search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Donald Trump"

    • 2000 வாக்காளர்களிடம் டிரம்ப் மற்றும் பைடன் குறித்து கேட்கப்பட்டது
    • ஜென் இசட், டிரம்ப் முன்னர் அதிபராக இருந்த போது வாக்களிக்கும் வயதையே எட்டவில்லை

    வரும் நவம்பர் மாதம், அமெரிக்காவில் 46-வது அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இரு-கட்சி அரசியல் நிலவும் அந்நாட்டில், ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) மீண்டும் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் (77) டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.

    தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளதால், மக்களின் எண்ண ஓட்டத்தை கணிக்க பல கருத்து கணிப்புகளிலும், தகவல் சேகரிப்பிலும், பத்திரிகைகளும் தனியார் அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன.

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் "சென்டர் ஃபார் அமெரிக்கன் பொலிடிகல் ஸ்டடீஸ்" (CAPS) எனும் அமைப்பு வேறு சில அமைப்புகளுடன் இணைந்து கருத்து கணிப்புகளை நடத்தி வருகிறது.

    இந்த அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில் கலந்து கொண்ட 2000 வாக்காளர்களிடம் பல்வேறு கேள்விகளுடன் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் குறித்தும் கேட்கப்பட்டது.


    இதில் 57 சதவீத ஜென் இசட் வாக்காளர்கள், குடியரசு கட்சியின் டிரம்ப் அதிபராக விரும்புவதாகவும் 41 சதவீதம் பேர் அவரை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்தனர்.

    ஆனால், "ஜென் இசட்" (Gen Z) எனப்படும் 18 வயதிலிருந்து 24 வயதிற்கு உட்பட்டவர்களில் 64 சதவீதம் பேர் டிரம்ப் அதிபராக வருவதை ஆதரித்தனர்.

    2017 முதல் 2021 வரை அதிபராக டிரம்ப் இருந்த போது, இவர்கள் வாக்களிக்கும் வயது நிரம்பாதவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இளம் வயதினரின் வாக்குவங்கி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் இந்த ஆய்வின் முடிவுகள் மீண்டும் அதிபராக முயன்று வரும் ஜோ பைடனுக்கு சாதகமான தகவல் அல்ல என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

    மேலும், ஜென் இசட் வயதினருக்கு அடுத்து 55 வயதிலிருந்து 64 வயது வரை உள்ளவர்களும் (60 சதவீதம்), 25 வயதிலிருந்து 34 வயது உள்ளவர்களும் (58 சதவீதம்) மற்றும் 35 வயதிலிருந்து 44 வயது வரை உள்ளவர்களும் (58 சதவீதம்) டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

    • ரஷிய-உக்ரைன் போர் குறித்து இதுவரை டிரம்ப் உறுதியான கருத்து தெரிவிக்கவில்லை
    • பொய் தகவல்களை பரப்ப பில்லியன்களில் செலவு செய்கிறார் புதின் என்றார் ஜெலன்ஸ்கி

    ரஷிய-உக்ரைன் போர் தொடங்கி 2 வருடங்கள் கடந்த நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதி மற்றும் ராணுவ உதவியை தொடர்வதற்கு அமெரிக்க பாராளுமன்றம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

    தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய-உக்ரைன் போர் குறித்து தனது நிலைப்பாட்டையும் உறுதியாக தெரிவிக்கவில்லை.

    தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவராக கருதப்படும் டிரம்ப், புதினின் ஆதரவாளராக விமர்சிக்கப்படுகிறார்.

    இந்நிலையில், புதின் மற்றும் டிரம்ப் குறித்து ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்தார்.

    அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது:

    இரண்டு வருடங்களுக்கு மேலாக நடக்கும் இப்போரில் இதுவரை உக்ரைன் நாட்டு வீரர்கள் 31,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    அமெரிக்காவில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்ப பில்லியன்களில் புதின் செலவு செய்து வருகிறார். தற்போது அவர் அந்த முயற்சியில் வெற்றி அடைந்தது விட்டாரோ என தோன்றுகிறது.

