search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவுமுறை"

    • நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை சாப்பிடக் கூடாது என்று பொதுவாகவே கூறுவார்கள்.
    • நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

    நீரிழிவு நோய் என்பது பொதுவாகவே பெரும்பாலான மனிதர்களுக்கு காணப்படுகிறது. நீரிழிவு நோய் வந்து விட்டாலே அடுத்தடுத்து பல நோய்களும் தொற்றிக் கொள்ளும். என்றுமே நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை சாப்பிடக் கூடாது என்று பொதுவாகவே கூறுவார்கள்.

    சில பேர் சர்க்கரையை கொஞ்சம் கூட சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். சில பேர் வெள்ளை சர்க்கரையை தவிர்த்து விட்டு தேன் மற்றும் நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்துவார்கள்.

    தேனில் கிட்டத்தட்ட 300 வகைகள் உண்டு. ஒரு டீஸ்பூன் தேனில் 60 கலோரிகள் மற்றும் 17 கிராம் கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி, பி, இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சுண்ணாம்பு சத்து மற்றும் ஆன்ட்டிஆக்ஸிடண்ட்ஸ் இருக்கிறது.

    தேனில் உள்ள அதிகமான அளவு கார்போஹைட்ரேட், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். வெள்ளை சர்க்கரையில் ஒரு டீஸ்பூனில் 13 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது.

    ஒரு டீஸ்பூன் தேனில், வெள்ளை சர்க்கரையை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் எப்போதாவது சர்க்கரைக்கு மாற்றாக தேன் சாப்பிடலாம். சர்க்கரையுடன் சேர்த்து கூடுதலாக தேன் சாப்பிடக்கூடாது.

    மார்க்கெட்டில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த தேனை பயன்படுத்துவதை விட கொம்புத்தேன் என்று கிடைக்கும் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட தேனை பயன்படுத்துவது சிறந்தது. தேனில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக தேனை சிறிதளவு பயன்படுத்திக் கொள்ளலாம்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி. சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மஞ்சள் கருவில் 100 சதவீதம் கொழுப்பு உள்ளது.
    • முட்டை ஒரு சிறந்த உணவு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    வளரும் குழந்தைகளுக்கு முட்டையை பச்சையாகக் கொடுத்தால் உடல் வலுப்பெறும் என்றும், பூப்படைந்த பெண்களுக்கு 'பச்சை முட்டை' தருவது நல்லது என்றும் கூறுகிறார்கள். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முட்டை ஒரு சிறந்த உணவு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒரு முட்டையின் எடையில் சுமார் 60 சதவீதம் வெள்ளை கருவும், 30 சதவீதம் மஞ்சள் கருவும் உள்ளன. வெள்ளை கருவில் 90 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. 10 சதவீதம் புரதம் உள்ளது. இதில் கொழுப்பு சுத்தமாக இல்லை. கார்போஹைட்ரேட் சத்தும் குறைவு.

    மஞ்சள் கருவில் 100 சதவீதம் கொழுப்பு உள்ளது. இதன் மஞ்சள் நிறம் குறிப்பிட்ட பறவை இனம் சாப்பிட்ட உணவில் உள்ள 'கரோட்டினாய்டு', 'ஸாந்தோபில்' எனும் மஞ்சள் நிறமிகளின் அளவை பொறுத்து உருவாகிறது. உதாரணமாக மஞ்சள் நிற மக்காச்சோளத்தை தின்று வளரும் பறவையின் முட்டை, அதிக அடர்த்தியுடன் கூடிய மஞ்சள் கருவைப் பெற்றிருக்கும். மஞ்சள் கருவில் உள்ள நிறமிகளில் 'லூட்டின்' எனும் நிறமிதான் அதிகம். 100 கிராம் கோழி முட்டையில் தண்ணீர் 75 கிராம், கார்போஹைட்ரேட் 1.12 கிராம், கொழுப்பு 10.6 கிராம், கொலஸ்ட்ரால் 373 மி.கிராம், புரதச்சத்து 12.6 கிராம் வைட்டமின்- ஏ, வைட்டமின்-டி உள்ளிட்ட பத்து வகை வைட்டமின்கள், கால்சியம், இரும்பு உள்ளிட்ட 7 வகை தாதுச்சத்துகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் என பல சத்துகள் உள்ளன. ஒரு முட்டை சாப்பிட்டால் 155 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. ஒரு நேரத்தில் இரண்டு முட்டை சாப்பிட்டால் ஒரு சராசரி மனிதருக்கு காலை உணவுக்கு தேவையான சக்தி கிடைத்துவிடும்.

