search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Summer rain"

    • மழை பெய்ததால் விமான நிலைய ஓடுபாதை பகுதியில் தண்ணீர் தேங்கியது.
    • 17 சர்வதேச விமானங்கள் மிக தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

    சென்னை:

    சென்னையில் நேற்றிரவு 10 மணி முதல் முதல் இன்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. சென்னை கடற்கரை பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இடி மின்னலுடன் விடாமல் மழை பெய்ததால் ரோடுகளில் மழை நீர் தேங்கியது.

    அதிலும் குறிப்பாக சென்னை மீனம்பாக்கம் பகுதியில் மிக அதிகமாக 14 செ.மீ அளவுக்கு மழை பெய்ததால் விமான நிலைய ஓடுபாதை பகுதியில் தண்ணீர் தேங்கியது. இடைவிடாமல் மழை பெய்ததால் ஓடுபாதை தெரியாத அளவுக்கு நிலைமை ஏற்பட்டது.

    இதன் காரணமாக துபாய், அபுதாபி, தோகா, லண்டன், சார்ஜா, சிங்கப்பூர், மஸ்கட், கொழும்பு, உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 10 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. இதே போல் சென்னையில் இருந்து துபாய், லண்டன், சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு புறப்பட வேண்டிய 17 சர்வதேச விமானங்கள் மிக தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

    காலை 7 மணிக்கு பிறகு தான் மழை பெய்வது குறைந்தது. அதன் பிறகுதான் டெல்லி, ஐதராபாத், மும்பை, கொல்கத்தா, உள்ளிட்ட உள்நாட்டு விமானங்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டது. சென்னையில் விடிய விடிய திடீரென மழை பெய்ததால் விமான பயணிகள் பலர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வராமல் பலமணி நேரம் காத்திருந்து அதன் பிறகே வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

    • வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மட்டும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும், மின்சார ரெயில்களும் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன.
    • பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் இடுப்பளவு வெள்ளம் தேங்கி உள்ளது.

    சென்னை:

    சென்னையில் பல நாட்கள் வெயிலில் நடமாட முடியாமல் தவித்த மக்களை ஒரேநாள் மழை தவிக்க வைத்துவிட்டது. பல இடங்களில் ரோடுகளில் வெள்ளம் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    கிண்டி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளம் வெளியே தெரியாத அளவுக்கு மூழ்கி உள்ளது. மின்சார ரெயில் தண்டவாளம் லேசாக தெரியும் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

    இதனால் பாதுகாப்பு கருதி ரெயில்வே ஊழியர்கள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்கள். ரெயில்கள் தூரத்தில் வரும்போதே கையில் வைத்திருக்கும் அவசரகால விளக்கை காட்டி ரெயில்களை மெதுவாக செல்ல வைக்கிறார்கள்.

    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மட்டும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும், மின்சார ரெயில்களும் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன.

    பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் இடுப்பளவு வெள்ளம் தேங்கி உள்ளது. இதனால் நடந்து செல்லும் பயணிகளும் செல்ல முடியவில்லை.

    இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் அந்த வழியாக தரைதளத்தில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்துக்கு செல்ல முடியவில்லை. ஒவ்வொரு மழை காலத்திலும் இந்த சாலை இப்படித்தான் வெள்ளத்தால் துண்டிக்கிறது. இந்த பகுதியில் வெள்ளம் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு எதையும் காணவில்லை.

    மழைக்காலத்தில் மட்டும் மோட்டார் வைத்து ஓரளவு தண்ணீரை வெளியேற்றி சமாளிப்பார்கள். அதன்பிறகு அடுத்த மழை காலத்தில் தான் அதுபற்றி யோசிக்கிறார்கள்.

    • ஏற்காட்டில் கடந்த 10 தினங்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தது.
    • சாய்ந்த மரத்தை நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினர்.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 10 தினங்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இரவு பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. இதனால் ஏற்காடு மலை பாதை 2-வது கொண்டை ஊசி வளைவில் மரம் ஒன்று சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது.

