search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரம்ப்"

    • நியூயார்க் கார்ப்பரேசன் நிறுவனத்தில் அதிகாரி அல்லது இயக்குனராக பணியாற்ற டிரம்புக்கு 3 ஆண்டுகள் தடை விதிப்பதாகவும் அறிவித்தார்.
    • குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் இந்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

    நியூயார்க்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப். இவர் மீது பாலியல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    மேலும் தொழில் அதிபரான டிரம்ப் வங்கி மற்றும் நிதி அமைப்புகளிடம் கடன் வாங்குவதற்காக தனது சொத்து மதிப்புகளை மோசடியாக உயர்த்தி காட்டி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நியூயார்க் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. தன் மீதான குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்தார்.

    இந்த நிலையில் நிதி மோசடி வழக்கில் நியூயார்க் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. நீதிபதி ஆர்தர் எங்கோரோன் அளித்த தீர்ப்பில் கடன் வாங்குவதற்காக சொத்து மதிப்புகளை மோசடியாக உயர்த்தி காட்டியதற்காக டிரம்ப் அபராதமாக 364 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி) செலுத்த வேண்டும் என்றும் நியூயார்க் கார்ப்பரேசன் நிறுவனத்தில் அதிகாரி அல்லது இயக்குனராக பணியாற்ற டிரம்புக்கு 3 ஆண்டுகள் தடை விதிப்பதாகவும் அறிவித்தார்.

    இவ்வழக்கில் டிரம்பின் மகன்களான எரிக் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோருக்கும் தலா 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமாக செலுத்த உத்தரவிட்டு உள்ளார். அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று டிரம்ப் வக்கீல்கள் தெரிவித்தனர்.

    குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் இந்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்கான கட்சி வேட்பாளர் தேர்தலில் அவர் முன்னிலையில் உள்ளார். அவருக்கு கட்சியில் அமோக ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • குற்றச்சாட்டை மறுத்த டிரம்ப், ஜீன் கரோலை கடுமையாக விமர்சித்தார்.
    • தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி டிரம்ப் மீது ஜீன் கரோல், நியூயார்க் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    நியூயார்க்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் என்பவர் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறினார்.

    1990-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் ஒரு அறையில் தன்னை டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2019-ம் ஆண்டு ஜீன் கரோல் கூறினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த டிரம்ப், ஜீன் கரோலை கடுமையாக விமர்சித்தார். அவர் ஒரு பொய்யர், அவரை தான் சந்தித்ததில்லை என்று டிரம்ப் கூறினார்.

    இதையடுத்து தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி டிரம்ப் மீது ஜீன் கரோல், நியூயார்க் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் அவதூறு வழக்கில் ஜீன் கரோலுக்கு 83.3 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.690 கோடி) நஷ்டஈட்டை டிரம்ப் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

    அதில், 2019-ம் ஆண்டு டிரம்ப் தனது தவறான மற்றும் தீங்கு இழைக்கும் கருத்துக்களால் ஜீன் கரோலின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக 18.3 மில்லியன் அமெரிக்க டாலரும் தண்டனைக்குரிய சேதமாகவும், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 65 மில்லியன் அமெரிக்க டாலரும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தீர்ப்பு முற்றிலும் அபத்தானமானது என்று தெரிவித்த டிரம்ப், தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்யப்படும். நமது சட்ட அமைப்பு கட்டுப்பாட்டில் இல்லை. அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. அனைத்து உரிமைகளையும் மறித்து விட்டனர். இது அமெரிக்கா அல்ல என்றார்.

    ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஜீன் கரோலுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குடியரசு கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்க அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இத்தீர்ப்பு வெளியாகி உள்ளது.

    • வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகுமாறு டிரம்புக்கு உத்தரவிடப்பட்டது.
    • டிரம்ப் கோர்ட்டில் ஆஜராகுவதையடுத்து ஜார்ஜியாவில் பலத்த பாதுகாப்பு போடப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது தேர்தல் மோசடி வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியதாக டிரம்ப் மற்றும் 18 பேர் மீது ஜார்ஜியா கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகுமாறு டிரம்புக்கு உத்தரவிடப்பட்டது. அவருக்கு 25-ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தேர்தல் மோசடி வழக்கு தொடர்பாக ஜார்ஜியா கோர்ட்டில் வருகிற 24-ந்தேதி டிரம்ப் சரண் அடைகிறார். இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் கூறும்போது, உங்களால் நம்ப முடிகிறதா? கைது செய்யப்படுவதற்காக நான் வியாழன் அன்று ஜார்ஜியாவின் அட்லாண்டாவுக்கு செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    டிரம்ப் கோர்ட்டில் ஆஜராகுவதையடுத்து ஜார்ஜியாவில் பலத்த பாதுகாப்பு போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிரம்ப் மீது ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது, அரசின் ரகசிய ஆவணங்களை வீட்டில் பதுக்கியது உள்ளிட்ட வழக்கு விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவில் கடந்த 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் டிரம்ப்.
    • தேர்தல் மோசடி வழக்கில் டிரம்ப் உள்பட 19 பேருக்கு கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் டிரம்ப். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலிலும் குடியரசு கட்சி சார்பில் இவர்தான் முன்னிலை வகிக்கிறார்.

    டிரம்ப்மீது தனக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண்களுக்கு குற்றத்தை மறைப்பதற்காக பணம் வழங்குதல், வெள்ளை மாளிகையில் இருந்து ரகசிய ஆவணங்களை கடத்திச் சென்றது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. அதில், ஜார்ஜியா மாகாணத்தில் 2020-ம் ஆண்டு நடந்த தேர்தல் மோசடி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அந்த தேர்தலில் அவர் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனுடன் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

    அந்த சமயத்தில் ஜோ பைடனுக்கு எதிரான வாக்குகளைக் கண்டறியும்படி உயர்மட்ட தேர்தல் அதிகாரி ஒருவருடன் டிரம்ப் போனில் பேசுவது போன்ற ஆடியோ அங்குள்ள சமூக வலைதளங்களில் கசிந்தது. ஆனால் இந்த வழக்குகள் தனக்கு எதிராக தொடுக்கப்பட்ட சதி எனக்கூறி வரும் டிரம்ப் தன்மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறார்.

    எனினும் தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றதாக டிரம்ப் மற்றும் அவருக்கு உதவி செய்த 18 பேர் மீது தேர்தல் மோசடி வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை அங்குள்ள ஜார்ஜியா மாகாண கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், குற்றப்பத்திரிகையில் உள்ள 19 பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த கோர்ட்டு முடிவு செய்தது. எனவே டிரம்ப் உள்பட வழக்கில் தொடர்புடைய 19 பேரும் கைது வாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதேசமயம் வருகிற 25-ந் தேதிக்குள் தாமாக முன்வந்து ஆஜராக வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    • நியூயார்க்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைத்து தன்னை டிரம்ப் கற்பழித்ததாக ஜீன் கரோல் கூறினார்.
    • டிரம்பின் அவதூறு வழக்கை நீதிபதி லூயிஸ் கப்லான் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் பாலியல் குற்றச்சாட்டை கூறினார். 1990-ம் ஆண்டுகளில் நியூயார்க்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைத்து தன்னை டிரம்ப் கற்பழித்ததாக ஜீன் கரோல் கூறினார்.

    இது தொடர்பான வழக்கில், கற்பழிப்பு குற்றச்சாட்டை நிராகரித்து கோர்ட்டு, ஜீன் கரோலை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததற்காக டிரம்ப் பொறுப்பேற்க வேண்டும் என்று கடந்த மே மாதம் அறிவித்தது. மேலும் கரோலுக்கு டிரம்ப் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.

    ஆனால் அதை திட்டவட்டமாக டிரம்ப் மறுத்தார். மேலும் ஜீன் கரோல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை நியூயார்க்கில் உள்ள பெடரல் கோர்ட்டில் நடந்தது. இதில் டிரம்பின் அவதூறு வழக்கை நீதிபதி லூயிஸ் கப்லான் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். டிரம்ப் மீதான ஜீன் கரோலின் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கணிசமான உண்மை இருக்கிறது என்று நீதிபதி தெரிவித்தார்.

    • டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் கலவரத்தில் ஈடுபட்டதில் 7 பேர் பலியாகினர்.
    • கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய திட்டமிட்டிருப்பதாக டிரம்ப் பதிவிட்டிருக்கிறார்.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் முன்னோடி வேட்பாளராக உள்ளார். ஆனால் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன.

    அதில் முக்கியமான வழக்கு, கேபிடால் கலவர வழக்கு. அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவினார். ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் டிரம்ப் தோல்வியை ஏற்காமல் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டினார். இந்த சூழ்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக 2021ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி பாராளுமன்றம் கூடியது. அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் (கேபிடால் கட்டிடம்) புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 7 பேர் பலியாகினர்.

    டிரம்ப் ஆதரவாளர்களின் கிளர்ச்சியால் 7 பேர் இறந்ததாக செனட் அறிக்கை உறுதி செய்தது. கிளர்ச்சியைத் தூண்டியதற்காக டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் செனட் சபையால் விடுவிக்கப்பட்டார். எனினும், பாராளுமன்ற கட்டிடத்தில் தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பான கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவருகிறார்.

    இவ்வழக்கில் டிரம்ப், உத்தியோகபூர்வ நடவடிக்கைக்கு இடையூறு செய்தது, அரசாங்கத்தை ஏமாற்ற சதி செய்தது மற்றும் கிளர்ச்சியைத் தூண்டுயது ஆகிய 3 முக்கிய பிரிவுகளில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

    இந்நிலையில் டிரூத் சோஷியல் (Truth Social) எனப்படும் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் "ஜோ பைடனின் நீதித்துறையின் வழக்கறிஞர் ஜாக் ஸ்மித், ஜனவரி 6 ஆம் தேதி வழக்கின் விசாரணைக்கு நான் ஒரு "இலக்கு" என்பதால் விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள். அனேகமாக இது என் மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கலையும், என்னை கைது செய்யும் நடவடிக்கையையும் குறிக்கலாம்" என டிரம்ப் பதிவிட்டிருக்கிறார்.

    மேலும் இது குறித்து ஒரு பேட்டியில் "என்னை இந்த நடவடிக்கை தொந்தரவு செய்கிறது. ஆனால் நான் பயப்படவில்லை. அவர்கள் மக்களை இழிவுபடுத்தவும், பயமுறுத்தவும் முயற்சிக்கிறார்கள். நாங்கள் அமெரிக்காவை மீண்டும் பெரிதாக மாற்றப் போகிறோம். சொல்வதற்கு அவ்வளவுதான் உள்ளது." என்று தெரிவித்தார்.

    வரும் நாட்களில அவரின் அரசியல் எதிர்காலம் எந்த திசையில் செல்லும் என்பதை இந்த வழக்கின் போக்கு முடிவு செய்யும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • போலி செய்தி ஊடகங்கள் இச்செய்தியை மறைக்க மாற்றி தகவல் வெளியிடும் என டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.
    • கோகைன் கண்டுபிடிக்கப்பட்டபோது பைடன் கேம்ப் டேவிட் எனும் அமெரிக்க அதிபருக்கான தங்குமிடத்தில் இருந்தார்.

    அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் 5 நாட்களுக்கு முன்பு, மேற்கு விங் பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு வெள்ளை நிற பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அது, கோகைன் எனப்படும் போதை மருந்து என ரகசிய சேவை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது. தீயணைப்பு மற்றும் அவசரகால பணியாளர்கள் சம்பவ பகுதிக்கு வந்து கண்டெடுத்த பொருள் குறித்து சோதனை நடத்தினர்.

    இது குறித்து முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கையில், "இவை தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் அவர் மகன் ஹண்டர் ஆகியோரின் பயன்பாட்டிற்குத்தான்" என குற்றஞ்சாட்டியுள்ளார்.