    'முட்டையை வேக வைக்காமல், பச்சையாகக் குடித்தால் உடலுக்கு அதிக சத்து கிடைக்கும்' என்று ஒரு நம்பிக்கை உள்ளது. குறிப்பாக, குழந்தைகள், இளம்பெண்கள், விளையாட்டு வீரர்கள், பளு தூக்குபவர்கள் போன்றோர் அதிக சத்தைப் பெறுவதற்காக பச்சை முட்டையை குடிப்பார்கள். இதில்தான் ஆபத்து உள்ளது.

    'பச்சை முட்டை'யின் வெள்ளைக்கருவில் 'அவிடின்' எனும் புரதச்சத்து உள்ளது. இது முட்டையில் உள்ள பயாட்டின் எனும் வைட்டமினுடன் இணையும்போது, பயாட்டின் சத்து சிறுகுடலில் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் முட்டையை வேகவைத்துவிட்டால், அந்த வெப்பத்தில் அவிடின் அழிந்துவிடும். இதன் பலனாக, முட்டையில் உள்ள பயாட்டின் முழுமையாக உடலில் சேரும். அவிடின் சத்தைவிட பயாட்டின்தான் நமக்கு முக்கியம். குறிப்பாகக் கூந்தல் வளர்ச்சிக்கு இது தேவை. ஆகவே, வேகவைத்த முட்டையை சாப்பிடுவதே நல்லது.

    முட்டையில் 'சால்மோனல்லா' போன்ற பாக்டீரியா கிருமிகள் இருக்க வாய்ப்பு உள்ளது. முட்டையை அவிக்கும்போது, அவை இறந்துவிடும் என்பதால் நோய்த்தொற்று ஏற்படுவது தடுக்கப்படும். இப்போது ஹார்மோன் ஊசி போட்டுத்தான் பெரும்பாலான கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த மருந்துகளின் பாதிப்பு இறைச்சியில் மட்டுமல்லாமல், முட்டையிலும் இருக்கும் சாத்தியம் உள்ளது. முட்டையை வேகவைக்கும்போது இந்தப் பாதிப்புகள் குறைந்துவிடும். இருந்தாலும் நாட்டுக்கோழி முட்டைகளை வாங்கி பயன்படுத்துவதே மிக சிறந்தது.

    • தினமும் ஒரு கீரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    • கீரையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

    கீரை வகைகள் மனிதனுக்கு எண்ணற்ற பயன்களை அளிக்கின்றன. இதில் என்னென்ன சத்துக்கள், எந்தெந்த அளவுகளில் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.

    புதினா, கொத்தமல்லி... புதினா கீரையில் போலிக் அமிலம் 114 மைக்ரோ கிராம், கால்சியம் 200 மி.கி., இரும்புச் சத்து 15.6 மி.கி., வைட்டமின்கள் ஏ,பி,சி சிறிதளவு உள்ளன. இது ரத்த சோகையைப் போக்க வல்லது.

    கொத்தமல்லி கீரையில் கால்சியம் 184 மி.கி., இரும்புச் சத்து 1042 மி.கி., வைட்டமின் ஏ 8,918 மைக்ரோகிராம் உள்ளன. பாஸ்பரஸ், வைட்டமின் பி,சி, உள்ளன. இது பார்வைக்கோளாறு, ரத்த சோகை ஆகியவற்றைப் போக்கும்.

    * முளைக்கீரையில் இரும்புச் சத்து 22.9 மி.கி., கால்சியம் 397 மி.கி., பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும் திறனுள்ளது.

    * அகத்திக் கீரையில் கால்சியம் 1,130 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 3.9 மி.கி., வைட்டமின் ஏ 5,400 மைக்ரோ கிராம் உள்ளன. வைட்டமின்கள் பி, சி சிறிதளவு உள்ளன.

    * பொன்னாங்கண்ணி கீரையில் இரும்புச் சத்து 1.63 மி.கி, கால்சியம் 510 மி.கி, பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி உள்ளன.

    * பசலைக் கீரையில் வைட்டமின் ஏ 5,580 மைக்ரோ கிராம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து 1.14 மி.கி., பொட்டாசியம் 306 மி.கி போன்றவை உள்ளன.

    * வெந்தயக் கீரையில் கால்சியம் 395 கிராம், வைட்டமின் ஏ 2,340 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 1.93 மி.கி. உள்ளன.

    * புளிச்ச கீரையில் இரும்புச் சத்து 2.28 மி.கி, வைட்டமின் ஏ 2,898 மைக்ரோ கிராம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளன.

    * முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ 6,780 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 200 மி.கி. இரும்புச் சத்து, கால்சியம் 440 மி.கி., பாஸ்பரஸ் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி போன்றவை உள்ளன. முருங்கைக் கீரையைப் போன்று கறிவேப்பிலையிலும் வைட்டமின் ஏ அதிகம். இது பார்வைக் கோளாறுகளை தடுக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இளம் வயதிலேயே முதுமையான தோற்றத்தை உண்டாக்கும் சில உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
    • இவற்றை தவிர்ப்பதன் மூலம், செயற்கையாக உருவாகும் முதுமை தோற்றத்தை தவிர்க்கலாம்.

    வயதிற்கும், தோற்றத்திற்கும் சம்பந்தமில்லாத நிலையில் நிறைய மனிதர்களை சந்திக்கிறோம். இளம் வயதிலேயே தலைமுடி நரைப்பது, தோல் சுருக்கம் ஏற்படுவது, முதுமை தோற்றம் எட்டிப்பார்ப்பது என இந்த காலத்து இளைஞர்கள், பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். இவை அனைத்திற்கும், அவர்களது தவறான உணவு பழக்கம் முக்கிய காரணமாகிறது.

    குறிப்பாக துரித உணவு கலாசாரம் மற்றும் மேலை நாடுகளின் உணவு பழக்க வழக்க தாக்கத்தினால், ஆரோக்கியமில்லாத உணவுகளை உட்கொண்டு உடலையும், இளமையையும் பாழ்படுத்திக் கொள்கிறார்கள். அந்தவகையில், இளம் வயதிலேயே முதுமையான தோற்றத்தை உண்டாக்கும் சில உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். இவற்றை தவிர்ப்பதன் மூலம், செயற்கையாக உருவாகும் முதுமை தோற்றத்தை தவிர்க்கலாம்.

    1. குளிர்பானங்கள்

    குளிர்பானங்கள் கொஞ்சமாக குடித்தாலும் சரி, நிறைய குடித்தாலும் சரி அதன் மூலம் பாதிப்பு ஏற்படுவது உறுதி தான். இந்த குளிர்பானங்களை தொடர்ந்து குடித்தால் உடலில் உள்ள நீர் வற்றி, சருமம் பாதிக்கப்படும். இதனால் விரைவில் வயதான தோற்றம் ஏற்படும்.

    2. துரித உணவு

    தோல் பளபளப்பாக இருப்பதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், நமது உடலின் ரத்த ஓட்டம் சீராக இருப்பதே. ஆனால், பாஸ்ட் புட், பீட்சா, பர்க்கர் போன்ற துரித உணவுகளை சாப்பிட்டால், கொழுப்பு அதிகமாகி, ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனாலும் வயதான தோற்றம், வெகுவிரைவிலேயே ஏற்படும்.

    3. இறைச்சி

    அதிக அளவில் இறைச்சி மட்டும் உட்கொள்வதால் உடலில் நச்சுகள் குவிந்து கொழுப்பு அதி கரிக்கிறது. இதனால் வைட்டமின் டி சத்து குறைந்து முதுமை நிலையை, இளமையிலேயே அடைகிறீர்கள்.

    4. உப்பு

    உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். ஆனால், உப்பு அதிகமாக சேர்த்துக்கொண்டாலும் அது ஆபத்து தான். உப்பு அதிக ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன்காரணமாக, தோலின் இறுக்கமான தன்மை சுருங்கி வயதானவர்கள் போன்ற தோற்றம் விரைவில் ஏற்படும்.

    5. மதுபானங்கள்

    அழகாகவும், இளமையாகவும் காட்சி அளிக்கும் பிரபலங்கள், பிறருக்கு தரும் முதல் டிப்ஸ் என்னவென்றால், அதிக தண்ணீர் குடியுங்கள் என்பதே. ஆம், மது அருந்துபவர்களுக்கு அதிகமாக தண்ணீர் இழப்பு ஏற்படும். இதனால், விரைவிலேயே தோல் பாதிக்கப்பட்டு, வயதானவர்கள் போன்ற தோற்றத்தை பெறுவார்கள்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குடலில் உள்ள பாக்டீரியாக்களின் செயல்பாட்டை பழங்கள் மேம்படுத்தும்.
    • வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    காலையில் பழங்கள் சாப்பிடும் விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஒவ்வொரு நபருக்கும் வளர்சிதை மாற்றத்தில் மாறுபாடு நிலவும். உடல் வகையும் மாறுபடும். அதற்கேற்ப பழங்களை சாப்பிட வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு பழத்திலும் பல்வேறு நொதிகள் மற்றும் அமிலங்கள் உள்ளன. அவை குடலில் உள்ள பாக்டீரியாக்களுடன் வினைபுரியும். அதன் செயல்பாடுகளை பொறுத்து அந்த பழங்கள் நன்மை செய்யுமா? தீமை செய்யுமா? என்பது தீர்மானிக்கப்படும்.