    சாய்ந்த மரத்தை நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர், நெடுஞ்சாலை துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெப்ப அலை அதிகமாக இருந்தது.
    • ஒருநாள் மழைக்கே பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு ஜூன் மாதத்திலும் கடுமையாக இருந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

    சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெப்ப அலை அதிகமாக இருந்தது. மக்கள் பகல் வேளையில் மட்டுமின்றி இரவிலும் சிரமப்பட்டனர். வெயிலின் உஷ்ணம் இரவில் கடும் புழுக்கத்தை தந்த நிலையில் நேற்று அதிகாலையில் இருந்து மழை பெய்ய தொடங்கியது.

    பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் வெயிலின் தாக்கத்தில் அவதிபட்டு வந்த நிலையில் ரம்மியமான சூழல் இதமாக இருந்தது. 2 மாதத்திற்கு பிறகு மப்பும் மந்தாரமுமான சூழலுடன் மழையும் பெய்ததால் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. லேசான காற்றுடன் பெய்த மழை நள்ளிரவில் அதிகரித்து நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. காற்றுடன் பெய்ததால் ஒரு சில இடங்களில் மின்சாரம் தடைபட்டது.

    தொடர்ந்து விடிய விடிய மழை பெய்ததால் சாலைகள், தெருக்களில் மழைநீர் வெள்ளம் போல் திரண்டு ஓடியது. ஒரு சில நேரங்களில் லேசான தூறலாகவும், சில சமயங்களில் கனமழையாகவும் பெய்தது. வானம் இருண்டு காணப்பட்டது. பயங்கர இடி சத்தத்துடன் நகரின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பெரம்பூர், புளியந்தோப்பு, பட்டாளம், வேப்பேரி, கோயம்பேடு, கிண்டி கத்திபாரா, ஓ.எம்.ஆர்., திருமங்கலம், தரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

    கிரின்வேஸ் சாலை சந்திப்பு, நீலாங்கரை பகுதியில் பெய்த மழையால் குளம்போல் தண்ணீர் தேங்கியது. பெருங்குடி உலக வர்த்தக மையம் அருகில் 4 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது.

    புதிதாக போடப்பட்ட தார் சாலையில் பல இடங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றன.

    ஒருநாள் மழைக்கே பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய பெரும்பாலான இடங்களில் தற்போது தேங்கவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் தேங்கி நின்றன. சாலைகளில் மட்டுமின்றி தெருக்களிலும் மழைநீர் தேங்கி நின்றதால் வெள்ளம் போல் காட்சி அளித்தது.

    நேற்று இரவு முதல் இன்று காலை 8 மணி வரை சென்னையில் 207 இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதாக மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தன. 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது மண்டலம் வாரியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அதனை சரி செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தண்ணீர் தேங்கி நின்ற பகுதிக்கு மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் சென்று அதனை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    44 இடங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டது. 163 இடங்களில் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இதே போல 23 இடங்களில் மரங்கள், கிளைகள் சரிந்து விழுந்தன. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மரங்கள் வெட்டி அகற்றும் பணியும் முழு வீச்சில் நடந்தது. போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. மயிலாப்பூர் முண்டக்கன்னி அம்மன் கோவில் தெரு, தி.நகர் உள்ளிட்ட பல இடங்களில் விழுந்த மரங்களை அகற்றினர்.

    மாநகராட்சி ஊழியர்கள் மரம் வெட்டும் எந்திரங்களுடன் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.

    சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்பட்டன. பகலிலேயே வாகன ஓட்டிகள் விளக்குகளை பயன்படுத்தி சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அலுவலகங்களுக்கு செல்லக்கூடியவர்கள் கொட்டும் மழையில் நனைந்து சென்றனர்.

    கனமழையால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. அரசு பஸ்களில் குறைந்த அளவில் மக்கள் பயணம் செய்தனர். ஷேர் ஆட்டோக்கள் அதிகளவில் ஓடின.

    சென்னையை போலவே புறநகர் பகுதியிலும் மழை பெய்து வருகிறது. தாம்பரம், மதுரவாயல், புழல், வண்ட லூர், பூந்தமல்லி, செங்குன்றம், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது.

