search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child Rearing"

    • பச்சிளம் குழந்தைகளால் மிகக்குறைந்த அளவே உணவு எடுத்துக்கொள்ள முடியும்.
    • உணவு இடைவேளை மிகவும் முக்கியம்.

    பச்சிளம் குழந்தைகளால் மிகக்குறைந்த அளவுதான் உணவு எடுத்துக்கொள்ள முடியும். தாய்ப்பால் கொடுத்த உடனே,குழந்தைக்கு திட உணவு கொடுத்தால் அதனால் சாப்பிட முடியாது. எனவே உணவு இடைவேளை மிகவும் முக்கியம். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்துக்கும், திட உணவு கொடுக்கும் நேரத்துக்கும் இடைவெளி தேவை.

    அதாவது, காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு நேரத்தில் திட உணவுகளை கொடுக்கலாம். இடைப்பட்ட நேரத்தில், அதாவது, காலையில், முற்பகலில், மாலையில், இரவு தூங்க செல்லும் முன் தாய்ப்பால் கொடுக்கலாம். பசியானாலும் சரி, வயிறு நிறைந்துவிட்டாலும் சரி, குழந்தைகள் சில அசைவுகள் மற்றும் சத்தங்கள் மூலம் நமக்கு உணர்த்தும்.

    சாப்பாட்டை அருகில் கொண்டு போகும்போது வாயை திறக்கும். உணவின் மணம் உணர்ந்தாலே ஆர்வமாகும். சில சத்தங்களை எழுப்பி, கை அசைவுகளை காட்டி, தனக்கு இன்னும் பசிக்கிறது என்பதை உணர்த்தும். உணவு இருக்கும் இடத்தை நோக்கி நகரும் அல்லது கையை காட்டும்.

    வயிறு நிறைந்துவிட்ட நிலையில், குழந்தை உணவை ஏற்காமல், தள்ளிவிடும். உணவு கொடுக்கும்போது வாயை திறக்காமல் அடம்பிடிக்கும். உணவு இருக்கும் திசையில் இருந்து விலகி, தலையை வேறு பக்கம் திருப்பிக்கொள்ளும். அசைவுகள் மற்றும் சத்தங்களின் மூலம் தனக்கு வயிறு நிறைந்துவிட்டதை உணர்த்தும்.

    திட உணவுகளை கொடுக்க தொடங்கும்போது குழந்தை, புதிய சுவைகளுக்கு பழகுகிறது. அந்த நேரத்தில் கட்டாயப்படுத்தி உணவை ஊட்டுவதை தவிர்க்க வேண்டும். அப்படி வற்புறுத்தி ஊட்ட ஆரம்பித்தால் குழந்தைக்கு உணவின் மீது வெறுப்பு ஏற்படலாம்.

    தனக்கு எவ்வளவு சாப்பாடு வேண்டும் என்பதை குழந்தைகளே தீர்மானிக்கட்டும். நீங்கள் கொண்டு வந்த உணவு முழுவதையும் குழந்தை சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்காகூடாது, நிர்பந்திக்க கூடாது.

    • `டீன்ஏஜ் என்றாலே ஒரு விதமான மகிழ்ச்சியையும், பதற்றத்தையும் தரக்கூடிய வயது.
    • வாழ்வின் நெறிகளை ஆரோக்கியமான முறையில் புரிய வைக்க வேண்டும்.

    `டீன்ஏஜ் என்றாலே ஒரு விதமான மகிழ்ச்சியையும், பதற்றத்தையும் தரக்கூடிய வயது. இளம் பருவத்தில் உடல் அளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்கள் பல்வேறு விதமான எண்ணங்களாலும், சிந்தனைகளாலும் ஆக்கிரமிக்கும். காதலும், காமமும் இரண்டறக் கலந்த எண்ணங்கள், எதிர்பாலினர் மீதோ அல்லது சம பாலினர் மீதோ ஈர்ப்பு ஏற்பட்டு பாலியல் குறித்த தேடலை அதிகரிக்கச் செய்யும்.

    மேலும் நண்பர்களின் அழுத்தம், திரைப்பட பாடல்கள், இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் மற்றும் கையிலேயே ஒட்டிக்கிடக்கும் ஆண்ட்ராய்டு இணையதள வசதி கொண்ட மொபைல் போன்கள் பல சந்தேகங்களை அவர்களுக்குள் எழுப்புகிறது. அந்த உந்துதலால்தான் காதல் என்றால் என்ன, தனக்குப் பிடித்தமான ஒரு நபரை பார்க்கும்போது மட்டும் ஏன் இனம்புரியாத ஈர்ப்பும், கிளர்ச்சியும் ஏற்படுகிறது என்ற புரிதலை சில வளரிளம் பருவத்தினர் பெற்றோரிடமே கேட்டுவிடுவார்கள்.

