search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் கேஎன் நேரு"

    • திருச்சி பிராட்டியூர் குளம் டால்மியா சிமெண்ட் நிறுவனம் மூலம் தூர்வாரும் பணி ரூ.14 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.
    • நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எஸ்.பி.ஐ. காலனியில் ரூ.15 லட்சம் செலவில் பொதுமக்களே கட்டமைத்த புதிய இறகு பந்து விளையாட்டு மைதானத்தை அவர் திறந்து வைத்தார்.

    திருச்சி:

    திருச்சி பிராட்டியூர் குளம் டால்மியா சிமெண்ட் நிறுவனம் மூலம் தூர்வாரும் பணி ரூ.14 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.

    அதன் பின்னர் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எஸ்.பி.ஐ. காலனியில் ரூ.15 லட்சம் செலவில் பொதுமக்களே கட்டமைத்த புதிய இறகு பந்து விளையாட்டு மைதானத்தை அவர் திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி என அனைத்து தொகுதிகளிலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு வழங்கியிருக்கும் திட்டங்களை இன்று தொடங்கி வைக்க இருக்கின்றோம்.

    110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இதனை கலெக்டர் முயற்சியால் டால்மியா சிமெண்ட் நிறுவனம் மூலம் தூர்வாரப்பட்டு பொதுமக்கள் நடப்பதற்கு வசதியாக பேவர் பிளாக் பதித்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட உள்ளது.

    மணிகண்டம் சேதுராப்பட்டி ஊராட்சியில் ரூ.124 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்ட இருக்கிறோம். மொத்தம் 22 நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகிறது. நாளை மறுநாள் பட்டா வழங்க இருக்கின்றோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் நெல்லை மேயரை மாற்ற கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளார்களே என கேட்டதற்கு, ஒவ்வொரு இடத்திலும் சிறுசிறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனை பேசித்தான் தீர்க்க வேண்டும். இந்த பிரச்சனைக்கும் தீர்வு கண்டு தானே ஆக வேண்டும். அவர் தி.மு.க. மேயர் அல்லவா என பதில் அளித்தார்.

    • மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் எந்தவித தொய்வுமின்றி நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.
    • திடக்கழிவு மேலாண்மை செயலாக்கத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    சென்னை:

    நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், சென்னை நீங்கலாக அனைத்து மாநகராட்சிகளின் கமிஷனர்களுடன் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகளின் நிலை குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது, தூய்மை இந்தியா திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய கோயம்புத்தூர், திருச்சி மாநகராட்சி கமிஷனர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    மாநகராட்சி பகுதிகளில் கடந்த 20 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் பொதுமக்களை சரியாக சென்றடைந்துள்ளதா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்துவர வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் எந்தவித தொய்வுமின்றி நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.

    மேலும், புதிய திட்டங்களுக்கான கருத்துருக்களும், விரிவான திட்ட அறிக்கைகளும் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட வேண்டும். கட்டிடங்களுக்கான அனுமதி வழங்குவது, சொத்துவரி விதிப்பது போன்ற பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள், காலி மனையிடங்களை முறையாக சொத்து பதிவேட்டில் பதிவு செய்து தணிக்கைக்கு உட்படுத்திட வேண்டும்.

    அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் தினந்தோறும் குடிநீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி கமிஷனர்கள் முனைப்போடு மேற்கொள்ள வேண்டும். எதிர்வரும் கோடைகாலத்தில் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். திடக்கழிவு மேலாண்மை செயலாக்கத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்குனர் கிர்லோஷ்குமார், நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் விஷ்ணுசந்திரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய செயல் இயக்குனர் ராஜகோபால் சுன்கரா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • மையத்தில் மேற்கொள்ளப்படும் முழு உடல் பரிசோதனை நடவடிக்கைகளை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
    • பரிசோதனை மையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கிட டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    சென்னை:

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரசு பகுப்பாய்வுக் கூடம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு நிலையம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மையத்தை புதிய கட்டமைப்புடன் மேம்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டது.

    அதன்படி, கட்டிடத்தை மேம்படுத்த சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த மையம் மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனை மையமாக உருவாக்கப்பட்டது.

