search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thuraiyur"

    • பட்டப்பகலில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜ் (வயது 50). இவர் அதே பகுதியில் உள்ள சர்பத் கம்பெனி ஒன்றில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும், மகளும் ஏற்கனவே இறந்து விட்டனர். மகன் தேவ பிரசாத் (27) சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் தனியாக வசித்து வரும் வரதராஜ் சம்பவத்தன்று காலை, தனது வீட்டைக் பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீடு உட்புறமாக தாழ் இடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வரதராஜ் வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது யாரோ மர்ம நபர்கள் மறைவான பகுதியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்ற தோடு, பீரோவை திறந்து அதில் இருந்த சுமார் 8 1/2 பவுன் எடையுள்ள தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது.

    மேலும் வீட்டின் பின்புறமாக வந்த மர்ம நபர்கள் மூங்கில் குச்சியை பயன்படுத்தி, வீட்டின் மீது ஏறி ஓட்டினை பிரித்து, உள்ளே சென்று வீட்டின் கதவினை உட்புறமாக தாள் போட்டு விட்டு திருடி சென்றது தெரியவந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக வரதராஜ் அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருச்சியில் இருந்து மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் துறையினர் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

    துறையூரின் மைய பகுதியில் அடுத்தடுத்து வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதியில் பட்டப்பகலில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி அருகே மருந்து கடை உரிமையாளர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை -பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    துறையூர்: 

    திருச்சி மாவட்டம்  துறையூர் சாமிநாதன் நகரை சேர்ந்தவர் நம்பிராஜன். இவர் துறையூர் பெரிய கடைவீதியில் மருந்து கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக ஜவுளிகள் எடுக்க திருச்சிக்கு நம்பிராஜன் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சென்றார். ஜவுளிகள் வாங்கி விட்டு இரவு வீடு திரும்பினார்.

    வீட்டின் அருகே வந்த போது திடீரென 2 மர்ம நபர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து , கார் ஒன்றில் ஏறி தப்ப முயன்றனர். இதனைப்பார்த்த நம்பிராஜன் மற்றும் அவரது உறவினர்கள்  அதிர்ச்சியடைந்ததோடு, மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். இருப்பினும் அவர்கள் காரை எடுத்து தப்பி சென்று விட்டனர். 

    இதையடுத்து நம்பிராஜன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும்  ரூ.35ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். கொள்ளை போன நகை-பணத்தின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும்.

    இந்த சம்பவம் குறித்து துறையூர் போலீசில் நம்பிராஜன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து   சென்று விசாரணை நடத்தினர்.  மேலும் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்து கொள்ளையர்களை பிடிக்க  உத்தரவிடப்பட்டது. ஆனாலும் கொள்ளையர்கள் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி சென்று விட்டனர். அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருச்சி மாவட்டம் துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்த உடலை சலவைத் தொழிலாளி தைத்த விவகாரம் தொடர்பாக பணியாளர்கள் 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட உடலை மருத்துவப் பணியாளர் அல்லாத ஒருவர் ஊசியால் தைப்பது போன்ற வீடியோ கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் மருத்துவப் பணியாளர் அல்லாத ஒருவர் இது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

    இதையடுத்து கலெக்டர் ராசாமணி உத்தரவின் பேரில் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சம்‌ஷத் பேகம் தலைமையிலான குழுவினர் துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது வீடியோ வில் இருந்த நபர் ஆஸ்பத் திரியில் ஒப்பந்த சலவைத் தொழிலாளியாக பணி புரியக்கூடிய வீரமணி (வயது 52) என்பதும், மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தவுடன் அந்த உடலின் பாகங்களை ஒன்று சேர்த்து தைக்ககூடிய பணியில் மருத்துவப் பணியாளர்களுக்கு பதிலாக இவர் அப்பணியை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து எத்தனை நாட்களாக இது போன்று நடைபெற்று வருகிறது. தவறு செய்த மருத்துவப் பணியாளர்கள் யார் யார் என்பன உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் தற்போது 3 மருத்துவப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகள் கூறும் போது, மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய சில மருத்துவப் பணியாளர்கள் தாங்கள் செய்ய வேண்டிய வேலையை சலவைத் தொழிலாளியைக் கொண்டு செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எனவே முதல்கட்டமாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விரிவான அறிக்கையை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மேலும் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்றனர்.


    ×