search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Udhayanidhi Stalin"

    • மாநாட்டுப் பந்தலைக் கடந்து, வளாகம் நிறைந்து, நெடுஞ்சாலை முழுவதும் திரண்டிருந்த இளைஞர் பட்டாளம், கழகத்தின் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது.
    • பா.ஜக. அரசை வரும் பாராளுமன்றத் தேர்தலில் வீழ்த்திட சூளுரை மேற்கொண்டிருக்கிறது உதயநிதி வழிநடத்துகிற இளைஞரணி.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்...,

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் நன்றி மடல்.

    இது தந்தை பெரியார் மண்! பேரறிஞர் அண்ணா மண்! முத்தமிழறிஞர் கலைஞர் மண்! அதுமட்டுமா, அருட்பிரகாச வள்ளலார் மண்! பண்டிதர் அயோத்திதாசர் மண்! பெருந்தலைவர் காமராசர் மண்! கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மண்! பொதுவுடைமைத் தோழர் ஜீவா மண்! சுருக்கமாகச் சொன்னால், சமூகநீதிக் கொள்கை வழியில் பயணிக்கும் மதநல்லிணக்க மண்தான் தமிழ்நாடு என்பதை சேலத்தில் எழுச்சியுடன் நடந்தேறிய கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உணர்த்தியிருக்கிறது.

    கடல் இல்லா சேலத்தில் கழக இளைஞரணியினரின் தலைகளே கடலாக, மாநகரத்திலிருந்து மாநாடு நடைபெற்ற இடம் வரை 30 கிலோ மீட்டர் நீளத்திற்கு அசைந்தாடிய கருப்பு சிவப்பு இருவண்ணக்கொடிகளே அலைகளாக இருந்ததைக் கண்டபோது, மாநாட்டினை எழுச்சியும் உணர்ச்சியுமாக நடத்திக்காட்டிய இளைஞரணிச் செயலாளர் அமைச்சர் தம்பி உதயநிதிக்கும், மாநாட்டு ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டிருந்த கழகத்தின் முதன்மைச் செயலாளரான அமைச்சர் கே.என்.நேருக்கும், சேலம் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும், இளைஞரணியின் மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கண்துஞ்சாமல் அயராது பாடுபட்டதன் அறுவடையைக் காண முடிந்தது.

    மாநாட்டு முகப்பில் சேலத்துச் சிங்கம் வீரபாண்டியார் நினைவுக் கொடி மேடையில் இருவண்ணக் கொடியை உயர்த்தி வைத்த கழகத் துணைப் பொதுச்செயலாளர் அன்புத் தங்கை கனிமொழி எம்.பி.க்கும், மாநாட்டுத் திறப்பாளர் மாணவரணிச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசனுக்கும், மொழிப்போர்த் தியாகிகள் படத்தைத் திறந்து வைத்த சட்டமன்றக் கொறடா கோவி. செழியன் உள்ளிட்ட அனைவருக்கும் கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


    மாநாட்டுப் பந்தலைக் கடந்து, வளாகம் நிறைந்து, நெடுஞ்சாலை முழுவதும் திரண்டிருந்த இளைஞர் பட்டாளம், கழகத்தின் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது. பாராளுமன்றத் தேர்தல் களத்திற்கு ஆயத்தமாக்கும் பயிற்சி அரங்கமாக இளைஞரணியின் மாநாடு அமைந்திருந்த அதேவேளையில், வெறும் தேர்தல் அரசியலை மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுப்பதில்லை என்பதையும், தேர்தல் களத்திலும் கொள்கை வழி அரசியலையே முன்னெடுக்கும் என்பதையும் மாநாட்டின் மையப் பொருளாக அமைந்த, 'மாநில உரிமை மீட்பு முழக்கம்' அமைந்திருந்தது.

    உதயநிதி முன்மொழிந்த மாநாட்டின் 25 தீர்மானங்களும் திராவிட மாடல் அரசு எந்தளவுக்கு மக்களுக்கான நன்மைகளைச் செய்து, மாநிலத்தின் வளர்ச்சியைப் பெருக்கியிருக்கிறது என்பதுடன், மாநில உரிமைக்கானப் போராட்டத்தில் நாம் முன்னெடுக்க வேண்டியவற்றையும் தீர்மானங்கள் வாயிலாகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இழந்த மாநில உரிமைகளை மீட்கவும், இருக்கின்ற மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும், மாநிலங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெறவும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் வகுத்தளித்த மாநில சுயாட்சிக் கொள்கையை நிறைவேற்றிட வேண்டும் என்பதையும், கல்வி - சுகாதாரம் இரண்டையும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டியதன் தேவையையும், பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தராக இருக்க வேண்டும் என்பதையும், எல்லாவற்றுக்கும் மேலாக அரசியலமைப்பில் தொங்கு சதையாக உள்ள நியமனப்பதவியான கவர்னர் பதவி முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என்பதையும் இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உரக்கச் சொல்லியுள்ளன.

