search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை மாநகராட்சி"

    • எங்கள் பகுதியில் சாலைகள் அமைக்கப்படாததால் பல்வேறு இடங்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
    • அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் இந்திரா. இவர் இன்று தனது கணவரும், தி.மு.க. நிர்வாகியுமான சுண்ணாம்பு மணி மற்றும் அப்பகுதி மக்களுடன் வந்து மாநகராட்சி கமிஷனரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

    பாளை மனக்காவலன்பிள்ளை நகர் 7-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 5 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கான பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் கடந்த பல ஆண்டுகளாக சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    இதுதொடர்பாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எங்கள் பகுதியில் சாலைகள் அமைக்கப்படாததால் பல்வேறு இடங்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே கடந்த ஆண்டு சாலை அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது. ஆனால் அதற்கான பணிகள் தொடங்கவில்லை. பொதுமக்களின் தொடர் கோரிக்கை காரணமாக கடந்த வாரம் சாலை அமைப்பதற்காக மீண்டும் பூமி பூஜை நடைபெற்றது. ஆனால் ஒரு வாரம் ஆகியும் பணிகள் தொடங்கவில்லை. எனவே உடனடியாக எங்கள் பகுதியில் சாலை அமைக்க கோரி நேற்று எங்கள் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டோம். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, தேர்தல் நேரம் என்பதால் சாலை அமைக்கும் பணி பின்னர் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

    அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்களிடம் விளக்கம் கூற முடியவில்லை. எனவே எனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மனு கொடுக்க வந்த கவுன்சிலர் இந்திரா மற்றும் அவரது கணவர் சுண்ணாம்பு மணி ஆகியோரை கமிஷனரை சந்திக்க காத்திருக்குமாறு கூறினர். உடனே அவர்கள் இருவரும் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதன்பிறகு கமிஷனரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.

    • ஆளும் கட்சி உறுப்பினர்களால் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறினால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என கட்சி தலைமை கருதியது.
    • சுமார் 25-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் குற்றாலம், கன்னியாகுமரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க மற்றும் கூட்டணி கவுன்சிலர்கள் 51 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேரும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். மேயராக சரவணன் இருந்து வருகிறார்.

    அவர் மேயராக பொறுப்பேற்றது முதல் அவருக்கும், கவுன்சிலர்கள் சிலருக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் போக்கு இருந்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் பெரும்பாலானோர் திருச்சி சென்று அமைச்சர் கே.என். நேருவை நேரில் சந்தித்து தங்களது புகார்களை எடுத்துக்கூறினர்.

    தொடர்ந்து வார்டுகளில் பணி நடைபெறவில்லை. மேயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு பல்வேறு முன்னெடுப்புகளை கவுன்சிலர்கள் மேற்கொண்டு வந்தனர்.

    இதனால் மாமன்ற கூட்டங்களையும் அவர்கள் புறக்கணித்து வந்ததால் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    ஆனால் அதன் பின்னரும் மாமன்ற கூட்டங்கள் நடைபெற்ற போது அதில் முறையாக கவுன்சிலர்கள் பங்கேற்காமல் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். ஒரு கட்டத்தில் வார்டுகளில் பணி நடைபெறாததை கண்டித்து மாநகராட்சி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் 2 கவுன்சிலர்கள் மற்றும் ஒரு பெண் கவுன்சிலரின் கணவர் ஆகியோரை கட்சியில் இருந்து 'சஸ்பெண்டு' செய்து தி.மு.க. தலைமை உத்தரவிட்டது.

    இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு சுமார் 38 கவுன்சிலர்கள் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனருக்கு கையெழுத்து போட்டு மனு அளித்தனர்.


    அந்த மனுவில் உள்ள கையெழுத்துக்கள் உண்மையானது தானா என்பதை அறிய ஒவ்வொரு கவுன்சிலரையும் நேரில் அழைத்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஜனவரி 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து மாமன்றத்தில் விவாதிக்கப்படும் எனவும் அதில் கவுன்சிலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் கமிஷனர் அறிவித்தார்.

    இந்நிலையில், ஆளும் கட்சி உறுப்பினர்களால் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறினால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என கட்சி தலைமை கருதியது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள், மண்டல சேர்மன்கள், மாவட்ட செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறும் பட்சத்தில் அது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடும் என்பதால் கவுன்சிலர்கள் யாரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க கூடாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கவுன்சிலர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

    எனவே தலைமை உத்தரவை ஏற்று நாளை (12-ந்தேதி) நடைபெறும் மாமன்ற கூட்டத்தை புறக்கணிக்க கவுன்சிலர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் குற்றாலம், கன்னியாகுமரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர்.

