search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Molestation"

    • ஐதராபாத்தில் கடந்த வாரம் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற சிறுமியை காரில் கடத்திச் சென்று 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
    • ஐதராபாத்தில் மீண்டும் ஒரு சிறுமி காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பதி:

    ஐதராபாத்தில் கடந்த வாரம் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற சிறுமியை காரில் கடத்திச் சென்று 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்தில் அரசியல் பிரமுகர்களின் மகன்கள் ஈடுபட்டதாக தெலுங்கானா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் எதிர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் ஐதராபாத்தில் மீண்டும் ஒரு சிறுமி காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

    ஐதராபாத், பகாடி ஷரிப், ஷகினா நகர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. சிறுமியின் தாய் மாமா வீடு சுல்தான் ஷகி பகுதியில் உள்ளது. கடந்த மாதம் 31-ந் தேதி மாலை 6 மணிக்கு தனது தாய் மாமா வீட்டிற்கு சென்றார்.

    இரவு 8 மணி அளவில் மீண்டும் தனது வீட்டிற்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். ஷெரிப் காமன் என்ற இடத்தில் வந்த போது, காரில் வந்த டிரைவர் காரை நிறுத்திவிட்டு சிறுமியிடம் இரவு நேரத்தில் தனியாக எங்கே செல்கிறாய் என்று விசாரித்தார்.

    அப்போது சிறுமி தன்னுடைய வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தார். சிறுமியை காரில் அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாக கார் டிரைவர் தெரிவித்தார்.

    இதனை நம்பிய சிறுமி காரில் ஏறி உட்கார்ந்தார். அப்போது கார் டிரைவர் தனது நண்பரான முகமத் ருக்தே அஹமதிற்கு போன் செய்து வரும் வழியில் காரில் ஏறிக் கொள்ளும்படி தெரிவித்தார். அவரது நண்பரும் வழியில் காரில் ஏறிக்கொண்டார். இதையடுத்து கார் டிரைவர் தனது வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்றனர். பின்னர் கார் டிரைவர் மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    நள்ளிரவு 12 மணிவரை சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர்.சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அதிகாலை 5 மணி அளவில் சுல்தான் ஷகி அருகே சிறுமியை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு தப்பிச் சென்றனர். அந்த வழியாக சென்றவர்கள் சிறுமி மயக்கமடைந்து கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    இதில் கார் டிரைவர் ஷேக் கலீம் ஹாலி மற்றும் அவரது நண்பர் முஹமத் ருக்தே அஹமத் இருவரும் சிறுமியை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து போலீசார் 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஐதராபாத்தில் அடுத்தடுத்து நடந்த சிறுமி கற்பழிப்பு சம்பவங்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாடு அரசால் வெளியிடப்படும் அனைத்து பாடப்புத்தகங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பிற்கான மாணவர் உதவி எண் குறித்த விழிப்புணர்வுச் செய்தி வரும் கல்வியாண்டிலிருந்து அச்சிடப்பட்டு வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான ‘சர்வதேச நாள்’ இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சியில் வேண்டுகோள் ஒன்று விடுத்துள்ளார்.

    சமீபகாலமாக நாம் அதிகம் கேள்விப்படும் செய்தி ஒன்று என்னை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கிக் கொண்டு வருகிறது.

    பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அதைத்தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான செய்தியைக் கேள்விப்படும் போது உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவமானமாக இருக்கிறது.

    அறத்தையும் பண்பாட்டையும் அதிகம் பேசும் ஒரு சமூகத்தில் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் முன்னேறிய ஒரு நாட்டில் அறிவியலும், தொழில் நுட்பமும் வளர்ந்த காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட கேவலமான, அருவருப்பான செயல்களும் நடக்கத்தான் செய்கின்றன என்பது வெட்கித் தலைகுனிய வைக்கிறது. இவற்றைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது! விட்றாதீங்கப்பா என்று அந்தக் குழந்தைகள் கதறுவது என் மனதிற்குள் ஒலிக்கிறது.