    மதவெறி அரசியலால் மக்களைப் பிளவுபடுத்துகிற ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது பத்தாண்டு கால ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் எதையும் நிறைவேற்றாமல் முழுமையாகத் தோல்வி அடைந்திருப்பதை மறைப்பதற்காக ஆன்மீகத்தையும் அரசியலாக்கும் வகையில் அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துகிறது என்பதை கழகத்தின் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள் ஏற்கனவே அறிக்கையாக வெளியிட்ட நிலையில், இளைஞரணி மாநாட்டில் அதனைத் தீர்மானமாகவே முன்மொழிந்து, சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமின்றி, இந்து மதத்தில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட - மிக பிற்படுத்தப்பட்ட - பட்டியல் இன - பழங்குடி மக்களுக்கும் துரோகம் இழைத்து, உண்மையான இந்து விரோதியாக செயல்பட்டு வரும் பா.ஜக. அரசை வரும் பாராளுமன்றத் தேர்தலில் வீழ்த்திட சூளுரை மேற்கொண்டிருக்கிறது உதயநிதி வழிநடத்துகிற இளைஞரணி.

    சேலத்தில் நடந்த கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டின் மகத்தான வெற்றி கண்டு அலறுகின்ற கழகத்தின் அரசியல் எதிரிகளும், தமிழ்நாட்டின் நிரந்தர எதிரிகளும் வதந்திகளைப் பரப்பி திசைதிருப்ப நினைத்தாலும், கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும், வில்லில் தொடுக்கப்பட்ட கணை தனது இலக்கை மட்டுமே குறி வைப்பதுபோல செயல்படவேண்டும். மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள், பல்வேறு தலைப்புகளில் நடந்த சொற்பொழிவுகளில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளை முன்னெடுத்து, பாராளுமன்றத் தேர்தல் களத்தில் மதவெறி பாசிச சக்திகளை முறியடிக்கும் பணியில் முனைப்பாகச் செயல்படுங்கள். நம் திராவிட மாடல் கொள்கையை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்வோம். பாராளுமன்றத் தேர்தலில் வெல்வோம்!

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை கோவில் இடித்தார்கள்?
    • இந்திய அளவில் தமிழகம் 3-வது மாநிலம் ராமர் கோவில் கட்டுவதற்கு அதிக பணம் கொடுத்த மாநிலம்.

    சென்னை:

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணல் குறித்து மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை Friendly Match-ன்னு கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக அண்ணாமலை கூறியதாவது:-

    உதயநிதி ஸ்டாலினின் நெறியாளர் சந்திப்பு என்பது ஒரு Friendly Match. அதில் எந்த கேள்வியும் சீரியஸான கேள்வி இல்லை. எந்த பதிலும் சீரியஸான பதிலும் இல்லை. அதற்கு நாங்கள் பதில் சொல்லி தரம் தாழ்த்திக்க விரும்பவில்லை. பத்திரிகையாளர் சந்திப்புன்னா எப்படி இருக்கனும்னுங்கறதுக்கு பாரதிய ஜனதா கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு உதாரணம். அதை உயதநிதி ஸ்டாலின் வீட்டில் உட்கார்ந்து சிடி போட்டு பார்க்கணும். என்ன கேள்வி கேட்குறாங்க, தமிழ்நாட்டின் பிரச்சனை என்ன? அதை எப்படி பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் கையாள்கிறார்கள் உதயநிதி ஸ்டாலின் பார்க்கணும்.

    உதயநிதி ஸ்டாலின் தான் துணை முதலைமைச்சருன்னு ஆரம்பிச்சதே அவர். சில பேர் தேவையில்லாமல் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சருன்னு சொல்றாங்க அதற்கு உதயநிதியே முற்றுப்புள்ளி வைச்சுட்டாருன்னு ஸ்டாலின் சொல்றார். ஆரம்பித்து வைத்தது தி.மு.க. காரர்கள். என்னுடைய வாழ்நாள்ல உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சரா பார்க்கணும் நாங்க சொன்னோமா தி.மு.க. எம்.எல்.ஏ. சொன்னாங்களா? உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் பதவிக்கு பொருத்தமானவருன்னு நாங்க சொன்னோமா? தி.மு.க. அமைச்சர் சொன்னாங்களா? உதயநிதி துணை முதல்வராக வரவேண்டும்னு நாங்க சொன்னோமா? திமுக நிர்வாகிகள் சொன்னாங்களா?. சொன்னது நீங்க.. செட்அப் பண்ணது நீங்க. உதயநிதி துணை முதலமைச்சராக வந்தால் மக்களே ஏத்துக்கமாட்டாங்க... சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று தெரிந்த பிறகு நீங்க பல்டி அடித்துவிட்டாச்சு...