    ரஷியாவை ஆதரிக்க டிரம்ப் முடிவெடுத்தால், அவர் உக்ரைனுக்கு மட்டுமல்ல, அமெரிக்கர்களுக்கே எதிரானவராக கருதப்படுவார்.


    டிரம்ப், புதின் பக்கம் நிற்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    அமெரிக்க ராணுவம் ரஷிய ராணுவத்துடன் போர் புரிந்ததில்லை. அதனால் அவரது உண்மையான நோக்கங்களை அமெரிக்கர்கள் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் புதினை எதிர்த்து போரிட்டு வருகிறோம்; எங்களுக்கு தெரியும்.

    நாங்கள் இப்போரில் வெற்றி பெறுவது எங்கள் கூட்டாளிகளான மேற்கத்திய நாடுகளின் கைகளில் உள்ளது.

    இவ்வாறு புதின் தெரிவித்தார்.

    • டிரம்பிற்கு வாய்ப்பு அதிகம் இருந்தும் நிக்கி ஹாலே போட்டியில் பின்வாங்கவில்லை
    • இது போன்ற பேச்சுக்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பை தகர்த்து விடும் என்றார் நிக்கி ஹாலே

    2024 வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.

    குடியரசு கட்சி சார்பில் தெற்கு கரோலினாவின் முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, டிரம்பிற்கு போட்டியாக, தனக்கு ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.

    தற்போது நிலவும் சூழலில் அமெரிக்காவில் குடியரசு கட்சியினரின் ஆதரவு டொனால்ட் டிரம்பிற்கே அதிகமாக உள்ளது. ஆனால், நிக்கி ஹாலே போட்டியில் இருந்து பின்வாங்கவில்லை.

    இந்நிலையில், தெற்கு கரோலினாவில் தனது கட்சியினரிடம் ஆதரவு கோரி பிரசாரம் செய்யும் போது கருப்பின மக்கள் குறித்து டொனால்ட் டிரம்ப் சில கருத்துகளை தெரிவித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    கருப்பின மக்களுக்கு என்னை பிடிக்கும். என்னை போலவே அவர்களும் வஞ்சிக்கப்பட்டனர்.

    நான் பாதிக்கப்பட்டது போல அவர்களும் பாதிக்கப்பட்டதால் அவர்கள் என்னை தங்களில் ஒருவனாக பார்க்கின்றனர்.

    என்னை காவலில் எடுத்து போது வெளியிடப்பட்ட எனது "மக் ஷாட்" (mug shot) புகைப்படம் அவர்களை மிகவும் கவர்ந்துள்ளது. ஏனெனில், பிறரை காட்டிலும் கருப்பின மக்கள் அதிகமாக அது போல் காவல்துறையினரால் புகைப்படம் எடுக்கப்பட்டவர்கள்.

    இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

    ஆனால், டிரம்பின் இந்த கருத்தை நிக்கி ஹாலே விமர்சித்துள்ளார்.

    இது குறித்து நிக்கி ஹாலே தெரிவித்ததாவது:

    கருப்பின மக்களை இவ்வாறு அருவெறுக்கத்தக்க வகையில் பேசியதை கண்டிக்கிறேன்.

    டிரம்பை மனம் போன போக்கில் பேச விட்டால் இதுதான் நடக்கும்.

    பொதுத் தேர்தல் முடியும் வரை அவரிடமிருந்து இது போன்ற பேச்சுக்களும், குழப்பங்களும் அதிகம் வரும். இது போன்ற பேச்சுக்கள் குடியரசு கட்சியின் வெற்றி வாய்ப்பை தகர்த்து விடும்.

    அதனால்தான் டிரம்பால் ஒரு பொதுத்தேர்தலை கூட வெல்ல முடியாது என கூறி வருகிறேன்.

    இவ்வாறு ஹாலே கூறினார்.

