என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "husband complaint"
சேலம்:
சேலம், சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி ரெட்டியூரை சேர்ந்தவர் சம்பத். எலெக்ட்ரீசியன். இவரது மனைவி சரண்யா (வயது 28). இவர்களுக்கு நிக்ஷதா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்பத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர்களுக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் சரண்யா கடந்த 7-ந் தேதி கோபித்துக்கொண்டு மகள் நிக்ஷதாவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். பல மணி நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் சம்பத் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சரண்யாவுக்கும், சம்பத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், தான் நினைத்த வாழ்க்கை கிடைக்கவில்லை என்ற ஏக்கத்திலும் மகளுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.
காணாமல் போன அன்று சரண்யா கருப்பு நிற சுடிதாரும், நிக்ஷதா மஞ்சள் நிற பிராக்கும் அணிந்திருந்தனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களை பற்றி தகவல் தெரிந்தால் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு, நேதாஜி ரோடு, முனிசிபல்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி சுஜா (வயது 42).
இவர் கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை அக்கம் பக்கத்திலும் உறவினர் வீடுகளிலும் தேடினர்.
ஆனால் சுஜா கிடைக்கவில்லை. அவரை குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை. எனவே அவர் திடீரென மாயமானது குறித்து சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் முரளி புகார் செய்தார்.
மாயமான தனது மனைவி சுஜாவை கண்டுபிடித்து தருமாறு அதில் அவர் கூறி உள்ளார். அதன் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுஜாவை தேடி வருகின்றனர்.
இதேபோல் சென்னிமலையை அடுத்துள்ள அம்மாபாளையம் அன்புநகர் பகுதியில் வசிப்பவர் முனியப்பன்- மாரியம்மாள் தம்பதி.
இவர்களின் மகள் விஜயலட்சுமி (13). இவர் பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள பொது கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாரியம்மாள் தனது மகளை காண வில்லை என சென்னிமலை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை:
மதுரை சொக்கலிங்கநகர் காளியம்மாள் காம்பவுண்டைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 35). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கார்த்தீஸ்வரி (28). இருவருக்கும் 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பொன்மதி (9), குணசீல் (8) ஆகிய 2 மகள்களும், மதன்பாண்டியன்(7), கிஷோர்ராஜ் (5) என்ற 2 மகன்களும் உள்ளனர்.
கடந்த 12-ந் தேதி காலை கார்த்தீஸ்வரி, கணவருடன் கோபித்துக் கொண்டு மதுரை மேல அண்ணாத்தோப்பில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றார். அப்போது தனது 4 குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால் அவர், பாட்டி வீட்டுக்கு போகாமல் எங்கேயோ சென்று விட்டார். கார்த்தீஸ்வரி மற்றும் குழந்தைகளை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து கார்த்தீஸ்வரியின் கணவர் ராஜ் மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து 4 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்.
நெல்லை:
பாவூர்சத்திரம் அருகே உள்ள கடங்கனேரி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பொன்னரசி (வயது23). ரமேஷ் கேரளாவில் சலூன் கடை வைத்துள்ளார். பொன்ன ரசியும் கணவருடன் கேரளாவில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னரசி அவரது சகோதரருடன் கடங்கனேரியில் உள்ள சொந்த ஊருக்கு வந்தார். இங்கு கடந்த 7ந்தேதி பொன்னரசி ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக போனவர் மீண்டும் வீட்டுக்கு வர வில்லை.
இதுகுறித்து ரமேஷ் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
குன்னத்தூர் அருகே சந்தைபாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருக்கும் நீலகிரி மாவட்டம் சேரம்பாடியை சேர்ந்த சிவண்ணன் மகள் சுதா (22) என்பவருக்கும் கடந்த 3 வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.
கடந்த 2 நாட்களுக்கு முன் மதியம் சத்தியமூர்த்தி சாப்பிட சென்றபோது வீடு பூட்டியிருந்தது. மனைவி சுதாவை செல்போனில் தொடர்புகொண்டபோது தோழி வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார். மீண்டும் மாலை உன்னுடன் வாழ பிடிக்கவில்லை நான் எங்கோ செல்கிறேன் என எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். உடனே சத்தியமூர்த்தி தோழி வீடு மற்றும் உறவினர் வீடுகளில் தேடியபோது எங்கும் இல்லாததால் குன்னத்தூர் போலீசில் புகார் செய்தார்.
குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குபதிவு செய்து சுதாவை தேடி வருகின்றனர்.
தேனி:
தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை மெயின்ரோட்டை சேர்ந்தவர் முச்சாண்டி. இவரது மனைவி சாந்தி(வயது35), மகன் ரித்திக்(11). முச்சாண்டி கொடைக்கானலில் உள்ள தனியார் வங்கியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று முச்சாண்டி விடுமுறையில் வீடு திரும்பியபோது மகன் மற்றும் மனைவி காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சாந்தி மற்றும் ரித்திக்கை தேடி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே உள்ள துரையரசபுரம், புதுகாலணியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30) இவர் வெளியூரில் தங்கியிருந்து பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராதிகா (வயது 26). இவர்களுக்கு புவனாட்சி(8), கிருத்திகா(4) என்ற 2 மகள்களும் அருள்பிரகாஷ் என்ற 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
பிரபாகரனுக்கும் ராதிகாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 5 மாதத்திற்கு முன்பு ராதிகா கணவரிடம் கோபித்து கொண்டு மயிலாடுதுறையில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றார். பின்னர் கடந்த மாதம் 27-ந் தேதி கணவர் வீட்டிற்கு வந்தார்.
28-ந் தேதி வீட்டின் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, 3 குழந்தைகளின் ஆதார்கார்டு ஆகியவற்றை எடுத்து கொண்டு தனது 3 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.
அப்போது பிரபாகரன் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். வீட்டிற்கு வந்து பார்த்த போது தான் மனைவி குழந்தையுடன் மாயமானது தெரியவந்தது. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை.
பிரபாகரன் இது குறித்து ஆவுடையார் கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து 3 குழந்தைகளுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்