    புதிதாக மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனை மையம் மற்றும் டயாலிசிஸ் மையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்து வைத்தார். அப்போது, புதிய டயாலிசிஸ் எந்திரங்களின் செயல்பாட்டினை அவர் தொடங்கி வைத்தார். மேலும், மையத்தில் மேற்கொள்ளப்படும் முழு உடல் பரிசோதனை நடவடிக்கைகளை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், பரிசோதனை மையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கிட டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இந்த மையத்தில் இதுவரை 4 லட்சத்து 86 ஆயிரம் பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். முதல் தளத்தில் 17 எந்திரங்கள் கொண்டு ரத்த சுத்திகரிப்பு மையம் இயங்கி வருகிறது. இதுவரை 192 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். தற்போது கூடுதலாக 5 ரத்த சுத்திகரிப்பு எந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் எழிலன் எம்.எல்.ஏ., சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் கமிஷனர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், கவுன்சிலர் பிரேமா சுரேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
    • திருமகன் ஈவெரா தொகுதியில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தாரோ அத்தனை திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை-கோவை போன்ற பெருநகரங்களுக்கு இணையாக ஈரோடு மாநகராட்சி தரம் உயர்த்தப்படும். மாநகர பகுதிகளில் பழுதடைந்துள்ள ரோடுகள் அனைத்தும் தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக சீரமைக்கப்படும்.

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும். திருமகன் ஈவெரா இந்த தொகுதியில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தாரோ அத்தனை திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

    மகன் விட்டு சென்ற பணியை நிச்சயமாக அவருடைய தந்தை செயல்படுத்தி காட்டுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிச்சயமாக எங்கள் வேட்பாளர் நிறைய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
    • தேர்தல் பிரச்சாரத்திற்காக நிச்சயமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டுக்கு வருகை தருவார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று 2-வது நாளாக தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு, ராமச்சந்திரன் மற்றும் கணேசமூர்த்தி எம்.பி., ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறோம். பொதுக் கூட்டங்கள் நடத்துவதை விட இது சிறந்த வழியாகும். முதலமைச்சர் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி உள்ளார். அதனை கூறி வாக்கு சேகரிப்போம். வரும் 3-ந் தேதி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். நாங்கள் வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நிச்சயமாக எங்கள் வேட்பாளர் நிறைய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தேர்தல் பிரச்சாரத்திற்காக நிச்சயமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டுக்கு வருகை தருவார். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது இயல்பு.
    • கடந்த 18 மாதங்களில் எங்களின் சாதனைகளின் அடிப்படையில் நாங்கள் வாக்குகளை கோருகிறோம்.

    ஈரோடு:

    ஈரோட்டில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது இயல்பு. கடந்த 18 மாதங்களில் நாங்கள் செய்த சாதனைகளின் அடிப்படையில்தான் நாங்கள் வாக்கு கேட்கிறோம்.

    இந்த தொகுதியை காங்கிரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். அக்கட்சியின் வெற்றிக்காக பாடுபட உள்ளோம். சொத்து வரி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது குறித்த கேள்விக்கு அவர்கள் அரசை விமர்சிப்பது இயற்கையானது.

    உண்மையில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவு வரி உயர்வு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மக்களும் அதை ஏற்றுக் கொண்டனர். இப்போது கடந்த 18 மாதங்களில் எங்களின் சாதனைகளின் அடிப்படையில் நாங்கள் வாக்குகளை கோருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் 150 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இரண்டு மூன்று மாதங்களில் தொடங்கி வைக்கவுள்ளார்.
    • சென்னையில் 372 இடங்களில் சுமார் 3,732 இருக்கைகள் கொண்ட கழிவறைகள் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை வியாசர்பாடி, இளங்கோ நகர், டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் துணை சேவைகளுடன் நிறுவப்பட்டுள்ள டயாலிசிஸ் மையத்தினை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்.

    விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    சென்னையில் நாளொன்றுக்கு 1000 எம்.எல்.டி. அளவிற்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த 30 ஆண்டுகளுக்கு சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் தொலைநோக்குப் பார்வையோடு 150 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இரண்டு மூன்று மாதங்களில் தொடங்கி வைக்கவுள்ளார்கள். மேலும், 400 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரைந்து தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த காலங்களில் பாசன பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஏரிகள் கண்டறியப்பட்டு அவற்றைத் தூர்வாரி, ஆழப்படுத்தி மழைநீரை சேகரித்து குடிநீர் ஆதாரமாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள். மேலும், பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவச் சேவைகளை வழங்க தற்போது கூட சுமார் 736 நலவாழ்வு மையங்களை அமைக்க உத்தரவிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    சென்னையில் 372 இடங்களில் சுமார் 3,732 இருக்கைகள் கொண்ட கழிவறைகள் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் சாலை வசதி, மருத்துவச் சேவைகள், மழைநீர் வடிகால் பணிகள், தெரு விளக்குகள், குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் பணிகள் போன்ற அனைத்து விதமான அடிப்படைத் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து பணியாற்றி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பொதுமக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், குப்பைத் தொட்டிகளின் வடிவம் மற்றும் தாங்கும் திறன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
    • பச்சை மற்றும் நீல நிறத்திலான 20 ஆயிரம் புதிய குப்பைத் தொட்டிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு மண்டலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மண்டலம் 1 முதல் 15 வரை கொசு ஒழிப்புப் பணியை தீவிரப்படுத்த மழைநீர் வடிகால் கால்வாய்களில் கொசுப் புழு நாசினி தெளிப்பதற்காக ஒரு கோட்டத்திற்கு ஒரு கைத்தெளிப்பான் வீதம் 200 கோட்டங்களிலும் மூலதன நிதியின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பில் 200 புதிய கைத்தெளிப்பான்களும், நீர்வழித்தடங்களில் கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ள பெருநிறுவன சமுக பங்களிப்பு நிதியின் கீழ் தலா ரூ.13.5 லட்சம் என மொத்தம் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் 6 டிரோன் எந்திரங்களும் வழங்கப்பட்டன.

    அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியாளர்களிடம் வழங்கினார்கள்.

    மக்கும், மக்காத குப்பைகளைப் பெறுவதற்கான புதிய குப்பைத் தொட்டிகள், பயன்பாட்டில் உள்ள குப்பைத் தொட்டிகளில் பொதுமக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், குப்பைத் தொட்டிகளின் வடிவம் மற்றும் தாங்கும் திறன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

    அவ்வாறு மாற்றி அமைக்கப்பட்ட பச்சை மற்றும் நீல நிறத்திலான 20 ஆயிரம் புதிய குப்பைத் தொட்டிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு மண்டலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர்கள் தனசேகரன், இளைய அருணா, டாக்டர் கோ.சாந்த குமாரி, சர்ப ஜெயாதாஸ் நரேந்திரன், நியமனக்குழு உறுப்பினர் வேலு, துணை ஆணையாளர்கள் பிரசாந்த், ஷேக் அப்துல் ரஹ்மான், சிவகுரு பிரபாகரன், ராயபுரம் மண்டலக்குழுத் தலைவர் ஶ்ரீராமுலு, மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், உர்பேசர் சுமீத் நிறுவன அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கழிவுநீரில் ஏற்படும் கசடுகழிவுகளை தனியாருடன் இணைந்து பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
    • மதுரை வடக்கு தொகுதி தி.மு.க. உறுப்பினர் தளபதி கோரிக்கை வைத்தார்.

    சென்னை:

    சட்டப்பேரவையில் அ.தி.மு.க. உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் கூறுைகயில், 'திருமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிதி நிலைக்கு ஏற்ப விரைந்து செயல்படுத்தப்படும் என கூறினார்.