    அந்த கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்காத பட்சத்தில் அவர்களுடைய தேடல் அதிகரிக்கத் தொடங்குகிறது. ஆரோக்கியமான முறையில் பாலியல் குறித்த விழிப்புணர்வையும், நமது உடல் அமைப்புகளையும் வளர் இளம் பருவத்தினருக்கு நம் சமூகம், கலாசாரம் மற்றும் பண்பாடு என்ற போர்வையிலும், ஆண், பெண் சமூக பாலின வேறுபாட்டிலும் புதைத்துள்ளது.

    இப்படியான சபலங்களுக்கு ஆளாகும் பிள்ளைகள் பெற்றோர்களின் வளர்ப்பு முறை மற்றும் வழி காட்டுதலாலும், நல்ல நட்பு வட்டத்தின் காரணமாகவும் அதை எளிதில் கடந்துவிடுகின்றனர். ஆனால், இப்படியான சூழல் கிடைக்கப் பெறாத சில பிள்ளைகள், தங்கள் பாலியல் தேவைகள் பூர்த்தியாகுமா என வாய்ப்புக்காக காத்திருக்கும் நேரத்தில் எதிர் பாலினரிடமோ, சம பாலினரிடமோ அல்லது தனிமையிடமோ பதின் பருவத்து ஈர்ப்பில் விழுந்துவிடுகிறார்கள்.

    இன்றைய காலக்கட்டத்தில் சமூகம், ஊடகம், நட்பு, திரைப்பட, கலாசாரம், பண்பாடு என்ற போலியான பிம்பங்கள் மூலமாகவே பாலியல் அறிமுகப்படுத்தப் படுவதால் தான் நம் குழந்தைகள் இப்படியான தடுமாற்றங்களை சந்திக்கிறார்கள். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன், அரசும் இணைந்து செயல்பட்டால் நம் குழந்தைகளை இப்படியான சிக்கல்களில் இருந்து எளிதில் மீட்டெடுக்க முடியும்.

    பெற்றோர்களின் பங்கு

    பதின் பருவத்து பிள்ளைகளை ஆரோக்கியமான கட்டுபாடுகளுக்கு உள்ளாக்க வேண்டியது அவசியம். தாங்கள் நினைத்ததை செய்யக்கூடிய தைரியம் அவர்களுக்கு வருவதற்குள் வாழ்வின் நெறிகளை ஆரோக்கியமான முறையில் புரிய வைக்க வேண்டும்.

    • தங்கள் குழந்தைகளுக்கு சில கோல்களை அமைத்துக்கொடுக்க வேண்டும்.
    • சிறு சிறு தவறுகளை எடுத்துக்கூறி நல்வழிப்படுத்துவது பெற்றோர்களின் கடமை.

    குழந்தை வளர்ச்சி என்பது தொடர்ந்து நடைபெறும் செயலாகும் அவர்கள் குறிப்பிட்ட செயல்களை குறிப்பிட்ட வயதுகளில் செய்ய வேண்டும். இதைத்தான் வளர்ச்சிப்படிநிலைகள் என்கிறோம். ஒரு குழந்தை வளருகின்ற விதத்திலேயே மற்ற குழந்தைகளும் வளர வேண்டும் என்று அவசியமில்லை என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

    பக்கத்து வீட்டு குழந்தையால் செய்ய முடிவதை எல்லாம் நம்முடைய குழந்தையால் செய்ய முடியவில்லை என்று புலம்புவதும் வருத்தப்படுவதும் தேவை அற்றது. ஒவ்வொரு பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் அவர்களது குழந்தைகளின் மீது அதிகமாகவே உள்ளது.

    தான் நினைக்கும் படி தான் தன் குழந்தை நடக்க வேண்டும். தான் சொல்வதை தான் குழந்தை கேட்க வேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகள் குழந்தைகள் மீது திணிக்க கூடாது. பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையே உள்ள உறவு மிகவும் தனித்துவமானது என்றாலும்கூட அனைத்து குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவர்கள் வளரும் சூழல் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.

    பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் மீது எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பது தவறு அல்ல. குழந்தைகள் செய்யும் சிறு சிறு தவறுகளை அவர்களிடம் எடுத்துக்கூறி நல்வழிப்படுத்துவது பெற்றோர்களின் கடமை. பல நேரங்களில் குழந்தைகள் செய்யும் தவறுக்காக பெற்றோர்கள் அவர்களை கண்டிப்பார்கள்.

    கண்டிப்பு தவறல்ல கண்டிக்கும் முறை தான் முக்கியம். உங்களின் கண்டிப்பு வரும் காலங்களில் உங்கள் குழந்தைக்கு மோசமான சிக்கல்களை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு. பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு பற்றிய வழிமுறைகளை பார்க்கலாம் மிகவும் கண்டிப்பான பெற்றோர்கள் அதிக எதிர்பார்ப்புகளை குழந்தைகள் மீது திணிப்பார்கள். பெற்றோரின் கண்டிப்பு காரணமாக குழந்தைகள் தண்டனையில் இருந்து தப்பிக்க பொய் சொல்பவர்களாக மாற வாய்ப்புள்ளது சில குழந்தைகள் ஆக்ரோஷமாக கூட மாறுவதுண்டு.

    இந்த பழக்கவழக்கங்களால் நாளடைவில் குழந்தைகள் பெரியவர்களை மதிக்காமல் நடப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் பல நேரங்களில் உங்கள் குழந்தை பெற்றோரை போலவே தன்னுடன் பயிலும் சக மாணவர்களிடமும் அதிகார தனத்துடன் நடந்து கொள்வதற்கும் வாய்ப்பு உண்டு.

    தங்கள் குழந்தைகளுக்கு சில கோல்களை அமைத்துக்கொடுக்க வேண்டும். நீ இதை செய்தால் உனக்கு இது கிடைக்கும், நீ அதை செய்தால் உனக்கு அது கிடைக்கும் என்று குழந்தைகளுக்கான கோல்களை ஏற்பாடு செய்து அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். சில நேரம் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட டாஸ்க்குகளை அவர்கள் முடிக்கவில்லை என்றால் அவர்களை குறைசொல்லாமல், அடிக்காமல் அதற்கான மாற்று வழியை சிந்திக்க வேண்டும். எப்போதும் குழந்தைகளின் மீது மதிப்பும், அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இதனால் பெற்றோர்கள்-குழந்தைகள் உறவில் நல்ல உறவு ஏற்படும். அதுமட்டுமல்லாது குழந்தைகளின் கல்வி மற்றும் இதர விஷயங்களிலும் குழந்தைகளுக்கு சப்போர்ட்டாக, துணையாக இருக்க வேண்டும்.

    ஒரு நண்பனை போல் குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பது மட்டுமல்லாமல் குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்களை சுமுகமாக தீர்ப்பதற்கான வழிகளையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளின் முன் கடுமையான வார்த்தைகளையோ அல்லது தகாத வார்த்தைகளையோ பேசுதல், நடந்து கொள்வது கூடாது. குழந்தைகளுக்கு தேவையான அளவு சுதந்திரத்தை அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு குழந்தைகளுக்கு சில வேலைகளை கொடுத்து அவர்கள் அதை செய்வதற்கும், செய்யும் வேலைகளில் அவர்களை துணைக்கு அழைத்து கற்றுக் கொடுப்பதற்கும் பயன்படுத்தலாம்.

    அவர்களே அவர்களுயைய வேலைகள செய்வதற்கு கற்றுக் கொடுப்பதற்கும், அதனை குறையேதும் சொல்லாமலும், நன்றாக செய்தால் பாராட்டுவதற்கும் தயங்க கூடாது. ஒவ்வொரு செயலின்போதும் பாராட்டுவதும், பரிசு பொருட்கள் அளிப்பதும் அவர்களை இன்னும் ஊக்குவிப்பதற்கு உதவும்.

    சில பெற்றோர்கள் குழந்தைக்கு அதிகமான சுதந்திரத்தை அளிக்கின்றனர். அதுமட்டுமல்லாது அவர்களை கண்டு கொள்வதும் இல்லை. இதுபோன்ற நிலையில் குழந்தைகள் தவறான வழியில் செல்வதற்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள், என்ன படிக்கிறார்கள் என்பன போன்ற அடிப்படை விஷயங்களையும் கண்டுகொள்வதில்லை.

