search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "income tax raid"

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சம்பந்திக்கும், வருமானவரி சோதனைக்கும் தொடர்பு இல்லை என்றும் தவறான தகவல்களை பரப்புவது கண்டனத்துக்கு உரியது என்றும் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். #Minister #jayakumar #ADMK
    சென்னை:

    தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருமானவரித்துறை அதிகாரிகள், தங்களுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்காணித்து, அதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வருமான வரி சோதனையை நடத்துவது வழக்கம்.

    தற்போது வருமானவரி சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் ஒப்பந்ததாரர்கள் அனைவரும், பொதுப்பணித்துறையிலோ, நெடுஞ்சாலைத் துறையிலோ, சுகாதாரத்துறையிலோ மற்ற துறைகளிலோ இப்போது ஒப்பந்தம் பதிவு செய்து கொண்டு ஒப்பந்ததாரர்கள் ஆகவில்லை.

    கடந்த 25 ஆண்டு காலமாக ஒப்பந்ததாரர்களாக இருந்து வருகின்றனர். அதிலும், தி.மு.க. ஆட்சியில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேலே இதே ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தம் எடுத்து இருக்கிறார்கள்.

    இப்படி இருக்க, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி ஒரு தொழில் நடத்தி வரும் நிலையில், வருமானவரி சோதனையை அவருடன் சம்பந்தப்படுத்தி, அவரையும் விசாரணை செய்வதற்காக வருமானவரித் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர் என்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வந்தது என்பது கண்டிக்கத்தக்க விஷயம்.

    இதற்கு அ.தி.மு.க. தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி வீட்டில் தான் இருக்கிறார். வருமானவரி சோதனைக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை.



    உண்மை நிலை இப்படி இருக்க, ஒரு தனியார் தொலைக்காட்சியானது, உண்மைக்கு மாறான தகவலை பொதுமக்களிடம் பரப்பி, வேண்டும் என்றே அ.தி.மு.க.வுக்கும், தமிழக அரசுக்கும் களங்கம் கற்பிக்கின்ற செயலில் ஈடுபட்டுள்ளது. இதை நிச்சயமாக ஏற்க முடியாது. இது கண்டனத்துக்கு உரியது.

    இவ்வாறு அவர் கூறினார். #Minister #jayakumar #ADMK #EdappadiPalanisamy
    தமிழகத்தில் முதலமைச்சருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. எனவே எடப்பாடி பழனிசாமி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKstalin
    சென்னை:

    தி.மு.க செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தமிழகத்தில் 2 நாட்களாக முதல்-அமைச்சருக்கு நெருக்கமானவர்களின் வீடு-அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடக்கிறதே?

    பதில்:- முதல்-அமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி மற்றும் அவருடைய ‘பார்ட்னர்’ ஆகியோருடைய வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்திய நேரத்தில் ரூ.180 கோடி ரொக்கமாகவும், 100 கிலோ தங்கமாகவும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில், பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாகவே வெளிவந்திருக்கிறது.

    பொதுப்பணித்துறை அமைச்சராகவும், முதல்-அமைச்சராகவும் இருக்கக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி. இதுவரை முதல் -அமைச்சருடைய உறவினர்களுக்கு இப்படி ஒரு ‘டெண்டர்’ விட்டதாக வரலாறு கிடையாது. இதுகுறித்து வெளிப்படையாகவே செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இதுவரையில் வாய் திறக்காமல் அமைதியாக மவுனமாக இருந்து வருகிறார்.

    மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி. ஆகவே, இதற்கு அவர் முழு பொறுப்பை ஏற்றுக்கொண்டு, விசாரணை முழு அளவில் சுதந்திரமாக நடைபெற வேண்டுமென்று சொன்னால் உடனடியாக எடப்பாடி பழனிசாமி தன்னுடைய முதல்-அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வது தான் சாலப் பொருத்தமாக இருக்க முடியும்.

    அதுமட்டுமல்ல, இந்தப் பிரச்சினையை பொறுத்தவரையில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என்று நான் நம்புகிறேன். ஏற்கனவே, இந்த ஆட்சியிலே தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனைகளை நடத்தி உள்ளனர். உதாரணமாக ராம மோகனராவ், அமைச்சர் விஜயபாஸ்கர், மணல் மாபியா சேகர் ரெட்டி போன்றவர்களுடைய இல்லங்களிலும், அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அவை எல்லாம் என்ன ஆனது? என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    அதுபோல இதுவும், நீர்த்துப் போவதற்குள் உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு முழுமையான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    கேள்வி:- ‘இந்த ஒப்பந்ததாரர்கள் அ.தி.மு.க.வில் மட்டும் இல்லை, தி.மு.க ஆட்சிக் காலத்திலும் இருந்தார்கள், இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு’, என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் கொடுத்திருக்கிறாரே?