    யார் பழங்களை தவிர்க்க வேண்டும்?

    அசிடிட்டி, நெஞ்செரிச்சல், சளி, இருமல், சைனஸ், ஒவ்வாமை, ஆஸ்துமா, காய்ச்சல், மூச்சுக்குழாய் அழற்சி, நீரிழிவு, உடல் பருமன் போன்ற அறிகுறிகளை கொண்டவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    யார் சாப்பிடலாம்?

    மலச்சிக்கல், உலர் சருமம், வறண்ட கூந்தல், செரிமான கோளாறு, வளர்சிதை மாற்ற கோளாறு போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் காலையில் பழங்கள் சாப்பிடலாம். குடலில் உள்ள பாக்டீரியாக்களின் செயல்பாட்டை பழங்கள் மேம்படுத்தும். செரிமான செயல்பாடுகளை தூண்டும்.

    எப்படி சாப்பிட வேண்டும்?

    பழங்களை தனியாகத்தான் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பால் பொருட்கள், தானியங்களுடன் கலந்து சாப்பிடக்கூடாது. இறைச்சி வகைகளுடன் பழங்களை கலந்தும் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் அந்த உணவுப்பொருட்கள் நச்சுத்தன்மையுடையதாக மாறக்கூடும். உலர் பழங்களுடன் வேண்டுமானால் பழங்களை சேர்த்து சாப்பிடலாம். அவை ஒரே குடும்பத்தை சேர்ந்தவை என்பதால் பாதிப்பை ஏற்படுத்தாது.

    காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

    * நமது உடலில் காலை 7 மணி முதல் 11 மணிக்குள் நச்சு நீக்கும் செயல்முறை நடைபெறும். அதற்கு தேவையான ஆற்றலை பழங்கள் கொடுக்கும்.

    * மற்ற உணவுப்பொருட்களுடன் ஒப்பிடுகையில் பழங்கள் எளிதில் ஜீரணமாகக்கூடியவை. அவற்றை காலையில் சாப்பிடுவது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கச் செய்யும்.

    * காலையில் எழுந்த உடனே உடலுக்கு இயற்கையான சர்க்கரை தேவைப்படும். பழங்களை சாப்பிடுவது மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.

    • 30 வயதைக் கடந்துவிட்டாலே உணவு பிரமிடைப் பின்பற்ற வேண்டும்.
    • தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது.

    மாறிவரும் வாழ்க்கை முறையில் நம் உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. நம் தேவைக்கேற்ப உணவின் அளவையும் நேரத்தையும் மாற்றிக் கொண்டுவிட்டோம். அவை என்ன விளைவை ஏற்படுத்தும் என்றும் யோசிப்பதில்லை. முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி, அதில் ஏற்றத்தாழ்வை உருவாக்கலாம்.

    அதனால் சிறிய இடைவேளைகளில் குறைவான உணவை எடுத்துக் கொள்வது நல்லது. காலை 6 மணிக்கு காபி அல்லது டீ, 8 மணிக்கு இரண்டு இட்லி, 10 மணிக்கு சூப், மதியம் கீரை, கூட்டு, தயிர் இவற்றுடன் அளவான சாப்பாடு, 4 மணிக்கு கொழுப்பு குறைவான நொறுக்குத்தீனி, மாலை 6 மணிக்கு ஏதாவது திரவ உணவு, இரவு 8 மணிக்கு மிதமான சிற்றுண்டி.

    இதுதான் சரியான உணவுப் பழக்கம். சிலர் வாரத்தில் 5 நாட்கள் இப்படிச் சாப்பிட்டுவிட்டு வார இறுதியில் தங்களுக்குப் பிடித்த உணவகங்களுக்குச் சென்று அளவில்லாமல் சாப்பிடுவார்கள். இதனால் வார நாட்களில் சோர்வும், மனதில் ஒரு ஏக்கமும் இருக்குமே தவிர உடல் எடை குறையாது. சிறு வயதிலேயே பலருக்கு சர்க்கரை நோய் வர, உணவுப்பழக்கமும் ஒரு காரணம்.

    பொதுவாக 30 வயதைக் கடந்துவிட்டாலே உணவு பிரமிடைப் பின்பற்ற வேண்டும். அதாவது கொழுப்பும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளைக் குறைவாகவும், புரதமும், வைட்டமின்களும் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும்.

