search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்டா மாவட்டங்கள்"

    • அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்.
    • தனியாரிடமிருந்து பெறப்படும் அறுவடை எந்திரங்களுக்கான வாடகையில் மானியம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாட்டின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் முதன்மையானதாக விளங்குகிறது.

    விவசாயிகள் நிறைந்த டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைவிக்கப்படுகிறது. பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் 3.47 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் 3.75 லட்சம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 1.67 லட்சம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.80 லட்சம் ஏக்கர் என மொத்தம் 10.69 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது 20 சதவீதம் அளவுக்கு அதாவது 2.20 லட்சம் ஏக்கரில் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளது.

    4 மாவட்டங்களிலும் சேர்த்து 1269 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் தினமும் 40 கிலோ எடை கொண்ட 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

    இன்று காலை நிலவரப்படி தஞ்சை மாவட்டத்தில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 478 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் இன்று வரை 2 லட்சத்து 96 ஆயிரத்து 935 மெட்ரிக் டன் நெல்லும், நாகை மாவட்டத்தில் 97 ஆயிரத்து 979 மெட்ரிக் டன் நெல்லும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 396 மெட்ரிக் டன் நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் முப்போகம் சாகுபடியில் விவசாயிகளின் தேவை என்ன? அரசு அறுவடை எந்திரத்தை அதிகப்படுத்துவதின் பயன் குறித்தும், நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதலாக செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்தும் 4 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் கருத்துக்கள் விவரம் வருமாறு:-

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தஞ்சை மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன்:

    நெற்பயிர் அறுவடை நேரத்தில் மழை பெய்தால் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். தினமும் ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. அப்படி கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும்.

    பல கொள்முதல் நிலையங்களில் நெல்கள் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. தமிழ்நாடு அரசு அறிவித்தபடி செமி குடோன்களை உடனடியாக திறக்க வேண்டும். விவசாயிகளின் தேவைக்கேற்ப கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.

    தற்போது சம்பா நெற்பயிர் அறுவடை முடிந்த பிறகு மராமத்து பணிகள் உடனுக்குடன் தொடங்கி முடிக்க வேண்டும். வயல்களில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

    உர தட்டுப்பாட்டை போக்கி மானிய விலையில் உரங்கள் வழங்க வேண்டும். நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். அதாவது நெல் குவிண்டாலுக்கு ரூ.3200 வரையாவது வழங்க வேண்டும்.

    நெல் மணிகளை காய வைக்க போதிய இடம் இல்லாததால் பல விவசாயிகள் சாலையில் கொட்டி வைக்கும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க அந்தந்த வயல்களிலே உலர் களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றார்.

    கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ்:

    டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்து சென்ற 24 மணி நேரத்திற்குள் இழப்பீடு தொகை அறிவித்த முதல்-அமைச்சருக்கு முதலில் நன்றி. விவசாயிகளுக்கு குறுவை, சம்பா தொகுப்பு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்கிறோம். இதனால் நெல் குவிண்டாலுக்கு ரூ.4500 வரை வழங்க வேண்டும். அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு தடையின்றி பயிர் கடன் வழங்க வேண்டும்.

    இதற்கு முன்னர்போல் வயல்வெளிகளுக்கே சென்று விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் மீண்டும் அமல்படுத்த வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்றினால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்றார்.

    மயிலாடுதுறை விவசாயி அன்பழகன்:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் எப்போதும் மழையின் அளவு அதிகமாகவே இருக்கும். கடந்த ஆண்டு சீர்காழியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இப்படி இயற்கை சீற்ற பாதிப்பு அதிகமாக உள்ளதால் அனைத்து வயல்வெளிகளிலும் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கொள்முதல் நிலையங்களில் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்து இயக்கம் செய்ய வேண்டும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மேட்டூர் அணை முன்கூட்டியோ அல்லது குறிப்பிட்ட ஜூன் 12-ந் தேதியோ திறக்க வேண்டும். அதில் தாமதப்படுத்த கூடாது. விவசாயிகளின் நிலையை உணர்ந்து மானிய விலையில் உரங்கள் வழங்குவதை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் துரைராஜ்:

    தற்போது மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர்கள் குழு ஆய்வு நடத்தி உடனுக்குடன் இழப்பீடும் அறிவிக்கப்பட்டது. இதேபோல் வரும் பருவத்திலும் ஒருவேளை மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் உடனுக்குடன் கணக்கீடு செய்து உடனே இழப்பீடு வழங்க வேண்டும்.

    அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும். அதோடு நெற்மணிகள் நிறம் மாறி இருந்தாலும் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க தார்பாய்கள், சாக்கு, சணல் போன்றவற்றை போதுமான அளவிற்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு மையங்களுக்கும் போதுமான அளவிற்கு லாரிகளை அனுப்பி வைக்க வேண்டும்.

    திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலோனோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கொள்முதல் நிலையங்களில் தினமும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதை 1500 மூட்டைகள் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். கூடுதல் அறுவடை எந்திரங்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இதேப்போல் தனியாரிடமிருந்து பெறப்படும் அறுவடை எந்திரங்களுக்கான வாடகையில் மானியம் வழங்க வேண்டும். தற்போது உள்ள கொள்முதல் நிலையங்களிலும் சேர்த்து தேவைப்படும் இடத்திலும் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    நாகை மாவட்டத்தை பொறுத்தவரை கடற்கரை நிறைந்த பகுதியாகும். இருந்தாலும் மீன்பிடி தொழில் எவ்வளவு அதிகமாக உள்ளதோ அந்த அளவுக்கு விவசாயமும் நிறைந்து காணப்படுகிறது. மாவட்டத்தில் மழை அளவு அதிகம் இருக்கும் என்பதால் ஈரமான நெல்லை உலர்த்த அந்தந்த வயல்களில் உலர்களம் அமைத்து கொடுக்க வேண்டும். தற்போது அரசு அறுவடை எந்திரத்துக்கு 50 சதவீத மானியத்தில் வாடகை கொடுக்கும் என அறிவித்துள்ளது. இந்த நடைமுறை அடுத்து வரும் அனைத்து பருவத்துக்கும் தொடர வேண்டும். விவசாயிகளுக்கு தடையின்றி பயிர் கடன் வழங்க வேண்டும் என்று நாகை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து நேரில் பார்வையிட உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.

    அந்தக் கடிதத்தில், 'பிப்ரவரி மாதத்தில் (இம்மாதம்) நெல் அறுவடை செய்ய தயாராக இருந்த நேரத்தில் துரதிஷ்டவசமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் சுமார் ஒரு லட்சம் எக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன என்று ஆரம்ப மதிப்பீட்டின்படி தெரிவிக்கப்பட்டுள்து.

    வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி அறுவடை பணியை மீண்டும் தொடங்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் நிலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஈரப்பதம் அளவு அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சி அடையாத சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை தளர்த்தவும், சேதம் அடைந்த நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரை தளர்த்தவும் தேவையான மதிப்பை இந்த சம்பா பயிருக்கும் குறைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

    இந்தக் கடிதத்தை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து உள்ளது. அதாவது, மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து நேரில் பார்வையிட உள்ளனர். அதன்பின்பு, மத்தியக்குழு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்தது.
    • நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயிறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்தது.

    குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் நெற்பயிர்களில் ஈரப்பதம் அதிகமாகி விட்டது.

    இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர். ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரை டெல்டா மாவட்டங்களை பார்வையிட அனுப்பி வைத்தார். அவர்களுடன் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உணவுத்துறை விவசாயத்துறை அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.

    இவர்கள் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களின் சேதங்களை பார்வையிட்டனர்.