    கோடை வெயிலின் தாக்கத்தால் 3 மாதங்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த மழை பெரும் ஆறுதலாக இருந்தது. வறண்டு கிடந்த பூமி குளிர்ச்சி அடைந்தது போல் மக்கள் மனமும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

    • கடந்த 2 தினங்களாக ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது.
    • பெரும்பாலான இடங்களில் இயல்பாக பதிவாகும் அளவைவிட 2 டிகிரி முதல் 8 டிகிரி வரை வெயில் குறைந்திருந்தது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கோடை வெயிலுக்கு விடை கொடுக்கும் வகையில், கடந்த 2 தினங்களாக ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக உக்கிரமாக இருந்த கோடை வெயிலின் தாக்கம் குறைந்து வருகிறது.

    நேற்று முன்தினம் சென்னை நுங்கம்பாக்கம், திருப்பத்தூர், பாளையங்கோட்டை ஆகிய 3 இடங்களில் மட்டும் 100 டிகிரியை தாண்டி இருந்தது. நேற்றும் பல இடங்களில் மழை பெய்ததாலும், மேகக்கூட்டங்கள் சூழ்ந்து இருந்ததாலும் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்து இருந்ததை பார்க்க முடிந்தது. அந்தவகையில் நேற்று பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 97.7 டிகிரி தான் பதிவாகி இருந்தது. மற்ற இடங்களில் அதைவிட குறைவாகவே வெயில் பதிவானது. பெரும்பாலான இடங்களில் இயல்பாக பதிவாகும் அளவைவிட 2 டிகிரி முதல் 8 டிகிரி வரை வெயில் குறைந்திருந்தது.

    வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வரும் மழையால், கோடை வெயிலின் கோரத் தாண்டவத்துக்கு சற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

    இதன் தொடர்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    மேலும், நாளை முதல் 22-ந்தேதி (வியாழக்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், போளூர் 4 செ.மீ., சின்கோனா, சின்னக்கல்லாறு தலா 2 செ.மீ., சோலையாறு, நெடுங்கல், கெலவரப்பள்ளி அணை, ஆம்பூர், தண்டராம்பட்டு, மஞ்சளாறு, வால்பாறை தலா 1 செ.மீ. மழை பெய்திருக்கிறது.

    • மாதாந்திர அடிப்படையிலான பெட்ரோல் விற்பனையும் 3.8 சதவீதம் குறைந்துள்ளது.
    • விவசாய மோட்டார் பம்புசெட்டுகள், டிராக்டர்கள் போன்றவற்றின் இயக்கத்துக்கான டீசல் தேவை குறைந்திருக்கிறது.

    புதுடெல்லி:

    நாட்டில் தற்போது பருவமழைக் காலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விற்பனை சரிந்துள்ளதாக தொழில்துறை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    உதாரணமாக, நாட்டின் மொத்த எரிபொருள் பயன்பாட்டில் 5-ல் 2 பங்காக டீசல் உள்ளது.

    இதன் விற்பனை, இம்மாதத்தின் முதல் பாதியில் 30 லட்சத்து 43 ஆயிரம் டன்னாக குறைந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்ட விற்பனையுடன் ஒப்பிடும்போது 6.7 சதவீத சரிவு ஆகும்.

    அதேநேரம், விவசாயத்துக்கான எரிபொருள் தேவை அதிகரித்ததாலும், கோடை வெயிலை சமாளிக்க கார்களில் ஏ.சி. தொடர்ந்து இயக்கப்பட்டதாலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் 6.7 சதவீதமும், மே மாதத்தில் 9.3 சதவீதமும் டீசல் விற்பனை கூடியிருந்தது.

    பெட்ரோல் விற்பனையும் இந்த மாத முதல் பாதியில் 10 லட்சத்து 30 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்ட பெட்ரோல் விற்பனையுடன் ஒப்பிடுகையில் 5.7 சதவீத சரிவு. மாதாந்திர அடிப்படையிலான பெட்ரோல் விற்பனையும் 3.8 சதவீதம் குறைந்துள்ளது.

    கடந்த மார்ச் மாத 2-வது பாதியில் இருந்து நாட்டில் பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரித்து வந்திருக்கிறது. அதற்கு தொழில்துறை, விவசாயத்துறை செயல்பாடுகள் விறுவிறுப்பு அடைந்ததுதான் காரணம்.

