search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமாவாசை"

    • காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து விடுவது நல்லது.
    • சூரியன் மறைந்த பிறகு தர்ப்பணம் செய்யக்கூடாது.

    தர்ப்பணம் செய்ய வேண்டிய நாள் அன்று அதிகாலையில் எழுந்துவிட வேண்டும். குளித்து, சுத்தமான ஆடை அணிந்து மூதாதையர்களை நினைத்துக்கொண்டே தர்ப்பணம் செய்ய வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து விடுவது நல்லது. முடியாதவர்கள் காலையில் சீக்கிரம் தர்ப்பணத்தை முடித்து விடவேண்டும். ஏனெனில் நாம் கொடுக்கும் எள் கலந்த நீரை பித்ருக்கள் ஏற்றுக்கொள்ளும் நேரம் என்பது மிக, மிக புனிதமானது. எனவே நாம் அதில் கவனமாக இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் சூரியன் மறைந்த பிறகு தர்ப்பணம் செய்யக்கூடாது.

    நாம் தர்ப்பணம் செய்ததும் அதை பெற்றுக் கொள்ளும் ஸ்வதா தேவி கண் இமைக்கும் நேரத்துக்குள் அதை நம் பித்ருக்களிடம் ஒப்படைத்து விடுவாள். எனவே தர்ப்பணம் செய்யும் போது`1ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி'' என்று சொல்ல மறந்து விடக்கூடாது.

    பொதுவாக நம் வீட்டு பெரியவர்கள் இயற்கையாக மரணம் அடையும் போது, இறந்த நேரம், திதி ஆகியவற்றை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் தர்ப்பணம், சிதார்த்தம் உள்ளிட்டவைகளை செய்தல் வேண்டும்.

    பெரும்பாலானவர்கள் இந்த திதி தினத்தை முறையாக செய்வதில்லை. கணிசமானவர்களுக்கு அந்த திதி என்றாலே என்ன என்ற விவரம் கூட தெரியாமல் உள்ளது. ஆதிகாலத்தில் தமிழர்கள் "நீத்தார் வழிபாடு'' நடத்தி பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய எல்லா கடமைகளையும் செய்தனர்.

    அதை செஞ்சோற்று கடனாக நினைத்தனர். இப்போதும் பித்ருகாரியம் செய்கிறார்கள். ஆனால் அதை முறையாக, பித்ருக்கள் திருப்திபடும்படி செய்வதில்லை. அதனால்தான் குடும்பங்களில் மங்கள காரியங்கள் நடப்பது தடைபடுகிறது அல்லது தாமதமாகிறது.

    புத்திர சுகம் கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே நம் வம்சம் விளங்க வேண்டுமானால் நம்மை வளர்த்து ஆளாக்கிய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்பட வேண்டும். அமாவாசை, மாதப்பிறப்பு, கிரகண நாட்களில் அவசியம் தர்ப்பணம் செய்தல் வேண்டும்.

    முடியாதவர்கள் மகாளயபட்சத்தின் 15 நாட்களும் தர்ப்பண பூஜைகளை கட்டாயமாக செய்ய வேண்டும். உங்கள் முன்னோர்கள் எல்லாருமே பித்ருலோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அவர்கள் செய்த கர்ம வினைகள் தொடரக்கூடும்.

    அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம்தான் தாகம் தணிப்பதாக இருக்கும். தாத்தாவுக்கு அப்பா எல்லாம் மறுபிறவி எடுத்திருப்பார். எனவே அவருக்கு ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். உங்கள் முன்னோர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும் கூட நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம் அவர்களுக்கு பெரும்பலனை கொடுக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

    எனவே நீங்கள் முன்னோர் வழிபாட்டை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்தல் வேண்டும். நீங்கள் வழிபாடு செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் பித்ருலோகத்தில் இருந்து மகாளய பட்சத்தின் 15 நாட்களும் உங்களோடு இருக்க உங்கள் முன்னோர்கள், உங்கள் வீடு தேடி வருகிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

    • மாவட்ட நிர்வாகம் மற்றும் ராமேசுவரம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
    • கோவில் சன்னதிகள் மற்றும் 22 தீர்த்தங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    ராமேசுவரம்:

    இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் முக்கிய ஸ்தலமாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் விளங்கி வருகிறது. காசிக்கு நிகராக கருதப்படும் ராமேசுவரத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள்.

    இங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது. குறிப்பாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.

    அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஆடி, தை மாத அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை நாட்களில் ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.

    அதன்படி நாளை மகளாய அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிக அளவில் குவிவார்கள். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் ராமேசுவரம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    குறிப்பாக அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள் என்பதால் அங்கு 24 மணி நேரமும் தூய்மை பணிகள் மேற்கொள்ள 100-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடற்கரை, கோவில் பகுதிகளில் கழிப்பறை, குளியலறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    கோவிலை சுற்றியுள்ள 4 ரத வீதிகளிலும் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    கோவில் சன்னதிகள் மற்றும் 22 தீர்த்தங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. அக்னி தீர்த்த கடற்கரை, ராமேசுவரம் கோவில், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 650-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதலாக 100 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி தலைமையிலான போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை, விருதுநகர், சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இன்று முதல் 15-ந்தேதி வரை பல்வேறு ஊர்களில் இருந்து ராமேசுவரத்திற்கும், பக்தர்கள் ஊர் திரும்ப ஏதுவாக பல நகரங்களுக்கும் 270-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

    இதேபோல் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சேதுகரை, தேவிபட்டினம், மூக்கையூர், மாரியூர் ஆகிய பகுதிகளுக்கும் தலா 15 சிறப்பு அரசு பஸ்கள் இயக்ககப்பட உள்ளது.

    ரெயில் மூலம் வரும் பக்தர்கள் மண்டபம் வந்து அங்கிருந்து பஸ், கார், ஆட்டோக்கள் மூலம் ராமேசுவரத்திற்கு வருவார்கள். மண்டபத்தில் இருந்தும் கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    • கன்னியாகுமரியில் இன்று அமாவாசையையொட்டி இயற்கை மாற்றம்
    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து சேவை 3 மணி நேரம் பாதிப்பு

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிகடலில் சுனாமிக்கு பிறகுஅடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல்கொந்தளிப் பு, ராட்சதஅலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன.

    குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    இந்த நிலையில்அமா வாசையை யொட்டிகடந்த 15-ந்தேதி முதல் காலையி ல்மட்டும் கன்னியா குமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள் வாங்கி காணப்படு கிறது. இதனால் அன்று  முதல் இன்று வரை காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்ட பத்துக்கு தொடங்க வேண்டிய படகுபோக்குவரத்து தொடங்க வில்லை.11மணிக்கு கடல் சகஜ நிலை க்கு திரும்பிய பிறகு 3 மணி நேரம் தாமதமாக காலை 11மணிக்கு தான் படகு போக்குவரத்து தொடங்குகிறது.

    அதேபோல இன்றும் 4-வது நாளாக காலையில் கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.

    இதனால்கன்னியா குமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு 3மணி நேரம் தாமதமாக காலை 11மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

    திருவள்ளுவர் சிலைக்கு ம் விவேகானந்தர் மண்ட பத்துக்கு இடையே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர்சிலைக்கு படகு போக்குவரத்து நடை பெறவில்லை.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவ த்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல்சீற்றமா க காணப்பட்டது.இதனால் இந்தகடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல்15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நட த்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
    • ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

    இந்த நிலையில், இன்று சர்வ அமாவாசையை முன்னிட்டு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்துக்கு கார், பஸ், வேன், ரெயில்கள் மூலம் குவிந்தனர்.

    அவர்கள் அதிகாலையில் இருந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    பின்னர் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்ததால் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மைப்பணி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்திருந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்குள் வரும் பக்தர்கள் இடையூறு இன்றி நீராடுவது, தரிசனம் செய்வது உள்ளிட்ட வசதிகளை செய்திருந்தனர். 

    • மூலவர் வீரராகவரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் வழிபட்டனர்.
    • ஆடி மாத தொடக்கமான கடந்த 17-ந்தேதி அன்றே அமாவாசை வந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில், அமாவாசை நாட்களில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு செல்வது வழக்கம்.

    இன்று ஆடி அமாவாசை என்பதால் நேற்று இரவு முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் மற்றும் குளக்கரையில் இரவு தங்கி இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை முதலே கோவில் குளக்கரை மற்றும் காக்களூரில் உள்ள பாதாள விநாயகர் கோவில் அமைந்துள்ள ஏரிக்கரையில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    பின்னர் மூலவர் வீரராகவரை நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

    ஆடி மாத தொடக்கமான கடந்த 17-ந்தேதி அன்றே அமாவாசை வந்தது. ஆடி மாதத்தில் இன்று 2-வது அமாவாசை என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    • தை மற்றும் ஆடி மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமானது.
    • மாட்டு வண்டிகளின் வருகையால் உடுமலை- திருமூர்த்திமலை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. அருவியில் குளித்து மகிழவும் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமலைக்கு வருகை தருகின்றனர்.

