search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளை"

    • தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வை நடத்த இவ்வளவு செலவு ஆகாது.
    • கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கல்லூரி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான "தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வு" எழுதுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தை 66 சதவீதம் உயர்த்தி அத்தேர்வை நடத்தும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதன்படி பொதுப்பிரிவினருக்கான கட்டணம் ரூ.1500லிருந்து ரூ.2500 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான கட்டணம் ரூ.1250-லிருந்து ரூ.2,000 ஆகவும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான கட்டணம் ரூ.500லிருந்து ரூ.800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாது. இது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் மாநிலத் தகுதித் தேர்வை ஒன்றரை லட்சம் பேர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களிடமிருந்து கட்டணமாக குறைந்தது ரூ.30 கோடி வசூலிக்கப்படும். ஆனால், தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வை நடத்த இவ்வளவு செலவு ஆகாது. எனவே கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திருட்டு சம்பவங்கள் தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    • கேமராக்களில் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எஸ்.வி.புரம் பி.வி. லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தாமணி (வயது 52). இவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் திருடப்பட்டிருந்து.

    இதே போன்று எஸ்.வி.புரம் ஆர்.ஜி.நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சத்யாதேவி (29). இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு புதுக்கோட்டைக்கு சென்று விட்டனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 1½ பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. இதே போன்று பூட்டியிருந்த கணேசபுரம் நாச்சம்மாள் (75) என்பவரது வீட்டின் கதவையும் உடைத்து ரூ.36 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று உள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும்.

    இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நள்ளிரவு நேரம் அங்கு சென்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து நாகம்மாவின் ஊரில் விசாரணை நடத்தினர்.
    • நாகம்மா உடலை 10 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டம், கோனே கண்டலா அடுத்த பெத்தமரி வீடுவை சேர்ந்தவர் நாகம்மா (வயது 80). இவரது மகன், பெத்த பஜார். இவருக்கு வெங்கடேஷ், தினா என 2 மகன்கள் உள்ளனர்.

    உள்ளூரில் சரி வர கூலி வேலை கிடைக்காததால் பெத்த பஜார் தனது மனைவி மகன்களுடன் குண்டூருக்கு குடி பெயர்ந்தார். அங்கு வெங்கடேஷ் நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கங்களுக்கு ஆளானார். மேலும் புதிய செல்போன் வாங்க வேண்டும் என்ற ஆசை வந்தது. புதிய செல்போன் வாங்க வேண்டுமென தனது பெற்றோரிடம் பணத்தை கேட்டார். அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என தெரிவித்தனர்.

    இதையடுத்து கடந்த 4-ந் தேதி வெங்கடேஷ் பாட்டி நாகம்மா வீட்டிற்கு வந்தார். பாட்டியை கொலை செய்து அவர் அணிந்திருக்கும் நகைகளை விற்று புதிய செல்போன் வாங்க முடிவு செய்தார்.

    அதன்படி நள்ளிரவில் நாகம்மா வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது வெங்கடேஷ் பாட்டியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துக் கொண்டார். பின்னர் வீட்டில் குழி தோண்டி பாட்டியின் உடலை புதைத்தார்.

    மறுநாள் காலை ஒன்றும் தெரியாதது போல் பாட்டியின் வீட்டில் இருந்து எமிகானூர் வந்து அங்குள்ள நகைக்கடையில் பாட்டியின் நகைகளை ரூ.29 ஆயிரத்துக்கு விற்பனை செய்தார். பின்னர் குண்டூருக்கு சென்று அங்குள்ள செல்போன் கடையில் ரூ.25 ஆயிரத்திற்கு புதிய செல்போன் வாங்கினார்.

    இந்த நிலையில் நாகம்மாவின் வீட்டிற்கு மற்றொரு பேரன் கோபால் என்பவர் வந்தார். வீட்டில் பாட்டி இல்லாததால் சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து கோனே கண்டலா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நாகம்மாவின் ஊரில் விசாரணை நடத்தினர். அப்போது வெங்கடேஷ் பாட்டியின் வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது. போலீசார் வெங்கடேஷை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து விற்பனை செய்ததை வெங்கடேஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர். மேலும் நாகம்மா உடலை 10 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

    • கைதானவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
    • வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே கடந்த மாதம் சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த மின்சார ரெயிலில் பயணம் செய்த பயணிகள் 3 பேரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றனர்.

    இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் ஏறிய 5 பேர் கும்பல் இதில் ஈடுபட்டது தெரிந்தது. இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    டி.ஐ.ஜி. ராமர் உத்தரவின்படி துணை போலீஸ்சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் மின்சார ரெயிலில் பயணிகளை வெட்டி கொள்ளையடித்த வழக்கில் கும்மிடிப்பூண்டி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த லெவின் என்கிற பூச்சி (26), பொன்னேரி செஞ்சம்மாள் நகரை சேர்ந்த விஜி என்கிற கெல்லீஸ் (24) ஆகிய 2 பேரை இன்ஸ்பெக்டர் சசிகலா கைது செய்தார்.

    கைதானவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • சுரேசை கைது செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்லை அடுத்த உத்தனம்பட்டி பிரிவு அருகே வசிப்பவர் கருப்பையா (வயது 60). அவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் பரத்.கருப்பையா தனது வீட்டின் அருகே பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இதனை கருப்பையா மற்றும் அவரது மகன் பரத் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் 7ந் தேதி கருப்பையா தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு 9 மணி அளவில் கருப்பையா வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 80 பவுன் நகைகள்,ரொக்க பணம் ரூ.3 லட்சத்து 29 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன், போலீசார் கிளாடின், ஜஸ்டின், வினோத், கருணாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை திருப்பூர், தஞ்சாவூர், கோவை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தோமையார்புரம் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் கையில் ஒரு பையுடன் சந்தேகப்படும்படியாக நடந்து சென்றார். உடனே அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பதும், பையில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதற்காக உபகரணங்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை தாலுகா போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சுரேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பல ஊர்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்டிருந்ததும் தெரியவந்தது.

    கொள்ளையடித்த பணத்தில் பல்வேறு மாநிலங்களுக்கு லாங் டிரைவ் செய்து வந்ததும், கேரளாவிற்கு சென்று அழகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். திண்டுக்கல்லில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் தனது நண்பர்களுடன் கொள்ளையடித்த சுரேஷ் பின்னர் திருச்சியில் உள்ள ஒரு வீட்டிலும் கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து பண்ருட்டி வழியாக சென்று கொண்டிருந்தபோது வாகன சோதனையில் இருந்த போலீசார் அவர்களது காரை மடக்கினர். இதையடுத்து வாலிபர்கள் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றனர். பின்னர் பண்ருட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அவர்களை தேடி வந்துள்ளனர்.

    அதன் பின்பு அவரது நண்பர்கள் வெவ்வேறு இடங்களுக்கு பிரிந்து சென்றனர். சுரேஷ் வேறு இடத்தில் கொள்ளையடிப்பதற்காக திண்டுக்கல் வந்தபோது தனிப்படை போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், நெல்லைக்கு சென்று அவரது உறவினர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 24 பவுன் நகை, போலி நம்பர் பிளேட், கொள்ளையடிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சுரேஷ் மீது திருச்சி, கோவை, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 57 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

    சுரேசை கைது செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

    • தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
    • கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் செல்போன் பயன்படுத்தவில்லை.

    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் நித்தியா நந்தினி. இவர் அந்த பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்.

    கடந்த மாதம் 13-ந் தேதி, இவரது வீட்டிற்குள் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது. அவர்கள் வீட்டில் இருந்த நித்யா நந்தினியை கட்டிப்போட்டு, 25 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து அவர் சூலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன், சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளையர்கள் பண்ணை வீட்டில் இருந்து செஞ்செரிமலை வழியாக நெகமம் நோக்கி வாகனத்தில் தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து அவர்கள் யார் என்பதை அறியும் பணியில் போலீசார் இறங்கினர்.


    போலீஸ் விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாண்டியன் நகரை சேர்ந்த அய்யனார் என்ற குருமூர்த்தி சுந்தரேசன்(72), ஆந்திர மாநிலம் தாவணிக்கரையை சேர்ந்த முருகன்(55), குடியாத்தம் பாண்டியன் நகரை சேர்ந்த ஏழுமலை என்ற ராஜா(50), உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ராமலிங்கம் என்ற ராஜேஷ்(42) என்பதும், இந்த கும்பலுக்கு தலைவனாக அய்யனார் என்ற குருமூர்த்தி சுந்தரேசன் செயல்பட்டு வந்ததையும் கண்டுபிடித்தனர்.

    பின்னர் அவர்களை தேடி தனிப்படையினர் குடியாத்தம் விரைந்தனர். அங்கு அவர்கள் இருப்பதை உறுதி செய்த போலீசார் அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

    சம்பவத்தன்று அவர்கள் மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக புறப்பட்டு கொண்டிருந்தனர். அந்த சமயம் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இந்த கும்பல் மோகனூரில் உள்ள ஆந்திர வங்கி, பண்ரூட்டி, காஞ்சிபுரம், ஊத்துக்கோட்டை பகுதிகளில் உள்ள நகைக்கடைகளிலும் ஏராளமான பணம் மற்றும் பல சவரன் நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

    இவர்கள் பொள்ளாச்சியில் கொள்ளையடிப்பதற்காக வந்துள்ளனர். ஆனால் இரவு நேரமாகி விட்டதால் இங்கேயே எங்காவது கொள்ளையடிக்கலாம் என முடிவு செய்து, தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டுள்ளனர்.