    இதனால் குழந்தைகள் வளர்ந்து போதை பொருளுக்கு அடிமையாகி வாழ்க்கையை சின்னாபின்னமாக மாற்றிக் கொள்வதற்கு பெற்றோர்களே முக்கிய காரணமாக அமைகின்றனர். (உதாரணத்திற்கு அலுவலகம் செல்லும் பெற்றோர்கள் அல்லது சொந்த தொழில் செய்பவர்கள், வெளியூரில் இருப்பவர்கள், தாத்தா, பாட்டி வீட்டில் வளரும் குழந்தைகள்) குழந்தைகளின் செயல்பாட்டில் இன்னும் முயற்சி எடுத்து கவனித்துக்கொள்ள வேண்டும்.

    குழந்தைகளை தொடர்ந்து திட்டிக்கொண்டே இருப்பது, அறிவுரை கூறிக்கொண்டிருப்பது, குழந்தைகளை தண்டிப்பது, குழந்தைகளிடம் அன்பான முகத்தை காட்டாமல் எப்பொழுதும் கோபத்துடனும் எரிச்சலுடன் நடந்துகொள்வது, குழந்தை கேட்கும் கேள்விகளை மதிக்காமல் இருப்பது, தன் குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிட்டு பேசுவது போன்ற செயல்களை குழந்தைகளிடம் வெளிப்படுத்தக்கூடாது.

    இதனால் குழந்தைகள் வருங்காலத்தில் ஆளுமை இல்லாத நபர்களாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்ற பாடல் வரிகளை நாம் கேட்டிருப்போம் அதற்கேற்ப குழந்தைகளை நாம் நல்லமுறையில் வளர்க்க வேண்டும். முடிந்த அளவு உங்கள் குழந்தையை சரியான வழியில் வருங்காலத்தில் ஆளுமை மிக்க நபர்களாக மாற்ற இப்போதே முயற்சி செய்யுங்கள்.

    அந்தந்த காலகட்டத்திற்குள் செய்ய வேண்டிய செயல்களை குழந்தையால் செய்ய முடியவில்லை என்றால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று குழந்தைகளை கூட்டி சென்று ஆலோசனை பெறுதல் அவசியம். குழந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அதிர்ச்சி/பயம் போன்றவற்றுக்கு உள்ளாகி இருந்தாலோ, குழந்தைகளின் செயல்பாட்டிலும், பழக்க வழக்கத்திலும் மாறுபாடுகள் இருக்கலாம்.

    சில சமயங்களில் ஒரு குழந்தை சம வயது கொண்ட மற்றொரு குழந்தையை விட சில செயல்பாடுகளில் குறைவான விதத்தில் இருக்கும், அதேசமயம் வேறு சில செயல்களில் சிறந்த குழந்தையாகவும், நல்ல வளர்ச்சியும் பெற்று இருக்கும். அந்த மாதிரி குழந்தைகளை அவர்களது விருப்பத்தை பொறுத்து அதில் சிறந்த பயிற்சி கொடுக்க வேண்டும்.

    • பெற்றோர்கள் அவர்களது உள்ளுணர்வை வைத்து குழந்தைகளை வளர்ப்பார்கள்.
    • குழந்தைகளை அவர்களாகவே வளர விட வேண்டும் என்பதில் பெற்றோருக்கு கவனம் தேவை.

    புதிதாக பெற்றோர்களாகி இருப்பவர்களும் சரி, சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோராகி இருப்பவர்களும் சரி. அவர்கள் செய்ய நினைக்கும் ஒரே விஷயம், `தங்கள் குழந்தைகளை முறையாக வளர்க்க வேண்டும்' என்பதுதான். இதற்கு காரணம், நமக்கு பெற்றோர்களாக இருந்தவர்கள் செய்த தவறை நாம் நமது பிள்ளைகளுக்கு செய்து விட கூடாது எனும் எண்ணம் மேலோங்கி உள்ளதால் தான். சரி, இப்போதைய இளம் தலைமுறை பெற்றோருக்கு ஏற்ற சில டிப்ஸ்கள் என்னென்ன? இங்கே பார்ப்போம்.

    பெற்றோர்கள் அவர்களது உள்ளுணர்வை வைத்து குழந்தைகளை வளர்ப்பார்கள். இந்த முறையில் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் அவர்களுக்கு ரூல்ஸ் போடுவது,, சில பழக்க வழக்கங்களை அவர்களுக்கு சொல்லி கொடுப்பது போன்ற விஷயங்களை செய்வர். இந்த முறையில் பிள்ளைகளை வளர்ப்பது நண்மைதான் என்றாலும், குழந்தைகள் வளர்ந்தவுடன் அவர்களுக்கான சுய அடையாளத்தை மறந்து முழுக்க முழுக்க தங்களது பெற்றோர் சொல்லிக்கொடுத்தபடி ரூல்சில் வாழ வேண்டியதாக இருக்கும். ஆகையால், எதில் விதிமுறை இருக்க வேண்டும், எதில் குழந்தைகளை அவர்களாகவே வளர விட வேண்டும் என்பதில் பெற்றோருக்கு கவனம் தேவை.

