search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mutharamman"

    • முத்தாரம்மன் கமலவாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
    • பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்தசரா பெருந்திருவிழாவில் 8-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் கமலவாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். இன்று முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்குபல்வேறு சிறப்பு அபிசேகங்களும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    கோவிலில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து உள்ளனர்.மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விரதம் இருந்து வந்த பக்தர்கள் தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கைவசூல் செய்து வருகின்றனர். ஊர் பெயரை கொண்டு தசரா குழு அமைத்து நையாண்டி மேளம், தாரை தப்பட்டை, கரகம் காவடி, கோலாட்டம் மயிலாட்டம் என பல்வேறு கிராம தய கலைஞர்களுடன் இணைந்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சி நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.

    • கிராமங்கள் தோறும் கடலில் புனித நீர் எடுத்து கொண்டு வந்து அதை தசரா குடிலில் வைப்பார்கள்.
    • தசரா குழுக்கள் வசூல் செய்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் கொண்டு சேர்ப்பார்கள்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கிராமங்கள் தோறும் தசரா குடில் என்ற தசரா பிறை அமைத்து, கடலில் புனித நீர் எடுத்து கொண்டு வந்து அதை தசரா குடிலில் வைப்பார்கள். ஊர் பெயரில் தசரா குழு அமைத்து வேடமணியும் பக்தர்கள் தங்களது ஊர்குடிசையில் தினசரி இரவு ஒன்றாக கூடி அன்னை முத்தாரம்மனை பற்றி பாடல்கள் பாடி சிறப்புவழிபாடு நடத்துவார்கள். இரவு வீட்டுக்குச் செல்லாமல் தசரா குடிசையில் தங்கி விடுவார்கள்.

    7-ம் திருநாள் அல்லது 8-ம் திருநாள் அன்று விதவிதமான வேடங்கள் அணிந்து, நையாண்டி மேளம், கரகம், குறவன் குறத்தி காவடி, தாரை, தப்பட்டை உட்பட பல்வேறு கலைஞர்களுடன் இணைந்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்திஅம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வார்கள். 10-ம் திருநாளான அக்டோபர் 5-ந் தேதி இரவு தசரா குழுக்கள் வசூல் செய்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் கொண்டு சேர்ப்பார்கள். அதனால் ஏராளமான கிராமங்களில் தசரா குடில் அமைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

    • குலசேகரன்பட்டினத்தில் நாளை முத்தாரம்மன் கோவில் புதிய மண்டப அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.
    • அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழா விமரிசையாக நடைபெறும் கோவில் ஆகும்.

    இக்கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தண்டுபத்து சண்முக பெருமாள் நாடார்- பிச்சுமணி அம்மாள் அறக்கட்டளை சார்பில் அவரது மகன் ராமசாமி கோவில் முன்மண்டபம் நன்கொடையாக கட்டிக் கொடுக்கிறார்.

    இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு கோவில் வளாகத்தில் நடக்கிறது. விழாவில் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

    தொடர்ந்து கோவிலில் நடைபெறும் பவுர்ணமி திருவிளக்கு பூஜையிலும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். பக்தர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுசெல்லு மாறு தண்டுபத்து ராமசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

    • குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வருகிற 14-ந்தேதி மகா மண்டபம் கட்டும் பணி தொடங்குகிறது.
    • இதனை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்கிறார்.

    உடன்குடி:

    திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவிலில் ஒன்றாகும். இங்கு நடைபெறும் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும். இக்கோவிலில் பக்தர்கள்சாமிதரிசனம் செய்வதற்காக முன் முகப்புமண்டபம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தண்டுபத்து சண்முக நாடார்- பிச்சைமணி அம்மாள் அறக்கட்டளை சார்பில் இவர்களது மகன் ராமசாமி என்பவர் நன்கொடையாக மண்டபம் கட்டி கொடுக்கமுடிவு செய்துள்ளார். இதை யொட்டி மண்டபம் கட்டுவதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, அரசு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்துசமய அறநிலையத்துறையை சேர்ந்த இணை ஆணையர் அன்புமணி, நகைசரிபார்க்கும் துணை ஆணையர் வெங்கடேஷ், ஆய்வாளர் பகவதி மற்றும் அறநிலையத் துறை அலுவலர்கள் ஆகியோர் மண்டபம் உருவாகும் இடங்களை சுற்றிப்பார்த்து ஆய்வு செய்தனர். பின்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளகளிடம் கூறியதாவது:-

    மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முன் மண்டபம் கட்டும் பணியை மண்டபத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் அவரது பெற்றோர்களின் அறக்கட்டளை சார்பில் கட்டிகொடுக்க முடிவு செய்துள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த மண்டபம் கட்டும் தொடக்க விழா வருகிற 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இக்கோவிலில் வைத்து நடைபெறுகிறது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நட்டி, முன்மண்டபம் கட்டும் பணியை தொடங்கி வைக்கிறார்.

    வருகிற தசரா திருவிழாவிற்கு முன்பு இந்த மண்டபத்தை கட்டிவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது. மண்டபம் கட்டுவதற்கு பக்தர்களும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சுவாமி தரிசனம் செய்த அமைச்சரை கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியம், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தாண்டவன் காடு கண்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

    தொடர்ந்து கோவில் சார்பில்பூரணகும்ப மரியாதையுடன் அமைச்சரை வரவேற்றனர். அவருடன் ஏராளமான தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக வந்திருந்தனர்.

    குலசேகரன்பட்டினம் அம்பாளுக்கு முத்தாரம்மன் என்ற பெயர் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. அவையனைத்தும் பொருத்தமானதாகவே தெரிகிறது.
    அன்னை மகாசக்தி ஒவ்வொரு தலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் அருள்பாலிக்கிறாள். அந்த வகையில் குலசேகரன்பட்டினம் அம்பாளுக்கு முத்தாரம்மன் என்ற பெயர் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. அவையனைத்தும் பொருத்தமானதாகவே தெரிகிறது.