    பதில்:- தி.மு.க ஆட்சிக் காலத்தில் இப்படிப்பட்ட அக்கிரமங்கள் எல்லாம் நடக்கவில்லை. குறிப்பாக இதுபோன்று வருமான வரித்துறை எல்லாம் சோதனை செய்யவில்லை. இன்றைக்கு இவர்கள் கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்கள். அதற்குச் சான்றாக முதல்-அமைச்சருடைய சம்பந்திகளே இருக்கிறார்கள். இதற்கு ஜெயக்குமார் என்ன பதில் சொல்ல போகிறார்? என்று கேளுங்கள்.



    கேள்வி:- துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது தி.மு.க சார்பில் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்து இருக்கிறீர்கள். இதில் அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா?

    பதில்:- சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கேள்வி:- ‘நீட்’ தேர்வை தமிழ் வழியாக எழுதும் மாணவர்களுக்கு 196 மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதற்கு சி.பி.எஸ்.சி. ‘அப்பீல்’ செய்துள்ளதே?

    பதில்:- இந்த உத்தரவு வருவதற்கு கூட தமிழக அரசு எவ்வித முயற்சியும் செய்யவில்லை. இந்த தீர்ப்புக்கு முக்கிய காரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. டி.கே.ரங்கராஜன் தான். இப்பொழுதாவது தமிழக அரசு விழித்துக்கொண்டு ‘நீட்’ பிரச்சினைகளில் இதுவரை மெத்தனமாக இருந்ததை போல் இல்லாமல் சுப்ரீம் கோர்ட்டில் ‘அப்பீல்’ செய்திருக்கக்கூடிய இந்த சூழ்நிலையிலே, முறையாக முறையான வக்கீல்களை வைத்து வாதாட வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார். #EdappadiPalanisamy #MKStalin
    காண்ட்ராக்டர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    ஆலந்தூர்:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டனில் இருந்து இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி, அவருடைய பங்குதாரர் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு அதில் 180 கோடி ரொக்கமும், 100 கிலோ தங்கமும் பறிமுதல் செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகளை பார்த்தேன். நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும், முதல்-அமைச்சராகவும் இருப்பவர் எடப்பாடி பழனிசாமி.

    இதுவரை முதல்-அமைச்சரின் உறவினர்களுக்கு டெண்டர் கொடுத்ததாக வரலாறு இல்லை. இந்த செய்தி வெளிவந்த பிறகும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காமல் அமைதியாக மவுனமாக இருக்கிறார். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி.

    வருமானவரி சோதனையின் விசாரணை ஒரு நம்பிக்கையோடு முழு சுதந்திரமாக நடைபெற வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வது சாலப்பொருந்தும்.

    இந்த பிரச்சனையை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்.


    முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சேகர் ரெட்டி ஆகியோர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அந்த விசாரணையெல்லாம் என்ன ஆனது என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதைப் போல அல்லாமல் காண்ட்ராக்டர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை நீர்த்து போகாமல் முழுமையாக விசாரணை நடைப்பெற வேண்டும்.

    தி.மு.க. காலத்திலும் இப்படிப்பட்ட காண்ட்ராக்டர்கள் இருந்தார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி இருக்கிறார். தி.மு.க. காலத்தில் இப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடைபெறவில்லை.

    தற்போது கொள்ளை அடித்துள்ளனர். வருமான வரிசோதனையில் முதல்- அமைச்சரின் சம்பந்தியே இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறாரே? இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் என்ன பதில் சொல்லப்போகிறார்.

    நீட் தேர்வில் தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கூறியிருக்கிறது. இதற்கு காரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., டி.கே.ரங்கராஜன் தான் இதை கூட தமிழக அரசு செய்யவில்லை.

    இனிமேலும் நீட் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தமனமாக இருக்காமல் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்த இந்த நேரத்தில் முறையான வக்கீலை வைத்து வழக்கு நடத்த வேண்டும்.

    தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர் செல்வம் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டப்படி இதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்வேன். இதில் அரசு அதிகாரிகள் யாரும் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin
    தமிழகத்தில் நடந்துவரும் வருமானவரி சோதனைக்கும் பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை என டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #tamilisai #incometaxraid
    சென்னை:

    பா.ஜனதா தலைவர் அமித்‌ஷா ஆலோசனைப்படி தமிழகத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்த ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி முகாம் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது.