    இக்கோவிலில் தை மற்றும் ஆடி மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமானது என்பதால் அன்றைய தினங்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள்.

    மேலும் அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வருவதை பாரம்பரிய வழக்கமாக கொண்டு உள்ளார்கள்.

    அதுமட்டுமின்றி அமாவாசைக்கு முன்தினம் திருமூர்த்தி மலைக்கு மாட்டு வண்டிகளில் வருகின்ற பக்தர்கள் இரவு முழுவதும் கோவில் மற்றும் அணைப்பகுதியில் தங்கி, காலையில் அருவியில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னர் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்து விட்டு திரும்பிச் செல்வார்கள்.

    அந்த வகையில் இன்று திருமூர்த்திமலையில் நடைபெற்ற ஆடி அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டிகளில் வந்து குவிந்தனர். மாட்டு வண்டிகளின் வருகையால் உடுமலை- திருமூர்த்திமலை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தளி போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். இன்று காலை பக்தர்கள் அனைவரும் பஞ்சலிங்க அருவியில் குளித்து விட்டு அமண லிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பாலாற்றின் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணமும் கொடுத்தனர்.

    • தர்ப்பண பூஜை என்பது இறந்த நம் முன்னோர்களுக்காக நாம் செய்யும் பூஜை
    • தர்ப்பண பூஜை முறைக்கு வெவ்வேறு விதமான சிறப்பு பெயரும் உண்டு.

    தர்ப்பண பூஜை என்பது இறந்த நம் முன்னோர்களுக்காக நாம் செய்யும் பூஜைகள் ஆகும். நம் மூதாதையர்கள் எல்லாருமே பித்ரு லோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்லி விட முடியாது.

    மனிதனாக, புல், பூண்டாக, விலங்குகளாக, தாவரங்களாக பலர் பிறப்பெடுக்கலாம். அவரவர் தீவினை கர்மங்களுக்கு ஏற்ப ஆவி ரூப பிறவிகளும் கொண்டிருக்கலாம்.

    நம் மூதாதையர்களான பித்ருக்கள் அனைவரும் நினைத்தபடி எல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, இறந்த திதி, மாதப்பிறப்பு, மாளய பட்ச நாட்கள் போன்ற புனித தினங்களில் மட்டும் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றனர்.

    எனவே, அவர்கள் சூட்சும தேகத்தில் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் தர்ப்பண பூஜைகளைத் செய்தால் அவர்கள் அவற்றை இங்கு நேரடியாக பெற்று ஆசி அளிப்பார்கள்.

    தர்ப்பண பூஜை நாட்களில் நாம் யாருக்காக, எந்த காரணத்துக்காக தர்ப்பணம் அளிக்கின்றோமோ, அதை பொறுத்து தர்ப்பண பூஜை முறைகள் மாறுபடுகின்றன. ஒவ்வொரு தர்ப்பண பூஜை முறைக்கும் வெவ்வேறு விதமான சிறப்புப் பெயரும் உண்டு.

    அதைப்போலவே இறந்தவருடைய வாழ்க்கை முறை, செய்து வந்த தொழில், உத்தியோகம், அவரது உயிர் பிரிந்த விதம் இவ்வாறு எத்தனையோ காரண, காரியங்களைக் கொண்டு அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதற்கான வெவ்வேறு விதமான தர்ப்பண பூஜை முறைகளை சித்த புருஷர்கள் அருளியுள்ளனர்.

    ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் முடிவு எவ்வாறு அமையும் என்பதை யாராலும் யூகிக்க இயலாது. விபத்து, தற்கொலை, உறவினர், நண்பர்கள் தரும் வேதனைகள், வறுமை, கொடிய நோய் போன்ற பல காரணங்களால் மரணம் ஏற்படுவ துண்டு. ஏன், நம் தினசரி வாழ்க்கையில் கூட எத்தனையோ கொசுக்கள், வண்டுகள், ஈக்கள், புழு, பூச்சிகள், எறும்புகள் போன்ற எத்தனையோ உயிரினங்களின் மரணத்திற்கு நாம் காரணமாகி விடுகின்றோம்.