    பாண்டிநாடு முத்துடைத்து என்பார்கள். பாண்டிய மன்னர்கள் முத்துக்களைக் குவித்து தேவியாக நினைத்து வழிபட்டனர். அம்முத்துகள் அம்பாளாகத் திருமேனி கொண்டன. முத்துகளிலிருந்து அன்னை உதித்ததால் முத்தாரம்மன் என அழைக்கப்பட்டாள் என்பது ஒரு கருத்து.

    பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்குச் சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை, முத்தாரம்மன் எனவும் வழங்கலானாள். கிராமங்களில் அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு. முத்துக் கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தைச் சுற்றி நீர் கட்டச் செய்வர். இதன் மூலம் அம்மை நோய் (முத்துநோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் அன்னை, முத்து ஆற்று அம்மன், முத்தாரம்மன் எனஅழைக்கப்படுகிறாள்.

    சிப்பியிலிருந்து விடுபட்டது முத்து. முத்தைச் சிப்பி மூடியிருக்கிறது. உயிர்களை ஆணவ மலம் மூடி மறைத்துள்ளது. உயிர்களை மலக் கட்டுகளிலிருந்து விடுவித்தால், உயிர்கள் சீவன் முத்தர்கள் ஆவர். அம்பாள் சிப்பியிலிருந்து முத்துக்களைப் பிரித்தெடுப்பது போல உலக உயிர்களை மலக்கட்டு களிலிருந்து பிரித்துச் சீவன் முத்தர்களாக மாற்று கிறாள். இதனால் அன்னைக்கு, முத்தாரம்மன் என்ற பெயர் ஏற்பட்டது.

    இப்படி முத்தாரம்மன் பெயர் தோன்றியதற்கு பல கதைகள் உள்ளன. குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில், மற்ற பழைய கோவில்களை போல சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிட அமைப்புகளுடனோ அல்லது உயர்ந்த கோபுரங்கள் மற்றும் மாடவீதிகள் கொண்டதாகவோ அமையவில்லை. அந்த ஆலயம் மிகச்சிறிய ஆலயம்தான். ஆனால் முத்தாரம்மனின் அருளாட்சி வரையறுக்க முடியாத எல்லையாக பரவியுள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் சாதி, மத வேறுபாடின்றி குலசை முத்தாரம்மனை குலதெய்வம் போல வழிபடுகின்றனர். அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் குலசை முத்தாரம்மனின் நாமத்தை உச்சரிக்கத் தவறுவதில்லை.
    குலசேகரன்பட்டினம் தலத்தில் ஈசன் ஞானமூர்த்தீஸ்வராக மனித வடிவில் உள்ளார். அதுவும் அனைவரும் வியக்கும் வகையில் மீசையுடன் ஞானமூர்த்தீஸ்வரர் உள்ளார்.
    சென்னை திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி மீசையுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். வைணவத் தலங்களில் இங்கு மட்டுமே பெருமாள் மீசையுடன் உள்ளார்.

    சிவ தலங்களில் 99 சதவீதம் லிங்க வழிபாடுதான் செய்து இருப்பீர்கள். ஆனால் இத்தலத்தில் ஈசன் ஞானமூர்த்தீஸ்வராக மனித வடிவில் உள்ளார். அதுவும் அனைவரும் வியக்கும் வகையில் மீசையுடன் ஞானமூர்த்தீஸ்வரர் உள்ளார்.

    முத்தாரம்மனுடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் ஞானமூர்த்தீஸ்வரர் கதை என்னும் செங்கோலைத் தன் வலது கையில் தாங்கிய நிலையில் உள்ளார். அவர் விருப்பு, வெறுப்பின்றி இந்த உலகை ஆட்சி செய்கிறார் என்பதே இதன் தத்துவம். ஞானமூர்த்தீஸ்வரர் தன் இடது கையில் திருநீற்று கொப்பரை வைத்துள்ளார். அதில் உருவங்கள் எதுவும் பொறிக்கப்படவில்லை. விபூதி மட்டுமே அதில் உள்ளது.

    விபூதிக்கும் ஒரு விளக்கம் உள்ளது. வி என்றால் மேலான என்று பொருள். பூதி என்றறால் செல்வம் என்று அர்த்தம். மேலான செல்வத்தை பக்தர்களுக்கு அருளும் வல்லமை படைத்தவர் என்று இதற்கு பொருள்.

    ஞானமூர்த்தீஸ்வரர் என்று பெயர் பெற்றதற்கும் காரணம் இருக்கிறது. ஞானம் என்றால் பேரறிவு மூர்த்தி என்றால் வடிவம் என்று அர்த்தம். ஈஸ்வரர் என்பதற்கு ஈகை சுரப்பவர் என்று பொருள்.

    அதாவது ஞானமூர்த்தீஸ்வரர் என்றால் பேரறிவு உடைய வடிவத்தை தாங்கி ஈகை சுரப்பவர் என்று அர்த்தம். தவம் இருப்பவர்களுக்கு ஈஸ்வரன் பதிஞானம் வழங்குவதால் ஞானமூர்த்தி எனப்படுகிறார். ஞானமுடி சூடியிருப்பதாலும், ஞானபீடத்தில் எழுந்தருளிடயிருப்பதாலும் இவர் ஞானமூர்த்தியாக திகழ்வதாக சொல்கிறார்கள்.
    சக்தி தலங்களில் குலசை என்று அழைக்கப்படும் குலசேகரன்பட்டினத்தில் ஆட்சி செய்யும் முத்தாரம்மன் தலம் மிகமிக சக்தி வாய்ந்த தலமாக திகழ்கிறது.
    திங்கள் ஈராம் தினங்கள் ஓரேழும் திருப்பெயரை
    எங்கிருந்தாலும் புகழ்வேன் நான் செலும் இடங்களெல்லாம்
    மங்களம் பொங்கி மரபோங்கி வாழவரம் தருவாய்
    எங்கள் முத்தாரம்மையே! அகிலாண்ட நாயகியே போற்றி!