    முகாமில், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகன், முன்னாள் மாநில தலைவர்கள் இல.கணேசன் எம்.பி., சி.பி.ராதாகிரு‌ஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பயிற்சி முகாம் முடிவில், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய தலைவர் அமித்‌ஷா தமிழகம் வருகை தந்தது முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான எங்கள் பணி தொடங்கிவிட்டது. வாக்குச்சாவடி அளவில் முகவர்கள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. அமித்‌ஷா தமிழகத்தில் ஊழல் நிறைந்து இருக்கிறது என்று கூறினாரே தவிர ஒரு கட்சியையோ, தனிநபரையோ குறிப்பிடவில்லை. சமீபத்தில் நடந்த வருமானவரி சோதனை அதனை உறுதிப்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் நடந்துவரும் வருமானவரி சோதனைக்கும், பா.ஜனதாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வருமானவரித் துறையினருக்கு வந்த தகவல்களின் அடிப்படையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பணமதிப்பு இழப்பு காரணமாகத்தான் போலி நிறுவனங்கள், ஊழல்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்தியா பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு வந்துள்ளது என உலக வங்கி கூறுகிறது. பிரான்ஸ் உள்ளிட்ட 4 நாடுகளை பின்னுக்கு தள்ளி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilisai #incometaxraid
    அரசு ஒப்பந்ததாரரான செய்யாத்துரைக்கு சொந்தமான எஸ்பிகே நிறுவனத்தில் இரண்டு நாட்களாக நடந்த ஐடி ரெய்டில் கணக்கில் வராத ரூ.170 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #SPKgroup #ITRaid #IncomeTaxRaid
    சென்னை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது 60). இவர் அரசு முதல் நிலை காண்டிராக்டர். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறைகளில் நடைபெறும் பல்வேறு சாலைப்பணிகள், கட்டிட கட்டுமான பணிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார். 

    இந்நிலையில், பாலையம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 16-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

    இரண்டாவது நாளாக இன்றும் சென்னையில் அரசு ஒப்பந்ததாரரின் வீடு, அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.  சென்னை, மதுரை, அருப்புக்கோட்டையிலும் செய்யத்துரை உறவினர்கள் இல்லத்திலும் சோதனை நடந்தது.

    மேற்கண்ட சோதனைகள் இன்று மாலை நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.170 கோடி பணம், 105 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். கட்டுக்கட்டாக ஆவணங்களையும் அதிகாரிகள் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமானவரித்துறையினர் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். #ITRaid #SPK
    பாலையம்பட்டி:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது60). அரசு முதல்நிலை ஒப்பந்ததாரரான இவர், பல்வேறு சாலைகள், கட்டிடங்கள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார்.

    தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து திருமங்கலம் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வருகிறார்.

    இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க பல கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.

    இவருக்கு அருப்புக்கோட்டை மட்டுமின்றி மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கட்டுமான நிறுவன அலுவலகங்கள் உள்ளன.

    இன்று காலை 6.30 மணிக்கு அருப்புக்கோட்டையில் உள்ள இவரது வீட்டுக்கு வருமான வரித்துறையினர் கார்களில் வந்து அதிரடியாக நுழைந்தனர். 16-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

    எஸ்.பி.கே. கட்டுமான நிறுவன அதிபர் செய்யாத்துரையின் வீடுகள்.

    செய்யாத்துரைக்கு சொந்தமான 3 வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிமுருகன், செந்தில் வேலன் மற்றும் போலீசார் செய்யாத்துரை வீடு, அலுவலகம் முன்பு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட னர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்குறிச்சியில் செய்யாத்துரைக்கு சொந்தமான நூற்பு மில் உள்ளது. அங்கும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் சென்னை உள்ளிட்ட பிற ஊர்களில் உள்ள எஸ்.பி.கே. கட்டுமான நிறுவன அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். #ITRaid #SPK
    கிறிஸ்டி நிறுவனத்துடன் தொடர்புடைய அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் விசாரிக்கவும், பலரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தவும் வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி பிரைடு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனம் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் முட்டை, சத்துமாவு மற்றும் ரேசன் கடைகளுக்கான பருப்பு உள்பட பல்வேறு பொருட்களை வினியோகம் செய்து வருகிறது.

    போலி நிறுவனங்களை தொடங்கி வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததையடுத்து கிறிஸ்டி நிறுவனம் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் கடந்த 5-ந் தேதி முதல் 5 நாட்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் வீடு, அலுவலகம், ஆடிட்டர், கணக்காளர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. மேலும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம், நெற்குன்றத்தில் உள்ள வாணிப கழக மேலாண்மை இயக்குனர் சுதாதேவி வீடு உள்பட நாடு முழுவதும் 76 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    இதற்கிடையே மத்திய பிரதேசத்தில் இருந்த கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமியை பெங்களூரு, திருச்செங்கோடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கிறிஸ்டி நிறுவன கணக்காளர் கார்த்திக்கேயனிடம் விசாரணை நடத்திய போது மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலைக்கு முயன்றார்.