    பள்ளிகளில், கல்லூரிகளில், பணிபுரியும் இடங்களில் பொது வெளிகளில் பெண்களும், குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அதில் சில சம்பவங்கள்தான் வெளியில் வருகிறது. மற்றவை அப்படியே மறைக்கப்படுகிறது.

    அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் கலைஞர் ஒரு படத்தில், 'மனச்சாட்சி உறங்கும் சமயம் பார்த்துத்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது' என்று எழுதினார். அப்படி மனச்சாட்சியற்ற மனிதர்களால் பெண் பிள்ளைகள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை நாம் நாகரிகத்தையும் பண்பாட்டையும் பற்றிப் பேசுவதில் எந்தப்பொருளும் இல்லை.

    சக உயிராக பெண்ணைப் பார்க்கும் எண்ணம் தோன்றாத வரை இதனைத் தடுக்க முடியாது.

    உடல் ரீதியாக ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு மாறாகச் செய்யப்படும் வெளிப்படையான பாலியல் சீண்டல்களுக்கு எதிராக எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன.

    அந்தச் சட்டங்களுக்கு முன்னால் நிறுத்தப்பட்டு இத்தகைய நபர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று நான் இந்த நேரத்தில் உறுதி அளிக்கிறேன்.

    இப்படியான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்கள், குழந்தைகள் அதைப்பற்றி வெளிப்படையாகப் புகார் தருவதற்கு முன் வர வேண்டும்.

    பள்ளியின் ஆசிரியர்களிடம், தலைமை ஆசிரியரிடம், பெற்றோர்களிடம்,சக அதிகாரிகளிடம், நிர்வாகத்திடம் புகார்களைத் தர வேண்டும். அந்தப் புகார் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களும் தயங்கக் கூடாது.

    புகாரை வாங்கினால் பள்ளியின் பெயர் கெட்டுப்போகும் என்று பள்ளி நிர்வாகமும் தனது மகளுக்கு நடந்ததை வெளியில் சொன்னால் ஊரார் தவறாகப் பேசுவார்கள் என்று பெற்றோரும் நினைக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அது உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்குச் செய்யும் மாபெரும் துரோகமாக ஆகிவிடும்.

    பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படும் பெண், உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுகிறார்.

    உடல் வலியோடு உள்ளத்து வலியும் ஏற்படுகிறது. அவமானம் அடைகிறார். ஊக்கம் குறைகிறது, நம்பிக்கை தளர்ந்து போகிறது, சக மனிதர்கள் மீதே வெறுப்பு வளர்கிறது,

    ஆண்கள் மீதே கோபம் அதிகம் ஆகிறது, கல்வியிலோ வேலையிலோ கவனம் செலுத்த முடியாதவராக ஆகிறார்.

    அந்தப் பெண்ணின் அனைத்துச் செயல்பாடுகளுமே இதனால் தடைபடுகிறது. அவரது எதிர்காலமே கேள்விக்குறியாகிறது.

    இத்தகைய சரிவுகளில் இருந்து பெண் குலத்தை காக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது

    இதை மற்ற அனைத்துப் பிரச்சினைகளையும் விட மிக முக்கியமான பிரச்சினையாக தமிழ்நாடு அரசு கருதுகிறது.

    தமிழக அரசு

    பாலியல் தொல்லைகள், சீண்டல்கள் குறித்த புகார்கள் வந்ததும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீங்களே கடந்த சில நாட்களாக அதனைச் செய்திகளில் பார்த்துக் கொண்டு வருகிறீர்கள்.

    உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர இந்த அரசு தயங்காது!

    * குழந்தைகளுக்கான உதவி எண் 1098 அரசின் நடைமுறையில் உள்ளது.

    எந்தக் குழந்தையாக இருந்தாலும் தனக்கு ஒரு பாதிப்பு என்றால் 1098 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    ரகசியம் காத்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

    * அதேபோல் சென்னை டி.பி.ஐ. அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கல்வித் தகவல் மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் உளவியல் பயிற்சி பெற்ற நிபுணர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். பாலியல் வன்முறை தொடர்பாக மாணவர்களிடம் இருந்து பெறப்படும் புகார்களுக்கு, தக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    *குழந்தைகளின் பாதுகாப்பினை பள்ளிகள் உறுதி செய்ய சுய தணிக்கைப் பட்டியல் பள்ளிக் கல்வித்துறையால் கடைப்பிடிக்கப்படுகிறது.

    * பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்தடுப்பு பிரிவு தலைமையகத்தில் இணையதளக் குற்றப்பிரிவு (சைபர் கிரைம்) காவல்நிலையம் அமைக்கப்பட்டு காவல் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

    * பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக நிதியம் ஒன்று செயல்படுகிறது.

    *போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் முறையாகச் செயல்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 16 மாவட்டங்களில் போக்சோ நீதிமன்றங்கள் அமைந்துள்ளது. மேலும், 4 மாவட்டங்களில் நிறுவ ஆணையிடப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளையும் விரைந்து முடித்து உண்மைக் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர உத்தரவிட்டுள்ளேன்.

    *குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

    *குழந்தைப் பாதுகாப்பு குறித்து சிறப்பாக செயல்படுவதற்கு, இந்தியாவிலேயே முதன்முதலாகத், தமிழ்நாடு மாநில குழந்தை பயிற்சி மையம் யுனி செப் உதவியுடன் செயல்பட்டு வருகிறது.

    *குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி ஆசிரியர்களுக்கும் காவலர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    * தமிழ்நாடு அரசால் வெளியிடப்படும் அனைத்து பாடப்புத்தகங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பிற்கான மாணவர் உதவி எண். 14417 குறித்த விழிப்புணர்வுச் செய்தி வரும் கல்வியாண்டிலிருந்து அச்சிடப்பட்டு வழங்கப்படும்.

    *சில நாட்களுக்கு முன்னால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், குழந்தைகளுக்கான கொள்கை 2021 என்ற கொள்கைக் குறிப்பேட்டை தலைமைச் செயலகத்தில் நான் வெளியிட்டேன்.

    ஒவ்வொரு குழந்தையையும் அனைத்து விதமான சுரண்டல்களில் இருந்தும் வன்முறைகளில் இருந்தும் காக்கும் அறிக்கையாக அது அமைந்துள்ளது.

    குறிப்பாக குழந்தைகளுக்கான பாதுகாப்பு அதில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அரசு காட்டும் அதே அக்கறையை பள்ளி, கல்லூரி நிர்வாகங்களும் காட்ட வேண்டும். தங்களிடம் பயிலும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்தாக வேண்டும்.

    பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளோடு எளிமையாகவும் இனிமையாகவும் பழக வேண்டும். ஒரே வீட்டுக்குள் தனித்தனித் தீவுகளாக வாழ வேண்டாம்.

    அன்புக் குழந்தைகளே உங்களை அன்போடும் பாதுகாப்போடும் வளர்க்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது.

    ஒரு முதல்-அமைச்சராக மட்டுமில்லாமல் ஒரு தந்தையாகவும் இருந்து உங்களைக் காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.

    தயவு செய்து யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

    ஒரு பெண் குழந்தை தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் அவர் இந்த சமூகம் மொத்தத்தையும் குற்றம் சாட்டிவிட்டு மரணம் அடைகிறார் என்று பொருள்.

    வாழ்ந்துதான் போராட வேண்டும். வாழ்ந்து காட்டுவதன் மூலமாகத்தான் உங்களிடம் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர முடியும். எனவே யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று ஒரு தந்தையாக, உங்கள் சகோதரனாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    இதையும் படியுங்கள்...இந்தியாவில் முதல்முறையாக ஆண்களை விட பெண்களே அதிகம்- ஆய்வில் தகவல்