    நிக்கி ஹாலேவை போல், "தன் மேல் உள்ள வழக்குகளால் கருப்பின மக்கள் அவரை விரும்புவார்கள் என டிரம்ப் கூறுவது அவர்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது" என ஜனநாயக கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

    • குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்தலில் டிரம்ப், நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவுகிறது.
    • தெற்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு அவரது பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது.

    அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இரு கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபர் தேர்தல் களம் களைகட்டத் தொடங்கியுள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. இதில் முன்னாள் அதிபர் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். தெற்கு மாகாணத்தில் நடந்த வாக்குப்பதிவில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

    ஏற்கனவே நியூ ஹாம்ப்ஷையர் மற்றும் லோவா காகசஸ் மாகாணங்களில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அலெக்சி நவால்னி சந்தேகத்திற்கு இடமான சூழலில் சிறையில் உயிரிழந்தார்
    • ரஷிய மக்களை எச்சரிக்கும் அதிபருடன் டிரம்ப் கரம் கோர்க்க விரும்புகிறார் என்றார் நிக்கி

    கடந்த வாரம், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தென் கரோலினா மாநிலத்தில் ஆற்றிய உரையில், அமெரிக்காவை தலைமையாக கொண்டு செயல்படும் நேட்டோ (NATO) உறுப்பினர் நாடுகள் அந்த அமைப்பிற்கு அளிக்க வேண்டிய தங்களின் நிதி பங்களிப்பை அளிக்காத பட்சத்தில் அந்நாடுகளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முற்பட்டால் அதில் தலையிட மாட்டேன் என தெரிவித்தார்.

    இவரது கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ரஷியாவில், அதிபர் புதினை தீவிரமாக எதிர்த்து வந்த அலெக்சி நவால்னி (Alexei Navalny) சந்தேகத்திற்கு இடமான சூழலில் சிறையில் உயிரிழந்தார்.

    இப்பின்னணியில், அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட குடியரசு கட்சியின் சார்பில் ஆதரவு கோரி வரும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு போட்டியாக களம் இறங்கி உள்ள தென் கரோலினா மாநில முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, டிரம்பை விமர்சித்து உரையாற்றினார்.

    அப்போது நிக்கி தெரிவித்ததாவது:

    தங்கள் பங்களிப்பை தராதவர்களை புதின் தாக்கினால் தடுக்க மாட்டேன் என கூறியதன் மூலம் அந்த கணமே புதினின் கரத்தை டிரம்ப் வலுப்படுத்தி விட்டார்.

    தனக்கு உள்ள அரசியல் எதிரிகளை கொல்ல துணியும் புதினை போன்ற ஒருவருடன் டிரம்ப் கை கோர்த்து கொள்கிறார்.

    அமெரிக்க ஊடகவியலாளர்களை சிறை பிடிக்கும் ஒருவரின் பக்கம் டிரம்ப் நிற்க முயல்கிறார்.

    "என்னை எதிர்த்தால் உங்களுக்கும் இதுதான் (நவால்னியின் மரணம்) கதி" என தன் நாட்டு மக்களை எச்சரிக்கும் ஒருவருடன் நட்பாக இருக்க முயல்கிறார்.

    இதுவரை நவால்னியின் மரணம் குறித்து டிரம்ப் கருத்து எதுவும் கூறவில்லை. ஏனென்றால், அவர் தற்போது மீதுள்ள பல வழக்குகளில் கவனமாக உள்ளார்.

    இவ்வாறு ஹாலே கூறினார்.

    அடுத்த வாரம், தென் கரோலினா மாநிலத்தில் குடியரசு கட்சியின் சார்பில் டிரம்பும், ஹாலேவும் ஒருவரையொருவர் நேரடியாக எதிர்த்து களம் இறங்கி வாக்குகளை சேகரிக்க உள்ளனர்.