    மேலும், 21 கிலோமீட்டர் தொலைவிற்கு பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், 40 கிலோ வாட் திறன் கொண்ட கசடுக்கழிவு அப்புறப்படுத்த பணிகள் நடந்து வருகிறது என்றும், கழிவுநீரில் ஏற்படும் கசடுகழிவுகளை தனியாருடன் இணைந்து பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    அதேபோல், மதுரையை போன்று அருகில் இருக்கும் நகரங்களில் மாநகராட்சி போன்று வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர், மதுரைக்கு அருகில் உள்ள நகரங்களை மேம்படுத்தினால் மதுரையில் இட நெருக்கடி குறையும் என்பதால் இதனை உடனடியாக செயல்படுத்த முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதி நிலைமைக்கு ஏற்ப விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

    அதேபோல், மதுரையில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் புதிய பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என மதுரை வடக்கு தொகுதி தி.மு.க. உறுப்பினர் தளபதி கோரிக்கை வைத்தார்.

    அதற்கு அமைச்சர் கே.என்.நேரு, 21 மாநகராட்சிகளில் 19 மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஒசூர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    அதேபோல், மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் பாதாள சாக்கடை திட்டத்தை அரசு செயல் படுத்தப்பட உள்ளதாகவும், மதுரையில் ரூ.500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

    • திருச்செந்தூரில் நடைபெற்று வரும் பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளில் 4,500 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதால் அதில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
    • திருச்செந்தூரில் நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறை விரைவில் சரிசெய்யப்படும்.

    திருச்செந்தூர்:

    நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திருச்செந்தூர் வந்தார். நகராட்சி நிர்வாகம் சார்பில் திருச்செந்தூரில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை அவர் பார்வையிட்டார். திருச்செந்தூர் தோப்பூரில் உள்ள பாதாளச்சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை பர்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் பஸ்நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் மார்க்கெட் கட்டிடங்களையும் அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்செந்தூரில் நடைபெற்று வரும் பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளில் 4,500 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதால் அதில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

    விரைவில் அது சரி செய்யப்பட்டு 2 மாதங்களில் நிறைவு பெறும். திருச்செந்தூரில் நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறை விரைவில் சரிசெய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    அப்போது அவருடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், நகராட்சி ஆணையாளர் வேலவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • சேலம் கோட்டை மைதானத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து வருகிறார்.

    சேலம்:

    சேலம் கோட்டை மைதானத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. சேலம் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு பேசியதாவது:-

    மு.க.ஸ்டாலினை கட்சியின் செயல் தலைவராக, முதல்-அமைச்சராக முன்மொழிந்த வர் பேராசிரியர் அன்பழகன். மறைந்த ஜெயலலிதாவிற்காக அ.தி.மு.க.வினர் ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்தாத நிலையில், பேராசிரியருக்காக 100 இடங்களில் நூற்றாண்டு பொதுக் கூட்டங்களை நடத்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.

    அனைவரையும் சமமாக மதிக்கக்கூடிய பேராசிரியர் அன்பழகன் நமக்கு முன்னோடியாக விளங்குகிறார்.

    தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து வருகிறார். இது வாரிசு அரசியல் அல்ல. கலைஞர் கருணாநிதியின் குடும்பத்திற்கும் தி.மு.க.வினர் எப்போதும் நன்றி விசுவாசமாக இருப்போம். தி.மு.க.,வைக் கட்டிக்காத்து எங்களை உருவாக்கிய தலைவர் குடும்பத்துக்கும் தலைவருக்கும் என்றும் நேர்மையோடு அவர்களோடு இருந்து பாடுபடுவோம்.

    அதன் அடிப்படையில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி மட்டுமல்ல, அவரது மகன் வந்தாலும் ஆதரிப்போம். வாழ்க என்று சொல்வோம். நன்றியோடு இருப்பவர்கள் தி.மு.க.வினர். எங்களை வாரிசு அரசியல் என்று சொல்லி மிரட்ட முடியாது.

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் அ.தி.மு.க கோட்டை என்று பேசி வருகிறார். சேலம் இனி எப்போதும் தளபதியின் கோட்டையாக இருக்கும். பல வழக்குகள் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்களை முதல்-அமைச்சர் கைது செய்யாமல் உள்ளார். இதேபோன்று தொடர்ந்து அவதூறாக பேசி கைது செய்ய வேண்டிய நிலைக்கு கொண்டு வந்து விடாதீர்கள்.