    5 நாட்களாக நடந்த இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், 100-க்கும் மேற்பட்ட பென்டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் கணக்கில் காட்டப்படாத 20 கோடி ரூபாய் ரொக்கப் பணம், 10 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து நிறுவனத்தின் சொத்து மதிப்பு, வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்தனர். அப்போது போலியாக நிறுவனங்களை தொடங்கி முறைகேடு செய்ததும், சிங்கப்பூர், மலேசியா உள்பட பல்வேறு நாடுகளில் இந்நிறுவனம் பல கோடி முதலீடு செய்ததும் தெரிய வந்தது.

    கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களின் படி கிறிஸ்டி மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள் 1350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வுகள் நடந்து வரும் நிலையில் கிறிஸ்டி நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் விசாரிக்கவும், பலரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.


    சத்துணவு திட்டத்திற்கு தினமும் 50 லட்சம் முட்டை வழங்க ஆண்டுக்கு 480 கோடி ரூபாய்க்கு சமூக நலத்துறை சார்பில் நேற்று டெண்டர் நடத்தப்பட்டது. இதில் கிறிஸ்டி குழுமத்தை சேர்ந்த நேச்சுரல் புட், கிறிஸ்டி கிஷான், ஸ்வர்ண பூமி என்ற நிறுவனங்களும் ஒப்பந்த புள்ளி வழங்கி இருந்தன.

    இது தவிர ஸ்ரீமாருதி அக்ரோவ், நாமக்கல் சொசைட்டி ஆகிய நிறுவனங்களும் ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீதர்பாபு என்பவரும் ஒப்பந்த புள்ளி கொடுத்திருந்தனர். டெண்டர் திறப்பு நேற்று மாலை துறை இயக்குனர் முன்னிலையில் சென்னையில் நடந்தது. அப்போது கிறிஸ்டி குழுமத்தின் ஒப்பந்த புள்ளிகளை பரிசீலிக்க கூடாது என்று மற்ற நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

    ஒவ்வொரு நிறுவனத்தினரையும் தனி தனியாக அழைத்து பேசிய அதிகாரிகள் டெண்டரில் பங்கேற்ற அனைத்து நிறுவனங்களின் ஒப்பந்த புள்ளிகளும் நிராகரிக்கப்பட்டதாகவும் டெண்டர் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தனர்.

    மேலும் விரைவில் மறு டெண்டர் கோரப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டது. டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கு கிறிஸ்டி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனையின் போது கண்டு பிடிக்கப்பட்ட பல கோடி முறைகேடுகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் மீண்டும் எப்போது டெண்டர் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இதில் தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளன. #EggNutritionCorruption #ITRaid
    தமிழக அரசு பள்ளிகளுக்கு முட்டை வினியோகம் செய்ததில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Eggnutritioncorruption #ITRaid
    சேலம்:

    தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு திட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முட்டை, சத்துமாவு ஆகியவற்றை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டி பாளையத்தில் உள்ள கிறிஸ்டி பிரைடு நிறுவனம் வழங்கி வருகிறது.

    இது தவிர ஒப்பந்த அடிப்படையில், ரேசன் கடைகளுக்கு பருப்பு வினியோகமும் செய்து வருகிறது.

    கிறிஸ்டி நிறுவனம் மீது வரி ஏய்ப்பு, முட்டை வினியோகத்தில் முறைகேடு செய்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 5-ந்தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 500 பேர் பல்வேறு குழுக்களாக பிரிந்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்பட நாடு முழுவதும் உள்ள அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 72 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்.

    திருச்செங்கோடு வட்டூரில் உள்ள கிறிஸ்டி புட்ஸ் நிறுவன உரிமையாளர் குமாரசாமி வீடு, ஆடிட்டர்கள் ராமச்சந்திரன், சங்கர் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    ஆண்டிபாளையம் எஸ்.பி.எஸ்.நகர் குடியிருப்பில் வைத்து கிறிஸ்டி நிறுவன கணக்காளர் கார்த்திக்கேயனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதில் அவரது முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டதால் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே திருச்செங்கோடு தேக்கவாடியில் உள்ள கார்த்திக்கேயன் வீட்டில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன. இந்த பென் டிரைவ்களில் சத்துணவு முட்டை டெண்டர் விவகாரம், பல கோடிகளை லஞ்சமாக பெற்ற அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் பட்டியல் உள்பட பல்வேறு முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    அந்த ஆவணங்கள் அடிப்படையில் விசாரித்த போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களுக்கு லஞ்சம் கொடுத்ததை குமாரசாமி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை எழுத்து பூர்வமாக எழுதி தரும் படி கேட்டதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்.