    மத வழிபாட்டு தல இடிப்பு பற்றி பேசுவதற்கு கடைசி தகுதி யாருக்கு இருக்குன்னு தி.மு.க.வுக்கு. ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை கோவில் இடித்தார்கள்? மக்கள் எல்லாம் போர் குரல் எழுப்பிய பிறகு கோவில் இடிப்பை நிறுத்தி வைச்சு இருக்காங்க. உச்சநீதிமன்றத்தில் இருதரப்புக்கும் நியாயம் கொடுக்கப்பட்டு இருக்கு. ராமர் கோவிலுக்கு ஒவ்வொரு மனிதனும் சம்பாதித்த பணத்தை எல்லாம் போட்டு கோவில் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு நபர் ராமர் கோவிலுக்கு ரூ.25 கோடி கொடுத்துள்ளார். இந்திய அளவில் தமிழகம் 3-வது மாநிலம் ராமர் கோவில் கட்டுவதற்கு அதிக பணம் கொடுத்த மாநிலம். உதயநிதிக்கு என்ன தெரியும்? உச்சநீதிமன்றம் தீர்ப்பு பற்றி தெரியுமா? என கூறினார்.

    • தென்மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கு... நிதி உடனடியாக கொடுங்கள் என்றேன்.
    • ஒன்றிய அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை வைத்து பழிவாங்கிட்டு இருக்காங்க.

    சென்னை :

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:-

    கே: அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் விமர்சிக்கக்கூடிய இடத்தில் அமைச்சர் உதயநிதி இருக்கிறார்...

    ப : அவங்க விமர்சனம் பண்றாங்கண்ணா நம்ம சரியான பாதையில் தான் செல்கிறோம்-ங்கறது என்னுடைய எண்ணம். பாராட்டுன்னா தான் ஜாக்கிரதையா இருக்கணும்.

    கே: கடும் விமர்சனம், தேசிய அளவில் உதயநிதி பேசும் பொருளாக இருக்கிறார். இன்னொரு பக்கம் குறுகிய காலத்தில் 2 முறை பிரதமருடன் சந்திப்பு...

    ப: பிப்ரவரியில் பிரதமரை சந்தித்த போது நீட் தேர்வு குறித்து பேசினேன். அவரும் சில விஷயங்களை சொன்னார். இந்த முறை கேலோ இந்தியா விளையாட்டின் முதலமைச்சர் அழைப்பிதழை கொடுக்க சென்றேன். தென்மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கு... நிதி உடனடியாக கொடுங்கள் என்றேன். அதற்கு முடிவெடுத்து சொல்றோம்ன்னு சொன்னாங்க.



    கே : அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை சந்தித்து சிறையில் இருக்கிறார். பொன்முடிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வந்து இருக்கு... இது எல்லாம் தி.மு.க.வுக்கு பாராளுமன்ற தேர்தலில் ஒரு நெருக்கடியா மாறாதா?

    ப: மக்களுக்கு தெரியும். இதெல்லாம் ஒன்றிய அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை வைத்து பழிவாங்கிட்டு இருக்காங்க. அதுக்கு பயந்துதான் அதிமுக அவங்களோட கூட்டணி வைத்து இருந்தார்கள். மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். சட்டபடி சந்தித்து வெளியே வருவோம்.

    • ஆட்சியை குறை சொல்ல எதுவும் இல்லை.
    • அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக நிற்போம்.

    சென்னை :

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:-

    கே : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்பது வதந்தியா? செய்தியா?

    ப : வதந்தி... வதந்தி தான்... ஆட்சியை குறை சொல்ல எதுவும் இல்லை. பேசும் பொருள் எதுவும் இல்லாத போது ஏதாவது ஒன்றை கிளம்பி விடுறது. அப்படி ஒரு எண்ணமும் கிடையாது. யோசிக்கிறது கிடையாது. அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக நிற்போம்.

    கே : விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள் வருமா? புதியவர்களுக்கான வாய்ப்புகள் இருக்குமா?

    ப : கண்டிப்பா இளைஞர்கள் வரணும். சமீபத்தில் தான் தொழில்துறை அமைச்சராக டிஆர்பி ராஜா பொறுப்பேற்றார். இது முதலமைச்சரோட முழு அதிகாரம். அவர்தான் முடிவு செய்வார்.

    • நான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகு கூட்டணி கட்சி தலைவர்களை பார்ப்பதற்கு முன்னாடி விஜயகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
    • கலைஞருக்கு ரொம்ப ரொம்ப பிடித்த மனிதர். அப்பாவுக்கு நெருங்கிய நண்பர்.

    சென்னை :

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:-

    கே : விஜயகாந்தின் மரணம்...