    தமிழ்நாட்டில் எத்தனையோ சக்தி தலங்கள் உள்ளன. காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி போன்று பெரும்பாலான ஊர்களில் அம்மன் ஆட்சி செய்கிறாள். அவளது அருள் எங்கும் நிரம்பி இருக்கிறது. என்றாலும் சக்தி தலங்களில் குலசை என்று அழைக்கப்படும் குலசேகரன்பட்டினத்தில் ஆட்சி செய்யும் முத்தாரம்மன் தலம் மிகமிக சக்தி வாய்ந்த தலமாக திகழ்கிறது. திருச்செந்தூருக்கு மிக, மிக அருகில் இந்த தலம் உள்ளது.

    தமிழ்நாட்டில் சக்தி ஆலயங்கள் தோறும் தற்போது நவராத்திரி திருவிழா நடத்தப்படுகிறது. ஆனால் குலசையில் நடக்கும் விழா தசரா திருவிழாவாக பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. இந்தியாவில் மைசூர் தசரா திருவிழாவைத்தான் மிகப்புகழ் பெற்றதாக சொல்வார்கள். ஆனால் குலசை தசரா திருவிழா அதையும் மிஞ்சி சாதனை படைத்து வருகிறது.

    குலசை தசரா மகிசா சம்ஹார தினத்தன்று சுமார் 15 லட்சம் பேர் திரள்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்தவொரு சக்தி தலத்திலும் இல்லாத அதிசயம் இது. ஆண்டுக்கு ஆண்டு குலசை முத்தாரம்மன் அருளை பெற பக்தர்கள் குலசைக்கு படையெடுத்தப்படி உள்ளனர். இந்த ஊர் இப்போதுதான் புகழ்பெற்றது என்று நினைக்காதீர்கள். சங்க காலத்திலேயே இந்த ஊர் புகழ் பெற்று இருந்தது.

    சங்க காலத்தில் குலசேகரன்பட்டினம் ‘‘தென் மறைநாடு’’ என்றழைக்கப்பட்டது. இந்த ஊர் கடல் பகுதி இயற்கையாகவே மிகப் பெரிய கப்பல்கள் வந்து செல்லும் வசதி கொண்டது. இதனால் சங்க காலத்தில் குலசேகரன்பட்டினம் துறைமுகம் மிகப் பெரும் வாணிப கேந்திரமாகத் திகழ்ந்தது. சங்க காலத்தில் தமிழர்கள் குலசேகரன்பட்டினம் துறைமுகம் வழியாகவே ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வந்தனர். அது போல ஆப்பிரிக்கர்களும் குலசேகரன்பட்டினம் வந்ததற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.

    சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் குலசேகரன்பட்டினம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அப்போது குலசேகரன்பட்டினம், வீரவளநாடு என்றழைக்கப் பட்டது. மூவேந்தர்களும் இந்த ஊர் துறைமுகம் வழியாகத்தான் நவதானியங்கள், தேங்காய், எண்ணை, மரம் போன்றவற்றை இறக்குமதி செய்தனர், உப்பு, கருப்பட்டி, கருவாடு, முத்து போன்றவற்றை ஏற்றுமதி செய்தனர். குலசேகரப் பட்டினத்தில் இருந்து சென்ற உப்பு ஒரு காலத்தில் உலகம் முழுவதும் வரவேற்பு பெற்று இருந்ததாக வரலாற்று குறிப்புகளில் உள்ளது.

    அரபு நாடுகளில் இருந்து பாண்டிய மன்னர்கள் குதிரைகளை குலசேகரன்பட்டினம் வழியாகத்தான் இறக்குமதி செய்தனர். இலங்கையை வென்ற சோழ மன்னன் இந்நகர் வழியாகத்தான் நாடு திரும்பினான். பாண்டிய மன்னன் சடையவர்ம சுந்தரபாண்டியனின் மகன் குலசேகரப் பாண்டியன் இப்பகுதியை கி.பி.1251ம் ஆண்டு முதல் சுமார் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

    குலசேகர பாண்டிய மன்னன், சுற்றியுள்ள சிற்றரசர்களிடம் போரிட்டு வெற்றிபெற்று தம் ஆதிக்கத்தை மதுரை முழுவதும் பரப்பினார். இதன் விளைவாக கேரளா நாட்டை கைப்பற்ற எண்ணி திருவனந்தபுர மன்னனிடம் தோல்வியுற்றான். வரும் வழியில் இரவு வெகு நேரமானதால் தூங்கிவிட்டான் பாண்டிய மன்னன். அவன்முன் அறம் வளர்த்த நாயகி அம்மன் தோன்றினாள்.

    “பாண்டிய மன்னா தூங்கிவிடாதே, தூங்கி உன் நாட்டின் பெருமை இழந்து விடாதே ஒருமுறை தோற்றால் என்ன? மறுமுறை முயற்சி செய் என்று அருள்வாக்கு சொல்லி ஆசிர்வதித்து மறைந்தாள். மீண்டும் மன்னன் படையெடுத்து வெற்றி பெற்றான். இதனால் அம்மனுக்கு கோயில் கட்டினான். கோவில் அருகே ஊர் அமைந்ததால் மன்னனின் நினைவாக குலசேகர பட்டினம் என பெயர் பெற்றது.