    முட்டை கொள்முதல், சத்து மாவு சப்ளையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர். எனவே இதில் தொடர்புடைய அனைவருக்கும் விரைவில் சம்மன் அனுப்பி விசாரணையை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

    திருச்செங்கோட்டில் 5-வது நாளாக நடந்த சோதனை நேற்று நிறைவு பெற்றது. இந்த சோதனையில் 20 கோடிக்கு அதிகமான ரொக்கப்பணமும், 15 கிலோவுக்கு அதிகமான தங்க பிஸ்கட்டுகளும் வெளிநாட்டு கரன்சிகளும், கணக்கிட முடியாத அளவுக்கு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


    இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட கார்களில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் அள்ளி சென்றனர். குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நேற்றிரவு அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    அழைக்கும் போது விசாரணைக்கு வர வேண்டும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் சுதாதேவியும் கிறிஸ்டி நிறுவனர் குமாரசாமியும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். இதனால் காஷ்மீரில் பணிபுரிந்த அவரை தனது அரசியல் பலத்தை வைத்து குமாரசாமி நுகர்பொருள் கழக மேலாண் இயக்குனர் பதவி சுதாதேவிக்கு கிடைக்க செய்தார்.

    சுதா தேவி பதவிக்கு வந்த பிறகு தான் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் பல போலி நிறுவனங்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பல ஆயிரம் கோடி பணத்தை போலி வங்கி கணக்குகள் மூலம் குமாரசாமி வெளிநாடுகளில் முதலீடு செய்தது ஆவணங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    குமாரசாமி, அவரது மனைவி நளினிசுந்தரி, மகள்கள் திவ்யா, கிறிஸ்டி ஆகியோரிடம் தனி தனியாக விசாரணை நடத்தினர். நிறுவனத்தின் ஊழியர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பென் டிரைவ்வில் உள்ள ஆவணங்கள் மற்றும் செல்போன் பேச்சு ஆகியவற்றின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    நாமக்கல் முன்னாள் உயர் அதிகாரி உள்பட பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் கிறிஸ்டி நிறுவனம் பல கோடி ரூபாயை கமி‌ஷனாக கொடுத்ததாக தெரிந்தது. அந்த அதிகாரிகளிடம் விசா ரணை நடத்த சம்மன் அனுப்ப வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    திருச்செங்கோட்டில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றும் 60-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடமும் நேற்று தனி தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் மூலமே பல்வேறு நபர்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பவுண்ரி, நிட்டிங், கார்மெண்ட்ஸ் போன்ற நிறுவனங்களில் வைத்து முட்டை மற்றும் சத்துமாவு சம்பந்தமாக அதிகாரிகளுக்கு லஞ்ச பரிவர்த்தனைகள் நடந்ததையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். #Eggnutritioncorruption  #ITRaid
    சத்துணவு முட்டை ஊழல் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் கைப்பற்றப்பட்டுள்ள 100 பென்டிரைவ்களில் பல்வேறு முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. #Eggnutritioncorruption
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனம் தமிழக முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சத்துணவு முட்டை, சத்துமாவு, பருப்பு வினியோகம் செய்து வருகிறது.

    இந்நிறுவனம் போலி பெயரில் நிறுவனங்களை தொடங்கி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து கடந்த 5-ந் தேதி அதிகாலை முதல் ஆண்டி பாளையத்தில் உள்ள அந்த நிறுவனம், வட்டூரில் உள்ள அதன் உரிமையாளர் குமாரசாமி வீடு, நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் உள்ள நிறுவனத்திற்கு சொந்தமான ராசிநியுட்ரிபுட் என்ற பெயரில் இயங்கும் நிறுவனம், குடோன்கள், உறவினர்கள, நண்பர்கள் வீடுகள் உள்பட 78 இடங்களில் ஒரே நாளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    4-வது நாளாக நேற்று திருச்செங்கோடு ஆண்டி பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகம், சென்னை, மும்பை, பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் கிறிஸ்டி நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறையினர் கணக்கெடுத்து வருகிறார்கள்.

    ஒவ்வொரு மாதமும் நிறுவனத்தின் வரவு செலவு புத்தகங்கள், வங்கி இருப்பு குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக நடந்த தொடர் சோதனையில் கிறிஸ்டி நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்களில் இருந்து 17 கோடி ரொக்கப்பணம், 10 கிலோ தங்கம் மற்றும் வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளது.