    • நீங்கள் செலுத்த வேண்டிய நிதியை செலுத்த தவறும் பட்சத்தில் நான் உங்களை காக்க முடியாது- டிரம்ப்.
    • டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வானால் பல விசயங்கள் பற்றி நான் கவலைப்படுகிறேன்- ஹாலே

    அமெரிக்காவில் இந்த வருடம் இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் யார்? என்பதில் டொனால்டு டிரம்ப்- நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவி வருகிறது.

    இந்த நிலையில் நான் அதிபரானால், இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டணியை வலுப்படுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நிக்கி ஹாலே கூறியதாவது:-

    டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வானால், பல விசயங்கள் பற்றி நான் கவலைப்படுகிறேன். அவற்றில் ஒன்றுதான் மற்ற நாடுகள் இடையிலான கூட்டணி.

    நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், நேட்டோ உடனான கூட்டணியை மட்டும் வலுப்படுத்த மாட்டேன். இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுடன் உடனான கூட்டணியையும் வலுப்படுத்துவேன். எங்களுடன் அனைவரையும் சேர்த்துக் கொள்வோம். இது அமெரிக்காவின் அதிக நண்பர்களை பற்றியது. குறைப்பதை பற்றி அல்ல."

    இவ்வாறு நிக்கி ஹாலே தெரிவித்தார்.

    முன்னதாக,

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. தங்களுடைய ஆயுத இருப்புகள் குறைந்து வருவதால் நேட்டோ உதவி செய்ய வேண்டும் என உக்ரைன் கேட்டிருந்தது. இதுதொடர்பாக டொனால் டிரம்ப் அளித்த ஒன்றில் அவர் கூறியதாவது:

    ஒரு பெரிய நாட்டின் அதிபர் என்னிடம் நாங்கள் நேட்டோ அமைப்பிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காத நிலையில் ரஷியா எங்களை தாக்கினால் நீங்கள் எங்களை காப்பீர்களா? என கேட்டார்.

     நீங்கள் செலுத்த வேண்டிய நிதியை செலுத்த தவறும் பட்சத்தில் நான் உங்களை காக்க முடியாது. இன்னும் சொல்ல போனால் இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என ரஷியாவிடம் கூறிவிடுவேன். நிதி பங்களிப்பில் உங்கள் பங்கை நீங்கள் செலுத்தியாக வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தேன்.

    இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

    • நியூயார்க் கார்ப்பரேசன் நிறுவனத்தில் அதிகாரி அல்லது இயக்குனராக பணியாற்ற டிரம்புக்கு 3 ஆண்டுகள் தடை விதிப்பதாகவும் அறிவித்தார்.
    • குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் இந்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

    நியூயார்க்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப். இவர் மீது பாலியல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    மேலும் தொழில் அதிபரான டிரம்ப் வங்கி மற்றும் நிதி அமைப்புகளிடம் கடன் வாங்குவதற்காக தனது சொத்து மதிப்புகளை மோசடியாக உயர்த்தி காட்டி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நியூயார்க் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. தன் மீதான குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்தார்.

    இந்த நிலையில் நிதி மோசடி வழக்கில் நியூயார்க் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. நீதிபதி ஆர்தர் எங்கோரோன் அளித்த தீர்ப்பில் கடன் வாங்குவதற்காக சொத்து மதிப்புகளை மோசடியாக உயர்த்தி காட்டியதற்காக டிரம்ப் அபராதமாக 364 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி) செலுத்த வேண்டும் என்றும் நியூயார்க் கார்ப்பரேசன் நிறுவனத்தில் அதிகாரி அல்லது இயக்குனராக பணியாற்ற டிரம்புக்கு 3 ஆண்டுகள் தடை விதிப்பதாகவும் அறிவித்தார்.

    இவ்வழக்கில் டிரம்பின் மகன்களான எரிக் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோருக்கும் தலா 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமாக செலுத்த உத்தரவிட்டு உள்ளார். அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று டிரம்ப் வக்கீல்கள் தெரிவித்தனர்.

    குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் இந்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்கான கட்சி வேட்பாளர் தேர்தலில் அவர் முன்னிலையில் உள்ளார். அவருக்கு கட்சியில் அமோக ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிரம்பின் நடவடிக்கைகளை யூகிக்க முடியாது என்றார் புதின்
    • நேட்டோ குறித்த டிரம்பின் பார்வையில் நியாயம் உள்ளது என்றார் புதின்

    உலகிலேயே பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில், இவ்வருட நவம்பர் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இம்முறை, ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.

    அயல்நாடுகளுடன் உள்ள அமெரிக்காவின் உறவு நிலை குறித்து அதிபர் பைடனும், டிரம்பும் நேரெதிர் சித்தாந்தங்களை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், மற்றொரு வல்லரசு நாடான ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin), அந்நாட்டின் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள தேர்தல் மற்றும் அதிபர் வேட்பாளர்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு புதின் பதிலளித்ததாவது:

    இரண்டாம் முறையாக டொனால்ட் டிரம்ப் அதிபராவதை விட ஜோ பைடன் வருவதையே ரஷியா விரும்பும்.

    பைடன் நீண்ட அனுபவம் உடையவர் மட்டுமல்ல; அவர் நடவடிக்கைகள் எளிதில் யூகிக்க கூடியவை. அவர் அந்த காலத்து அரசியல் சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகள் கொண்டவர்.

    ஆனால், டொனால்ட் டிரம்ப் அவ்வாறு அல்ல; டிரம்பை பிறரால் புரிந்து கொள்ளவோ அல்லது அவரது நடவடிக்கைகளை யூகிக்கவோ முடியாது.

    இருப்பினும், அமெரிக்காவில் யார் அதிபராக பதவி ஏற்றாலும் அவர்களுடன் ரஷியா இணைந்து பணியாற்ற முடியும்.

    நேட்டோவில் அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து டிரம்ப் கொண்டிருக்கும் சிந்தனைகளில் நியாயம் உள்ளது. ஆனால், முடிவு செய்ய வேண்டியது அமெரிக்காவின் பொறுப்பு.

    பைடனின் உடல்நலம் குறித்து கருத்து தெரிவிக்க நான் டாக்டர் அல்ல. அவரது உடலாரோக்கியம் குறித்து நான் பேசுவது முறையாக இருக்காது.

    2021ல் சுவிட்சர்லாந்து நாட்டில் பைடனை நான் சந்தித்த போது அவர் நலமாகத்தான் இருந்தார்.

    இவ்வாறு புதின் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிதி பங்களிப்பை வழங்காத நாடுகளை ரஷியா ஆக்கிரமித்தால் உதவ மாட்டேன் என்றார் டிரம்ப்
    • ரஷிய அச்சுறுத்தலை ஐரோப்பிய நாடுகள் குறைத்து மதிப்பிட கூடாது என்றார் டஸ்க்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது.

    போர் 2-வது ஆண்டை நெருங்கும் நிலையில் உக்ரைனுக்கு உதவியளித்து வந்த அமெரிக்காவில் தற்போது நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அமெரிக்காவில் உரையாற்றிய முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தங்கள் நிதி பங்களிப்பை முறையாக வழங்காத நேட்டோ (NATO) நாடுகளை ரஷியா தாக்கினாலோ அல்லது ஆக்கிரமித்தாலோ அமெரிக்கா உதவ முன் வராது என குறிப்பிட்டார்.


    டிரம்பின் இந்த கருத்து பல ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷியாவை குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.

    ஐரோப்பிய கண்டத்தில் இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் ஜெர்மனி மற்றும் சோவியத் குடியரசு ஆகிய இரு பெரும் நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த நாடு, போலந்து. இதன் தலைநகரம் வார்சா (Warsaw).

    இரண்டாம் உலக போர் முடிந்த பிறகும் பல தசாப்தங்கள் ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது போலந்து.

    இப்பின்னணியில் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk), பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரன் (Emmanuel Macron) மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் (Olaf Scholz) ஆகியோரை சந்தித்தார்.