    ஒவ்வொரு மாவட்டங்களாக சென்ற இவர்கள் விவசாயிகளிடம் நெல் ஈரப்பதம் விவரங்களை கேட்டு அறிந்தனர். இதுபற்றி முதலமைச்சருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதினார். அதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சி அடையாத சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை தளர்த்தவும், சேதம் அடைந்த நிற மாற்றம் மற்றும் முளைத்தை நெல்லை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரை தளர்த்தவும் தேவையான மதிப்பை சம்பா பயிருக்கும் குறைக்கவும் விதிமுறைகளில் தளர்வை அறிவிக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

    இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் சேத மதிப்பை பார்வையிட்ட அமைச்சர்கள் சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிாரிகள் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பயிர்சேத விவரங்களை அறிக்கையாக சமர்ப்பித்தனர்.

    அமைச்சர்களின் கருத்துக்கள் மற்றும் அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு இழப்பீடு வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர்சேத கணக்கெடுப்பு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறையால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும்.

    * கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

    * நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயிறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும்.

    * நெல் தரிசில் உளுந்து தெளித்து கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஹெக்டேருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும்.

    * கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடன் மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவிகிதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும்.

    * பருவம் தவறிய கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பயிர் அறுவடை பரிசோதனைகள் முடிக்கப்பட்டிருப்பின், கூடுதலாக மீண்டும் தற்போது மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • தென்காசி மாவட்டத்திலும் விட்டு விட்டு பெய்த சாரல் மழையால் குளிர்ச்சியான காற்று வீசியது.

    தஞ்சாவூர்:

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்பட 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் தஞ்சையில் நேற்று காலை 6 மணி முதல் தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. அவ்வப்போது மழை கொட்டி தீர்த்தது. மதியம் 3 மணி வரையிலும் இந்த மழை நீடித்தது.

    இதேபோல் தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அவ்வப்போது பலத்த மழையும், லேசான தூறலுமாக மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதேபோல் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களிலும் நேற்று காலை முதல் மாலை வரையில் மழை பெய்தது. இடையிடையே கனமழையும் பெய்தது.

    இந்த கனமழை காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்தன. சில இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.

    கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள்.

    நேற்று பெய்த கனமழை காரணமாக நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 10.30 மணி முதல் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அவ்வப்போது விட்டு, விட்டு பெய்து கொண்டிருந்தது. இதனால் ரம்மியமான சூழல் நிலவியது.

    இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் விட்டு, விட்டு பெய்த சாரல் மழையால் குளிர்ச்சியான காற்று வீசியது. குளுகுளு சீசன் நிலவியது. மொத்தத்தில் வெயில் தலை காட்டவில்லை.

    இதேபோல தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. இதனால் இதமான சூழல் நிலவியது. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை தொடர்ந்து, நேற்று 3-வது நாளாக விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அதேபோன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் நேற்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    ராமேசுவரம் பகுதியில் விடிய விடிய மழை பெய்தது.

    • டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதால் சம்பா, தாளடி இளம் பயிர்கள் மூழ்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
    • குறுவை அறுவடை இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்ய தொடங்கியது.

    தஞ்சை மாவட்டத்தில் இரவில் விட்டு விட்டு மழை பெய்தது. ஆனால் அதிகாலை 4 மணியில் இருந்து இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. தஞ்சை, வல்லம், பாபநாசம், பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி வருகிறது.

    திருவாரூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. திருவாரூரில் பெய்து வரும் கனமழையால் நகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க நகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல் மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழையால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது தவிர டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதால் சம்பா, தாளடி இளம் பயிர்கள் மூழ்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் குறுவை அறுவடை இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    தொடர் மழையால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தஞ்சை, நாகை மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 6 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் இன்று 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேப்போல் மயிலாடுதுறை மாவட்டத்திலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 3 மாவட்டங்களிலும் சேர்த்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
    • நேற்று மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் சம்பா, தாளடி பயிர்கள் மூழ்கி உள்ளன.

    தஞ்சாவூர்:

    தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது 2 முதல் 4 மணி நேரம் தொடர் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணி நேரம் விடாது 177 மி.மீ கனமழை பெய்தது.