    இது குறித்து டிரம்ப், தனது "டிரூத் சோஷியல்" சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "வெள்ளை மாளிகையில் உள்ள அமெரிக்க அதிபரின் பிரத்யேக அலுவலகமான ஓவல் அலுவலகம் அருகே கிடைத்த இந்த கோகைன், பைடன் மற்றும் அவர் மகன் ஹண்டருக்காக இல்லாமல் வேறு யாருக்கோ என எவ்வாறு நம்புவது? ஆனால், போலி செய்தி ஊடகங்கள் இச்செய்தியை மறைக்க, 'கிடைத்தது மிக குறைந்த அளவு' என்றோ அல்லது 'அது கோகைன் அல்ல, ஆஸ்பிரின்' என்றோ கூறத் தொடங்கி விடும். என்னை வெறுக்கும் அரசு வக்கீல் ஜாக் ஸ்மித், கோகைன் கண்டெடுத்த பகுதியில் காணப்பட்டாரா?" என பதிவிட்டுள்ளார்.

    கோகைன் கண்டுபிடிக்கப்பட்டபோது பைடன் வார இறுதி விடுமுறைக்காக கேம்ப் டேவிட் எனும் அமெரிக்க அதிபருக்கான தங்குமிடத்தில் இருந்தார்.

    ஊடகவியலாளர்களுடன் உரையாடிய வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் கெரீன் ஜீன்-பியர், "அமெரிக்க அதிபர் இந்த சம்பவத்தை ஆழமாக விசாரிக்க வேண்டும் என நினைக்கிறார். இப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் (வெஸ்ட் விங்), பெரிதும் மக்கள் பயணிக்கும் பகுதி. அங்கு பல வெள்ளை மாளிகை பார்வையாளர்கள் வருகிறார்கள். இது குறித்து இதற்கு மேல் பகிர்ந்து கொள்ள என்னிடம் எதுவும் தகவல் இல்லை. விசாரணை நடந்து வருகிறது. சம்பவம் குறித்த உண்மைகளை அதிகாரிகள் கண்டுபிடிப்பார்கள் என வெள்ளை மாளிகை நம்புகிறது" என தெரிவித்தார்.

    • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
    • டிரம்ப் மீது மியாமி கோர்ட்டில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

    புளோரிடா:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அரசின் ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்து சென்றதாக புகார் எழுந்தது.

    2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த கால கட்டத்திலான ஆவணங்களை டிரம்ப் அரசிடம் ஒப்படைக்காமல் எடுத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீது மியாமி கோர்ட்டில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

    கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், "அரசின் அணு ஆயுத திட்டங்கள், ராணுவம் உள்ளிட்ட ரகசிய ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணைக்காக இன்று மியாமி கோர்ட்டில் அஜராகும்படி டிரம்புக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கோர்ட்டில் டிரம்ப் ஆஜராவார் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில் கோர்ட்டில் ஆஜராவதற்கு நேற்று இரவு புளோரிடாவுக்கு டிரம்ப் வந்தார். தனி விமானத்தில் அங்கு வந்த அவர் இன்று மியாமி கோர்ட்டில் ஆஜராக உள்ளார்.

    அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வாக்குமூலம் கொடுக்க உள்ளார். வழக்கு விசாரணையின் போது டிரம்ப் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    ஏற்கனவே ஆபாச நடிகைக்கு தேர்தல் பிரசார நிதியில் இருந்து பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் நியூயார்க் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டிரம்ப், கோர்ட்டில் ஆஜராவதால் அவரது ஆதரவாளர்கள் மியாமியில் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் டிரம்ப் கூறும்போது, "என் மீதான குற்றப்பத்திரிகை, அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் இருந்து விலக என்னை கட்டாயப்படுத்தாது" என்றார்.