    ப : மிகப்பெரிய இழப்பு. நல்ல மனிதர். நான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகு கூட்டணி கட்சி தலைவர்களை பார்ப்பதற்கு முன்னாடி விஜயகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது. கலைஞருக்கு ரொம்ப ரொம்ப பிடித்த மனிதர். அப்பாவுக்கு நெருங்கிய நண்பர்.

    கே : அரசியல் ரீதியா தே.மு.தி.க போராட்டங்களையும் அறிவித்துள்ளது...

    ப : அது அவங்களுடைய விருப்பம். நாம் செய்ய வேண்டிய பணியை செய்து உள்ளோம். அரசியல் ரீதியா சந்திப்போம்.

    • மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது இருந்த அ.தி.மு.க. இப்போ இல்லைன்னு நான் நினைக்கிறேன்.
    • மாநாட்டின் பெயரே மாநில உரிமைகள் மீட்பு மாநாடு...

    சென்னை :

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:-

    கே: 2024 பாராளுமன்ற தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியாக தி.மு.க. எதை பார்க்கிறது... அ.தி.மு.க.வா? பா.ஜ.க.வா?

    ப: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது இருந்த அ.தி.மு.க. இப்போ இல்லைன்னு நான் நினைக்கிறேன். பாஜகவின் உள்ளூர் கிளை கழகமாக அதிமுகவும், மாநில கட்சியாக அதிமுகவும், அதிமுகவோடு தலைமையாக பாஜக இருக்கிற மாதிரி இருக்கு.


    கே: 2026 வரை கூட்டணி இல்லைன்னு தான் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்?

    ப: மக்கள் எப்படி ஏத்துப்பார்கள்ன்னு தெரியலை.... மாநாட்டின் பெயரே மாநில உரிமைகள் மீட்பு மாநாடு... நாங்க நடத்துறதுக்கு காரணமாக கடந்த 9 வருடமாக அதிமுக நமது உரிமைகள் அனைத்தையும் ஒன்றிய அரசிடம் கொடுத்துட்டாங்க.... மாநாட்டில் முக்கியமாக நீட் எதிர்ப்பை வைத்துள்ளோம். அதிமுக மாநாட்டில் திமுக-வை திட்டுறதே முக்கியமாக இருந்தது. எங்களுடைய மாநாடு இயக்கத்தின் கொள்கைகள், இளைஞரணியின் வரலாறு, இரண்டரை ஆண்டுகள் ஆட்சியின் சாதனைகள் எல்லாத்தையும் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கறது.

    கே : தி.மு.க.வின் பலத்தில் ஒன்று கூட்டணி. 2019, 2021-ல் வலுவான கூட்டணி. 2024 ல் கூட்டணியை அனுசரித்து செல்வது எளிமையாக இருக்கும்னு நினைக்கிறீர்களா?

    ப : திமுக கூட்டணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமும், அதிமுகவின் கூட்டணியை மக்கள் ஏத்துக்காததுக்கு முக்கிய காரணமும் அந்த கூட்டணி வெறும் தேர்தலுக்கு தேர்தல் மட்டும் பேசுற கூட்டணி. திமுக கூட்டணி இயற்கையாகவே 2019 தேர்தலுக்கு முன்பாகவே மக்கள் நல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என ஒன்றாக செய்வார்கள். அதிமுக கூட்டணி ஸ்டார் ஓட்டலில் மட்டும் சந்தித்து பேசுவார்கள். கடைசி நிமிடம் வரை கூட்டணி குறித்து இழுப்பார்கள்.

    • கண்டிப்பா அரசியல் தான் பிடிச்சிருக்கு...
    • நெஞ்சுக்கு நீதி, மனிதன் போன்ற Challenge படங்கள் பண்ண பிடித்திருந்தது.

    சென்னை :

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:-

    கே: எது எளிதாக இருக்கும்னு நினைக்கிறீர்கள்? எது பிடிச்சிருக்குன்னு நினைக்கிறீங்க? சினிமாவா, அரசியலா?

    ப: கண்டிப்பா அரசியல் தான் பிடிச்சிருக்கு... சினிமாவில் Challenge ஆனா படங்கள் பண்ண பிடிக்கும். நெஞ்சுக்கு நீதி, மனிதன் போன்ற Challenge படங்கள் பண்ண பிடித்திருந்தது. மக்கள் பணி இது. எல்லா நேரத்திலும் அலர்ட்டா இருக்க வேண்டி வரும்.

    இரண்டாவது மாநில மாநாடுக்காக 3 மாதங்களாக மிகப்பெரிய ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தபோது தூத்துக்குடி, நெல்லையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தலைவர் ஒருவாரம் தள்ளி வைக்க சொன்னாரு. பெரிய பாதிப்பு இருக்கு, மாநாடு நடத்த சரியாக இருக்காது. களத்தில் நிற்கணும்னு சொன்னாரு.