    நம் உடலை உள்ளும் புறமும் சுத்தப்படுத்துவதில் தண்ணீருக்கு முக்கியப் பங்கு உண்டு. தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது. பிறகு குறிப்பிட்ட இடைவேளைகளில் தண்ணீர் குடிக்க வேண்டும். சிலருக்கு அடிக்கடி தண்ணீர் குடிக்க முடியாது அல்லது பிடிக்காது. இவர்கள் நீர்மோர், எலுமிச்சை சாறு, தர்பூசணி சாறு போன்றவற்றைக் குடிக்கலாம். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பேரீச்சம் பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் இருக்கிறது
    • மதிய உணவு இடைவேளையின்போது பேரீச்சம் பழம் சாப்பிடலாம்.

    தினமும் மூன்று பேரீச்சம் பழங்களாவது சாப்பிட வேண்டும். அதன் மூலம் உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும். கல்லீரலை பலப்படுத்துவதில் பேரீச்சம் பழத்திற்கும் பங்கு இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதய நலனுக்கும் பேரீச்சம் பழம் இன்றியமையாதது. பக்கவாதம், மாரடைப்பு, கொழுப்பு போன்றவற்றை கட்டுப்படுத்தவும் உதவும்.

    பேரீச்சம் பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் இருக்கிறது. அது கண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. மேலும் அதில் உள்ளடங்கி இருக்கும் லூடின், ஜியாசாந்தைன் போன்றவையும் பார்வை சக்தியை மேம்படுத்தும். தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களின் தாக்கத்தை குறைத்து கண்களுக்கு பாதுகாப்பு கவசமாகவும் செயல்படும். மதிய உணவு இடைவேளையின்போது பேரீச்சம் பழம் சாப்பிடலாம். அதில் கலந்திருக்கும் சர்க்கரை உற்சாகமாக செயல்பட வைக்கும்.

    பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்புகள், நட்ஸ் வகைகளையும் சேர்த்து சாப்பிடலாம். அவை மூளை சுறுசுறுப்புடன் செயல்பட வழிவகை செய்யும். விளையாட்டு வீரர்கள் தவறாமல் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வர வேண்டும். அது உடல் ஆற்றலை அதிகப்படுத்தும். செரிமானம் சீராக நடைபெறவும் பேரீச்சம் பழம் உதவும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். உடல் வலி, வீக்கத்தை குறைக்கவும் பேரீச்சம் பழம் துணைபுரிகிறது. நோய் தொற்றுகளில் இருந்தும் உடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. நொறுக்கு தீனி பிரியர்கள் பேரீச்சம் பழம் சாப்பிடுவது நல்லது.

    • நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும்.
    • நீரிழிவு நோயாளிகளுக்கு கால் நகங்கள் கருப்பாக மாறுவதற்கு முக்கிய காரணங்கள் வருமாறு:

    பொதுவாக பலரையும் வாட்டக்கூடிய நீரிழிவு நோய் இரண்டாம் இடத்தில் உள்ளது. தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய் என்று இதனை கூறலாம். இதனை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. இல்லாவிடின் உயிர் ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு கால் நகங்கள் கருப்பாக மாறுவதற்கு முக்கிய காரணங்கள் வருமாறு:

    பூஞ்சை தொற்று: இது விரலின் நுனியில் தொடங்கி பின்னர் மையத்திற்கு பரவுகிறது. பொதுவாக கால் விரல்களை பாதிக்கிறது. குறிப்பாக காலில் ஷூ அல்லது விரல்களை மூடுமாறு அணியும் காலணிகளை அணிபவர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. டெர்மெட்டோபைட் எனும் பூஞ்சையால் ஏற்படும் இந்த தொற்று ஒனைக்கோமைக்கோசிஸ் அல்லது டினியா உன்குயம் என்று அழைக்கப்படுகிறது.

    நகங்களில் ஏற்படும் காயம்: நகத்தின் மேல் காயம் ஏற்பட்டால் நகத்தின் கீழ் உள்ள ரத்த நாளங்களை வெடிக்க செய்து, ரத்தம் அதிகமாக சேர்ந்து நகத்தின் நிறத்தை மாற்றும். பொருந்தாத காலணிகள் அல்லது இறுக்கமான காலணிகளை அணிந்து நடப்பது, ஓடுவது அல்லது வேலை செய்வதால் ஏற்படும் அழுத்தம் அல்லது காயங்களால் நகத்தின் நிறம் மாறலாம்.