    நாம் முறையாக நம் பித்ருக்களுக்கு சிரார்த்தம், திவசம் மற்றும் தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றினால் தான் இவ்வாறாக வித விதமான முறைகளில் உயிர் விட்ட அனைத்து ஜீவன்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் எந்த அளவிற்கு நம்முடன் வாழ உரிமை பெற்றிருக்கும் சக ஜீவன்களின் நல்வாழ்விற்காக நாம் மனுதாலும், உடலாலும் சேவை, பூஜை, வழிபாடு, தான தர்மங்கள் ஆகியவற்றைச் செய்கின்றோமோ, அந்த அளவிற்கு நம் வாழ்க்கையும் மேம்படும்.

    தற்காலத்தில் அனைவரும் சிரார்த்தத்துக்கும், தர்ப்பணத்துக் கும் வித்தியாசம் தெரியாது இவை இரண்டுமே ஒன்று என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். சிரார்த்தம், தர்ப்பணம் ஆகிய இரண்டு பூஜைகளுமே இறந்த நம் முன்னோர்களின் திதியன்று செய்யப்படுபவை என்றாலும் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.

    சிரார்த்தம், திவசம் என்றால் இறந்தோருக்குப் பிரியமான உணவு, உடைகளைப் படைத்து வணங்கிப் பின்னர் அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்குதல் ஆகும்.

    ஆனால் தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு முறையான தர்ப்பண மந்திரங்களைச் சொல்லி வார்த்து பித்ருக்களை திருப்தி செய்தல் என்று பொருள்.

    பவானி கூடுதுறை

    ஆடி மாதம் அம்மன் மாதம் என்பார்கள். இதர 11 மாதங்களை விட இந்த மாதத்தில் அம்மனை வழிபட்டால் விசேஷ பலன் உண்டு என்று கருதப்படுகிறது. இதனால் ஆடிமாதங்களில் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த பல அம்மன் கோவில்கள் உள்ளன.

    இங்கு அம்மனை தரிசிக்க பெண் பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள். பவானி சங்கமேஸ்வரர்-வேதநாயகி அம்மன் கோவிலில் ஆடிவெள்ளி, ஆடிபெருக்கு, ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். ஆடி வெள்ளிக்கு வரும் பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து செல்வார்கள்.

    ஆடி 18 அன்று பவானி கூடுதுறைக்கு புதுமண தம்பதிகள் வருகை தந்து தங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்க அம்மனின் அருளாசி பெற்று செல்வார்கள். ஆடி அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்து செல்வார்கள். இதனால் பித்ரு தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.

    பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோயிலின் நடை ஆடிப்பதினெட்டு அன்று அதிகாலையில் திறக்கப்படும். மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும் ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.

    • முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்.
    • அகல் விளக்கேற்றி தூப தீபம் காட்டி முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும்.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று, இறந்த நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் அமாவாசை விரதமாகும். இந்த விரத்தை மேற்கொள்ள வேண்டிய விவரம் வருமாறு:-

    காலையில் எழுந்து, அருகில் இருக்கும் ஆற்றிலோ, குளத்திலோ குளித்து விட்டு, இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். முறைப்படி தர்ப்பணம் செய்து வைக்கும் அந்தணர்கள், ஆற்றின் கரையோரங்களில், குளக்கரைகளில், கடற்கரையோரங்களில் இருப்பார்கள். அவர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம்.

    அதன்பின்னர், முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும்.

    அமாவாசையன்று, வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல் இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் தயார் செய்வார்கள். அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளும் இடம் பெற வேண்டும்.

    விரதம் இருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, சமைத்த எல்லா உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, துணிகள் வைத்து படைப்பவர்கள் துணிகளையும் வைத்து, அகல் விளக்கேற்றி வைத்து, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.

    பிறகு, படைத்த எல்லா உணவு, பதார்த்தங்களையும் தனித்தனியாக இலையோடு எடுத்து, வீட்டிற்கு வெளியில், உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.

    முன்னோர்களுக்கு படைத்து வைப்பவைகளை, காக்கைகள் (பித்ருக்கள் என்று கூறுவதால்) மட்டுமே உண்ண வேண்டும் என்பதால்தான் உயரமான இடங்களில் வைக்க வேண்டும். காக்கைகள் உண்ட பிறகு, வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவு முறைகளுக்கேற்ப உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும்.

    அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக் கூடாது பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம். முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனிதநீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
    • கும்பகோணம் நீர் நிலைகள் முன்பு தர்ப்பணம் கொடுப்பதற்கு தேவையான பொருட்கள் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய 3 அமாவாசைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாகும். ஆடி அமாவாசை அன்று மூதாதையர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம். இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று திதி, நீர்க்கடன் செய்ய வேண்டும். இதனால் அவர்களது ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். நாம் செய்த பாவங்கள் நீங்கும்.

    அதன்படி, ஆடி அமாவாசையன்று நீர்நிலைகள் அருகே அமர்ந்து வேதமந்திரங்கள் சொல்லி திதி கொடுப்பது, மூதாதையர்கள் நினைவாக பிண்டம் செய்து உணவாக படைப்பது என்று செய்து வருகின்றனர். இந்த சடங்குகள் தஞ்சை மாவட்டம் திருவையாறு, நாகை மாவட்டம் வேதாரண்யம், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெறும்.

    அதன்படி, ஆடி அமாவாசையையொட்டி இன்று காலை முதலே தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருவையாறில் உள்ள காவிரி புஷ்ய மண்டபத்தில் திரளான பொதுமக்கள் வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

    காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனிதநீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக ஏராளமான புரோகிதர்கள் படித்துறைக்கு வந்திருந்தனர். இதனால் புஷ்ய மண்டபத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்று ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுத்து காவிரியில் புனித நீராடினர்.

    இதேபோல், கும்பகோணம் காவிரி ஆற்றின் பகவத் படித்துறை, டபீர் படித்துறை, மேலக்காவேரி படித்துறை, அரசலாற்றங்கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் ஏராளமான பொதுமக்கள் இன்று காலையில் இருந்து குவியத்தொடங்கினர். அங்கு அவர்கள் தங்களது முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். மேலும் பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டனர். இதனால் கும்பகோணம் நீர் நிலைகள் முன்பு தர்ப்பணம் கொடுப்பதற்கு தேவையான பொருட்கள் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.

    நாகை மாவட்டம், வேதாரண்யம் சன்னதி கடல் மற்றும் கோடியக்கரை ஆதிசேது எனப்படும் சித்தர் கடலில் ஆடி அமாவாசையை யொட்டி சூரிய உதயத்தின்போது கடலில் நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து, கடலில் தேங்காய், வெற்றிலை பாக்கு, எலும்பிச்சை பழம், காதோலை கருகமணியை கடலில் விட்டு புனிதநீராடி சூரியபகவானை வழிபட்டனர். பின், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார், காவிரி ஆறும், கடலும் சங்கமிக்கும் இடம் என்பதால் ஆடி அமாவாசையை யொட்டி இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    • கடந்த மாதம் 17-ந்தேதியில் வந்த முதல் ஆடி அமாவாசையில் ராமேசுவரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர்.
    • தர்ப்பணம் கொடுத்த பின் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர்.

    ராமேசுவரம்:

    காசிக்கு நிகராக கருதப்படும் பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது.

    இதனால் மாதத்தில் அமாவாசை நாட்களில் ராமேசுவரத்தில் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். குறிப்பாக ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிவார்கள். அதன்படி இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வந்தது.

    கடந்த மாதம் 17-ந்தேதியில் வந்த முதல் ஆடி அமாவாசையில் ராமேசுவரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர். 2-வது ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இதற்காக நேற்று காலை முதல் வேன், பஸ்கள் மூலமாக வந்த அவர்கள் அமாவாசை நாளான இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடற்கரையில் திரண்டனர். அங்கு புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதன் காரணமாக பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. தர்ப்பணம் கொடுத்த பின் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். தொடர்ந்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    ராமேசுவரத்தில் நேற்றும், இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளும், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    கோவில் வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை, பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை ராமேசுவரம் பஸ் நிலையம் மற்றும் கோவிலை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் இருந்து முக்கிய ஊர்களுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதேபோல் ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அங்குள்ள கடலில் அமைந்துள்ள நவக்கிரகங்களை வழிபட்டனர்.