    நெல்லை, தூத்துக்குடியில் ஒரு வாரம் தங்கி இருந்தேன். அங்கு பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, 10 அமைச்சர்கள் அனைவரும் களத்தில்தான் இருந்தனர்.

    கே: அமைச்சர் உதயநிதியின் பலமாக எதை நினைக்கிறார்?

    ப: தலைவரை பார்த்து உழைக்க முயற்சிக்கிறேன். அவரை பார்த்து அவரது உழைப்பில் 25 சதவீதம் 30 சதவீதம் உழைத்தால் பெரிய சாதனையாக நினைக்கிறேன். அதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறேன். கலைஞருக்கு நிகர் கலைஞர் தான். பொறுப்பான செல்லப்பிள்ளையா இருக்க விரும்புகிறேன் என்றார்.

    • இன்று வரை நான் கட்சித் தலைவராக செயல்படவில்லை, தலைமைத் தொண்டனாகத்தான் செயல்படுகிறேன்.
    • இளைஞரணி மாநாட்டின் நோக்கமே மாநில உரிமைகளை வென்றெடுப்பதுதான்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,

    இளைஞரணியின் எழுச்சி மிகுந்த 2-வது மாநாடு சேலத்தில் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. சேலத்திற்கு வர நான் தயாராகிவிட்டேன், நீங்கள் தயாரா?...

    இன்று வரை நான் கட்சித் தலைவராக செயல்படவில்லை, தலைமைத் தொண்டனாகத்தான் செயல்படுகிறேன்.

    இளைஞரணி மாநாட்டின் நோக்கமே மாநில உரிமைகளை வென்றெடுப்பதுதான். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன.

    எனது உடன்பிறப்புகளே!

    கழக உடன்பிறப்புகளே!

    கலைஞரின் உடன்பிறப்புகள்!

    சேலத்தில் எனது கண்கள் உங்களது முகங்களைத்தான் தேடும்! என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

    • கழகத் தலைவர் என்ற பொறுப்பைச் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான என்னை உங்கள் அனைவரிடமும் அடையாளப்படுத்தியது இளைஞரணிதானே!
    • கழகத் தலைமையின் சுமையைப் பங்கிட்டுக் கொள்ளும் அணியாக இளைஞரணி எப்போதும் முன்னிற்பது வழக்கம்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    'எல்லாருக்கும் எல்லாம்' என்கிற இலட்சியத்தைக் கொண்டுள்ள நமது திராவிட மாடல் அரசின் சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் தமிழ்நாட்டு மக்களின் மனதில் மகிழ்ச்சி பொங்குகிற வகையில் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு இவற்றுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. பொங்கல் நன்னாளில் ஏழை -எளியோர் புத்தாடை உடுத்திட ஏதுவாகவும், நெசவாளர்களின் வாட்டம் போக்கிடும் செயலாகவும் வேட்டி - சேலைகள் பல ஆண்டுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு அவற்றைத் தாமதப்படுத்தாமல் பொங்கல் நேரத்திலேயே வழங்கியது திராவிட மாடல் அரசு. தரமாகவும் அழகாகவும் வேட்டி - சேலைகள் இருப்பதைப் பொங்கல் நாளில் அதனை உடுத்தியிருந்தது தொடர்பான பதிவுகளைச் சமூக வலைத்தளத்தில் கண்டேன்; நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்கிற்று!

    அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடும் திருநாள்தான் பொங்கல் விழா. அதனைத் தமிழர் திருநாள் என்று இன உணர்வும் மொழி உணர்வும் கொண்ட பண்பாட்டுத் திருவிழாவாக மாற்றிய பெருமை திராவிட இயக்கத்திற்குரியது. எவ்வித ஏற்றத்தாழ்வுமின்றி, தமிழர்கள் அனைவரும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற குறள் நெறியைப் பின்பற்றி வாழ்கின்ற தமிழ் நிலத்தின் உயர்ந்த பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையிலும், மத வெறியை - சாதிய வன்மத்தை - மொழி ஆதிக்கத்தை இங்கே விதைக்க நினைப்போருக்கு ஒருபோதும் இந்த மண்ணில் இடமில்லை என்பதைக் காட்டும் வகையிலும் சமூகநீதி இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 'சமத்துவப் பொங்கல்' விழாவைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடுமாறு உங்களில் ஒருவனான நான் அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

    உங்களுக்கு அன்புக் கட்டளையிடும்போது, அதனை முதலில் செயல்படுத்தக் கூடியவனாக நான் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நான் மறப்பதில்லை. அதனால், எனது கொளத்தூர் தொகுதியில் சமத்துவப் பொங்கல் விழாவைப் பல்வேறு மதத்தினர், பல மொழியினர் சூழக் கொண்டாடி மகிழ்ந்தேன். அதுபோலவே, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நம்முடைய கழக நிர்வாகிகள் சமத்துவப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிய செய்திகள் தொடர்ந்து வந்தபோது சர்க்கரைப் பொங்கலாக இதயம் இனித்தது. தலைநகரான சென்னை மாநகரம் தொடங்கி, ஊராட்சிகள் வரை சமத்துவப் பொங்கலின் மணம் வீசியது. இதுதான் திராவிட மாடல் தமிழ்நாடு. இதுவே, இந்திய ஒன்றியம் முழுமைக்கும் தேவைப்படுகிறது. அதனை அரசியல் களத்தில் எடுத்துரைக்கும் வகையில், சேலம் மாநகரில் ஜனவரி 21-ஆம் நாள் மிகுந்த எழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு.