    மெலனோமா: சில சமயம் ஓர் அரிய நிகழ்வாக தோலில் ஏற்படக்கூடிய மெலனோமா புற்றுநோய் காரணமாக நகத்தின் நிறம் கருமையாக மாறும்.

    நோய் பாதிப்பு: இதய நோய், சிறுநீரக பாதிப்பு அல்லது ரத்த சோகையினால் கூட நகத்தின் நிறம் கருப்பாக மாறலாம். உங்கள் கால் நகம் கருப்பாக மாறும் போது மருத்துவரிடம் சென்று கலந்தாலோசித்து அது குறித்து தகுந்த பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரையை பின்பற்ற வேண்டும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது.
    • எத்தகைய நன்மைகள் இதில் இருக்கிறது என பார்ப்போமா..?

    தற்போது அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய மிகவும் பிரபலமான மற்றும் பலரும் விரும்பி சாப்பிடும் பழம் தான் ஆப்பிள். ஆப்பிளில் பல வெரைட்டிகள் உள்ளன. அனைத்து வகையான ஆப்பிள்களும் ஒரே சத்துக்களைத் தான் கொண்டுள்ளது. ஒருவர் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. அந்த அளவில் ஆப்பிளில் ஏராளமான சக்தி வாய்ந்த உட்பொருட்கள் அடங்கியுள்ளன.

    ஆப்பிள் பழத்தில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் என உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. வேறு எத்தகைய நன்மைகள் இதில் இருக்கிறது என பார்ப்போமா..?

    * பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து ஆப்பிளில் அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொழுப்பானது கரைந்து விடும்.

    * இதில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்சிடன்ட், மூளைச் செல்களை அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.

    * ஆப்பிளில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், ரத்தத்தில் சக்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

    * இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது.

    * ஆப்பிளில் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இருப்பதால் அவை சருமத்தை இளமையுடன் வைத்து கொள்ள உதவுகிறது.

    * ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால் வலுவிழந்து மற்றும் பொலிவிழந்து இருக்கும் பற்களை நன்கு பளிச்சென்று மின்ன வைக்கலாம். ஆரோக்கியத்துடனும் வைத்து கொள்ளலாம்.

    * ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் பெக்டின் அதிகம் உள்ளதால், அவை உடலை கட்டழகுடன் வைத்து கொள்ள உதவுகிறது. மேலும் இதில் உள்ள பாலி பினால், உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து விடும்.

    * ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து, ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும். ஆப்பிளை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், குடலியக்கம் சிறப்பாக நடைபெற்று, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கழிவுகளை எளிதில் மலக்குடல் வழியாக வெளியேற்றும். எனவே உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்.

    * ஆப்பிள் புற்றுநோயைத் தடுக்கும். குறிப்பாக ஆப்பிள் மார்பக புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைத் தடுக்கும். உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால், தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிடுங்கள். ஏனெனில் தோலில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

    • சர்க்கரைவள்ளி கிழங்கு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.
    • சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகம்.

    சர்க்கரைவள்ளி கிழங்கை ருசிக்காக மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை பேண, அவசியம் சாப்பிட்டுவர வேண்டும். இதில் இருக்கும் மாவுப்பொருள் இனிப்பு சுவையை தருவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது.

    * பி-6 வைட்டமினின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால் செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது. இதய நோய் பாதிப்பில் இருந்தும் காக்கிறது.

    * ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குளிர்காலங்களில் சரும பொலிவை தக்க வைக்கவும் உதவுகிறது. மன அழுத்தத்தில் இருந்தும் விடுவிக்கிறது.

    * சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகம். உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற நச்சுகளை வெளியேற்றவும் வழிவகை செய்கிறது.

    * இதிலிருக்கும் வைட்டமின் டி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. ஆரோக்கியமான மனநிலை, வலுவான எலும்புகள், இதயம் ஆகியவற்றின் செயல்பாட்டுக்கும் உறுதுணையாக இருக்கிறது. தைராய்டு சுரப்பி, பற்கள், எலும்புகள், நரம்புகள் மற்றும் தோல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை காக்கவும் வைட்டமின் டி அவசியமானதாகிறது.

    * வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க சர்க்கரைவள்ளி கிழங்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

    * இதிலிருக்கும் வைட்டமின் ஏ சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இதன் மூலம் அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் எதிராக போராட தூண்டுகிறது. புற ஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் துணைபுரிகிறது. பழுதடைந்த செல்களை சரிசெய்வதிலும், புதிய செல்களை சேதாரம் அடையாமல் பாதுகாப்பதிலும் சர்க்கரை வள்ளி கிழங்கின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

    * சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்தோ, சுட வைத்தோ அல்லது சிப்ஸ் தயாரித்தோ சாப்பிடலாம். அதிலிருக்கும் சத்துக்கள் முழுவதும் உடலுக்கு கிடைக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
    • இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை.

    உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை.

    நீரிழிவு பாதிப்பு உள்ள நோயாளிகள் தங்கள் உணவு முறையில் சிறு மாற்றத்தைச் செய்தாலேயே நீரிழிவு நோயைப் பெருமளவு குறைக்கலாம் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    நெல்லை நேரடியாக வெயிலில் உலர்த்தி, வேக வைக்காமல், ஆலையில் அரைத்து அதன் உமி, தவிடு நீக்குவதால் கிடைக்கும் அரிசி பச்சரிசி ஆகும். நெல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் ஊறிய நெல்லை அரைப்பதத்திற்கு வேகவைத்து, வெயிலில் உலர்த்தி, பின்னர் உமியை நீக்குவதால் கிடைக்கும் அரிசி புழுங்கல் அரிசி ஆகும்.

    நெல்லை வேகவைக்கும்போது உமியில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி, ஒரைசினால் போன்ற ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் அரிசிக்குள் திணிக்கப்படுவதால் புழுங்கல் அரிசி அதிக ஊட்டச்சத்து உள்ளதாக திகழ்கிறது. புழுங்கல் அரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) 38 ஆகும், ஆனால் பச்சரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் 55 ஆகும்.

    புழுங்கல் அரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் பச்சரிசியை விட குறைவாக இருப்பதாலும், புழுங்கல் அரிசியில் வைட்டமின் பி, ஆன்டி ஆக்சிடென்ட்ஸ், நார்ச்சத்து பச்சரிசியை விட அதிகமாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சரிசியை விட புழுங்கல் அரிசியே சிறந்தது.

    புழுங்கல் அரிசி ஊற வைப்பது, வேக வைப்பது, உலர்த்துவது என்ற மூன்று நிலைகளை கடந்து பெறப்படுவதால் ஜீரணத்தை எளிதாக்கி வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. புழுங்கல் அரிசியில் ஆந்தோசையனின் என்ற ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அளவு அதிகமாக உள்ளது.

    இது செல்களில் ஏற்படும் அழற்சியையும், ஃபிரீரேடிகல்கள் பாதிப்பையும் குறைக்கிறது. பச்சரிசியை ஒப்பிட்டு பார்க்கும்போது, புழுங்கல் அரிசியில் அதிகமான அளவு கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீஸ் ஆகியவை இருக்கிறது. இத்தகைய நன்மைகளை பெற்றிருக்கும் புழுங்கல் அரிசி, நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சரிசியை விட சிறந்ததாக கருதப்படுகிறது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • காய்ச்சல்களில் பல வகைகள் இருக்கின்றன.
    • காய்ச்சலை கையாளும் முறையில் மாற்றம் வேண்டும்.

    காய்ச்சலை நாம் அணுகும் முறையால்தான் உணவுரீதியாகவும் நாம் தடுமாற்றம் அடைகிறோம். எனவே, காய்ச்சலை கையாளும் முறையில் மாற்றம் வேண்டும். காய்ச்சல்களில் பல வகைகள் இருக்கின்றன என்பது பலரும் அறிந்ததுதான். அது சாதாரண காய்ச்சலாக இருந்தாலும், தீவிரமான காய்ச்சலாக இருந்தாலும் நாம் பயப்படத் தேவையில்லை.

    காய்ச்சல் வந்தவுடன் நம்மில் பலர் அப்படியே படுத்துவிட்டு, சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருப்பார்கள். இதைத்தான் முதலில் தவிர்க்க வேண்டும். நமது உடலில் காய்ச்சல் ஏன், எதனால் ஏற்படுகிறது. அதை எப்படி சரிசெய்வது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    நமது சுற்றுப்புறத்திலுள்ள வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற ஏதாவதொரு கிருமி நம் உடலுக்குள் சென்றுவிட்டால் அதை நமக்கு உணர்த்தக்கூடிய ஓர் அறிகுறிதான் காய்ச்சல். அப்படி உடலுக்குள் சென்ற கிருமியை எதிர்த்து உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்படுகிறபோது உடலின் வெப்பநிலை அதிகரிப்பதை காய்ச்சல் என்று சொல்கிறோம்.