    சில நூற்றாண்டுகள் கழித்து ஆங்கிலேயர்கள் ஆட்சி ஏற்பட்ட போதும், குலசேகரன்பட்டினம் தன் முக்கியத்துவத்தை இழக்கவில்லை. குசேகரன்பட்டினத்தை சிறந்த துறைமுகமாக பயன்படுத்திய ஆங்கிலேயர்கள், பனை மரங்கள் தந்த பயனுள்ள பொருட்களை தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்வதற்காக திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு ரெயில் போக்குவரத்தையும் நடத்தி வந்தனர். அதே சமயத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்திலும் குலசேகரன்பட்டினம் முதன்மையாக இருந்தது. 1942-ம் ஆண்டு நாடெங்கும் ஆகஸ்டு புரட்சி ஏற்பட்ட போது குலசேகரன்பட்டினத்தில் ஆங்கிலேய அதிகாரி லோன் வெட்டிக் கொல்லப்பட்டார்.

    இத்தகைய சிறப்புடைய குலசேகரன்பட்டினம், நாடு விடுதலை அடைந்த பிறகு சில சிறப்புகளை இழந்து விட்டது. துறைமுகம் இல்லாமல் போய்விட்டது. ரெயில் போக்குவரத்து நடந்ததற்கான சுவடே மறைந்து போய் விட்டது.

    இத்தகைய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குலசேகரன்பட்டினம் ஊரின் பெயர் மீண்டும் நாடெங்கும் பேசப்படும் வகையில் உருவெடுத்துள்ளது. அதற்கு காரணம் குலசேகரன்பபட்டினத்தில் ஏற்பட்டுள்ள மாபெரும் ஆன்மீக புரட்சி. குலசேகரன்பட்டினத்தில் வீற்றிருந்து அருளாட்சி செய்து வரும் முத்தாரம்மன் கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்த்துள்ளாள். தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் குலசை வந்து முத்தாரம்மனை மனம் உருக வழிபட்டு மனதில் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

    குறிப்பாக புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா, இன்று குலசை பெயரை உலகம் முழுக்க வாழம் தமிழர்களிடம் மட்டுமின்றி எல்லா தரப்பினரிடமும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தலம் இந்தியாவின் முக்கிய சக்தி தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
    ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்த ஊர்களில் அதுவும் அடுத்தடுத்த மாதங்களில் நடக்கும் இந்த சூரசம்ஹாரங்கள் நிறைய ஒற்றுமைகளையும் - வேற்றுமைகளையும் கொண்டுள்ளன.
    அசுரர்கள் எனும் ஆணவ சக்தி தேவர்களையும், மக்களையும் துன்புறுத்தும் போதெல்லாம் இறைசக்தி புதிய அவதாரம் எடுத்து, அவற்றை அழிக்கும். இதற்கு சம்ஹாரம் என்று பெயர். சூரனை சம்ஹாரம் செய்வதால் சூரசம்ஹாரம் என்கிறோம்.

    உலகம் முழுவதும் தமிழர்களுக்கு, சூரசம்ஹாரம் என்றதும் திருச்செந்தூர் தலத்தில் கடலோரத்தில் நடக்கும் சூரசம்ஹாரம் தான் நினைவுக்கு வரும். தற்போது திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் நடக்கும் சூரசம்ஹாரமும் உலகப் புகழ் பெற்று வருகிறது.

    ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்த ஊர்களில் அதுவும் அடுத்தடுத்த மாதங்களில் நடக்கும் இந்த சூரசம்ஹாரங்கள் நிறைய ஒற்றுமைகளையும் - வேற்றுமைகளையும் கொண்டுள்ளன.

    சூரபன்மன் எனும் அரக்கனை ஒழிக்கவே முருக அவதாரம் நிகழ்ந்தது. அது போல மகிஷாசுரனை அழிக்க அம்பாள் முத்தாரம்மனாக அவதரித்தார்.
    முருகப்பெருமானுக்கு வலுவூட்டும் வகையில் ஐப்பசி மாதம் சுக்கிலபட்சத்தில் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருப்பது வழக்கம். அது போல அன்னை பராசக்தி வேள்வியில் வளர்ந்த 9 நாட்களும் அதாவது புரட்டாசி அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையில் இருந்து 9 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருப்பது வழக்கம்.

    சஷ்டியன்று திருச்செந்தூரில் முருகன் தேரில் எழுந்தருளி சூரபன்மனை சம்ஹாரம் செய்வார். குலசையிலும் முத்தாரம்மன் கடற்கரையில் தேரில் எழுந்தருளி மகிகனை சம்ஹாரம் செய்வாள்.

    முருகன் சம்ஹாரம் செய்யும் முன்பு சூரன் விதம் விதமான வேடங்களில் வருவான். அது போலவே குலசையிலும் மகிஷன் மூன்று வடிவங்களில் வருவான்.
    திருச்செந்தூர் கடற்கரையில் சூரபன்மனை தம் வேலால் முருகன் சம்ஹாரம் செய்வார். குலசையில் மகிஷனை சூலத்தால் அம்பாள் சம்ஹாரம் செய்வாள்.

    சம்ஹாரம் நடப்பதற்கு முன்பு திருச்செந்தூரில் வேலுக்கும் குலசையில் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவையெல்லாம் இரு தலத்திலும் உள்ள ஒற்றுமையான சம்ஹார தகவல்களாகும்.

    ஒரே ஒரு முக்கியமான வித்தியாசம் திருச்செந்தூரில் சூரபன்மன் முருகனால் சம்ஹாரம் செய்யப்படும் நிகழ்வுகள் அமைதியாக நடைபெறும். ஆனால் குலசையில் மகிஷன் அழிக்கப்படும் நிகழ்வு மிகவும் ஆக்ரோஷமாக நடைபெறும்.