    அப்போது பண்ணை வீடு இருப்பதை பார்த்ததும் அங்கு சென்று, அங்கு இருந்தவரை கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் தாங்கள் கொள்ளையடித்த பணம் மற்றும் நகையை வைத்து பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, கொள்ளையர்களை பிடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் செல்போன் பயன்படுத்தவில்லை. இதனால் அவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது.

    இருந்தபோதிலும் கிடைத்த தகவல்களை வைத்து, கொள்ளையர்களை கண்டறிந்து, அவர்களை பிடித்து விட்டோம் என்றனர்.

    இதையடுத்து போலீசார் கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    • பட்டப்பகலில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜ் (வயது 50). இவர் அதே பகுதியில் உள்ள சர்பத் கம்பெனி ஒன்றில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும், மகளும் ஏற்கனவே இறந்து விட்டனர். மகன் தேவ பிரசாத் (27) சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் தனியாக வசித்து வரும் வரதராஜ் சம்பவத்தன்று காலை, தனது வீட்டைக் பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீடு உட்புறமாக தாழ் இடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வரதராஜ் வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது யாரோ மர்ம நபர்கள் மறைவான பகுதியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்ற தோடு, பீரோவை திறந்து அதில் இருந்த சுமார் 8 1/2 பவுன் எடையுள்ள தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது.

    மேலும் வீட்டின் பின்புறமாக வந்த மர்ம நபர்கள் மூங்கில் குச்சியை பயன்படுத்தி, வீட்டின் மீது ஏறி ஓட்டினை பிரித்து, உள்ளே சென்று வீட்டின் கதவினை உட்புறமாக தாள் போட்டு விட்டு திருடி சென்றது தெரியவந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக வரதராஜ் அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருச்சியில் இருந்து மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் துறையினர் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

    துறையூரின் மைய பகுதியில் அடுத்தடுத்து வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதியில் பட்டப்பகலில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • அஜய், ஹரிகரன், மாரிமுத்து, சத்தியசீலன் ஆகிய 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாலப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் சாலையில் வீட்டு உபயோக பொருட்கள் கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 14ந் தேதி காலை வழக்கம் போல் கடையை திறக்கச் சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்த போது நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. அதேபோல் மணிக்கூண்டு அருகே செல்போன் கடையில் ரூ.5 ஆயிரம் திருடு போயிருந்தது. இது குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ஏ.எஸ்.பி. சிபின் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜகோபால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டி, ஜார்ஜ் எட்வார்டு போலீசார் ராதாகிருஷ்ணன், முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.


    இந்த தனிப்படை போலீசார் திருட்டு நடந்த கடைகள், சாலைகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் கரூர் கல்லுமடையைச் சேர்ந்த அஜய் (வயது 24), ராயனூரைச் சேர்ந்த ஹரிஹரன் (21), வெங்கமேடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து (21), கோவை சாய்பாபா காலனியைசேர்ந்த சத்தியசீலன் (23) ஆகியோர் 2 கடைகளிலும் திருடியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் இவர்கள் பழனி ஆயக்குடியில் 2 ஸ்டுடியோக்களில் பூட்டை உடைத்து 3 விலை உயர்ந்த கேமராக்களை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் திருடிய பணம், 3 கேமராக்கள், 3 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அஜய், ஹரிகரன், மாரிமுத்து, சத்தியசீலன் ஆகிய 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மர்ப நபர்கள் வீட்டின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி திருவெறும்பூர் பேல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் (வயது 52) அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவியும் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இந்த தம்பதியரின் மகன், மகள் இருவரும் வெளியூரில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் வழக்கம்போல் இரண்டு பேரும் பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பினர்.

    பின்னர் இரவு சாப்பிட்டு விட்டு உள்பக்க அறையில் படுத்து தூங்கினர்.

    இந்த தலையில் அவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ப நபர்கள் வீட்டின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் வேறொரு அறையில் பீரோவில் வைத்திருந்த ஒன்பதரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5000 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.

    காலையில் எழுந்து பார்த்த போது தான் வீட்டில் திருட்டு நடந்தது அவர்களுக்கு தெரியவந்தது. அன்பரசன் திருபெரும்பூர் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர். இவர் அந்த பகுதியில் உணவு கடை வைத்து நடத்தி வருகின்றார். நேற்று இரவு 12 மணியளவில் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3000 பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. அதன் அருகே உள்ள மற்றொரு குளிர்பான கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று மர்ம நபர்கள் பணம் இல்லாததால் திரும்பி சென்று விட்டனர்.

