்பி பஸ் சேவை அடியோடு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    தென் மாவட்டங்களில் பெய்த அதிகன மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு கடந்த 2 நாட்களாக ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை.

    சென்னையில் இருந்து கடந்த 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டு சென்ற ஆம்னி பஸ்கள் இன்னும் சென்றடையவில்லை.

    தென்திருப்பேரியில் 24 பஸ்கள் சிக்கி கொண்டதாக வெளிவந்த தகவலை தொடர்ந்து அதில் உள்ள பயணிகளை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம், நாசரேத், திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆம்னி பஸ்கள் இயக்க முடியவில்லை.

    மேலும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட 50 ஆம்னி பஸ்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. கடந்த 17-ந்தேதி புறப்பட்ட பஸ்கள் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன.

    அந்த பஸ்களை இதுவரையில் வெளியே எடுக்க முடியவில்லை. பஸ்சின் பாதி அளவிற்கு வெள்ளம் புகுந்ததால் சேதம் அடைந்துள்ளன.

    இதுகுறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. தண்ணீர் வடியாததால் 2 நாட்களாக மீட்க முடியவில்லை. இன்று தான் அவற்றை வெளியே எடுக்க வேண்டும். தற்போது மழை நின்று வெள்ளம் வடிந்து வருவதால் சிக்கிய பஸ்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் இருந்து 3 நாட்களாக சென்னைக்கு ஆம்பி பஸ் சேவை அடியோடு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    சென்னையில் இருந்து புறப்படடு செல்லக்கூடிய ஆம்னி பஸ்கள் தூத்துக்குடி சுங்கசாவடி வரை தற்போது இயக்கப்படுகிறது. திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கு சேவை சீராகி விட்டது. வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டு உள்ளது. மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி, திருச்செந்தூரில் இருந்து இன்னும் ஆம்னி பஸ் சேவை முழுமையாக தொடங்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிவாரணப் பொருட்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள் விளையாட்டரங்கம் செயல்படும்.
    • மாநில ஒருங்கிணைப்பாளராக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா செயல்படுவார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,

    கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கும், திருநெல்வேலி மாவட்டத்திற்கும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக சிறப்பு அலுவலர்களை நியமிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு செந்தில்ராஜ் ஒருங்கிணைப்பு அலுவலராக தூத்துக்குடியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தொலைபேசி எண். 7397770020. பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள் விளையாட்டரங்கம் செயல்படும்.

    தூத்துக்குடியில் உள்ள இந்தக் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அலுவலர்கள் பின்வருமாறு:-

    1. ஐஸ்வர்யா இஆப கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தூத்துக்குடி, தொலைபேசி எண். 8973743830.

    2. ராஜாராம், துணை ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி தொலைபேசி எண். 9943744803 3. அமுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக தூத்துக்குடி, தொலைபேசி எண். 9445008155 உதவியாளர் (பொது).

    இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் இப்பணிகளை திருநெல்வேலி மாவட்ட நகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைக்க அவரது பெயர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், இ.ஆ.ப தொலைபேசி எண். 9442218000.

    அங்கு கூடுதலாக பின்வரும் அலுவலர்கள் இப்பணியினை ஒருங்கிணைப்பார்கள்.

    1. கிஷன் குமார். இஆப உதவி ஆட்சியர் (பயிற்சி), திருநெல்வேலி தொலைபேசி எண் 9123575120 2. ரேவதி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், திருநெல்வேலி. தொலைபேசி எண் 9940440659. இப்பணிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா செயல்படுவார்.

    • தேவையான உதவிகளையும் அரசு செய்து தரவேண்டும்.
    • போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென்மாவட்ட வரலாற்றில் பதிவு செய்யப்படாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு தீவாக காட்சியளிப்பதோடு எங்கும் போய்வர முடியாத அளவிற்கு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆற்று போக்கு இல்லாத இடங்களில் உள்ள சத்துணவு மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், பள்ளிகளில் பொதுமக்களை தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, உடை, போர்வைகள் போன்றவைகளை வழங்குவதோடு அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அரசு செய்து தரவேண்டும்.

    மேலும் வீடுகளிலிருந்து வெளியே வரமுடியாமல் துண்டிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான பால், குடித்தண்ணீர், ரொட்டி, பெட்ஷீட், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களையும் அரசு போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். வெள்ளப்பகுதிகளில் அரசு இயந்திரங்களை முடுக்கிவிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு என்.ஆர்.தனபாலன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×