search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருமூர்த்திமலை- ஆடி அமாவாசை விழாவில் பங்கேற்க மாட்டு வண்டிகளில் வந்து குவிந்த பக்தர்கள்
    X

    திருமூர்த்திமலைக்கு மாட்டுவண்டிகளில் வந்த பக்தர்கள்

    திருமூர்த்திமலை- ஆடி அமாவாசை விழாவில் பங்கேற்க மாட்டு வண்டிகளில் வந்து குவிந்த பக்தர்கள்

    • தை மற்றும் ஆடி மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமானது.
    • மாட்டு வண்டிகளின் வருகையால் உடுமலை- திருமூர்த்திமலை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. அருவியில் குளித்து மகிழவும் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமலைக்கு வருகை தருகின்றனர்.

    இக்கோவிலில் தை மற்றும் ஆடி மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமானது என்பதால் அன்றைய தினங்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள்.

    மேலும் அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வருவதை பாரம்பரிய வழக்கமாக கொண்டு உள்ளார்கள்.

    அதுமட்டுமின்றி அமாவாசைக்கு முன்தினம் திருமூர்த்தி மலைக்கு மாட்டு வண்டிகளில் வருகின்ற பக்தர்கள் இரவு முழுவதும் கோவில் மற்றும் அணைப்பகுதியில் தங்கி, காலையில் அருவியில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னர் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்து விட்டு திரும்பிச் செல்வார்கள்.

    அந்த வகையில் இன்று திருமூர்த்திமலையில் நடைபெற்ற ஆடி அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டிகளில் வந்து குவிந்தனர். மாட்டு வண்டிகளின் வருகையால் உடுமலை- திருமூர்த்திமலை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தளி போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். இன்று காலை பக்தர்கள் அனைவரும் பஞ்சலிங்க அருவியில் குளித்து விட்டு அமண லிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பாலாற்றின் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணமும் கொடுத்தனர்.

    Next Story
    ×