    தி.மு.க ஆட்சியில் முதல்-அமைச்சர் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார். விரைவில் சேலத்திற்கு வந்து பல திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். அனைத்து சமுதாய மக்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் இயக்கம் தி.மு.க. நிதி சுமையை ஏற்றி வைத்த அ.தி.மு.க.விற்கு சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு பற்றி பேச தகுதியில்லை.

    கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் 537 திட்டங்களை அறிவித்து 143 மட்டும் அரசாணை வெளியிட்டனர். தி.மு.க கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 28 திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சேலத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றுவோம். இதற்காக தீவிரமாக பணியாற்றுவோம் என்று பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் சபதம் ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழகத்தில், 7,000 அறுவை சிகிச்சைகள், 2,500 வரை பிரசவ அறுவை சிகிச்சை என 9,000 முதல், 9,500 அறுவை சிகிச்சைகள் வரை நடைபெறுகின்றன.
    • திருச்சி அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவுக்கு அவசர சிகிச்சை படுக்கைள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருச்சி:

    திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் உணர்வு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

    மேலும், 32 படுக்கைகளுடன் கூடிய இ.சி.ஆர்.பி. தீவிர சிகிச்சை பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சலவை எந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

    அறுவை சிகிச்சைகளை டிஜிட்டல் முறையில் சரி பார்க்கும் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் தொடங்கி வைத்தனர்.

    விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    அமைச்சர் மா.சுப்ரமணியன், காலையில் ஜாக்கிங் செல்லும் போது, கல்லணை அருகே உத்தமர் சீலி கிராமத்தில் வீடு, வீடாக சென்று 'மக்களை தேடி மருத்துவம்' வந்து சேர்ந்ததா? என்று ஆய்வு செய்திருக்கிறார். தனது துறையில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். திருச்சிக்கு இரண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொடுத்துள்ளார். திருச்சிக்கு அரசு பல் மருத்துவமனை ஒன்று வேண்டும். அதை, நிதி நிழல் அறிக்கையில் மட்டும் நீங்கள் (அமைச்சர்) சேருங்கள். நிதியை நான் முதல்வரிடம் கேட்டுப்பெற்றுக்கொள்கிறேன் என்றார்.

    இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

    சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்கு காரணம், இரு மருத்துவர்கள் என்று அறிக்கை வந்தவுடன் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 540 அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு கையேடு வழங்கப்பட்டுள்ளது. அறுவை சிசிச்சை அறை முன்பு, 'செக் லிஸ்ட் போர்டுகளை' வைத்துள்ளோம். இதன் மூலம் மருத்துவத் தவறுகள் குறையும்.

    விரைவில், 1,649 அறுவை சிகிச்சை அரங்கு முன்பு செக் லிஸ்ட் போர்டு வைக்கப்படும். இதுபோன்ற ஏற்பாடு இந்தியாவில் இதுவே முதல்முறை. தமிழகத்தில், 7,000 அறுவை சிகிச்சைகள், 2,500 வரை பிரசவ அறுவை சிகிச்சை என 9,000 முதல், 9,500 அறுவை சிகிச்சைகள் வரை நடைபெறுகின்றன. திருச்சி அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவுக்கு அவசர சிகிச்சை படுக்கைள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் தற்போது ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான தொடு உணர்வு சிகிச்சை பூங்கா தொடங்கிவைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் காது கேட்கும் திறனற்ற 88 குழந்தைகள் பயன்பெறுவார்கள்.

    திருச்சியில் அரசு பல் மருத்துவமனை நிதி நிழல் அறிக்கையில் முதல்வரின் ஆலோசனை பெற்று அறிவிக்கப்படும். அடுத்த ஆண்டு திருச்சியில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியும் முதல்வரின் ஆலோசனை பெற்று அறிவிக்கப்படும்.

    தமிழகத்தில் புதிதாக 708 நகர்நல வாழ்வு மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் நமது அமைச்சர் கே.என்.நேருவின் முயற்சியால் திருச்சியில் மட்டும் 36 மையங்கள் அமைய இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார். 

    ×