    • அரசின் ரகசிய ஆவணங்களை டிரம்ப் வைத்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
    • வருகிற 13-ந் தேதி மியாமி கோர்ட்டில் டிரம்ப் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்கா முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

    கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். ஆனால் தனது பதவி காலத்தில் கையாண்ட ஆவணங்களை ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்காமல் அவற்றை தன்னுடன் எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அரசின் ரகசிய ஆவணங்களை டிரம்ப் வைத்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு 100-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இதற்கிடையே ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில் டிரம்ப் மீது 7 கிரிமினல் குற்றச்சாட்டுகள் அமெரிக்காவின் மியாமி கோர்ட்டில் நேற்று பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டில் டிரம்ப் வீட்டில் இருந்து அதி முக்கியம் வாய்ந்த ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் அணு சக்தி திட்டங்கள், அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளின் பாதுகாப்பு, ஆயுத திறன்கள், ராணுவ தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் சாத்தியக் கூறுகள் வெளி நாட்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் ஆகியவை தொடர்பாக ரகசிய ஆவணங்கள் இருந்ததாக பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த 100-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் 11 ஆயிரம் அரசு ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் பாதுகாப்பற்ற முறையில் வைத்து கையாண்டதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் பொய் கூறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இவ்வழக்கு தொடர்பாக வருகிற 13-ந் தேதி மியாமி கோர்ட்டில் டிரம்ப் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பிரிவில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 100 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

    • அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.
    • டிரம்ப் போட்டியிட திட்டமிட்டு உள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் தான் பதவி விலகும் போது தன்னுடன் பல ரகசிய ஆவணங்களை எடுத்து சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் எடுத்துச்சென்ற சுமார் 200 ஆவணங்களை திருப்பி ஒப்படைக்குமாறு அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் டிரம்ப் அதனை திருப்பி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது அவர் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இந்த குற்றச்சாட்டுகள் விவரம் குறித்து இது வரை தெளிவாக தெரியவில்லை. இருந்த போதிலும் ஒரு முன்னாள் அதிபர் மீது இப்படி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் இது தொடர்பாக மியாமி கோர்ட்டில் வருகிற செவ்வாய்க்கிழமை ஆஜராகும் படி சம்மன் வந்துள்ளதாக தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறும் போது நான் குற்றமற்றவன்.ஒரு முன்னாள் அதிபர் அதுவும் வரலாறு காணாத அளவுக்கு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவருக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என எண்ணவில்லை்.

    அமெரிக்க வரலாற்றில் இது ஒரு கறுப்பு தினமாகும். நாம் அனைவரும் ஒன்று இணைந்து அமெரிக்காவை ஒரு ஓழுங்கான நாடாக மாற்ற உழைப்போம் என குறிப்பிட்டு உள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் டிரம்ப் போட்டியிட திட்டமிட்டு உள்ளார். இந்த சூழ்நிலையில் அவர் மீது தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா 40 பில்லியன் டாலர் கொடுக்க முடியும் என்றால் இதையும் நம்மால் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் கடந்த மே 25-ஆம் தேதி துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை போலீசார் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாகி கலாச்சாரத்திற்கு எதிராக கடுமையான சட்டத்தை அமல்படுத்தக்கோரி பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும் வெடித்துள்ளன. 

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    இந்நிலையில் இது போன்ற துப்பாக்கிசூடு சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீர்வு கூறியுள்ளார். இது தொடர்பாக ஹூஸ்டனில் நடைபெற்ற நேஷனல் ரைபிள் அசோசியேஷனின் மாநாட்டில் பேசிய டிரம்ப் கூறியதாவது:-

    டெக்சாஸ் துப்பாக்கிசூட்டில் பலியானவர்களுக்கு தங்களைத் தற்காத்துக் கொள்ள எந்த வழியும் இல்லை. துப்பாக்கியுடன் இருக்கும் தீய மனிதனை நிறுத்த ஒரே வழி, ஒரு நல்ல மனிதனின் கையில் துப்பாக்கியை கொடுப்பதுதான். அதேபோல் ஒரு பள்ளிக்கு ஒரே நுழைவுப் பாதை மட்டுமே இருக்கும்படி செய்ய வேண்டும். 

    ஒவ்வொரு பள்ளியிலும் வலுவான தடுப்பு அமைப்பு மற்றும் உலோகங்களை கண்டறியும் கருவிகள் போன்றவையும் அமைக்க வேண்டும். உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா 40 பில்லியன் டாலர் கொடுக்க முடியும் என்றால் இதையும் நம்மால் செய்ய முடியும்.

    இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
    ×