search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SPK company"

    காண்ட்ராக்டர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    ஆலந்தூர்:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டனில் இருந்து இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி, அவருடைய பங்குதாரர் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு அதில் 180 கோடி ரொக்கமும், 100 கிலோ தங்கமும் பறிமுதல் செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகளை பார்த்தேன். நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும், முதல்-அமைச்சராகவும் இருப்பவர் எடப்பாடி பழனிசாமி.

    இதுவரை முதல்-அமைச்சரின் உறவினர்களுக்கு டெண்டர் கொடுத்ததாக வரலாறு இல்லை. இந்த செய்தி வெளிவந்த பிறகும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காமல் அமைதியாக மவுனமாக இருக்கிறார். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி.

    வருமானவரி சோதனையின் விசாரணை ஒரு நம்பிக்கையோடு முழு சுதந்திரமாக நடைபெற வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வது சாலப்பொருந்தும்.

    இந்த பிரச்சனையை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்.


    முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சேகர் ரெட்டி ஆகியோர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அந்த விசாரணையெல்லாம் என்ன ஆனது என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதைப் போல அல்லாமல் காண்ட்ராக்டர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை நீர்த்து போகாமல் முழுமையாக விசாரணை நடைப்பெற வேண்டும்.

    தி.மு.க. காலத்திலும் இப்படிப்பட்ட காண்ட்ராக்டர்கள் இருந்தார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி இருக்கிறார். தி.மு.க. காலத்தில் இப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடைபெறவில்லை.

    தற்போது கொள்ளை அடித்துள்ளனர். வருமான வரிசோதனையில் முதல்- அமைச்சரின் சம்பந்தியே இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறாரே? இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் என்ன பதில் சொல்லப்போகிறார்.

    நீட் தேர்வில் தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கூறியிருக்கிறது. இதற்கு காரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., டி.கே.ரங்கராஜன் தான் இதை கூட தமிழக அரசு செய்யவில்லை.

    இனிமேலும் நீட் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தமனமாக இருக்காமல் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்த இந்த நேரத்தில் முறையான வக்கீலை வைத்து வழக்கு நடத்த வேண்டும்.

    தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர் செல்வம் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டப்படி இதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்வேன். இதில் அரசு அதிகாரிகள் யாரும் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin
    அருப்புக்கோட்டையில் வருமான வரித்துறையினரின் சோதனை இன்று 3-வது நாளாக நீடித்து வருகிறது. காண்டிராக்டர் செய்யாத்துரையிடம் கணக்கில் காட்டப்படாத தங்கம்-ரொக்கம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். #ITRaid #SPK
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது 65). இவர் எஸ்.பி.கே. நிறுவனம் மூலம் நெடுஞ்சாலைத்துறை பணிகளை செய்து வருகிறார்.

    இவருக்கு சொந்தமான நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை, மதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட 50 இடங்களில் நேற்று முன்தினம் அதிரடி சோதனையை தொடங்கினர்.

    செய்யாத்துரையின் அலுவலகம் மட்டுமின்றி அவரது மகன்கள் கருப்பசாமி, ஈஸ்வரன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் வீடுகள் மற்றும் ஊழியர்களது வீடுகள், சார்பு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு ஆய்வு நடத்தினர்.



    இந்த சோதனையின்போது வீடுகள் மற்றும் கார்களில் பதுக்கப்பட்ட ரூ. 174 கோடி ரொக்கம், 106 கிலோ தங்க கட்டிகள் ஆகியவை சிக்கின. மேலும் பல நூறு கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    மதுரை கே.கே.நகரில் உள்ள செய்யாத்துரைக்கு சொந்தமான எஸ்.பி.கே. நட்சத்திர விடுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. செய்யாத்துரையின் மகன் ஈஸ்வரனின் வீட்டில் நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது.

    செய்யாத்துரையின் சொந்த ஊரான கீழமுடிமன்னார்கோட்டையில் அவரது பூர்வீக வீடு மற்றும் தோட்டங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள வீட்டு சுவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 4 இடங்களில் சுவர்களை இடித்து இந்த ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.

    கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் சிக்கியுள்ள தங்க கட்டிகள், பணக்குவியல்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறையினர் அருப்புக்கோட்டையில் 3-வது நாளாக இன்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சோதனையும் நீடித்து வருகிறது.

    காண்டிராக்டர் செய்யாத்துரை மற்றும் அவரது மகன்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் கணக்கில் காட்டப்படாத தங்கம்-ரொக்கம் தொடர்பாக கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    செய்யாத்துரை 100-க்கும் மேற்பட்ட பினாமிகள் மூலம் பல கோடி பணத்தை முக்கிய புள்ளிகளுக்கு கைமாற்றியதாகவும் தெரிய வந்துள்ளது.

    இதில் தொடர்புடைய அரசியல் புள்ளிகள், முக்கிய நபர்கள் குறித்தும் செய்யாத்துரையிடம் விசாரணை நடந்து வருகிறது.

    அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி கேள்விகளால் நிலைகுலைந்த செய்யாத்துரை விசாரணையின் போது முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும், கேள்விகளுக்கு உரிய பதிலை தருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை, மதுரை ஆகிய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் செய்யாத்துரையிடம், வருமான வரித்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

    செய்யாத்துரை மற்றும் அவரது மகன்களின் 15-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

    வங்கிகள் மூலம் நடைபெற்றுள்ள பண பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் இருந்து வருமான வரித்துறையினர் பெற்றுள்ளனர்.

    மதுரை நட்சத்திர விடுதியில் தமிழக மூத்த அமைச்சர் ஒருவர் அடிக்கடி வந்து சென்ற விவரம் குறித்தும் வருமான வரித்துறையினர், செய்யாத்துரையிடம் துருவித்துருவி கேள்விகளை கேட்டனர்.

    செய்யாத்துரையுடன் தொடர்புடைய அரசு உயர் அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விசாரணையின் அடிப்படையில் அரசியல் பிரமுகர்கள் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்த நடவடிக்கை அரசியல் புள்ளிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. #ITRaid #SPK


    எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமானவரித்துறையினர் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். #ITRaid #SPK
    பாலையம்பட்டி:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது60). அரசு முதல்நிலை ஒப்பந்ததாரரான இவர், பல்வேறு சாலைகள், கட்டிடங்கள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார்.

    தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து திருமங்கலம் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வருகிறார்.

    இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க பல கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.

    இவருக்கு அருப்புக்கோட்டை மட்டுமின்றி மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கட்டுமான நிறுவன அலுவலகங்கள் உள்ளன.

    இன்று காலை 6.30 மணிக்கு அருப்புக்கோட்டையில் உள்ள இவரது வீட்டுக்கு வருமான வரித்துறையினர் கார்களில் வந்து அதிரடியாக நுழைந்தனர். 16-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

    எஸ்.பி.கே. கட்டுமான நிறுவன அதிபர் செய்யாத்துரையின் வீடுகள்.

    செய்யாத்துரைக்கு சொந்தமான 3 வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிமுருகன், செந்தில் வேலன் மற்றும் போலீசார் செய்யாத்துரை வீடு, அலுவலகம் முன்பு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட னர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்குறிச்சியில் செய்யாத்துரைக்கு சொந்தமான நூற்பு மில் உள்ளது. அங்கும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் சென்னை உள்ளிட்ட பிற ஊர்களில் உள்ள எஸ்.பி.கே. கட்டுமான நிறுவன அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். #ITRaid #SPK
    ×