    கோவை அருகே பள்ளி மாணவியை அடிக்கடி மிரட்டி கற்பழித்ததால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மாணவிக்கு கடந்த ஜனவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சரவணகுமார் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. மாணவியை சரவணகுமார் திருமண ஆசை காட்டி தனியாக அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்தார். எதையும் வெளியே சொல்லக்கூடாது என அவர் மாணவியை மிரட்டினார். மேலும் அடிக்கடி மாணவியை மிரட்டி அவருடன் உல்லாசமாக இருந்து வந்தார். இதனால் மாணவி கடந்த சில நாட்களாக மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி அங்குள்ள கழிப்பறைக்கு சென்று பிளேடால் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மாணவியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் மாணவியின் பெற்றோர் அவரிடம் எதற்காக தற்கொலை செய்ய முயன்றாய் என விசாரணை நடத்தினர். விசாரணையில் சரவணகுமார் அடிக்கடி தன்னை அழைத்து மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்ததால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். இதனை கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து மாணவி துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை மிரட்டி கற்பழித்த சரவணகுமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருச்செந்தூர் அருகே சிறுமியை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குறித்து பால் வியாபாரி-நண்பர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி தெற்கு தெருவை சேர்நதவர் ராமசாமி. இவரது மகன் செந்தில். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது நண்பர் ராமநாதபுரம் தெருவை சேர்ந்த பொன் சூர்யா.

    சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் அந்த வழியாக காரில் சென்றனர். அப்போது நடந்து சென்று கொண்டிருந்த 11 வயது சிறுமியை நைசாக பேசி காரில் அழைத்துள்ளனர். அதற்கு அந்த சிறுமி மறுத்துள்ளார்.

    ஆனால் 2 பேரும், சிறுமியை காரில் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே இடத்தில் சிறுமியை இறக்கி விட்டுள்ளனர்.

    அந்த சிறுமி அழுது கொண்டே தனது தாயாரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். உடனே சிறுமியின் தாயார் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதுதொடர்பாக போலீசார், செந்தில் மற்றும் அவரது நண்பர் பொன் சூர்யா ஆகிய 2 பேர் மீதும் ஆள் கடத்தல், போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த 2 பேரும் தலைமறைவாகினர். போலீசார் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ஒருவாரத்தில் கோவை, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கல்வி நிலைய வளாகங்களில் பாலியல் துன்புறுத்தலால் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கரூரில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று முன்தினம் “பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொள்ளும் கடைசிப் பெண் நானாகத்தான் இருக்க வேண்டும்” என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது.

    தன் மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் தாயார் வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க அன்று இரவு தன்னுடைய உறவினர்களை அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.

    அப்போது காவல் ஆய்வாளர் கண்ணதாசன் புகார் மனுவை பெறாமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களை தகாத முறையில் பேசியதோடு, கார்த்திக் என்பவரை “என்னடா இப்படி உட்கார்ந்திருக்கிற” என சொல்லி தனது பூட்ஸ் காலால் உதைத்து அடித்திருக்கிறார். மேலும் கார்த்திக்கை லாக்கப்பில் தள்ளி அடைத்திருக்கிறார். “ஏன் அவரை அடிக்கிறீர்கள்” எனக் கேட்டவர்களை சரமாரியாக தாக்கியிருக்கிறார்.

    பாலியல் தொல்லை

    இரவு முழுவதும் அதைத் தொடர்ந்து அடுத்தநாள் காலைவரை விசாரணை என்ற பெயரில் மாணவியின் தாயையும் அவருடன் சென்றவர்களையும் காவல் நிலையத்திலேயே இருக்க வைத்திருக்கிறார்.

    மிருகத்தனமாக நடந்து கொண்ட காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை உடனடியாக கைது செய்வதுடன் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கணவரை இழந்து தற்பொழுது மகளையும் இழந்து துன்பத்தில் உழலும் மாணவியின் தாய்க்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

    “இந்தியாவிற்கு சுற்றுலா செல்லும் பெண்கள் தனியாக செல்ல வேண்டாம், பாலியல் வன்முறைகள் அதிகமாக நடைபெறும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது” என அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இதிலிருந்து இந்தியாவில் பாலியல் வன்முறை அதிகரித்து வருவதை அறியலாம்.