    கழகத் தலைவர் என்ற பொறுப்பைச் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான என்னை உங்கள் அனைவரிடமும் அடையாளப்படுத்தியது இளைஞரணிதானே! 1980-ஆம் ஆண்டில் மதுரை ஜான்சிராணி பூங்காவில் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் இளைஞரணியைத் தொடங்கி வைத்து, அதனை என் கைகளில் ஒப்படைத்தார். 1982-ஆம் ஆண்டு முதல் இளைஞரணிச் செயலாளராகப் பணியாற்றத் தொடங்கி, 30 ஆண்டுகளுக்கு மேல் அதனை வழிநடத்தி, தலைவர் கலைஞரின் நம்பிக்கையைப் பெற்றேன். 2007-ஆம் ஆண்டு நெல்லை மாநகரில் இளைஞரணியின் முதல் மாநில மாநாடு, வெள்ளி விழா மாநாடாகச் சிறப்பாக நடைபெற்று, அடுத்த தலைமுறையினரைக் கழகத்தின் பக்கம் ஈர்த்தது.

    கழகத் தலைமையின் சுமையைப் பங்கிட்டுக் கொள்ளும் அணியாக இளைஞரணி எப்போதும் முன்னிற்பது வழக்கம். இப்போதும் அந்த வழிமுறைப்படி, 2024 பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் சூழலில், ஜனநாயகப் போர்க்களத்திற்குக் கழக வீரர்களை ஆயத்தப்படுத்தும் பயிற்சிப் பாசறையாக அமையவிருக்கிறது, சேலத்தில் நடைபெறும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு. இது கூடிக் கலையும் நிகழ்வல்ல; கொள்கையைக் கூர் தீட்டும் உலைக்களம்! மாநில உரிமை முழக்கத்தை முன்னெடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு.

    பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, கழகத்தையும் தமிழ்நாட்டையும் தலைமையேற்று வழிநடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் 1970-ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற கழக மாநில மாநாட்டில் ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு வழங்கினார். அதில் ஐந்தாவது முழக்கம், 'மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி' என்பதாகும். பன்முகக்தன்மை கொண்ட இந்திய ஒன்றியம் வலிமையாக இருக்க வேண்டுமென்றால், மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே மாநில சுயாட்சிக் கொள்கையின் நோக்கம். அது நிறைவேற்றப்பட்டால்தான், உண்மையான கூட்டாட்சிக் கருத்தியலின்படி இந்திய ஒன்றியம் வலிமையுடன் செயல்பட முடியும்.

    பத்தாண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பலவும் பறிபோய்விட்டன. கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை, சட்ட உரிமை என மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு அபகரிக்கும் போக்கு தொடர்வதையும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அராஜகப் போக்கு மிகுவதையும் காண்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக, நியமனப் பதவியில் உள்ள கவர்னர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சாதிகாரப் போக்கு என்பது மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும்.

    கவர்னர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான - தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது. ஆன்மீக உணர்வுகளை அரசியலாக்கி மதவெறியைத் தூண்டுவது, இந்தி - சமஸ்கிருதத்தைத் திணித்துத் தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளையும் அதன் பண்பாட்டையும் சிதைப்பது, திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லார் மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை ஒன்றிய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்ற மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர - அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது.

    சென்னையையும் பிற மாவட்டங்களையும் கடுமையாகப் பாதித்த மிச்சாங் புயல் - மழை காரணமாகவும், தென்மாவட்டங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாறு காணாத மழை - வெள்ளத்தினாலும் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இளைஞரணி மாநில மாநாடு, ஜனவரி 21-இல் சேலத்தில் எழுச்சியுடன் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இளைஞரணிச் செயலாளரும் இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி முன்னெடுத்து வருகிறார். இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் அவருக்குத் தோளோடு தோள் நின்று பணியாற்றுவதைக் காண்கிறேன். அதுபோலவே, சேலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள கழக முதன்மைச் செயலாளர் - மாநாடுகளைச் சிறப்பாக நடத்திக்காட்டுவதில் வல்லவரான கே.என்.நேரு அவர்களும், சேலம் மாவட்டக் கழக நிர்வாகிகளும் பந்தல் அமைப்பு தொடங்கி அனைத்து ஏற்பாடுகளையும் இரவு - பகலாக மேற்கொண்டு வருகிறார்கள்.