    இதற்கிடையே வருமான வரித்துறையினரின் விசாரணையில் இருந்து தப்பிக்க கிறிஸ்டி நிறுவனத்தின் கேஷியர் கார்த்திக்கேயன் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.


    முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதால் நேற்று அவரை உறவினர்கள் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருக்கு சுய நினைவு திரும்பியுள்ளதால் அவரிடம் விசாரிக்க வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    திருச்செங்கோடு அருகே தோக்கவாடியில் உள்ள கணக்காளர் கார்த்திக்கேயன் வீட்டில் நேற்று அங்குலம், அங்குலமாக பல மணி நேரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு கிணற்றில் ஆட்களை இறக்கி சோதனை செய்த போது 100-க்கும் மேற்பட்ட பென் டிரைவ்கள் அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த பென் டிரைவ்களில் கிறிஸ்டி நிறுவனத்தின் வெளிநாடு மற்றும் உள் நாட்டு முதலீடுகள், தொழில் விவரங்கள், குமாரசாமியின் வங்கி கணக்குகள் உள்பட பல்வேறு முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிகாரிகளே திகைத்துள்ளனர்.

    குமாரசாமியின் நம்பிக்கைக்கு உரியவரான கேஷியர் கார்த்திக்கேயன் போலி நிறுவனங்கள் தொடங்கியதற்கான ஆவணங்கள் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் குமாரசாமியின் வங்கி கணக்குகளை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனை மோப்பம் பிடித்த வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது குமாரசாமியை காப்பாற்றும் வகையில் ரகசியங்கள் அடங்கிய பென்டிரைவ்களை வீட்டு கிணற்றில் வீசி விட்டு கார்த்திக்கேயன் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

    மத்திய பிரதேசத்தில் பிடிக்கப்படட்ட குமாரசாமியை பெங்களூரு அழைத்து சென்று முதலில் விசாரணை நடத்தினர். நேற்று அவரை திருச்செங்கோட்டுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விளை அதிகாரிகள் கேட்டதாகவும், அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் திணறியதகாவும் கூறப்படுகிறது.

    இன்று குமாரசாமியை திருப்பூர், பொள்ளாச்சி, கோவை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர். இதே போல வரி ஏய்ப்புக்கு துணை போனதாக கூறி ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுதா தேவியிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் அவரிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    நிறுவனத்தின் கணக்கு வழக்கு மற்றும் அனைத்து தகவல்களையும் பென் டிரைவ் எக்ஸ்டர்னர் ஹார்டு டிஸ்க் மூலம் பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளனர். அவற்றை மேலாளர், கணக்காளர், அக்கவுண்டன்ட் ஆகியோர் தங்களது பொறுப்பில் வைத்திருந்தனர்.


    திருச்செங்கோடு ஆண்டி பாளையத்தில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 5-வது நாளாக இன்று அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தி வருகிறார்கள். இதையொட்டி கூடுதல் போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

    தற்போதைய சோதனையில் 100-க்கும் மேற்பட்ட பென் டிரைவ் கைப்பற்றப்பட்டுள்ளதால் அவற்றில் உள்ள பரிவர்த்தனைகள், ரகசிய ஆவணங்கள், வரவு செலவுகள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அந்த ஆய்வு முடிவில் கிறிஸ்டி நிறுவனம் எவ்வளவு வரி ஏய்ப்பு செய்துள்ளது, ரொக்கப்பணம் எங்கு பதுக்கி வைத்துள்ளனர் என்பது குறித்த முழு விவரங்கள் தெரிய வரும் என்பதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

    வருகிற 11-ந் தேதி தமிழக அரசுக்கு சத்துணவு முட்டை வினியோகத்திற்கு மாநில அளவிலான டெண்டர் நடக்கிறது. அதில் இந்நிறுவனம் பங்கேற்குமா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

    கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமாக கோழிப்பண்ணைகள் இல்லாததால் தினமும் 50 லட்சம் முட்டைகளை நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 400 பண்ணையாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து சத்துணவு திட்டத்திற்கு வினியோகம் செய்து வருகிறது.

    முட்டைகள் வழங்கும் கோழிப்பண்ணைகளுக்கு அந்த நிறுவனம் சார்பில் ஒவ்வொரு வாரமும் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப்படும்.