    இந்நிலையில் நேற்றும் மாலை 1 மணி நேரம் கனமழை பெய்தது. தற்போது குறுவை அறுவடை பணிகள் முடிந்து சம்பா, தாளடி நடவுப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்

    இந்நிலையில் இந்த கனமழையால் தஞ்சை மாவட்டம் முழுவதும் சுமார் 1000 ஏக்கரில் சம்பா, தாளடி இளம் நாற்றுகள் முற்றிலும் மூழ்கி கிடக்கிறது. முறையாக தூர்வாரப்படாததால் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் மதியம் முதல் சுமார் 2 மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் தியாகராஜர் கோவிலின் கிழக்கு கோபுர வாசல் வழியாக மழைநீர் கோவிலுக்குள் புகுந்து குளம் போல் தேங்கியது.

    இதைப்போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான மன்னார்குடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகள் உள்ள குடியிருப்புகள் மற்றும் வயல்களில் மழைநீர் சூழ்ந்தது. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சம்பா, தாளடி, இளம் நாற்றுகள் மூழ்கி கிடப்பதால் விவசாயிகள் தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் சம்பா, தாளடி பயிர்கள் மூழ்கி உள்ளன.

    ஆனால், போர் செட் மூலமும், மேட்டு பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி செய்த விவசாயிகளும் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் கடல் சீற்றம் காரணமாக வேதாரண்யம், கோடிக்கரை, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 4 நாட்களுக்கும் மேலாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

    விடிய விடிய மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீர்காழி நகரின் தாழ்வான பகுதியிலுள்ள 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது

    சீர்காழி வ.உ.சி நகரில் ரவி என்பவரின் கூரை வீடு இடிந்து விழுந்தது. சில இடங்களில் சாலை மற்றும் தெருக்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    திருமுல்லைவாசல், தொடுவாய் உள்ளிட்ட 4-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக மீன் பிடிக்க செல்லவில்லை.

    கொள்ளிடம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக வடிகால் வாய்க்கால்களின் மூலம் மழைநீர் கடலில் சென்று கலப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது

    மாவட்டம் முழுவதும் 12 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி, இளம் நாற்றுகள் வயல்களில் மழைநீரில் மூழ்கி கிடப்பதாகவும் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யாமல் இருந்தால் இந்த பயிர்களை காப்பாற்ற இயலும் என்றும், ஆனால் தாழ்வான பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள வயல்களில் மூழ்கி உள்ள பயிர்களை காப்பாற்றுவது சற்று கடினம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    டெல்டா மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி, இளம்நாற்றுகள் மூழ்கி உள்ளன.

    ஏற்கனவே குறுவை அறுவடை நேரத்தில் பெய்த மைழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூடுதல் ஈரப்பதம் காரணமாக நெல்லை விற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்த சம்பா, தாளடி, இளம்நாற்றுகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தொடர் மழை காரணமாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

    • கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களுக்கு மகாலட்சுமி ஆகியோரை கண்காணிப்பு அதிகாரிகளாக தமிழக அரசு நியமித்துள்ளது.

    சென்னை:

    டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு சிவஞானம், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கற்பகம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பி.சங்கர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு மீனா பிரியதர்ஷினி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு செந்தில்குமார்.

    மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களுக்கு மகாலட்சுமி ஆகியோரை கண்காணிப்பு அதிகாரிகளாக தமிழக அரசு நியமித்துள்ளது.

    விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதையும் இவர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
    • தொடர்ந்து இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே பரவலாக மழை பெய்து வருகிறது.

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் வழக்கத்தை விட கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 வாரமாகவே பகலில் வெயில் அடிப்பதும், மாலை, இரவு நேரங்களில் கனமழை பெய்வதுமாக உள்ளது. ஆனால் கடந்த 2 நாட்களாக காலையில் இருந்து நள்ளிரவு வரை விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

    தஞ்சையில் நேற்று பகல் முழுவதும் மழை பெய்தது. இன்று காலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. 8 மணியில் இருந்து மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. இடைவிடாது மழை பெய்வதால் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர்.