    ஆனால் பருவமழைக் காலம் தொடங்கியுள்ளதால் வெப்பநிலை தணியத் துவங்கி இருக்கிறது. விவசாய மோட்டார் பம்புசெட்டுகள், டிராக்டர்கள் போன்றவற்றின் இயக்கத்துக்கான டீசல் தேவையும் குறைந்திருக்கிறது.

    அதேவேளையில், நாட்டில் விமான பயணிகள் போக்குவரத்து, கொரோனாவுக்கு முந்தைய நிலையை நெருங்கியிருக்கும் சூழலில், விமான எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது.

    இந்த மாதம் 1 முதல் 15-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் விமான எரிபொருள் தேவை 2 லட்சத்து 90 ஆயிரம் டன்களாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்ட விற்பனையுடன் ஒப்பிடும்போது இது 2.6 சதவீத அதிகரிப்பு ஆகும்.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் சமையல் எரிவாயு விற்பனை 1.3 சதவீதம் சரிந்து 10 லட்சத்து 14 ஆயிரம் டன்களாக உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    தொடர் மழை காரணமாக அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் நிறைவடையும் நிலையிலும் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரியகுளம், போடி, ஆண்டிப்பட்டி, வைகை அணை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் விவசாய பணிகளை தொடங்க உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களை தயார்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாக அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 132.05 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 371 கனஅடி நீர்வருகிறது. அணையில் இருந்து 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்இருப்பு 5177 மி.கனஅடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 64.53 அடியாக உள்ளது. வரத்து 25 கனஅடி, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை முதல் மேலும் 100 கனஅடிநீர் குறைக்கப்பட்டு 1100 கனஅடி திறக்கப்பட்டது. இதுதவிர மதுரைமாநகர குடிநீருக்கு 72 கனஅடி என மொத்தம் 1172 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 4528 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.60 அடி, வரத்து 7 கனஅடி, திறப்பு 10 கனஅடி, சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 95.44 அடி, திறப்பு 3 கனஅடி.

    பெரியாறு 5.2, வைகை அணை 37.2, சோத்துப்பாறை 8, பெரியகுளம் 11, போடி 5.6, ஆண்டிபட்டி 39.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
    மழை காரணமாக மீண்டும் மின் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. நள்ளிரவு வரை மின்சாரம் வருவதும், போவதுமாகவே இருந்தது. கிராமப்புற பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த பிப்ரவரி முதல் கோடை வெயிலின் தாக்கம் தொடங்கியது.

    மே மாதம் முதல் வாரத்தில் 105 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருந்தது. அனல் காற்று வீசியதால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். வெப்ப சலனம், வளிமண்டல சுழற்சியால் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.

    இதன்படி நேற்று இரவு 7 மணியளவில் புதுவையில் சிறு தூறலாக தொடங்கிய மழை, படிப்படியாக வேகம் எடுத்தது.

    பயங்கர சத்தத்துடன் இடி-மின்னல், பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் விடாமல் பெய்த மழையால் நகர பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். நகரின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. நகரமே இருளில் மூழ்கியது.

    மழை காரணமாக மீண்டும் மின் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. நள்ளிரவு வரை மின்சாரம் வருவதும், போவதுமாகவே இருந்தது. கிராமப்புற பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

    சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. பாகூரில் 2 தென்னை மரங்கள் மின்னல் தாக்கி தீ பற்றியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பாகூரில் கிராம பகுதிகள் மின்தடையால் இருளில் மூழ்கின.

    சில இடங்களில் சிறு, சிறு பனிக்கட்டிகளும் விழுந்தது. இடையார்பாளையம், முருங்கப்பாக்கத்தில் மின்னல் தாக்கி 2 தென்னை மரங்கள் சேதமானது.