    வருமான வரித்துறை சோதனை 5-வது நாளாக இன்றும் நீடிப்பதால் நிறுவன வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் பண்ணையாளர்களுக்கு பணம் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வினியோகம் செய்த முட்டைக்கு உரிய பணம் கணக்கில் வரவு வைக்காததால் பண்ணையாளர்கள் பணம் கிடைக்குமா? என்ற தவிப்பில் உள்ளனர். #Eggnutritioncorruption  #ITRaid
    வருமான வரித்துறையினரின் விசாரணையின் போது தற்கொலைக்கு முயன்ற முட்டை நிறுவன காசாளருக்கு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    கோவை:

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு முட்டை விநியோகம் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் மாவு நிறுவன தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த நிறுவனத்தில் காசாளர் கார்த்திகேயன் (வயது 32) என்பவரிடம் அதிகாரிகள் பின் பக்கம் உள்ள வீட்டில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திகேயன் தண்ணீர் குடித்து வருவதாக கூறிவிட்டு சென்றார். திடீரென வீட்டில் முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதனை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    காயங்களுடன் உயிருக்கு போராடிய கார்த்திகேயனை அதிகாரிகள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த போது முதுகு தண்டுவடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கார்த்திகேயன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். #EggNutritionCorruption
    சத்துணவு முட்டை விநியோகம் செய்யும் கிறிஸ்டி புட்ஸ் நிறுவன கிளைகளில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையில் இதுவரை 10 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
    சென்னை:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு தேவையான முட்டைகளை ஒப்பந்த அடிப்படையிலும், சத்து மாவு, பருப்பு வகைகள் போன்றவற்தை தயாரித்தும் மொத்தமாக வழங்கி வருகிறது.

    இந்த நிறுவனம் கிளை நிறுவனங்களிடம் உணவு பொருட்கள் வாங்கியதாக பல கிளை நிறுவனங்களை போலியாக உருவாக்கி அதன் மூலம் பல கோடி ரூபாய் கணக்கு காட்டி மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததது.

    இது தொடர்பாக வருமான வரித்துறையினர் பல்வேறு கட்ட விசாரணை மற்றும் ஆவணங்களை சரிபார்த்த பிறகு, கடந்த 5-ந் தேதி அதிகாலை முதல் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் உள்பட நாடு முழுவதும் 72 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர்.

    அப்போது போலி நிறுவனங்களுக்கான ஆவணங்களும், அதற்காக யார், யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான ஆவணங்களும் வருமான வரித்துறையினரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நீடிக்கிறது.

    இந்தி சோதனையின்போது இதுவரை 10 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதால், வருமான வரித்துறையின் பிடி இறுகி உள்ளது. #Eggnutritioncorruption
    சத்துணவு முட்டை கொள்முதலில் முறைகேடு தொடர்பான வருமான வரித்துறையினரின் விசாரணையில் சத்துமாவு நிறுவன ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Eggnutritioncorruption
    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு தேவையான முட்டைகளை ஒப்பந்த அடிப்படையிலும், சத்து மாவு, பருப்பு வகைகள் போன்றவற்தை தயாரித்தும் மொத்தமாக வழங்கி வருகிறது.

    563 அங்கன் வாடிகள் மூலம் 21 லட்சம் குழந்தைகள், 3 லட்சம் வளரிளம் பெண்கள், 6 லட்சம் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த திட்டம் மூலம் பயன் பெற்று வருகிறார்கள்.

    இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக தமிழகம், கர்நாடகா, மும்பை, டெல்லி என நாடு முழுவதம் 76 இடங்களில் கிளைகள் உள்ளன. மேலும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 7 மாநிலங்களுக்கு இந்த நிறுவனம் அரசுக்கு சத்துமாவு சப்ளை செய்து வருகிறது.

    இந்த நிறுவனம் கிளை நிறுவனங்களிடம் உணவு பொருட்கள் வாங்கியதாக பல கிளை நிறுவனங்களை போலியாக உருவாக்கி அதன் மூலம் பல கோடி ரூபாய் கணக்கு காட்டி மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சத்துணவு முட்டை வழங்கும் ஒப்பந்தத்தை பெற்ற போது பண்ணை இல்லாத நிலையில் அதன் கூட்டமைப்பில் இல்லாத இந்த நிறுவனத்திற்கு எப்படி ஒப்பந்தம் கிடைத்தது என்பது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது.

    நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு பருப்பு வினியோக ஒப்பந்தத்தில் கிறிஸ்டி மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் மட்டுமே போட்டியிட்டன. அப்போது சந்தை விலையை விட அதிகமாக பருப்பு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. டெண்டரில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அப்போது கிறிஸ்டிக்கு டெண்டரை விட வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகாரிகள் துணையுடன் சில விதிமீறல்களும் நடந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு பல்வேறு நிறுவனங்களை தொடங்கி சத்துணவுக்கு பருப்பு, சத்துமாவு, முட்டை வினியோகம் செய்து வருகிறது.