    மேலும் குளிர்பானம் கடை அருகே ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றவர் இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.26 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போய் இருந்தது. இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • விஜயலட்சுமியை மிரட்டி பீரோவின் சாவியை எடுத்துக்கொண்டனர்.
    • கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    வடவள்ளி:

    கோவை வேடப்பட்டி அருகே உள்ள குரும்பபாளையம் டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 70). அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் விஜயலட்சுமி நேற்று இரவு காற்றுக்காக வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு, ஹாலில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் கும்பல் பின்பக்கம் வழியாக வீட்டுக்குள் புகுந்தனர்.

    அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி, நீங்கள் யார் என்று கேட்டார். தொடர்ந்து அவர் கூச்சல் போட்டு பக்கத்து வீட்டினரை உதவிக்கு அழைக்க முயன்றார். அப்போது கொள்ளை கும்பல் அவரது வாயை பொத்தி அங்கிருந்த சேரில் கட்டிப்போட்டனர்.

    பின்னர் விஜயலட்சுமி அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலி, 4 பவுன் தங்க வளையல்கள் மற்றும் 3/4 பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் பீரோவில் பணம், நகை எதுவும் உள்ளதா என்று கேட்டனர். மேலும் விஜயலட்சுமியை மிரட்டி பீரோவின் சாவியை எடுத்துக்கொண்டனர். பின்னர் கொள்ளையர்கள் பீரோவை திறந்து லாக்கரில் இருந்த பணம், நகைகளை ஓட்டுமொத்தமாக கொள்ளையடித்தனர். தொடர்ந்து அவர்கள் கொள்ளையடித்த பணம், நகைகளுடன் வீட்டின் பின்பக்க வாசல் வழியாக தப்பி சென்று விட்டனர்.

    அதன்பிறகு மூதாட்டி விஜயலட்சுமி காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சல் போட்டார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். பின்னர் சேரில் கட்டப்பட்ட நிலையில் இருந்த விஜயலட்சுமியை விடுவித்து விசாரித்தனர். அப்போது தான் 2 பேர் கும்பல் வீட்டின் பின்பக்கவாசல் வழியாக வீட்டுக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட விவரம் தெரியவந்தது.

    இதுதொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் பேரூர் சரக போலீஸ் டி.எஸ்.பி வெற்றிசெல்வன், தொண்டாமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் தலைமையில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து போலீசார் டீச்சர்ஸ் காலனி பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி அவற்றில் இடம்பெற்று உள்ள காட்சிப்பதிவுகளை ஆய்வுசெய்து பார்த்தனர்.

    இதில் அடையாளம் தெரியாத 2 பேர் கும்பல் மோட்டார் சைக்கிளில் டீச்சர்ஸ் காலனிக்கு வருவதும், பின்னர் விஜயலட்சுமி வீட்டின் பின்பக்க பகுதிக்கு நைசாக சுவரேறி குதித்து செல்வதும் தெரியவந்தது. அதாவது மூதாட்டி வீட்டு வளாகத்துக்குள் சுமார் 7.45 மணியளவில் புகுந்த கொள்ளை கும்பல் அங்கு சாவகாசமாக உட்கார்ந்து மதுஅருந்தியது. பின்னர் அவர்கள் மதுபோதையுடன் வீட்டுக்குள் புகுந்து தனியாக இருந்த வீஜயலட்சுமி வீட்டுக்குள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது.

    ஆசிரியை வீட்டில் மொத்தம் 25 பவுன் நகைகள் கொள்ளை போனதாக கூறப்படுகிறது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சம்புவராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகு (வயது 48). பட்டு நெசவு தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் ஆரணி தனியார் வங்கிக்கு பைக்கில் சென்றார்.

    வங்கியில் இருந்து தனது கணக்கில் உள்ள ரூ.5 லட்சத்தை எடுத்தார். ஆரணி டவுன் பெரியகடை வீதியில் உள்ள நகைகடைக்கு சென்று தன் பெயரில் வைத்துள்ள நகைகளை மீட்பதற்காக சென்றார்.

    இதனால் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மீதி தொகையான ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்தை பைக்கில் உள்ள பெட்டியில் வைத்து விட்டு நகை கடையின் உள்ளே சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் பைக்கின் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்தை திருடி சென்றனர்.

    பின்னர் வெளியே வந்த ரகு வீட்டிற்கு செல்வதற்காக பைக்கை எடுக்க முயன்றார். அப்போது பைக்கின் பெட்டி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் பணம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து ரகு ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் மர்ம கும்பல் பணத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    அதிக நடமாட்டம் உள்ள ஆரணி டவுன் பகுதியில் பட்டப்பகலில் பைக்கின் பெட்டியை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×