    உங்கள் குழந்தைகளை நீங்கள் எப்படி வளர்த்திருக்கிறீர்களோ, அதை பொறுத்துதான் அவர்களது நம்பிக்கை அதிகரிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. குறிப்பாக, குழந்தைகளிடம் பேசும்போது எப்போதுமே எதிர்மறை கருத்துக்களை குறைத்து கொண்டு நேர்மறையான கருத்துக்களுடன் பேச வேண்டும். நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை உன்னிப்பாக கவனிக்கும் பிஞ்சு மனங்களில் உங்கள் வார்த்தைகள் ஆழமாக பதியும். ஆகவே, உங்கள் வார்த்தைகள் மதிப்பு மிகுந்தவையாக இருக்க வேண்டும்.

    குழந்தைகளை குறைத்து மதிப்பிதல் கூடாது

    உங்களுடைய குழந்தைகளுக்கும் உணர்வுகள் இருக்கும். உங்களை அவமானப்படுத்தும்பொழுது உங்களுக்கு எவ்வாறு வலிக்குமோ அதுபோல் தான் உங்களுடைய குழந்தைகளுக்கும் வலிக்கும். இதை தான் சைல்டு ஷேமிங் என்கிறோம். முதலாவது ஒரு குழந்தையை பார்த்து உனக்கு ஒரு மண்ணும் தெரியாது. உனக்கு ஒன்னும் தெரியாது. உனக்கென்ன தெரியும் என்று அவர்களை குறைவாக மதிப்பிடுவது.

    இரண்டாவது நல்ல குழந்தைகளுக்கு எல்லாம் தெரியும். உன்னைவிட உன்னுடைய நண்பர்கள் ஒரு செயலை நன்றாக செய்கின்றனர் என்று உங்கள் குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிட்டு பார்த்து கூறுவது. அதற்கு அவர்கள் திருப்பி நம்மிடம் (பெற்றோர்) என் ஃபிரண்டோட அம்மா டாக்டர், என்ஜினீயர், வசதியாக இருக்கிறாங்க நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க என்று அவர்கள் கேட்டால் நம்மிடம் எந்த பதிலும் இருக்காது.

    மூன்றாவது வயதை வைத்து ஒப்பிட்டு காட்டுவது. அதாவது மற்ற குழந்தைகளுக்கு முன்னாள் அவர்களை தரக்குறைவாக மதிப்பிடுவது, 8 வயதாகிறது இதுகூட தெரியாதா? எருமைமாடு வயதாகிறது உனக்கு இதுகூட தெரியலையா? என்று வயதுக்கு மூத்தவர்களுடன் குழந்தைகளை ஒப்பிட்டு கூறுவது.

    பாலினத்தை குறிப்பிட்டு குழந்தைகள் முன்னாள் பேசக்கூடாது. ஆண்பிள்ளை அழக்கூடாது. பெண் குழந்தை தான் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்று பாலினத்தை குறிப்பிட்டு குழந்தைகள் முன்னாள் பேசக்கூடாது.

    • புதுமண தம்பதிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் கே.டி.சி. நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
    • மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் இசக்கி முத்தையா குழந்தைகள் வளர்ப்பு பற்றி எடுத்துக் கூறினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் புதுமண தம்பதிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் பாளையை அடுத்த கீழநத்தம் ஊராட்சி கே.டி.சி. நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் அனுராதா ரவி முருகன் குத்து விளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் இந்திரா முன்னிலை வகித்தார்.

    கருத்தரங்கில் மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் இசக்கி முத்தையா கலந்துகொண்டு குழந்தைகள் வளர்ப்பு பற்றி புதுமண தம்பதிகளிடம் எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் பாளை குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெனிபா, வட்டார சுகாதார ஆய்வாளர் முத்துசாமி, அங்கன்வாடி சீதாலட்சுமி, மக்கள் நல பணியாளர் மாரியம்மாள், பணி தள பொறுப்பாளர் சோபனா, வார்டு உறுப்பினர் சுரேஷ் மற்றும் அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கருத்தரங்கில் கலந்து கொண்ட புதுமண தம்பதிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    ×