    காய்ச்சலோடு தலைவலி, வாந்தி, குமட்டல், மூட்டுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அது வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம். காய்ச்சலோடு சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் அல்லது ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது சிறுநீரக நோய்த் தொற்றாக இருக்கலாம். காய்ச்சலோடு வாந்தி, குமட்டல், பேதி போன்ற அறிகுறிகள் இருந்தால் வயிற்றில் ஏதாவது தொற்று ஏற்பட்டிருக்கலாம். காய்ச்சலோடு கண் மஞ்சள் நிறமாக இருந்தால் கல்லீரலில் நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம். காய்ச்சலோடு இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் நுரையீரலில் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

    உடலில் அதிக களைப்பு ஏற்பட்டு, தண்ணீர் குடிக்காமல் வெயில் காலங்களில் வெளியே செல்கிறபோதும் உடல் வெப்பநிலை அதிகரித்து காய்ச்சல் வருவதை Heat Stroke என்று சொல்கிறோம். அதேபோல அம்மை நோய்கள் ஏற்படுகிறபோது உடலில் கொப்புளங்களோடு காய்ச்சலும் வரும். எனவே, என்ன காரணத்தால் அல்லது எந்தக் கிருமியினால் காய்ச்சல் வந்துள்ளது என்பதை சரியாக கண்டறிவதற்கே இரண்டு நாட்கள் வரை ஆகும்.

    மலேரியா, டைபாய்டு, டெங்கு, சிக்கன்குனியா என்று நூற்றுக்கணக்கான காய்ச்சல் இருக்கிறது. எனவே, உடல் வெப்பநிலை எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதை தெர்மாமீட்டர் மூலம் கண்டறிவதோடு என்ன காரணத்தினால் அந்த காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்பதை சரியாக கண்டறிந்த பிறகே அதற்குரிய சரியான மருத்துவத்தை மேற்கொள்ள முடியும்.

    காய்ச்சலின்போது நீர்ச்சத்து தொடர்பான எல்லா உணவுகளையுமே நாம் புறக்கணிக்கிறோம். உடல் மேலும் குளிர்ச்சியடைந்து காய்ச்சல் அதிகமாகிவிடும் என்றும் தவறாக நம்புகிறோம். காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் உடலில் நீர்வறட்சி ஏற்படுகிறது. இந்த நீர்வறட்சியினால் ஏற்படுகிற பாதிப்புகள்தான் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகிற நிலைக்குக் கொண்டுபோய் விடுகிறது. எனவே, அதிகளவு நீர் அருந்துவதோடு நீராகாரங்களையும் எடுத்துக்கொள்வது நல்லது.

    இந்த நீராகாரங்கள் நமது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்களின்(Electrolyte) அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. தண்ணீரின் சுகாதாரம் தொடர்பாக பல சந்தேகங்கள் இருப்பதால், கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடித்துக் கொள்ளலாம். முக்கியமாக, காய்ச்சல் வந்த பிறகு இரண்டு நாட்கள் வரை உடலுக்கு போதுமான ஓய்வு கொடுக்க வேண்டும்.

    காய்ச்சல் வந்துவிட்டால் இதைத்தான் சாப்பிட வேண்டும். இதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதே தவறான புரிதல். இதுபோன்ற நேரங்களில் நாம் இவற்றை எல்லாம் சாப்பிடக்கூடாது என்று நாமாகவே நினைத்துக்கொண்டு, சாப்பிடாமலேயே இருப்பதுதான் உடல் பிரச்னைகளை இன்னும் அதிகமாக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    காய்ச்சலின்போது மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகளை சாப்பிடுவதோடு தண்ணீர், இளநீர், மோர், பழச்சாறுகள், சூப் போன்ற நீராகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்வது அவசியம். உடலுக்குள் புகுந்திருக்கிற கிருமிக்கு எதிராக செயல்படுகிறபோது, அதற்கு உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைப்பதற்கு நாம் எப்போதும்போல உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் இருக்கையில் நமது வாய்க்கு எதை சாப்பிடப் பிடிக்கிறதோ அதை சாப்பிடலாம்.

    நாம் வழக்கமாக சாப்பிடுகிற எல்லா விதமான உணவுகளையும் சாப்பிடலாம். நாம் சரியாக சாப்பிட்டால்தான் காய்ச்சலில் இருந்து விரைவாக குணமடைய முடியும். ஆனால், நமக்குப் பிடிக்கும் என்பதற்காக குளிர்பானங்கள், துரித உணவுகள் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்ற ஆரோக்கியக் கேடான உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் இருந்தால் அதிகக் காரமான உணவுகளைத் தவிர்ப்பது முக்கியம்.

    ×