    இளைஞரணி மாநில மாநாட்டின் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு தழுவிய அளவில் இருசக்கர வாகனப் பேரணியை கண்கவரும் வகையில் நடத்திக் காட்டிய இளைஞரணி நிர்வாகிகள், இன்று (ஜனவரி 18) காலையில் சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையிலிருந்து சுடரேந்தித் தொடர் ஓட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தொடங்கி வைத்த இந்தச் சுடரோட்டம் சேலம் வரை தொடர்கிறது.

    இந்த நேரத்தில், நான் நினைத்துப் பார்க்கிறேன். காஞ்சிபுரத்தில் 1972-ஆம் ஆண்டு நடந்த மாநில சுயாட்சி மாநாட்டின்போது, கோபாலபுரம் இளைஞர் தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலிருந்து அண்ணா ஒளிச்சுடரை ஏந்தி - ஓடி, மாநாட்டு மேடையில் தலைவர் கலைஞர், நாவலர், இனமானப் பேராசிரியர் ஆகியோரிடம் நான் வழங்கியது என் நினைவுக்கு வருகிறது. சேலத்தில் நடைபெறும் மாநில மாநாட்டிற்காக இளைஞரணியினர் ஏந்தியுள்ள ஒளிச்சுடர், காலம்தோறும் கொள்கை வெளிச்சம் பாய்ச்சிடும் அணியாக இளைஞரணித் திகழும் என்பதை மெய்ப்பிக்கிறது. மாநாட்டில் தலைமையுரை ஆற்றுகின்ற உங்களில் ஒருவனான நானும் மனதளவில் என்றும் என்னை இளைஞனாகவே கருதுகிறேன்.

    நான் வளர்த்து ஆளாக்கிய அணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதில் ஒரு தாயின் உணர்வுடன் பெருமிதம் கொள்கிறேன். தொடர்ச்சியான பணிகள் காரணமாக, மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஒன்றிரண்டு கடிதங்களே என்னால் எழுத முடிந்தது. எனினும், இளைஞரணியின் 25-ஆம் ஆண்டினையொட்டி 2007-ஆம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற இளைஞரணியின் முதலாவது மாநில மாநாட்டின்போது, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு எழுதிய 25 கடிதங்களை முரசொலியின் ஒவ்வொரு நாளும் முதல் பக்கத்தில் மீண்டும் வெளியிட்டு, இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றுப் பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது கழகம்.

    மாநாட்டு நாள் நெருங்கி வரும் நிலையில், உங்களில் ஒருவனான நான் இந்த மடலை எழுதுகிறேன். பாராளுமன்றத் தேர்தலும் நெருங்கி வருகிறது. ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன. இந்தப் பொருத்தமான சூழலில்தான், மாநில உரிமை மீட்பு முழக்கத்தினை மையமாகக் கொண்டு இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது.

    தம்பி உதயநிதி அழைக்கிறார். கழக உடன்பிறப்புகளே சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் திரண்டிடுவீர். நான் முன்பே சொன்னதுபோல கடல் இல்லாச் சேலம் மாவட்டம், கருப்பு - சிவப்புக் கடல் ஆகட்டும். இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சேலம் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
    • 310 கிலோ மீட்டருக்கு சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடைபெறும்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டத்தை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    சேலம் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. 3 முதல் 4 லட்சம் இளைஞர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். 310 கிலோ மீட்டருக்கு சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடைபெறும். அதனை இறுதியாக சேலத்தில் தலைவரிடம் கொடுப்போம். 85 லட்சம் கையெழுத்துகள் நீட் தேர்வை விலக்க கோரி வாங்கி உள்ளோம். மாநாட்டின் போது அதை திமுக தலைவரிடம் ஒப்படைப்போம். பின்னர் நேரடியாக நானே குடியரசுத் தலைவரை சந்தித்து அதனை வழங்க இருக்கிறேன். ராமர் கோவில் திறப்பிற்கோ அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதால்தான் அதில் திமுக-விற்கு உடன்பாடு இல்லை" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆயி என்கிற பூரணம் அம்மாளை இன்று அவருடைய வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
    • ஆயி அம்மாளுக்கு நினைவுப்பரிசை வழங்கி கவுரவித்தோம்.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அழியா கல்வி செல்வத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்திட துணை நிற்கும் வகையில், பெரும் மதிப்புள்ள தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை மதுரை கொடிக்குளம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு கொடையாக வழங்கியுள்ள ஆயி என்கிற பூரணம் அம்மாளை இன்று அவருடைய வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.