    கடந்த ஒருவாரத்தில் கோவை, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கல்வி நிலைய வளாகங்களில் பாலியல் துன்புறுத்தலால் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் சில மாணவிகள் பாதிப்புக்கு உள்ளாகி புகார் கொடுத்துள்ளனர். அதன்மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டு, போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    தொடரும் பாலியல் வன்முறைகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். கல்வி நிலையங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அனைத்துப்பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்ற நடவடிக்கைகள் தடுப்புக்கமிட்டி (விசாகா) உடனடியாக அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்...பதான்கோட் ராணுவ முகாம் அருகே கையெறி குண்டு வீச்சு

    பாலியல் தொல்லையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி கல்லூரி நுழைவு வாயில் முன்பு 200-க்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை:

    கோவையில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த கல்லூரியில் பி.பி.ஏ. துறைத்தலைவர், பேராசிரியராக வேலை பார்க்கும் விளாங்குறிச்சி மதிநகரை சேர்ந்த ரகுநாதன்(வயது42) என்பவர் மாணவிகளுக்கு இரவு நேரங்களில் செல்போனில் ஆபாச தகவல் அனுப்புதல், இரவு நேரங்களில் செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்புவது, தனியாக தன்னை வந்து சந்திக்க சொல்வது,

    தன்னுடன் காரில் பயணம் செய்ய வரும்படி அழைப்பது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது போன்ற பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்துள்ளார்.

    இது தொடர்பாக மாணவர்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து மாணவ, மாணவிகள், இந்திய மாணவர் சங்கத்தினருடன் சேர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

    மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி கல்லூரி நுழைவு வாயில் முன்பு 200-க்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டனர்.

    இதற்கிடையே பேராசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 20 வயது மாணவி ஒருவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் கொடுத்தார்.

    அவர் கொடுத்த புகாரின் பேரிலும், மாணவர்கள் அளித்த புகாரின் பேரிலும் போலீசார் கல்லூரிக்கு சென்று நேரடியாக விசாரித்தனர். அங்குள்ள மாணவ, மாணவிகள், சம்பந்தப்பட்ட பேராசிரியரிடம் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து போலீசார் பேராசிரியர் ரகுநாதன் மீது கடத்தல், மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் யு.ஜி.சி. வழிகாட்டுதலின் படி பாலியல் தொல்லை குறித்து விசாரணை நடத்வதற்காக விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணை குழுவினர் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனையடுத்து பேராசிரியர் ரகுநாதன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் பணியில் இறங்கினர். அதன்படி ரகுநாதனை, கல்லுரி முதல்வர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். 

    குளச்சல் அருகே வாட்ஸ்-அப் மூலம் விதவைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்த விதவை பெண் ஒருவரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு கடந்த மாதம் அடையாளம் தெரியாத ஒருவர் தனது செல்போன் மூலம் ஆபாச படங்களையும், ஆபாச வாசகங்களையும் அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதேபோல் அந்த பெண்ணுக்கு இன்னொரு செல்போன் எண்ணில் இருந்தும் தொடர்ந்து இதேபோல் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனை சந்தித்து புகார் கொடுத்தார்.

    அந்த புகாரை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி, சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ரீத்தாபுரம் ஈத்தம்பாடு பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 27) என்ற வாலிபர்தான், 2 செல்போன் எண்கள் மூலம் விதவை பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. சதீஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு, தற்போது கூலி வேலை செய்து வருகிறார். இதையடுத்து குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஜெனீப் ஆகியோர் சதீஷ் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர். பின்னர் அவர் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட சதீஷ் ஏற்கனவே இந்த விதவை பெண்ணிடம் தவறாக பேசியது தொடர்பாக குளச்சல் போலீசாரால் கண்டிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

    நெல்லை அருகே 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பஞ்சாயத்து ஊழியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    கயத்தாறு:

    கயத்தாரை அடுத்த பன்னீர்குளத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 41). இவர் பன்னீர்குளம் பஞ்சாயத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் சீனிவாசன் அப்பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    அந்த மாணவி கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் 8 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுதொடர்பாக அவரிடம் விசாரித்த போது நடந்த சம்பவங்களை கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இதையடுத்து சீனிவாசன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்று சீனிவாசனை கைது செய்தனர். மேலும் மருத்துவ சிகிச்சைக்காக மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

    ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் மருத்துவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டாக்டர்கள் இருவரும் ஒப்பந்த அடிப்படையில் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள்.