    மற்றொரு வித்தியாசம் திருச்செந்தூரில் மாலை நேரத்தில் சூரசம்ஹாரம் நடத்தப்படும். குலசையில் நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறும்.
    திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகனை குளிர்விக்க அபிஷேகம் செய்வார்கள். குலசையிலும் அம்பாளுக்கு குடம், குடமாக பால் அபிஷேகம் நடைபெறும்.

    திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் 90 சதவீத பக்தர்கள் புறப்பட்டுச் சென்று விடுவார்கள். ஆனால் குலசையில் விடிய, விடிய தசரா குழுக்களின் ஆடல் நிகழ்ச்சி நடைபெறும். குலசை சூரசம்ஹாரத்தை திருச்செந்தூர் சம்ஹாரத்தில் இருந்து மிகவும் வித்தியாசப்படுத்தி காட்டுவது இதுதான்.

    மற்றப்படி இரு சூரசம்ஹாரத்துக்கும் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்துக்கும் கிடைக்காத இத்தகைய சிறப்பு தூத்துக்குடி மாவட்டத்துக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழாவில் கால மாற்றங்களுக்கு ஏற்ப வேடமிடுவதில் எத்தனையோ மாற்றங்களும், புதுமைகளும் வந்து விட்டன.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அருளைப் பெற விதம், விதமாக வேடம் போட்டு தர்மம் எடுத்து வழிபாடு செய்யும் பழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டது. ஆனால் அந்த பழக்கம் கடந்த நூற்றாண்டில் மற்ற ஊர்களுக்கும் பரவி தசரா திருவிழாவாக உருவெடுத்தது.

    அதன் பிறகு கால மாற்றங்களுக்கு ஏற்ப வேடமிடுவதில் எத்தனையோ மாற்றங்களும், புதுமைகளும் வந்து விட்டன. என்றாலும், ‘முத்தாரம்மன் அருள் பெறுவது ஒன்றே இலக்கு’ என்ற தசரா குழுவினரின் பாரம்பரிய மரபு மட்டும் மாறவே இல்லை. சில விஷயங்களில் மட்டும் மாற்றங்கள் வந்து விட்டன.
    முன்பெல்லாம் 41 நாட்கள் விரதம் இருப்பார்கள். இப்போது 21 நாட்கள், 11 நாட்கள் என்று சுருக்கி விட்டார்கள்.

    அந்த காலத்தில் முத்தாரம்மனை நினைத்து பயந்து, பயந்து விரதம் இருந்தனர். விரதம் தொடங்கியதும் கட்டிலில் படுக்க மாட்டார்கள். நாற்காலியில் உட்கார மாட்டார்கள். வெளியில் சாப்பிட மாட்டார்கள். வீட்டுக்கு கூட போகாமல் தனி குடிலில் இருப்பார்கள்.

    ஆனால் இன்று வேடம் அணிபவர்கள் சர்வ சாதாரணமாக புகை பிடிக்கிறார்கள். விரத நெறியை மீறும் இச்செயல் பாவம் சேர்க்கக் கூடியது. தசரா குழுக்களிடம் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஊரில் ஒரு தசரா குழு இருக்கிறது என்றால் 10 முதல் 50 பேர் வரைதான் இருப்பார்கள். ஆனால் இன்று 50 முதல் 150 பேர் வரை இருக்கிறார்கள்.

    இது போல ஒவ்வொரு விஷயத்திலும் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தசரா குழுவினர் நடந்தே ஊர், ஊராக செல்வார்கள். ஆனால் இப்போது வாகன வசதி வந்து விட்டது. முன்பு 5 ரூபாய் முன்பணம் கொடுக்க கஷ்டப்படுவார்கள். ஆனால் இப்போது வேடமிடுபவர்களிடம் பணம் ஒரு பிரச்சினையாக தெரியவில்லை.

    முன்பெல்லாம் ஒரு குழுவுக்கு அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்தான் செலவாகும். இப்போது பல லட்சம் செலவிடுகிறார்கள். முன்பு ஆடை அலங்காரத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. இப்போது அலங்காரங்கள் கன கச்சிதமாக போடப்படுகின்றன. முன்பு விரத முறைகளில் கடுமை இருக்கும். சிலர் விரத நாட்களில் வீட்டுக்கே வர மாட்டார்கள். உணவு, தூக்கம் மற்றும் தினசரி பழக்க வழக்கங்களில் கடும் கட்டுப்பாடுகள் உண்டு. குலசையில் கொடி இறங்கிய பிறகுதான் வீட்டுக்கு வர முடியும். தற்போது அது மாறி விட்டது.

    முன்பெல்லாம் ஒரு குழுவில் 4 அல்லது 5 பேர்தான் காப்பு கட்டுவார்கள். இப்போது வேடமிடும் எல்லாரும் காப்பு கட்டுகிறார்கள். அது போல காப்பு கட்டிய பிறகுதான் வேடம் போட வேண்டும். ஆனால் கடந்த சில வருஷங்களாக காப்பு கட்டும் முன்பே பலரும் கம்மல் போட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் பெண் வேடம் போடப் போகிறார்கள் என்று ஒரு மாதத்துக்கு முன்பே தெரிந்து விடுகிறது.

    ‘அம்மா..... தாயே.... உன் அருளைப் பெற பிச்சை எடுக்கும் இழி நிலைக்கும் கீழாக என்னை நான் தாழ்த்திக் கொள்கிறேன்’ என்று மனதுக்குள் பயப்பக்தியுடன் வேண்டியபடி ஒவ்வொருவரும் நடந்து கொள்வார்கள். ஆனால் இப்போது வேடம் போடுபவர்கள் தங்களை அலங்கரிக்கும் ஆடைகளுக்கு மட்டுமே பல ஆயிரம் ரூபாய் செலவு செய்வது பிரமிப்பாக உள்ளது.