    இதேபோல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் 3 ஆயிரம் அடி உயரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய கடந்த 12-ந்தேதி முதல் நாளை வரை 6 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

    ஆடி அமாவாசையான இன்று சுவாமியை வழிபட நேற்று முதலே தாணிப்பாறை மலையடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தகர்கள் குவிந்தனர். இன்று அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மற்றும் வனத்துறையினர் செய்திருந்தனர். இன்று ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள், இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக அதிகாலை முதலே நெல்லை மாவட்டம் பாபநாசம் கோவில் முன்புள்ள தாமிரபரணி ஆற்றுபடித்துறையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் படித்துறைகளில் அமர்ந்து தர்ப்பணம் செய்து எள்ளும் நீரும் இறைத்தனர்.

    குடும்பத்தினருடன் கார்கள், வேன்களில் வந்து பெரும்பாலானோர் தர்ப்பணம் கொடுத்ததை பார்க்க முடிந்தது. இதனால் பாபநாச நாதர் சுவாமி கோவில் முன்பு வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதேபோல் கல்லிடைக்குறிச்சி, சேரன் மகாதேவி உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி நதிக்கரையோரம் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.

    நெல்லை மாநகர பகுதியில் டவுன் குறுக்குத்துறை, கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் படித்துறை, குட்டத்துறை முருகன் கோவில் படித்துறை, அருகன் குளம் ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தாமிரபரணி நதியில் நீராடி, பின்னர் தர்ப்பணம் கொடுத்து சென்றனர். உவரி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் இன்று அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சென்றனர். தூத்துக்குடியில் கடற்கரையோரங்களில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவிக்கரையில் வரிசையாக அமர்ந்திருந்த அர்ச்சகர்களிடம் முன்னோர்கள் பெயர் மற்றும் நட்சத்திரம் போன்ற விவரங்களை கூறி எள்ளும் தண்ணீரும் வைத்து மக்கள் தர்ப்பணம் செய்தனர்.

    உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதேபோல் குழித்துறை மகாதேவர் ஆலயத்தில் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பலி தர்ப்பணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் திரண்ட பக்தர்கள் சிவாச்சாரியார்கள் மூலம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
    • காவிரி கரையோரங்கள் மற்றும் நீர்நிலைகளில் அந்தந்த ஊர்களை சேர்ந்தவர்கள் திரண்டு புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.

    திருச்சி:

    இந்துக்கள் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் நீர் நிலைகளில் புனித நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமானது.

    அந்த வகையில் 2-வது ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக நீர் நிலைகளில் திரண்டனர்.

    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர்.

    இதற்காக 500-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் காவிரிகரை மணல் பரப்பில் அமர்ந்து இருந்தனர். இதில் ஒரு சில இடங்களில் 10 முதல் 30-க்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் வரிசையாக அமர வைத்து அவர்களது மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர்.

    பின்னர் பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம், தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிண்டமாக பிடித்து மந்திரங்கள் ஓதிய பின் அவற்றை ஆற்றில் கரைத்து தங்கள் முன்னோர்களை நினைத்தும், அவர்களின் ஆசி வேண்டியும் வழிபட்டனர். அதன் பின்னர் தர்ப்பணம் கொடுத்தவர்கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றினர். மேலும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை வழங்கினர்.

    இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    தொடர்ந்து அவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

    புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் திரண்ட பக்தர்கள் சிவாச்சாரியார்கள் மூலம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி கரையோரங்கள் மற்றும் நீர்நிலைகளில் அந்தந்த ஊர்களை சேர்ந்தவர்கள் திரண்டு புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் தடுப்பதற்காக அம்மா மண்டபம் படித்துறை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

    காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகமாக செல்வதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • ஆடி அமாவாசையான நாளை அப்பர் கயிலை காட்சி விழா நடைபெறுகிறது.
    • இரவில் அப்பர் கயிலை காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாரப்பர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு அப்பர் கயிலை காட்சி விழா நடைபெறும்.

    அதன்படி ஆடி அமாவாசையான நாளை ( புதன் கிழமை ) அப்பர் கயிலை காட்சி விழா நடைபெறுகிறது. நாளை காலை திருவையாறு காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி அங்கு புரோகிதர்களை கொண்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஐயாரப்பரை தரிசித்து வழிபட்டு செல்வர்.

    மதியம் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும். இரவில் ஐயாரப்பர் கோவிலில் உள்ள அப்பர் சன்னதியில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் அப்பர் கயிலை காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வர்.

    ×