    இந்த நிறுவனம் தினமும் 1300 மெட்ரிக் டன் சத்துமாவு தயாரித்து செய்து வருகிறது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஒப்பந்தத்தை எளிதாக பெற்று வந்தனர். பண மதிப்பிழப்பிற்கு பிறகு திருச்செங்கோட்டில் ஒரு வங்கியில் கோடிக்கணக்கான பழைய 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்றதாக புகார் எழுந்தது.

    முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் ஏற்கனவே சிதம்பரம் குடும்பத்திடம் இருந்து ரூ.46 கோடிக்கு சொத்து வாங்கியது தொடர்பாக சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்கும் படி கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தினர். விசாரணையில் சரியாக பதில் அளிக்காததால் சிதம்பரம் குடும்பத்தினரிடம் இருந்து நிலம் வாங்கிய அக்னி பில்டர்ஸ் மற்றும் அவர்களிடம் இருந்து நிலத்தை வாங்கிய கிறிஸ்டி புட்ஸ் நிறுவனங்கள் குறித்து வருமான வரித்துறையினர் விசாரணையில் இறங்கினர்.

    அப்போது கிறிஸ்டி புட்ஸ் உரிமையாளர் குமாரசாமி தினமும் பல மணி நேரம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதா தேவியிடம் பேசி வந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 5-ந் தேதி அதிகாலை முதல் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் உள்பட நாடு முழுவதும் 72 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர்.

    அப்போது போலி நிறுவனங்களுக்கான ஆவணங்களும், அதற்காக யார், யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான ஆவணங்களும் வருமான வரித்துறையினரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் சத்துமாவு மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுதாதேவியின் சென்னை நெற்குன்றத்தில் உள்ள வீடு, அலுவலகம் மற்றும் அதிகாரிகள் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் சத்து மாவு மற்றும் முட்டை கொள்முதல் செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட பல கோடி ரூபாய் சட்டத்திற்கு புறம்பாக வங்கி கணக்குகளில் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன.

    திருச்செங்கோடு ஆண்டிப்பாளையத்தில் சோதனை நடந்து வரும் சத்துமாவு நிறுவனத்தை படத்தில் காணலாம்.

    நாடு முழுவதும் நடந்த சோதனையில் மொத்தம் ரூ.7 கோடி ரொக்கப்பணம், பல லட்சம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல கோடி ரூபாய் வெளி நாடுகளில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

    இதற்கிடையே நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியிடம் ரகசிய இடத்தில் வைத்து 2-வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெங்களூர் மற்றும் சென்னை அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    அடுத்தக்கட்டமாக இன்று குமாரசாமியை திருச்செங்கோடுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை காண்பித்து அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது. இதில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    இதற்கிடையே வரி ஏய்ப்புக்காக தொழில் அதிபர் குமாரசாமி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் மறுத்தனர்.

    பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி, அதில் குற்றச்சாட்டுகள் உறுதியானால்தான் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. தற்போது குமாரசாமி விசாரணை வளையத்துக்குள் மட்டுமே உள்ளார்.

    இதற்கிடையே கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்தின் மேனேஜர் வீட்டின் கழிவறையில் இருந்து ஒரு சாவி கைப்பற்றப்பட்டது. அந்த சாவி மூலம் அங்குள்ள ஒரு வீட்டை திறந்து பார்த்த போது ஏராளமான இரும்பு பெட்டியில் ஆவணங்கள் இருந்துள்ளது. அந்த ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    திருச்செங்கோடு ஆண்டி பாளையத்தில் உள்ள கிறிஸ்டி பிரைடு கிராம் நிறுவனத்தின் காசாளரான கார்த்திக்கேயன் என்பவரை வருமான வரித்துறையினர் பிடித்து நிறுவனத்தின் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் விசாரணை நடத்தினர். அப்போது விசாரணைக்கு ஒத்துழைக்காத அவர் திடீரென தனக்கு மயக்கம் வருவதாகவும், தண்ணீர் குடித்து விட்டு வருவதாக கூறி சென்றார்.

    பின்னர் வீட்டின் முதல் மாடிக்கு வேகமாக சென்ற அவர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் அங்கிருந்து கீழே குதித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வருமான வரித்துறையினர் அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அவருக்கு முதுகு தண்டு வடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து வருமான வரித்துறையினர் திருச்செங்கோடு புறநகர் போலீசில் கார்த்திக்கேயன் மீது புகார் கொடுத்தனர். அதில் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தற்கொலைக்கு முயன்றதாக புகார் கூறி உள்ளனர்.

    இதையடுத்து கார்த்திக்கேயன் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிக்க அவர் தற்கொலை நாடகம் ஆடியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    3-வது நாளாக இன்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்டி புட்ஸ் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  #Eggnutritioncorruption 
    ×