    அந்த காலத்தில் இப்படியெல்லாம் அலங்காரப் பொருட்கள் கிடைக்கவில்லை. உருளைக் கிழங்கு, வாழைக்காய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை கயிறில் கட்டி, கழுத்தில் தொங்க விட்டிருப்பார்கள். வறுமை காரணமாக காதில் கம்மலுக்கு பதில் வத்தலை கட்டி அணிந்திருப்பார்கள். இந்த வேடங்களை மக்கள் ஆர்வமாக வந்து பார்ப்பார்கள்.

    குலசை கோவிலுக்கு வேடம் போட்டிருப்பவர் ஊர் எல்லையில் வந்து இருக்கிறார் என்றால் ஊரே திரண்டு வரும். வீடு தவறாமல் தர்மம் தருவார்கள். அந்த நிலை இப்போது இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காளிவேடம் அணிந்து இருப்பவர் ஒரு ஊருக்குள் சென்றால், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மனே நம் வீட்டுக்கு வந்து விட்டதாக நினைப்பார்கள். பணிவோடு அருள்வாக்கு கேட்பார்கள். காளி என்ன காணிக்கை கேட்டாலும் மறுக்காமல் கொடுப்பார்கள்.

    இப்போது காணிக்கை கேட்டால் ‘பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்கிறார்கள். தசரா குழுக்களிடம் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள்தான் மக்கள் மன நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.

    குலசை முத்தாரம்மனை நம்பியவர்கள் வாழ்வில் நல்லதே நடந்துள்ளது. குலசை சுற்றுப் பகுதியில் வறுமையால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் அத்தியாவசிய தேவையை கூட பெற வழியில்லாமல் இருந்தவர்கள் இன்று வசதி வாய்ப்புகளுடன் செல்வ செழிப்பான நிலையில் இருக்கிறார்கள் என்றால் அது முத்தாரம்மன் அருளால் நடந்த மகிமைதான். 
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா தோன்றியதற்கு ஒரு கதை உண்டு. அந்த கதை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குலசையில் தசரா விழா தோன்றியதற்கு ஒரு கதை உண்டு. முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவர் இருந்தார். அவர் தவத்தில் சிறந்தவர். ஒரு நாள் அவரது இருப்பிடம் வழியாக மகா முனிவரான அகத்தியர் வந்தார். அவரை பார்த்தும், பார்க்காதது போல் இருந்த வரமுனி ஆணவ செருக்கால் மதிக்கவில்லை. மாறாக அகத்தியரை அவமதிக்கவும் செய்தார். இதை கண்டு கோபம் அடைந்த அகத்தியர் வரமுனிக்கு கடும் சாபம் கொடுத்தார். ‘வரமுனியே! நீ உன் உருவம் இழந்து எருமை தலையும், மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாய்!’ என்றார். அக்கணமே வரமுனி எருமை தலையும், மனித உடலும் பெற்று மகிஷாசுரனாக மாறினார். முனிவர்களை கொடுமைப்படுத்தினார்.

    மகிஷாசுரனின் கொடுமையை தாங்க முடியாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தினர். அவர்கள் வேள்வியில் தோன்றிய அன்னை ஆதிபராசக்தி மகிஷாசுரனை அழிக்க, விரதம் இருந்து அவனோடு போர் புரிய புறப்பட்டாள். மகிஷாசுரனை அழித்த 10-ம் நாள் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் விதத்தில் தசரா விழாவின்போது பக்தர்கள் அம்மன், கடவுள் வேடங்களை தரித்து கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    காளிவேட மகிமை

    குலசேகரன்பட்டினம் தசரா விழாவின்போது ஆண்கள் காளி வேடமிட்டு வருவதை பார்க்கலாம். காளி வேடத்தில் இருப்பவர்களை கண்டதும் அம்மனே நேரில் வந்ததாக பக்தர்கள் நினைத்து வழிபட்டு, காணிக்கை அளித்து அருள்வாக்கு பெறுவதும் வழக்கமாக உள்ளது. அம்மன், சூரனை சூலாயுதத்தால் குத்தும்போது இவர்களும் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகிஷனை குத்துவார்கள்.

    காளிவேடம் போடுபவர்கள் தசராவின்போது 48 நாட்கள் விரதம் இருப்பர். அந்நாட்களில் ஒருவேளை மட்டுமே சைவ உணவு சாப்பிடுவார்கள். அவரவர் ஊரின் கோவில்களில் தங்கி தானே சமைத்து, காலை, மாலை இரு வேளையும் குளித்து விரதம் மேற்கொள்வார்கள். கொடியேற்றத்திற்கு பின் இவர்கள் ஊர், ஊராக செல்வார்கள்.