    மறைந்த தனது மகள் ஜனனியின் நினைவாக இந்த மகத்தான சேவையை செய்திருக்கும் அவருக்கு, குடியரசு தினத்தன்று நம் முதலமைச்சர் அவர்கள், முதலமைச்சரின் சிறப்பு விருதினை அறிவித்துள்ள நிலையில், நாம் நினைவுப்பரிசை வழங்கி அவரை கவுரவித்தோம். அவரின் மகளுடைய திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தோம்.

    ஆயி அவர்களின் கல்விக்கான அரும்பணி காலத்திற்கும் நிலைத்திருக்கும் என கூறியுள்ளார்.

    • இந்தியாவில் இருக்க கூடிய மாநில கட்சிகளில் அயலக தமிழர்களின் நலனுக்காக ஒரு அணியை தொடங்கியது நம்முடைய தி.மு.கழகம் தான்.
    • எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ் பேசுகிற மக்களை காண முடிகிறது. கிட்டத்தட்ட 135 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

    சென்னை:

    தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை 'தமிழ் வெல்லும்' எனும் கருப்பொருளை மையமாக கொண்டு 'அயலகத் தமிழர் விழாவை' நடத்தி வருகிறது.

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் இந்த விழாவில், இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்பட 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் வெளிநாடுகளில் உள்ள 218 சர்வதேச தமிழ் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ் சங்கங்கள் ஆகியவற்றை சேர்ந்த அயலக தமிழர்கள் திரளாக பங்கேற்றனர்.

    இன்று நடைபெற்ற முதல் நாள் விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த 40-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தும் பார்வையிட்டார். அயலக தமிழர்களின் புத்தகங்களையும் வெளியிட்டார்.

    விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழ்நாடு அயலக தமிழ் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பாக அயலக தமிழர் தின நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    நாளைய தினம் நம்முடைய முதலமைச்சர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நிறைவுரையாற்ற உள்ளார்.

    இந்தியாவில் இருக்க கூடிய மாநில கட்சிகளில் அயலக தமிழர்களின் நலனுக்காக ஒரு அணியை தொடங்கியது நம்முடைய தி.மு.கழகம் தான்.

    இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன்.

    நம்முடைய தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகள் உலகம் முழுவதிலும் நடைபெறுகின்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்.

    அப்படி வரும் போது அவர்களை களத்தில் ஊக்குவிப்பவர்களாக, உற்சாகபடுத்துபவர்களாக இருக்கிறீர்கள். அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அயலக தமிழர்கள் நலன் மீது நம்முடைய அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

    முன்பைவிட நம்முடைய தமிழர்கள் பல்வேறு நாடுகளில் படிப்பதற்காகவும், வேலை பார்ப்பதற்காகவும் தங்கி இருக்கிறீர்கள்.


    எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ் பேசுகிற மக்களை காண முடிகிறது. கிட்டத்தட்ட 135 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

    தமிழர்கள் நலனை கருத்தில் கொண்டுதான் இந்த துறையை நமது அரசு உருவாக்கியது.

    முன்பெல்லாம் வெளிநாட்டில் வேலை என்று கூறி டிராவல் ஏஜெண்டுகள் ஏமாற்றினார்கள் என்ற செய்திகளை பார்ப்போம். ஆனால் அந்த நிலை இன்றைக்கு பெருமளவு மாறி இருக்கிறது. ஏனென்றால் அயலக தமிழர் நலத்துறை மேற்கொண்ட பணிகளே இதற்கு முக்கிய காரணம். வெளிநாடுகளில் தமிழர்கள் மிக முக்கிய பதவிகளிலும் இருக்கிறார்கள்.

    வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அயலகத் தமிழர் துறை அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது.

    தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்காகவும் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காகவும் தி.மு.க. பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் திருச்சி சிவா எம்.பி.பேசும் போது கூறியதாவது:-

    தமிழர்களின் நம்பிக்கை அரணாக தி.மு.க. விளங்குகிறது. பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இது ஏதோ எப்போதும் போல் வந்து போகிற தேர்தல் அல்ல. இந்த தேர்தலின் முடிவுதான் உலக அரங்கில் தலை சிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்பது நிலைக்கப் போகிறதா? அல்லது தடம் மாறி அது போகப்போகிறதா? என்று தீர்மானிக்க போகிற தேர்தல்.

    மத்தியில் இன்றைக்கு இருக்கிற ஆட்சி அகல வேண்டும். நம்முடைய 'இந்தியா கூட்டணி' வெல்ல வேண்டும்.

    தமிழகத்தை நம்பி வடபுலம் காத்திருக்கிறது. தமிழகத்தை நம்பி இந்தியா காத்திருக்கிறது. நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் 40 தொகுதிகளையும் வென்று கொண்டு போய் நாங்கள் தான் தன்னிகரற்றவர்கள் என்று காட்ட போகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ. உள்பட பலர் பங்கேற்றனர்.

    ×