    இன்றும் சில கவுன்சிலர்கள் சுற்றுலா செல்ல உள்ளதாகவும், எனவே நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் பங்கெடுக்க மாட்டார்கள் எனவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மாநகர பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
    • ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான செலவு தொகை, ஆக்கிரமிப்பு செய்ததற்கான அபராத கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த நேரிடும்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் முக்கிய சாலைகளான எஸ்.என். ஹை ரோடு, நயினார்குளம் சாலை, டவுன் ரதவீதிகள், வண்ணார்பேட்டை பைபாஸ் சாலைகள், முருகன் குறிச்சி சாலை, திருவனந்தபுரம் சாலைகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

    மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் பெருக்கத்தின் காரணமாக சாலைகளில் செல்வதற்கு வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மாநகர பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்து வருகிறது.

    இதற்கு சாலைகளின் இருபுறமும் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைதான் காரணம் என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. எனவே சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், தள்ளுவண்டி கடைகள், விளம்பர போர்டுகள் உள்ளிட்டவற்றை அகற்றி நடைபாதைகளில் நடந்து செல்வதற்கும், சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கும் வழிவகை செய்ய வேண்டும் என மாநகராட்சி கமிஷனருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாநகர் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறாக சாலையையும், நடைபாதையும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள், மேற்கூரைகள் ஆகியவற்றை 24 மணி நேரத்திற்குள் தாங்களாகவே முன்வந்து அகற்றிட வேண்டும். தவறும் பட்சத்தில் மாநகராட்சி மூலம் அகற்றப்படுவதோடு ஆக்கிரமிப்பு பொருட்கள் திரும்ப வழங்கப்படமாட்டாது.

    ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான செலவு தொகை, ஆக்கிரமிப்பு செய்ததற்கான அபராத கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த நேரிடும். மேலும் கட்டுமானம் மற்றும் கட்டிட பராமரிப்பு பணி செய்வோர் கட்டிட இடிபாடுகளையோ, கட்டுமான பொருட்களையோ பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாகவோ, கழிவுநீர் செல்லும் கால்வாய்களிலோ கொட்டி வைக்க கூடாது. அவ்வாறு கொட்டினால் அபராதம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள், கடை உரிமையாளர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தாமிரபரணி கரையோரம் வசித்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
    • நெல்லையில் இருந்து நாகர்கோவில், சாத்தான்குளம், ராதாபுரம், திசையன்விளை, கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட தொடங்கின.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் சுமார் 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை மாநகராட்சி பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த அதி கனமழையின் காரணமாக மாநகர பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. கிட்டத்தட்ட ஒரு தீவு போல் மாநகர பகுதி முழுவதும் காட்சியளித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கி நேற்று மதியம் வரையிலும் பெய்த மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடியது. ஒருகட்டத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கும் வெள்ள நீர் புகுந்தது. மாநகர பகுதியில் உள்ள சுலோச்சன முதலியார் பாலம் உள்ளிட்டவற்றை தொட்டபடி வெள்ளம் சென்றன. 

    தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் சற்று வெள்ளம் குறைந்து செல்வதை காணலாம்.

    தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் சற்று வெள்ளம் குறைந்து செல்வதை காணலாம்.

    இதன்காரணமாக தாமிரபரணி கரையோரம் வசித்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த வெள்ளம் காரணமாக மாநகர பகுதிக்குள் முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தென்காசி, நாகர்கோவில், மதுரை, பாபநாசம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இருந்தும் மாநகர பகுதிக்குள் வரும் சாலைகள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று மதியத்திற்கு பிறகு மழை குறைந்ததால் வெள்ளம் மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. இன்று காலையில் மாநகரில் பிரதான நெடுஞ்சாலைகளில் வெள்ளம் வடிந்தது.

    நாகர்கோவிலில் இருந்து வரும்போது டக்கரம்மாள்புரம், கே.டி.சி.நகர் பகுதி, மதுரையில் இருந்து வரும்போது தாழையூத்து பகுதி, தச்சநல்லூர் வழியாக சங்கரன்கோவில் சாலை, தென்காசியில் இருந்து வரும்போது பழையபேட்டை, கண்டியப்பேரி, வழுக்கோடை, தொண்டர் சன்னதி, ஆர்ச், ஸ்ரீபுரம் சாலை, சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், வண்ணார்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலைகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் அனைத்தும் முற்றிலுமாக வடிந்தது.

    அதேநேரத்தில் சந்திப்பு பஸ் நிலையத்தில் நேற்று சுமார் 7 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி கிடந்தது. மழை வெள்ளம் செல்வதற்கு வழியில்லாமல் இருந்த காரணத்தினால் ரெயில் நிலையம் செல்லும் சாலை, மதுரை சாலை, ராஜாபில்டிங் சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் மூழ்கின. சந்திப்பு பஸ் நிலையத்தில் முதல் தளத்தை தொடும் வகையில் மழை வெள்ளம் தேங்கி கிடந்தது. இந்த வெள்ளமானது இன்று அதிகாலை 5 மணிக்கு 4 உயரத்திற்கு குறைந்தது. தொடர்ந்து காலை 9.30 மணி அளவில் முற்றிலுமாக தணிந்தது.

    சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடைமேடைகள் முற்றிலுமாக மூழ்கிவிட்டதால் இன்று 2-வது நாளாக ரெயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. சந்திப்பு பகுதியை ஒட்டி அமைந்துள்ள சிந்துபூந்துறை, மீனாட்சிபுரம், சி.என்.கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று படகு மூலமாக பொதுமக்கள் மீட்கப்பட்டனர். சில இடங்களில் மாடிகளில் இருந்த மக்களுக்கு படகு மூலம் உணவு வழங்கப்பட்ட நிலையில் இன்று அந்த பகுதிகளிலும் முற்றிலுமாக வெள்ளம் வடிந்துவிட்டது. ஆனால் டவுனை பொறுத்தவரை வெள்ளம் வடியவில்லை. டவுனில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட குறுகலான தெருக்களில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்த நிலையில் அவை வெளியேறாமல் தொடர்ந்து தேங்கி கிடக்கிறது. டவுன் காட்சி மண்டபம் பகுதி, அங்கிருந்து சந்தி பிள்ளையார் கோவில் செல்லும் சாலைகளில் இடுப்பு அளவுக்கு மழைநீர் தேங்கி கிடக்கிறது.

    பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் அதாவது பாளை பஸ் நிலையம், வ.உ.சி. மைதானம், ஆயுதப்படை சாலை, ஐகிரவுண்டு சாலை, அன்பு நகர், பெருமாள்புரம், பொதிகை நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம் சாலை, ரக்மத் நகர் 60 அடி சாலை, தியாகராஜநகர், மாருதி நகர், டி.வி.எஸ் நகர், சீனிவாச நகர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நேற்று தேங்கிய வெள்ளம் முற்றிலுமாக வடிந்ததை பார்க்க முடிந்தது.

    இன்று வெள்ளம் வடிந்த நிலையில் 2 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் போக்குவரத்து மெல்ல மெல்ல ஓட தொடங்கி உள்ளது. மாநகர பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் மற்றும் அரசு பஸ்கள் ஒரு சில ஓட தொடங்கியது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடையம் செல்லும் பஸ்கள் சேரன்மகாதேவி, சங்கன்திரடு, முக்கூடல், பொட்டல்புதூர் வழியாக கடையம் செல்லும் வகையில் இயக்கப்பட்டது. பாபநாசம் செல்லும் பஸ்கள் வழக்கமாக செல்லும் வழித்தடமான சேரன்மகாதேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் வழியாக செல்கின்றன.

    நெல்லையில் இருந்து நாகர்கோவில், சாத்தான்குளம், ராதாபுரம், திசையன்விளை, கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட தொடங்கின. மேலும் மதுரை, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் வெள்ளம் அதிக அளவு செல்வதாலும், அந்த பாலம் சற்று பலமிழந்து காணப்படுவதாலும் இரு புறங்களிலும் பேரிகார்டுகள் வைத்து சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் பஸ்கள் 4 வழிச்சாலை வழியாகவோ அல்லது சந்திப்பு, டவுன் ஆர்ச், நயினார்குளம் மார்க்கெட் வழியாக தச்சநல்லூர் சென்று அங்கிருந்து தாழையூத்து வழியாக நான்கு வழிச்சாலையில் செல்கிறது. தென்காசிக்கு இன்னும் பஸ் சேவை தொடங்கப்படவில்லை.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தின் எதிரே உள்ள எஸ்.டி.சி கல்லூரி சாலை, பஸ் நிலையம் பின்புறம் உள்ள சேவியர் காலனியில் நீர் முற்றிலுமாக வடிந்துள்ளது. வடக்குப் புறவழிச்சாலை வாகனங்கள் செல்லும் வகையில் ஏதுவாக உள்ளன. ஆனால் இந்த சாலை வழியாக சங்கரன்கோவில் பஸ்கள் இவ்வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. சந்திப்பு செல்லும் பஸ்கள் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. உழவர் சந்தைகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. ஒரு சில பகுதிகளில் மட்டும் மின்சாரம் இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை மாநகர் மற்றும் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. குறிப்பாக ஒரு ஆண்டு முழுவதும் காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழை மட்டுமே பெய்யும் நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 93 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

    தூத்துக்குடி மாநகரில் வழக்கமான மழையின்போது பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலையில், கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் மாநகர பகுதி முழுவதும் தீவாக மாறி உள்ளது. வீடுகளில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு படகு மூலமாகவும், ஹெலிகாப்டர் மூலமாகவும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு மழைநீர் வடிந்து இயல்பு நிலை திரும்ப ஒரு வாரம் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.

    மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் தாமிரபரணி ஆற்றில் வந்த வெள்ளத்தின் காரணமாக தீவுபோல் மாறியது. ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், கருங்குளம், ஆழ்வார்தோப்பு, முத்தாலங்குறிச்சி, வல்லநாடு அருகே வசவப்பபுரம், அகரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தது. அந்த பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மின்சார இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. மேலும் நெட்வொர்க் மற்றும் இணைய சேவை பாதிப்பின் காரணமாக செல்போனில் தொடர்பு கொள்ள முடியாத நிலை நிலவி வருகிறது.

    • அனைத்து தூய்மை தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்து வந்தனர்.
    • தொழிற்சங்க தலைவர்களும், சுய உதவிக்குழு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் கடந்த 20 ஆண்டு காலமாக 47 சுய உதவி குழுக்கள் மூலமாக 753 தூய்மை தொழிலாளர்கள் பணி செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கடந்த 2 மாத காலமாக அனைத்து சுய உதவிக்குழு தூய்மைத் தொழிலாளர்களையும் தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைப்பதாகவும், தொழிலாளர்களுக்கு சுய உதவிக்குழு மூலம் பணி வழங்க மாட்டோம் என்றும் அறிவித்தது. மாநகராட்சியின் இந்த அறிவிப்பை எதிர்த்து கடந்த அக்டோபர் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை அனைத்து தூய்மை தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்து வந்தனர்.

    இதன் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொழிலாளர் துறை துணை ஆணையாளர் அலுவலகத்தில் டவுன் தாசில்தார் விஜயலெட்சுமி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, தொழிலாளர் துறை துணை ஆணையாளர் ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் தொழிற்சங்க தலைவர்களும், சுய உதவிக்குழு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையில் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு சுய உதவிக்குழு மூலம் வேலை வழங்கப்படும், ஒப்பந்த பத்திரத்தில் யாரிடத்திலும் கையெழுத்து வாங்கப்படமாட்டாது என்றும், இதன் அடிப்படையில் அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறத்தத்தை கைவிட்டு பணிக்கு செல்வது என்றும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் தற்போது மாநகராட்சியில் அனைத்து சுய உதவிக்குழு தொழிலாளர்களும் மீண்டும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் பணி செய்ய முடியும். அப்போது தான் வேலை வழங்க முடியும் என்று கூறி இன்று முதல் அனைத்து சுய உதவிக்குழு தூய்மை பணியாளர்களுக்கும் வேலை வழங்க மாநகராட்சி நிர்வாகம் மறுத்துவிட்டதாக கூறி இன்று தூய்மை பணியாளர்கள் அனைவரும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அவர்கள் நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யூ. செயலாளர் முருகன், மோகன் ஆகியோர் தலைமையில் வேலை வழங்க கோரி இன்று காலை முதல் மாநகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்துள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • திருச்சி பிராட்டியூர் குளம் டால்மியா சிமெண்ட் நிறுவனம் மூலம் தூர்வாரும் பணி ரூ.14 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.
    • நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எஸ்.பி.ஐ. காலனியில் ரூ.15 லட்சம் செலவில் பொதுமக்களே கட்டமைத்த புதிய இறகு பந்து விளையாட்டு மைதானத்தை அவர் திறந்து வைத்தார்.

    திருச்சி:

    திருச்சி பிராட்டியூர் குளம் டால்மியா சிமெண்ட் நிறுவனம் மூலம் தூர்வாரும் பணி ரூ.14 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.

    அதன் பின்னர் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எஸ்.பி.ஐ. காலனியில் ரூ.15 லட்சம் செலவில் பொதுமக்களே கட்டமைத்த புதிய இறகு பந்து விளையாட்டு மைதானத்தை அவர் திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி என அனைத்து தொகுதிகளிலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு வழங்கியிருக்கும் திட்டங்களை இன்று தொடங்கி வைக்க இருக்கின்றோம்.

    110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இதனை கலெக்டர் முயற்சியால் டால்மியா சிமெண்ட் நிறுவனம் மூலம் தூர்வாரப்பட்டு பொதுமக்கள் நடப்பதற்கு வசதியாக பேவர் பிளாக் பதித்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட உள்ளது.

    மணிகண்டம் சேதுராப்பட்டி ஊராட்சியில் ரூ.124 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்ட இருக்கிறோம். மொத்தம் 22 நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகிறது. நாளை மறுநாள் பட்டா வழங்க இருக்கின்றோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் நெல்லை மேயரை மாற்ற கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளார்களே என கேட்டதற்கு, ஒவ்வொரு இடத்திலும் சிறுசிறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனை பேசித்தான் தீர்க்க வேண்டும். இந்த பிரச்சனைக்கும் தீர்வு கண்டு தானே ஆக வேண்டும். அவர் தி.மு.க. மேயர் அல்லவா என பதில் அளித்தார்.

    ×