    தலையின் பின்புறம் தொங்கும்படி கட்டப்பட்ட நீண்ட முடியுடன், தகரத்தாலும், அட்டையாலும் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்ட கிரீடம், நேர்பார்வை மட்டுமே பார்க்க தக்கவாறு சிறு துளையிடப்பட்டுத் தகரத்தால் செய்யப்பட்ட கண்மலர், வாயின் இருபுறமும் செருகி கொள்ளக்கூடிய வீர பற்கள், வெளியில் தொங்கும் நாக்கு, முகத்தில் சிவப்பு நிற பூச்சு, மரப்பட்டையாலும், இரும்பு தகடாலும், அட்டையாலும் செய்யப்பட்ட பக்கத்துக்கு நான்கு என்ற முறையில் 8 கைகள், சிவப்பு புடவை, மனித தலைகள் வரையப்பட்ட அட்டை மாலை, ருத்திராட்ச மாலைகள், பாசி மாலைகள், இடையில் ஒட்டியாணம், காலில் கனத்த சலங்கைகள், கையில் இரும்பு வாள் இவையே காளியின் அவதாரமாக அணிவதற்கு உரிய பொருட்கள். இப்பொருட்களின் மொத்த எடை 30 கிலோ இருக்கும். சமீபகாலமாக முத்தாரம்மன் அருள்பெற இளம்பெண்களும் காளி வேடம் போட தொடங்கி உள்ளனர்.
    அகிலாண்டகோடி பிரமாண்டநாயகி அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றி ஞானமூர்த்தீஸ்வரருடன் ஒருசேர அமர்ந்திருக்கும் அருட்தோற்றம் காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும்.
    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 11 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கடற்கரை கிராமம் குலசேகரன்பட்டினம். இவ்வூரில் உள்ள முத்தாரம்மன் கோவில் உலக பிரசித்திப் பெற்றது. அகிலாண்டகோடி பிரமாண்டநாயகி அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றி ஞானமூர்த்தீஸ்வரருடன் ஒருசேர அமர்ந்திருக்கும் அருட்தோற்றம் காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும்.

    பொதுவாக பூமியில் இருந்து தானாக சுயம்பு லிங்கம் தோன்றி கோவில்களில் அருள்பாலிப்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். குலசேகரன்பட்டினம் திருத்தலத்தில் அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றியிருப்பது அதிசயங்களில் ஒன்று. அதனால் இங்கு அம்மன் சக்தி வாய்ந்தவளாக காட்சி அளிக்கிறாள். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு முத்தான வாழ்வை அருள்கிறாள்.

    முத்தாரம்மன் அருகே ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் முக்கிய சிறப்பாகும். இதுபோல அம்மனும், சிவனும் ஒருசேர வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாசி புரிவது இத்தலத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சிவாலயங்களில் லிங்க வழிபாடு தான் நடைபெறும். ஆனால் இத்திருத்தலத்தில் பரமேஸ்வரன், ஞானமூர்த்தீஸ்வரராக மனிதவடிவில் உள்ளார். அவருடைய திருக்கோலம் வியப்புடன் மீசையுடன் உள்ளது. விருப்பு, வெறுப்பின்றி இந்த உலகை ஆட்சி செய்யும் வகையில் அவர் தனது வலது கையில் செங்கோலை தாங்கி உள்ளார். இடது கையில் திருநீற்று கொப்பரை வைத்துள்ளார்.

    ‘ஞானம்’ என்றால் ‘பேரறிவு’. ‘மூர்த்தி’ என்றால் ‘வடிவம்’ என்று அர்த்தம். ஈஸ்வரர் என்பதற்கு ‘ஈகை சுரப்பவர்’ என்று பொருள். அதாவது ஞானமூர்த்தீஸ்வரர் என்றால், பேரறிவு உடைய வடிவத்தை தாங்கி ஈகை சுரப்பவர் என்று அர்த்தம். ஞானமுடி சூடியிருப்பதால் இவர் ஞானமூர்த்தியாக விளங்குகிறார்.

    பாண்டி நாடு முத்துடைத்து என்பர். பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாக கொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர். எனவே அம்பிகை முத்தாரம்மன் என அழைக்கின்றனர். அம்மை போட்டவர்களுக்கு முத்து போட்டதாக கூறுவர். முத்துக்கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தை சுற்றி நீர் வழிந்தோட செய்வர். இதன் மூலம் அம்மை நோய் (முத்து நோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றி குணப்படுத்தியதால் அன்னை முத்து ஆற்று அம்மன், முத்தாரம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.

    கனவில் தோன்றிய அம்மன்

    அகிலம் போற்றும் நாயகி, அன்னை முத்தாரம்மனை திருமேனியாக கண்குளிரக் கண்டு தரிசிக்க மக்கள் விரும்பினர். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்ற அன்னை திரு உளம் கொண்டார்.

    கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், கன்னியாகுமரி அருகே மைலாடி என்ற ஊருக்கு செல்லும்படி கட்டளையிட்டார். அதேபோல மைலாடியில் உள்ள ஒரு சிற்பியின் கனவில் தோன்றி தனது உருவம் மற்றும் ஞானமூர்த்தீஸ்வரர் திருமேனியுடன் சிற்பிக்கு காட்சி அளித்து அங்குள்ள ஆண், பெண் பாறையில் ஒரே கல்லில் ஒரே பீடத்தில் தங்கள் திரு உருவ சிலையை வடித்து கொடுக்கும்படி உத்தரவிட்டார். பின்னர் அந்த சிலையை தாங்கள் சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் இடத்தில் வைக்க உத்தரவிட்டார். சிற்பி மெய்சிலிர்த்து போனார். உடனே அவர் அம்மன் கனவில் கூறியவாறு அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை வடித்தார். இறையருள் ஆட்விக்க குலசை அர்ச்சகர் மைலாடி சென்றார். சிற்பி ஏற்கனவே ஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மன் சிலையை செய்து வைத்து இருந்தார். அதை அர்ச்சகர் பக்தி பரவசத்துடன் பெற்று கொண்டு குலசேகரன்பட்டினம் திரும்பினார். அன்னையின் விருப்ப படியே அந்த சிலை சுயம்புவாக அம்மன் எழுந்தருளி உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலயத்தின் தல மரம் ேவம்பு.

    தசரா விழா

    தசரா என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது மைசூர் தான். தமிழ்நாட்டில் குலசேகரன்பட்டினத்தில் மைசூரை மிஞ்சுகிற அளவிற்கு ஆண்டுதோறும் பிரமாண்ட தசரா விழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் நாடு முழுவதிலும் இருந்து 10 லட்சம் முதல் 15 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவன், கிருஷ்ணன், காளி உள்ளிட்ட வித, விதமான வேடத்தில் வலம் வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மேள வாத்தியங்கள் முழங்க ஒவ்வொரு குழுவினரும் ஆடி, பாடி ஆனந்த வெள்ளத்தில் திளைக்க வைப்பர்.