    சென்னை:

    சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்தபோது தற்காலிகமாக டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

    மாத சம்பளம் ரூ.70 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட டாக்டர்கள் சென்னையில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறார்கள்.

    கொரோனா பணியில் ஒருவாரம் தொடர்ச்சியாக ஈடுபடும் டாக்டர்கள் தனியார் ஓட்டல்களில் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டார்கள். அரசின் சார்பில் அவர்களுக்கு தங்கும் வசதி, உணவு போன்றவை வழங்கப்பட்டது.

    அந்த வகையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரிந்த 2 பெண் மருத்துவர்கள் தி.நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர். அவர்களை உடன் பணிபுரிந்த டாக்டர்கள் வெற்றிச்செல்வன் (35), மோகன்ராஜ் (28) ஆகியோர் பாலியல் சீண்டல் செய்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

    2 டாக்டர்கள் டிஸ்மிஸ்

    அதில் ஒரு பெண் மருத்துவரை கற்பழிப்பு செய்ததாகவும், மற்றொருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த சம்பவம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவத்துறை மூலமும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பெண் மருத்துவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மருத்துவர்கள் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு அவர்கள் இருவரையும் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும் போது, பெண் மருத்துவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டாக்டர்கள் இருவரும் ஒப்பந்த அடிப்படையில் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததை அடுத்து துறை ரீதியான டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பெண் மருத்துவர்களும் திருமணம் ஆகாதவர்கள். அவர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படியுங்கள்...விவசாயிகள் பட்ட கஷ்டங்களுக்கு யார் பொறுப்பேற்பது? -மல்லிகார்ஜூன கார்கே கேள்வி

    சீனாவில் ஆளும் கம்யூனிஸ்டு தலைவர் மீது பாலியல் புகார் கூறியபின் மாயமான டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாய் பெயரில் இ-மெயில் வெளிவந்துள்ளது. இதில் மகளிர் டென்னிஸ் சங்கம் சந்தேகம் எழுப்புகிறது.
    பீஜிங்:

    உலகின் மிகப்பெரிய டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவர், சீனாவின் பெங் சூவாய் (வயது 35).

    நம்பர்-1 முன்னாள் வீராங்கனையான இவர் 2013-ல் விம்பிள்டன் கிராண்ட் சிலாம், 2014-ல் பிரெஞ்சு ஓபன் பட்டங்களை தைவானின் ஹசீ சூ வெய்யுடன் சேர்ந்து வென்றுள்ளார்.

    இவர் சீனாவின் முன்னாள் துணைப்பிரதமரும், ஆளும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவருமான ஜாங் கோலி பற்றி சமூக ஊடகம் ஒன்றில் பாலியல் குற்றச்சாட்டை பதிவு செய்திருந்தார்.

    அந்தப்புகாரில் அவர், 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜாங் கோலி அவரை தனது இல்லத்துக்கு அழைத்து தன்னுடன் டென்னிஸ் விளையாடி விட்டு, பின்னர் படுக்கை அறைக்கும் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி உள்ளார்.

    இந்த ஜாங் கோலி, தற்போதைய அதிபர் ஜின்பிங்குடன் மிக நெருக்கமாக இருந்தவர் என தெரிகிறது.

    இந்த குற்றச்சாட்டை பெங் சூவாய் வெளியிட்ட நாள் முதல் அவர் மாயமானார். பொது வெளியில் அவர் தோன்றவில்லை. அவரிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அவர் என்ன ஆனார் என தெரியவில்லை.

    அவரை மகளிர் டென்னிஸ் சங்கம் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் இல்லை.