    இதேப்போல் திருவையாறு, பூதலூர், வல்லம், குருங்குளம், பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று இரவும் கனமழை பெய்யக்கூடிய அறிகுறி தென்படுகிறது.

    மேலும் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் பெருமளவு திறக்கப்படுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதி கிராமங்களான வீரமாங்குடி, தேவங்குடி, பட்டுக்குபடி உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 3-வது முறையாக கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேலும் பழைய மண்ணியாற்று பகுதியில் வயல்களை உபரி வெள்ளநீர் மற்றும் மழை நீர் சூழ்ந்ததால் தற்போது நடவு செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்கள் மற்றும் வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்கள் மூழ்கி கிடக்கின்றன. தொடர்ந்து மழை பெய்தால் இந்த பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    இதேப்போல் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பல நூறு ஏக்கரில் குறுவை பயிர்கள், கரும்பு, வாழைகள் மூழ்கி உள்ளன.

    நாகை அருகே திருமருகல் ஒன்றியம் பகுதியில் உள்ள அரசலாறு, திருமலைராஜன் ஆறு, வளப்பனாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கால் கரைகள் உடையாமல் இருக்க மணல் மூட்டைகளை பொதுப்பணித்துறையினர் தயார் நிலையில் வைத்து ள்ளனர்.

    மழையால் நாகை மாவட்டம் வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளியில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. உப்பளங்களில் தண்ணீர் தேங்கியதால் அதனை வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதேப்போல் 4 மாவட்ட ங்களிலும் கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செங்கல் தயாரிப்பு பணியும் தற்காலிகமாக முடங்கியது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி உள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    சீர்காழி பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் திருவெண்காடு, கொள்ளிடம், எடமணல் உள்ளிட்ட கிராமங்களில் குறுவை நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் மந்தமாக நடப்பதால் நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    மேலும் இப்பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றின் உபரிநீர் மற்றும் மழையால் முதலைமேடு, நாதன்படுகை, கோரைதிட்டு உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களை படகு மூலம் மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து உள்ளனர்.

    • கல்லணைக் கால்வாயில் உள்ள 694 ஏரி, குளங்களில் 681 ஏரி, குளங்கள் 100 சதவீதம் நிரம்பி விட்டன.
    • டெல்டா மாவட்டங்களில் அந்தந்த உள்ளாட்சிக்கு சொந்தமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டாவில் ஏரி-குளங்கள் நிரம்பிய விபரம்:-

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பொதுப்பணி துறைக்கு சொந்தமாக கல்லணை கால்வாய் பகுதியில் மட்டும் 694 ஏரி, குளங்கள் உள்ளன. இந்த ஏரி, குளங்கள் மேட்டூர் அணை தண்ணீரை கொண்டு நிரம்பக்கூடிய ஏரி, குளங்களாகும். அதன்படி முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும். தற்போது அணை நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும் அந்த தண்ணீரைக் கொண்டு ஏரி, குளங்களை நிரப்பும் பணி நடந்து வருகிறது.

    அதன்படி கல்லணைக் கால்வாயில் உள்ள 694 ஏரி, குளங்களில் 681 ஏரி, குளங்கள் 100 சதவீதம் நிரம்பி விட்டன. மீதமுள்ள 13 ஏரி, குளங்கள் மட்டும் நிரப்பும் பணி நடந்து வருகிறது.

    இதுதவிர டெல்டா மாவட்டங்களில் அந்தந்த உள்ளாட்சிக்கு சொந்தமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் மழைக்காலங்களில் மட்டும் நிரம்பக்கூடிய குளங்களாகும். அதாவது வடகிழக்கு பருவமழை காலங்களில் இந்த குளங்கள் நிரம்பும். இன்னும் சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதன் பிறகு உள்ளாட்சி சொந்தமான குளங்கள் நிரப்பும்பணி நடைபெறும்.

    ×