    அம்பிகை 9 இரவுகள் பல்வேறு ஆயுதங்களை வைத்து பூஜை செய்தாள். இது நவராத்திரி என அழைக்கப்படுகிறது. 10-ம் நாள் விஜயதசமி அன்று மகிஷனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடினாள். இதை நினைவுகூரும் வகையில் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். 10-ம் நாள் விஜயதசமி தினத்தன்று மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி கடலோரத்தில் நடைபெறும். அன்று மக்கள் கூட்டம் கடல்போல காட்சி அளிக்கும்.

    இதையடுத்து சிதம்பரேஸ்வரர் கோவிலை அன்னை வந்தடைவாள். அங்கு அன்னைக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மறுநாள் காலை பூஞ்சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அன்னை அருள்புரிவாள். மாலை கோவிலை அம்மன் வந்தடைந்த பின்னர் கொடி இறக்கப்படும். தொடர்ந்து சுவாமி, அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் காப்புகள் களையப்படும். இதேபோல் காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் தங்கள் காப்புகளை களைந்துவிடுவார்கள். 12-ம் நாள் பகலில் முத்தாரம்மனை குளிர்விப்பதற்காக குடம் குடமாக பாலாபிஷேகம் நடத்தப்படும். அத்துடன் தசரா விழா இனிதே நிறைவடையும்.

    ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்


    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 11 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து குலசை செல்பவர்கள் திருச்செந்தூர் வரை ரெயிலில் சென்று, அங்கிருந்து பஸ்சில் செல்லலாம். திருநெல்வேலி வரை ரெயிலில் வந்து அங்கிருந்து 68 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோவிலை பஸ், கார் மூலம் சென்றடையலாம். தூத்துக்குடி வரை வர முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளது. விமானத்தில் செல்ல விரும்புபவர்கள் திருவனந்தபுரம், மதுரை, தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கார் மூலம் இத்தலத்தை அடையலாம்.
    தசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்புக்கட்டி வேடம் போடுபவர்கள் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    தசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்புக்கட்டி வேடம் போடுபவர்கள் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போதுதான் அன்னையின் பேரருளை பரிபூரணமாய் வேடம் போடுபவர்கள் பெற முடியும்.

    வேடம் போடும் பக்தர்கள் உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். காப்பு கட்டிய பிறகே வேடம் அணிதல் வேண்டும்.

    சமீபகாலமாக சில ஊர்களில் பக்தர்கள் குலசேகரன் பட்டிணத்தில் கொடி ஏறும் முன்பே மூக்குத்தி, கம்மல், வளையல், கொலுசு போன்ற அலங்காரங்களை செய்யத் தொடங்கி விடுவார்கள். இது ஆலய ஐதீக வழிபாட்டு முறைகளுக்கு எதிரானது.

    ‘‘காப்பு கட்டும் முன்பு ஏன் இப்படி வேடம் போடுகிறீர்கள்?’’ என்று கேட்டால், ‘‘காப்பு கட்டிய தினத்தன்று காது குத்தினால் கம்மல் போடும் போது வலிக்கும். இப்போதே காது குத்தி கம்மல் போட்டு விட்டால் காப்பு கட்டி வேடமணிந்து ஆடும் போது வலிக்காது. கம்மல் போட்டிருப்பதும் பழகி விடும்’’ என்கிறார்கள்.
    வலியோடு ஆட முடியாது என்பதற்காக ஒரு மாதத்துக்கு முன்பே கம்மல் அணிந்து, சிவப்பு கலரில் வேட்டி உடுத்துவதாக சொல்கிறார்கள். அம்மனுக்காக நம்மையே நாம் தாழ்த்திக் கொண்டு வேடம் அணியும் போது, வலியை காரணம் காட்டி விதிகளை மீறுவது எந்த வகையில் தர்மமாகும்?

    வேடம் அணிபவர்கள் அது எந்த வேடமாக இருந்தாலும் அது புனிதமானது என்பதை முதலில் உணர வேண்டும். அந்த வேடத்துக்குரிய புனிதத்தன்மையை பேணிப் பாதுகாக்க வேண்டும். சமீப காலமாக பல பக்தர்கள் அந்த புனிதத்தை காப்பாற்றுவதில்லை என்ற வேதனை தசரா குழுக்களில் உள்ள மூத்த உறுப்பினர்களிடம் காணப்படுகிறது.

    விரதம் இருந்து வேடம் அணியும் பக்தர்கள் வெளி இடங்களில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள் என்ற கடுமையான விதிமுறை முன்பொரு காலத்தில் இருந்தது. ஆனால் தற்போது வேடம் அணிபவர்கள் சர்வ சாதாரணமாக ஓட்டல்களில் டீ குடிக்கிறார்கள்.

    சிலர் புகை பிடிக்கும் தவறை செய்கிறார்கள். தற்காலிகமாக மாலையை கழற்றி கையில் வைத்து கொண்டு, புகை பிடிக்கிறார்கள். பிறகு மாலையை மீண்டும் போட்டுக் கொள்வார்களாம். இது மிகப்பெரிய பாவமாகி விடும் என்று ஆன்மிக பெரியவர்கள் எச்சரிக்கிறார்கள்.

    வேடம் போடுபவர்கள் எப்போதும் அன்னையின் திருநாமங்களை உச்சரித்தப்படி இருத்தல் வேண்டும். அன்னைக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்தல் வேண்டும். அதுதான் முத்தாரம்மனின் பேரருளைப் பெற்றுத் தரும்.

    ×