    இந்தநிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    பெங் சூவாய் பெயரில் மகளிர் டென்னிஸ் சங்கம் டபிள்யு.டி.ஏ.யின் தலைவர் ஸ்டீவ் சைமனுக்கு ஒரு இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. இதை நேற்று முன்தினம் சி.ஜி.டி.என். டிவி சேனல் வெளியிட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இ-மெயிலில் அவர், “நான் காணாமல் போகவில்லை, பத்திரமாக இருக்கிறேன், வீட்டில் ஓய்வில் உள்ளேன், எல்லாமே நன்றாக இருக்கிறது” என்று கூறுவது அவரது குரலில் பதிவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

    இந்த இ-மெயில் மீது மகளிர் டென்னிஸ் சங்கம் டபிள்யு.டி.ஏ.யின் தலைவர் ஸ்டீவ் சைமன் சந்தேகத்தை எழுப்பி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘வெளியாகி உள்ள இ-மெயில் பெங் சூவாய் எழுதியதுதானா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. அதை நம்புவது கடினமாக உள்ளது. அவருடைய பாதுகாப்பு மற்றும் இருப்பிடம் பற்றிய கவலையை எழுப்புகிறது. மகளிர் டென்னிஸ் சங்கமும், உலகமும் அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை அறிய சுதந்திரமான, சரிபார்க்கக்கூடிய ஆதாரம் தேவை. அவர் கூறியுள்ள செக்ஸ் புகார் மீது முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணை தேவை. பெண்களின் குரல்கள் கேட்கப்படவேண்டும், மதிக்கப்பட வேண்டும்” என கூறி உள்ளார்.

    இது சீனாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
    பெண் டாக்டர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு பொது ஆஸ்பத்திரிகளில், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை கொண்ட ஆஸ்பத்திரியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரி இருந்து வருகிறது. இங்கு பிரபல மருத்துவ நிபுணர்கள், நர்சுகள் பணியாற்றி வருகின்றனர்.

    கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா முதல் அலை தொடங்கிய போது ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த டாக்டர்கள் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஒட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    அவர்கள் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டதால் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு இந்த ஏற்பாட்டை செய்திருந்தது.

    கொரோனா சிகிச்சை பணியில் இருந்த பெண் டாக்டர்களும் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு தங்கியிருந்த டாக்டர் வெற்றிச்செல்வன் (வயது 35) என்பவர் பெண் டாக்டர் ஒருவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அதேபோன்று மற்றொரு டாக்டர் மோகன்ராஜ் (28), வேறொரு பெண் டாக்டரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் டாக்டர்கள் இருவரும் டீன்னிடம் புகார் செய்துள்ளனர். இந்தப்புகார் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது குற்றம்சாட்டப்பட்ட டாக்டர்கள் இருவரும் பெண் டாக்டர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து பெண் டாக்டர்கள் இருவரும் அளித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர்கள் வெற்றிச்செல்வன், மோகன்ராஜ் ஆகியோரை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

    தமிழகத்தின் பிரபல அரசு ஆஸ்பத்திரியான ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் 2 பேர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பத்தூர் அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்துார்:

    திருப்பத்தூர் அருகே ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் கணபதி(வயது 19). இவர் வலையபட்டியில் பொக்லைன் எந்திர உதவியாளராக வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது கணபதி தனது முதலாளி வீட்டுக்கு டியூசன் படிக்க வந்த 17 வயது சிறுமியை காதலித்தார். சிறுமியின் தாய் இறந்ததை தொடர்ந்து அவர் தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார். பிளஸ்-2 படிப்பை முடித்த நிலையில் அந்த சிறுமி கருவுற்று இருந்தார்.

    இதை அறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரித்த போது அவர் கணபதி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமி கூறி இருக்கிறார்.

    இதையடுத்து சிறுமியின் உறவினர்கள், கணபதியை திருமணம் செய்து வைக்க முயற்சித்து உள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்..

    இதனால் சிறுமியின் தந்தை ெகாடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இன்ஸ்பெக்டர் சி்த்திரைச் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் சவுதாம்பால், சிறுமியை மீட்டு மதகுபட்டி பெண்கள் காப்பகத்தி்ல் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து கணபதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×