    இச்சந்திப்பு குறித்து அவர் தெரிவித்ததாவது:

    ரஷியாவை விட ராணுவ ரீதியாக பலம் குறைந்து இருப்பது பாதுகாப்பானது அல்ல.

    ராணுவ தளவாட மற்றும் ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்க ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது தற்போது மிக அவசியம்.

    ஐரோப்பிய நாடுகள் சந்தித்து வரும் மிக பெரும் அச்சுறுத்தலை நாம் குறைத்து மதிப்பிடுவதும் ஆபத்து.

    ஐரோப்பிய நாடுகள், அடுத்து வரும் மாதங்களில் ராணுவ பலத்தை அதிகரிப்பதற்கு முன்னுரிமை தர வேண்டும்.

    இவ்வாறு டஸ்க் கூறினார்.

    டிரம்பின் தற்போதைய கருத்து, அமெரிக்க துருப்புகளுக்கும், அமெரிக்காவின் நேச நாடுகளுக்கும் ஆபத்தை விளைவிக்கலாம் என நேட்டோ தலைமை செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் (Jens Stoltenberg) கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 27 சதவீத வாக்காளர்கள் ஜோ பைடனை அதிக வயதின் காரணமாக நிராகரித்தனர்
    • 62 சதவீத வாக்காளர்கள் டிரம்பை அதிக வயதின் காரணமாக நிராகரித்தனர்

    2024 நவம்பர் மாதம், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இதில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.

    தேர்தலையொட்டி பல்வேறு கேள்விகளுடன் மக்களை சந்தித்து கருத்து கணிப்புகளையும், புள்ளி விவரங்களையும் பல அமைப்புகள் தெரிவிக்கினறன.

    வேட்பாளர்களின் வயது குறித்து கருத்து கேட்கப்பட்ட ஒரு கருத்து கணிப்பின் முடிவு நேற்று வெளியானது.

    அமெரிக்கர்களில் 86 சதவீத வாக்காளர்கள், ஜோ பைடனுக்கு 81 வயதாவதால், அப்பதவிக்கு அவர் பொருத்தமானவர் அல்ல என தெரிவித்தனர். தற்போது 77 வயதாகும் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன், இருவருமே இப்பதவியில் அமர பொருத்தமற்றவர்கள் என கூறிய 59 சதவீதம் பேரும் இப்பட்டியலில் அடங்குவர்.

    27 சதவீத வாக்காளர்கள் அதிபர் பதவியில் அமர ஜோ பைடனை மட்டுமே அதிக வயதுடையவராக கருதுகின்றனர்.

    62 சதவீத வாக்காளர்கள் அதிபராக பணியாற்ற டொனால்ட் டிரம்பை மட்டுமே அதிக வயதுடையவராக கருதுகின்றனர்.

    சில மாதங்களாகவே, 75 வயதை கடந்தும், உலகிலேயே நம்பர் 1 பதவியான அமெரிக்க அதிபர் பதவிக்கு முன்னணி வேட்பாளர்களாக களமிறங்கி உள்ள இருவரின் அதிக வயதும், பல வாக்காளர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2023 செப்டம்பர் மாதம், பைடனின் அதிக வயது காரணமாக அப்பதவிக்கு அவர் தகுதியானவர் அல்ல என 74 சதவீதம் பேரும், 49 சதவீதம் பேர் டிரம்ப் தகுதியானவர் அல்ல என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நேட்டோ அமைப்பிடம் உதவி கோரி வருகிறது உக்ரைன்
    • நிதி பங்களிப்பை செலுத்துங்கள் என கூறியதாக டிரம்ப் தெரிவித்தார்

    2022 பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் உக்ரைன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.

    சில மாதங்களாக ராணுவ தளவாட கையிருப்பு குறைந்துள்ளதாக கூறி மேற்கத்திய நாடுகளிடமும், நேட்டோ (NATO) அமைப்பிடமும் உக்ரைன் உதவி கோரி வருகிறது.

    ரஷியாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் உக்ரைனுடன் நிற்காமல் மேலும் பல நாடுகளுக்கு பரவலாம் என அரசியல் விமர்சகர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது பிரசாரத்தில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது குறித்து பேசினார்.

    அதில் டிரம்ப், தனது பதவிக்காலத்தில் நேட்டோ அமைப்பில் இருந்த ஒரு உறுப்பினர் நாட்டின் தலைவருடன் (பெயர் குறிப்பிடாமல்) அவர் நிகழ்த்திய கலந்துரையாடலை தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஒரு பெரிய நாட்டின் அதிபர் என்னிடம், நாங்கள் நேட்டோ அமைப்பிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காத நிலையில், ரஷியா எங்களை தாக்கினால் நீங்கள் எங்களை காப்பீர்களா? என கேட்டார்.

    நீங்கள் செலுத்த வேண்டிய நிதியை செலுத்த தவறும் பட்சத்தில் நான் உங்களை காக்க முடியாது. இன்னும் சொல்ல போனால், இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என ரஷியாவிடம் கூறி விடுவேன்.

    நிதி பங்களிப்பில் உங்கள் பங்கை நீங்கள் செலுத்தியாக வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தேன்.

    இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

    ரஷிய-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை $110 பில்லியன் மதிப்பிற்கு அமெரிக்கா உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

    • குடியரசு கட்சியில் டிரம்ப் முன்னிலை வகித்தாலும் நிக்கி பின்வாங்கவில்லை
    • என்னுடன் நேரடியாக விவாதித்து முகத்திற்கு நேராக கேளுங்கள் என்றார் நிக்கி

    2024 வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.

    குடியரசு கட்சியிலேயே டிரம்பிற்கு மாற்றாக தென் கரோலினா மாநில முன்னாள் கவர்னராகவும், ஐ.நா. சபையின் முன்னாள் அமெரிக்க தூதராகவும் பணிபுரிந்த நிக்கி ஹாலே (Nikki Haley) ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.

    தற்போதைய நிலவரப்படி குடியரசு கட்சியில் டிரம்ப் முன்னிலை வகித்தாலும், நிக்கி போட்டியிலிருந்து பின்வாங்கவில்லை.

    தென் கரோலினாவில் இருவரும் தங்கள் பிரசாரத்தில் ஒருவரையொருவர் விமர்சித்து வந்தனர்.

    இந்நிலையில், தனது பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப், நிக்கி ஹாலேவை விமர்சிக்கும் வகையில், "அவரது கணவருக்கு என்ன ஆனது? எங்கிருக்கிறார்? அவர் ஏன் நிக்கிக்கு ஆதரவாக பிரசாரத்திற்கு வரவில்லை?" என கேள்வி எழுப்பியிருந்தார்.


    இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து நிக்கி தெரிவித்திருப்பதாவது:

    தென் கரோலினா பிரசாரத்தில் டிரம்ப் எனது கணவரின் ராணுவ சேவையை கேலி செய்தார். என் கணவருக்காக நான் பெருமைப்படுகிறேன். ராணுவத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் அந்த தியாகம் புரியும்.

    டொனால்ட் டிரம்ப் அவர்களே, மைக்கேல் (என் கணவர்) நாட்டிற்கு சேவை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்படி என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியாது.

    உங்களுக்கு என்னை பற்றி ஏதாவது கருத்து கூற வேண்டுமென்றால் என்னுடன் நேருக்கு நேராக விவாதத்திற்கு வாருங்கள். அங்கு என் முகத்திற்கு நேராக கேள்விகளை கேளுங்கள்.

    போர்க்களத்தில் நாட்டிற்காக போராடுபவரை நீங்கள் கேலி செய்வீர்கள் என்றால் நீங்கள் – அமெரிக்க அதிபர் பதவிக்கு மட்டும் அல்ல - அமெரிக்க ஓட்டுனர் உரிமம் பெற கூட தகுதியற்றவர்.

    இவ்வாறு நிக்கி கூறினார்.

    ×