    லெனின் வீதியில் ஒரு வீட்டிலும், லப்போர்த் வீதியில் ஒரு மரமும் சாய்ந்து விழுந்தது. இதை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர். இன்று காலை வானம் வெறித்து வெளிச்சமாக இருந்தாலும் வெப்பக்காற்று வீசவில்லை.
    மணிமுத்தாறு அணையில் 83.55 அடியும், சேர்வலாறு அணையில் 81.72 அடியும் நீர் இருப்பு உள்ளது.
    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த சாரல் மழையால் மாவட்டத்தில் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பிரதான அணையான பாபநாசம் அணையில் மட்டும் மழை பெய்தது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது 68.75 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு தற்போது 602.66 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணை நீர்மட்டம் 70 அடியை நெருங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் நெல் சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் ஜூன் 1-ந்தேதி முதல் பாபநாசத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மணிமுத்தாறு அணையில் 83.55 அடியும், சேர்வலாறு அணையில் 81.72 அடியும் நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 54 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

    தென்காசி மாவட்டத்தில் கடனா மற்றும் ராமநதி அணைகளுக்கு 21 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. கடனா அணையில் 43.80 அடியும், ராமநதியில் 52.25 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    மணிமுத்தாறு மற்றும் அகஸ்தியர் அருவிகளிலும், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். தற்போது மழை குறைந்துவிட்டதால் அருவிகளிலும் தண்ணீர் குறைந்துவிட்டது. ஆனாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மரம் முறிந்து விழுந்ததால் காம்பவுண்டு சுவர் சேதமடைந்தது. இதேபோல் போலீஸ் நிலையத்திலும் மரங்கள் சாய்ந்து விழுந்தது.
    நிலக்கோட்டை:

    கோடைவெயில் சுட்டெரித்து வரும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    நிலக்கோட்டை பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. துள்ளுப்பட்டியில் முனியம்மாள் என்பவர் வீடு மீது வேப்பமரம் சாய்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

    நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மரம் முறிந்து விழுந்ததால் காம்பவுண்டு சுவர் சேதமடைந்தது. இதேபோல் போலீஸ் நிலையத்திலும் மரங்கள் சாய்ந்து விழுந்தது. கோடைமழை குளிர்ச்சியை ஏற்படுத்திய போதிலும் இப்பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    கொைடக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. நேற்று பெய்த மழை கோடைவிழாவை வரவேற்கும் வண்ணம் இருந்தது. மதியம் சாரலாக தொடங்கிய மழை 4 மணிநேரம் சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது. இதனை ஊழியர்கள் சீரமைத்தனர்.
    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 53.75 அடியாக உள்ளது. அணைக்கு 326 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த மழை காரணமாக பேச்சிப்பாறை அணை நிரம்பி வருகிறது. பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

    கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. களியல், குழித்துறை, தக்கலை, திற்பரப்பு, அடையாமடை பகுதிகளில் மழை பெய்தது. சுருளோட்டில் அதிகபட்சமாக 21.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பேச்சிப்பாறை அணை பகுதியில் மழை குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.99 அடியாக உள்ளது. அணைக்கு 628 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 644 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 53.75 அடியாக உள்ளது. அணைக்கு 326 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 11.94 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 12.04 அடியாகவும் உள்ளது.

    சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 12 அடியை கடந்ததையடுத்து அணையின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.பொய்கை அணையின் நீர்மட்டம் 17.80 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 24.85 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் முக்கடல் அணை நீர்மட்டம் 8.10 அடியாக உயர்ந்துள்ளது. அணை நீர் மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
    பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை கோடை மழை பரவலாக பெய்து வந்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    கடந்த 2 நாட்களாக மழை குறைந்தது. இதன் காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 67.40 அடி நீர் இருப்பு உள்ளது.

    அணைக்கு தற்போது வினாடிக்கு 830.37 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 83.65 அடியும், சேர்வலாறு அணையில் 80.90 அடியும் நீர் இருப்பு உள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரு வாரத்தில் சுமார் 20 அடி வரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கன்னடியன் கால்வாய் பகுதியில் வருகிற 1-ந் தேதியில் இருந்து பாசனத்திற்காக பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி, செண்பகதேவி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. மெயினருவியில் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் குளித்து செல்கின்றனர்.

    அடவிநயினார் அணை பகுதியில் 3 மில்லி மீட்டரும், தென்காசியில் 1.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி கடனா அணையில் 43 அடியும், ராமநதி அணையில் 50.50 அடியும், கருப்பாநதி அணையின் 37 அடியும் நீர் இருப்பு உள்ளது. அடவிநயினார் அணையில் 55 அடி நீர் இருப்பு உள்ளது.


    ×