search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt officer probe"

    கிறிஸ்டி நிறுவனத்துடன் தொடர்புடைய அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் விசாரிக்கவும், பலரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தவும் வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி பிரைடு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனம் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் முட்டை, சத்துமாவு மற்றும் ரேசன் கடைகளுக்கான பருப்பு உள்பட பல்வேறு பொருட்களை வினியோகம் செய்து வருகிறது.

    போலி நிறுவனங்களை தொடங்கி வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததையடுத்து கிறிஸ்டி நிறுவனம் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் கடந்த 5-ந் தேதி முதல் 5 நாட்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் வீடு, அலுவலகம், ஆடிட்டர், கணக்காளர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. மேலும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம், நெற்குன்றத்தில் உள்ள வாணிப கழக மேலாண்மை இயக்குனர் சுதாதேவி வீடு உள்பட நாடு முழுவதும் 76 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    இதற்கிடையே மத்திய பிரதேசத்தில் இருந்த கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமியை பெங்களூரு, திருச்செங்கோடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கிறிஸ்டி நிறுவன கணக்காளர் கார்த்திக்கேயனிடம் விசாரணை நடத்திய போது மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலைக்கு முயன்றார்.

    5 நாட்களாக நடந்த இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், 100-க்கும் மேற்பட்ட பென்டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் கணக்கில் காட்டப்படாத 20 கோடி ரூபாய் ரொக்கப் பணம், 10 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து நிறுவனத்தின் சொத்து மதிப்பு, வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்தனர். அப்போது போலியாக நிறுவனங்களை தொடங்கி முறைகேடு செய்ததும், சிங்கப்பூர், மலேசியா உள்பட பல்வேறு நாடுகளில் இந்நிறுவனம் பல கோடி முதலீடு செய்ததும் தெரிய வந்தது.

    கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களின் படி கிறிஸ்டி மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள் 1350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வுகள் நடந்து வரும் நிலையில் கிறிஸ்டி நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் விசாரிக்கவும், பலரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.


    சத்துணவு திட்டத்திற்கு தினமும் 50 லட்சம் முட்டை வழங்க ஆண்டுக்கு 480 கோடி ரூபாய்க்கு சமூக நலத்துறை சார்பில் நேற்று டெண்டர் நடத்தப்பட்டது. இதில் கிறிஸ்டி குழுமத்தை சேர்ந்த நேச்சுரல் புட், கிறிஸ்டி கிஷான், ஸ்வர்ண பூமி என்ற நிறுவனங்களும் ஒப்பந்த புள்ளி வழங்கி இருந்தன.

    இது தவிர ஸ்ரீமாருதி அக்ரோவ், நாமக்கல் சொசைட்டி ஆகிய நிறுவனங்களும் ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீதர்பாபு என்பவரும் ஒப்பந்த புள்ளி கொடுத்திருந்தனர். டெண்டர் திறப்பு நேற்று மாலை துறை இயக்குனர் முன்னிலையில் சென்னையில் நடந்தது. அப்போது கிறிஸ்டி குழுமத்தின் ஒப்பந்த புள்ளிகளை பரிசீலிக்க கூடாது என்று மற்ற நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

    ஒவ்வொரு நிறுவனத்தினரையும் தனி தனியாக அழைத்து பேசிய அதிகாரிகள் டெண்டரில் பங்கேற்ற அனைத்து நிறுவனங்களின் ஒப்பந்த புள்ளிகளும் நிராகரிக்கப்பட்டதாகவும் டெண்டர் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தனர்.

    மேலும் விரைவில் மறு டெண்டர் கோரப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டது. டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கு கிறிஸ்டி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனையின் போது கண்டு பிடிக்கப்பட்ட பல கோடி முறைகேடுகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் மீண்டும் எப்போது டெண்டர் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இதில் தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளன. #EggNutritionCorruption #ITRaid
    ×